Social Icons

Tuesday 16 October 2012

ஸஹீஹ் முஸ்லிம் 9

 தொழுகை பற்றிய நூல்

ஜந்து விஷயங்கள்1 நபி வழியாகும் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 181

நபிவழியில் உள்ளது ஜந்தாகும் அல்லது ஜந்து காரியங்கள் நபிவழியில் உள்ளவையாகும். கத்னா செய்வது, (ஆண் பெண் இருசாராரும்) ஆண்குறி, பெண்குறி இன்னும் அதைச்சுற்றி உள்ள முடியை நீக்குவது, நகங்களை வெட்டுவது அக்குளில் (உள்ள) முடியை (நீக்குவது) பிடுங்குவது, மீசையை குறைப்பது ஆகியவைகளாகும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

குறிப்பு: 1 ஹதீஸில் “அல்பிதரத்” என்ற வார்த்தைக்கு இருபொருள்களை ஹதீஸ் கலை வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

ய. ‘நபி வழி‘ அதன்பொருள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைகளாகும்.

டி. ‘மார்க்கம்‘ இவைகளை செயல்படுத்துவது மார்க்கமாகும் என்ற பொருளும் கூறப்படுகிறது.

பத்து (விஷயங்கள்) நபிவழியாகும் (மார்க்கமாகும்) என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண்: 182

பத்து (விஷயங்கள்) நபிவழியாகும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

1. மீசையை குறைத்தல். 2. தாடியை நிறைவாக வைத்தல். 3. பல் துலக்குதல். 4. மூக்கிற்கு தண்ணீர் செலுத்துதல். 5. நகங்களை வெட்டுதல். 6. விரல்களின் முடுச்சுகளையும் அதன் விரிவுகளையும் கழுவுதல். 7. அக்குளின் முடிகளை களைதல். 8. ஆண், பெண் இரு சாராரும் மர்மஸ்தானத்தின் மேல் முடியை சிறைத்தல். 9. துப்புரவு செய்தல். பத்தாவதை நான் மறந்து விட்டேன். ஆயினும் அது வாய் கொப்பளித்தலாக இருக்கலாம் என முஸ்அபு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் என ஜகரிய்யா கூறுகிறார். தண்ணீரால் சுத்தம் செய்தல் என்பது மலஜலம் கழித்தபின் சுத்தம் செய்தலாகும் என்று ‘வகீஉ‘ (என்பவர்) கூறுவதாக குபைதா ரளியல்லாஹு அன்ஹு (இந்த வார்த்தையை) அதிகப்படுத்தியுள்ளார்.

குறிப்பு: ‘இன்திகாஸ்‘ என்ற வார்த்தைக்கு, ய. தண்ணீரால் ஆண்குறி, பெண்குறி சிறு நீர் கழித்த பின் சுத்தம் செய்வது டி. ஒரு சில அறிவிப்புகளில் ‘இன்திகாஸ்‘ என்ற வார்த்தைக்கு பகரமாக இன்திளாஹ், என்பது வந்துள்ளது. அதன் பொருள் ‘தெளித்தல்‘ என்பதாகும்.

பல்துலக்கும் குச்சியை இருவரில் (வயதில்) பெரியவரிடம் கொடுப்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 183

“ஒரு பல் (துலக்கும்) குச்சியைக் கொண்டு பல் துலக்குவதாக கனவில் என்னை நான் கண்டேன். இரு ஆடவர்கள் என்னை இழுத்தனர். அதில் ஒருவர் மற்றவரைவிட பெரியவராக இருந்தார். அவ்விருவரில் சிறியவரிடம் பல் துலக்கும் குச்சியைக் கொடுத்தேன். பெரியவரிடம் கொடுக்குமாறு எனக்கு கூறப்பட்டது. பெரியவரிடம் அதை நான் கொடுத்துவிட்டேன்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹு பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு:- முதலிடம் பெரியவருக்கே என்பது தெளிவாகிறது.

மீசைகளை குறைத்துக் கொள்ளுங்கள், தாடிகளை நிறைவாக வைத்து கொள்ளுங்கள் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 184

“முஷ்ரிகீன் (இணைவைப்பவர்)களுக்கு மாற்றம் செய்யுங்கள். (உதடுகளுக்கு மேல் நீட்டிக் கொண்டிருக்கும்) மீசைகளை குறைத்துக் கொள்ளுங்கள். தாடிகளை நிறைவாக வையுங்கள்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு

ஹதீஸ் எண் : 185

“மீசைகயை குறைத்துக் கொள்வதற்கும், நகங்களை வெட்டிக் கொள்வதற்கும், அக்குளின் முடியை களைவதற்கும், மர்மஸ்தானத்தின் முடியை சிறைத்துக் கொள்வதற்கும், நாற்பது இரவுகளுக்கு அதிகமாக விட்டுவிடாது இருக்க எங்களுக்கு காலம் வரையறுக்கப்பட்டது என அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

குறிப்பு: 1 நாற்பது நாட்களை தாண்டிவிடக்கூடாது என்பதால் நாற்பது நாட்கள்வரை விட்டு வைக்க வேண்டுமென்பது அதன் பொருளல்ல கடைசி எல்லை தான் அது. அதையும் தாண்டி சென்று விடக்கூடாது என்பதே பொருளாகும். அதற்கு முன்பு செய்து கொள்வதில் மார்க்கத்தில் அனுமதியுண்டு என்பதை கருத்தில் கொள்க!

பள்ளியில் (கழிக்கப்பட்ட) சிறுநீரை கழுவுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 186

நாங்கள் ஒரு சமயம் அல்லாஹ்வின் தூதர் அவர்களுடன் இருந்த போது கிராமத்து அரபி ஒருவர் வந்து பள்ளிவாசலில் சிறுநீர் கழிக்க துவங்கி விட்டார். அல்லாஹ்வின் தூதர் அவர்களின் தோழர்கள் “தடுத்துக்கொள்” “தடு;த்துக்கொள்” எனக்கூறினர். அவரைத் நிறுத்தி (தடுத்து) விடாது விட்டு விடுங்கள் என, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற அந்நபரை அவர்கள் (சிறுநீர் கழித்து முடியும் வரை) விட்டு விட்டனர். அதன்பிறகு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரை அழைத்து “இந்தப்பள்ளிகள் இது போன்ற சிறுநீர் கழிக்கவோ, அல்லது அசுத்தங்களை போடவோ உரியதல்ல. ஆயினும் அவை கண்ணியமும் மேன்மையும் பொருந்திய அல்லாஹ்வை நினைவு கூறுவதற்கும், இன்னும் திருமறையை ஓதுவதற்கும் மட்டுமே சரியான (உரிய)தாகும். கூட்டத்திலிருந்த ஒரு மனிதரை ஒரு வாளி தண்ணீர் கொண்டு வருமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டனர். (அவர் கொண்டுவந்து) அதன்மீது பரவலாக ஊற்றினார்.

அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு

உடையில் சிறுகுழந்தையின் சிறுநீர் பட்டுவிட்டால் அதன் மீது தண்ணீர் தெளிப்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 187

உம்முகைஸ் பின்த் மிஹ்ஸன் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் உணவருந்தாத(தாய்ப் பால் மறவாத) தனது மகனை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொண்டு வந்தனர். நிச்சயமாக அப்பெண்ணின் மகன் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மடியில் சிறுநீர் கழித்துவிட்டான். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தண்ணீர் கொண்டு வரச்செய்து தங்களது உடையின் மீது தெளித்தனர். அவர்கள் அவ்வுடையை கழுவவே இல்லை என உபைதுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்.

அறிவிப்பாளர்: உம்முகைஸ் பின்த் மிஹ்ஸன் ரளியல்லாஹு அன்ஹா

குறிப்பு: 1 உணவருந்தாத(தாய்ப் பால் மறவாத) ஆண் குழந்தையின் மூத்திரம் உடலில் பட்டுவிட்டால் தண்ணீர் தெளித்தால் மட்டுமே போதும் என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

உடையில் விந்து பட்டுவிட்டால் (அதை) கழுவுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 188

அப்துல்லாஹ்பின் ஷிஹாப் அல்கவ்லானி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடத்தி(வீட்டி)ல் நான் தங்கியிருந்தேன். எனது இரு உடைகளில் (தூக்கத்தில்) ஸ்கலிதமாகிவிட்டேன். (ஆகவே) அவ்விரண்டையும் தண்ணீரில் முக்கிக் கொண்டிருந்தேன். அதை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் அடிமைப்பெண் பார்த்து விட்டு, அச்சம்பவத்தை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் தெரிவித்து விட்டாள். அதன் காரணமாக ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் என்னிடம் ஆள் அனுப்பி இருந்தார்கள் (நான் சென்றேன்) உனது இரு உடைகளையும் அவ்வாறு உம்மை செய்ய வைத்தது எது? எனக்கேட்டனர். அதற்கு, தூங்குபவர், தூக்கத்தில் எதை காண்பாரே அதை நான் கண்டேன் என்றேன். அவ்விரண்டிலும் (இரு உடையில்) எதையேனும் கண்டீரா? எனக்கேட்டனர். இல்லை என்றேன். எதையாவது நீர் பார்த்திருந்தால் அதை நீ கழுவியிருக்கலாம். நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் அவர்களின் உடையில் காய்ந்து போன அவற்றை எனது நகம் கொண்டு சுரண்டி (எடுத்துக்) கொண்டிருக்க என்னை நான் கண்டிருக்கிறேன்1 எனக்கூறினார்கள்.

குறிப்பு: 1 உறுதியாகச் செய்திருக்கிறேன் என்பது இதன் பொருளாகும்.

மாதவிடாய் இரத்தத்தை உடையிலிருந்து கழுவுதல் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 189

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு பெண் வந்து, எங்களில் ஒருத்திக்கு மாதவிடாய் இரத்தம் புடவையில் பட்டுவிடுகிறது. அதை அவள் எவ்வாறு (சுத்தம); செய்து கொள்ள வேண்டும்? எனக்கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவள் அதை தேய்த்து, உதறியபின், அதன்மேல் தண்ணீர் ஊற்றி விரல்களின் நகத்தால் சுரண்டி தேய்த்து அதன்பிறகு நன்கு கழுவ வேண்டும் “அதன்பிறகு அதில் அவள் தொழுது கொள்வாள்”1 எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர்: அஸ்மாஉ பினத் அபீபக்ரு ரளியல்லாஹு அன்ஹுமா

குறிப்பு: 1 இவ்வாறு செய்தால் உடை சுத்தமாகி விட்டது, உடல் சுத்தமாக இருப்பின் அத்துணியில் தொழுவது ஆகுமானதாகும் என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

தொழுகை நூல்

பாங்கு ஆரம்பம் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 190

முஸ்லிம்கள் மதினாவை வந்தடைந்ததும் கூடிஇருந்து தொழுகைகளுக்குரிய நேரங்களை நிர்ணயம் செய்வர். (இப்போது பாங்கு கூறப்பட்டு தொழுகைக்கு அழைப்பதைப் போன்று) தொழுகைக்கு அழைப்பவர் யாரும் இல்லை. அது (தொழுகைக்கு எவ்வாறு அழைப்பது என்பது) பற்றி ஒரு நாள் அவர்கள் பேசினர். (அப்போது) அவர்களில் ஒரு சிலர் “கிறிஸ்துவர்களின் மணியைப் போன்று ஒரு மணியை எடுத்து(ஆக்கி)க் கொள்ளுங்கள்” என்றனர். “யூதர்களின் ஒரு கொம்பை” என அவர்களில் ஒரு சிலர் கூறினர். “ஒரு மனிதரை நீங்கள் அனுப்பி வைக்க வேண்டாமா? அவர் தொழுகைக்காக அழைப்பார் என உமர் பின் கத்தாபு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். (இக்கருத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏற்று)” “பிலாலே எழுந்து தொழுகைக்காக அழைப்பீராக,” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு

பாங்கு கூறும் முறை பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 191

“அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹு, அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹு, அஷ்கது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ், அதன்பின் அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹு என இருமறையும், அஷ்ஹது அன்ன முஹம்மதர்ரசூலுல்லாஹ் என இருமுறையும் மீண்டும் கூறிவிட்டு, ஹய்ய அலஸ்ஸலாத் இருமுறையும், ஹய்ய அலல்பலாஹ் இருமுறையும் கூறுவார். அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாஇலாஹ இல்லல்லாஹ் (என்பதை இஸ்ஹாக், இப்புராஹீமின் மகனார் அதிகப்படுத்தியுள்ளார்) இந்த பாங்கை அபூ மஹ்தூரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள்.

அறிவிப்பாளர்: அபூமஹ்தூரா ரளியல்லாஹு அன்ஹு

பாங்கை இரட்டையாகவும் இகாமத்தை ஒருமுறையும் கூறுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 192

பாங்கை இரட்டையாகவும் இகாமத்தை ஒற்றையாகவும் (கூறுமாறு) பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கட்டளையிடப்பட்டுள்ளார்கள் என அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

இப்னு உலய்யா அறிவிப்பதாக யஹ்யா தனது ஹதீஸில், “அதை அய்யுபுக்கு நான் அறிவித்தேன். அதற்கவர் “இகாமத்து நீங்கலாக” எனக்கூறினார்.

இகாமத்தில் கத்காமதிஸ்ஸலாத் என்ற வார்த்தையை இருமுறை கூற வேண்டுமென்பதே இதன்பொருளாகும்.

பாங்கு கூறுவதற்காக இருவரை நியமித்தல் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 193

பிலால் ரளியல்லாஹு அன்ஹு, கண் தெரியாத இப்னு உம்முமக்தூம் ரளியல்லாஹு அன்ஹு ஆகிய இருவரும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பாங்கு கூறக்கூடியவர்களாக இருந்தனர் என இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

கண்பார்வையற்றவரை பாங்கு கூற நியமனம் செய்வது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 194

கண்பார்வையற்றவராக இருந்த இப்னு உம்முமக்தூம் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பாங்கு கூறக்கூடியவராக இருந்தனர்.

அறிவிப்பாளர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா

பாங்கின் சிறப்பு பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 195

“ஃபஜ்ரு (அதிகாலைப் பொழுது) உதயமாகிவிட்டால் (எதிரிகளைத்) தாக்க தயாராகி பாங்கோசையையும் செவியுறத் தயாராக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருப்பார்கள், பாங்கோசையைச் செவியுற்றுவிட்டால் தாக்குதலை நிறுத்திக் கொள்வார்கள். அவ்வாறு இல்லாவிட்டால் தாக்கத் தொடங்குவார்கள். அப்போது, அல்லாஹ் அக்பர், அல்லாஹ் அக்பர், என ஒரு மனிதர் கூற அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செவியுற்றுவிட்டு அவர் இஸ்லாத்தில் (மார்க்கத்தில்) இருக்கிறார்” எனக்கூறினார்கள். அதன்பிறகு (அம்மனிதர்) “அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹு” எனக்கூறினார். (அதற்கு) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “நரகிலிருந்து வெளியேறி விட்டாய்” எனக்கூறினார்கள். (இதைக்கேட்ட ஸஹாபாக்கள் சப்தம் வந்த திசையை) நோக்கினார்கள். அப்போது ஆடுமேய்க்கும் ஒருவர் (அங்கு) இருந்தார், என அனஸ்பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஹதீஸ் எண் : 196

“தொழுகைக்காக (பாங்கு கூறி) அழைக்கப்பட்டுவிட்டால், பாங்கோசையை செவியுறாதிருக்குமளவிற்கு பின்துவாரத்தின் வழியாக பெரும் சப்தத்துடன் காற்றைவிட்டவனாக ஷைத்தான் பின்னால் செல்லுகிறான். பாங்கு கூறி முடிக்கப்பட்டுவிட்டால் (மீண்டும்) முன்னால் வருகிறான். தொழுகைக்கு ‘இகாமத்து‘ கூறப்பட்டு விட்டால் பின்னால் செல்லுகிறான். இகாமத்து கூறப்பட்டு முடிந்ததும் (மீண்டும் முன்னால்) வந்து, மனிதரின் மனத்திற்கும் அவருக்குமிடையில் (அவர் மனதில் பல எண்ணங்களை உண்டாக்கி) நடந்து முடிந்துவிட்ட இன்னவைகளை நினைத்துபார்: இன்னவைகளை நினைத்துபார் எனவும் அதற்கு முன்பு அவர் நினைத்து பார்க்காதவற்றையெல்லாம் நினைவு கூறுமாறு கூறுகிறான் இறுதியாக அம்மனிதர் எத்தனை (ரக்அத்துகள்) தொழுதார் என தெரியாதவாறு ஆகிவிடுகிறார்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

பாங்கு கூறுவோரின் சிறப்பு பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 197

அறிவிப்பாளராகிய நான் ‘முஆவியா பின் அபீ ஸுஃப்யான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இருந்தேன். (அப்போது) தொழுகைக்கு அவரை அழைப்பதற்காக பாங்கு கூறுபவர் அவரிடம் வந்தார். அப்போது முஆவியா, “பாங்கு கூறுக்கூடியவர்கள் மறுமையில் மனிதர்களில் நீண்ட கழுத்துடையவர்களாக இருப்பர், என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் செவியுற்றிருக்கிறேன்” எனக்கூறினார்.

பாங்கு கூறுபவர் கூறுவதைப்போன்றே கூறுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 198

பாங்கு கூறக்கூடியவரை (பாங்கு கூற) நீங்கள் செவியுற்றால், அவர் கூறுவது போன்றே கூறுங்கள். அதன்பிறகு என்மீது ஸலவாத்து கூறுங்கள். காரணம்: நிச்சயமாக என்மீது யார் ஒரு முறை ஸலவாத்துக் கூறுகிறாரோ அவர் மீது அல்லாஹ் அதன்நிமித்தம் பத்துமுறை ஸலவாத்துக் கூறுகிறான். அதன்பின் எனக்காக அல்லாஹ்விடம் ‘வஸீலா‘வைக் கேளுங்கள். நிச்சயமாக அது சுவனத்தில் ஒரு ஸ்தானமாகும். அல்லாஹ்வின் அடியார்களில் ஒரு அடியாரைத் தவிர அது மற்றவர்களுக்குரியதல்ல. (அந்த) ஒரு அடியார் நானாக இருக்க (உறுதியாக அல்லாஹ்விடம்) நான் ஆதரவுவைக்கிறேன். ஆகவே எனக்காக அல்லாஹ்விடம் வஸீலவை யார் கேட்டாரோ? அவருக்கு பரிந்துரை கிடைக்கும். என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற செவியுற்றதாக அப்துல்லாஹ், பின் அம்ரு பின் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள்.

மொழிபெயர்பாளரின் குறிப்பு: மேலே உள்ள 198 வது ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளைப்படி பாங்கு கூறுபவர் கூறுவதைப்போன்றே கூறவேண்டும் என்பதாகும். இது போன்றே இதையடுத்த 199 வது ஹதீஸில் “ஹய்ய அலஸ்ஸலாத்”, “ஹய்ய அலல்பலாஹ்” என்பதை கேட்கும் பொழுது “லாஹ்வ்ல வலாகுவத்த இல்லாபில்லாஹ்” எனக்கூறலாம். என்பதையும் விளக்கிக் கூறிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அஷ்ஹது அன்ன முஹம்மதர்ரசூலுல்லாஹ்” என்பதை பாங்கு கூறுபவர் கூறும் போது “கை நகங்களை கண்களில் வைத்து முத்திக் கொள்ளவோ, அவ்வாறு செய்வதால் கண்களில் நோய் ஏற்படுவதில்லை என்றே திண்ணமாகக் கூறுவே இல்லை என்பதைக் தெரிந்து இச்செயலைக் செய்து வரும் சகோதரர்கள் கைவிட்டு விட்டு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டவாறு மட்டும் செய்து அந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷஃபா அத்துக்குரியவர்களாக நாம் ஆகுவதற்கு வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லுதவி செய்வானாக! ஆமீன்.

பாங்கு கூறக்கூடியவர் கூற்றைப்போன்றே கூறியவரின் சிறப்பு பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 199

பாங்கு கூறக்கூடியவர் “அல்லாஹு அக்பரு1 அல்லாஹு அக்பரு எனக்கூறினால், உங்களில் ஒருவர் அல்லாஹு அக்பரு அல்லாஹு அக்பரு எனக்கூறுவார். அதன்பிறகு (பாங்கு கூறும்) அவர் அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹு எனக்கூறுவார். (அதை கேட்பவர்) அஷ்கது அன்லாஇலாஹ இல்லல்லாஹு எனக்கூறுவர். அதன்பிறகு (பாங்கு கூறும்) அவர், அஷ்கது அன்ன முஹம்மதர்ரசூலுல்லாஹ் எனக்கூறுவார். (அதைக்கேட்பவர்) அஷ்கது அன்ன முஹம்மதர்ரசூலுல்லாஹ் எனக்கூறுவார். (அதன்பிறகு பாங்கு கூறுபவர்) ஹய்ய அலஸ்ஸலா(த்)தி எனக்கூறுவார். (அதைக்கேட்பவர்) லாஹவ்ல வலாகுவ்வ(த்)த இல்லாபில்லாஹி, எனக்கூறுவார். (அதன்பிறகு பாங்கு கூறுபவர்) ஹய்ய அலல் ஃபலாஹி எனக்கூறுவார். (அதைக்கேட்பவர்) லாஹவ்ல வலாகுவ்வ(த்)த இல்லாபில்லாஹி, எனக்கூறுவார். (அதன் பிறகு பாங்கு கூறுபவர்) அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் எனக்கூறுவார். (அதைக்கேட்பவர்) அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் எனக்கூறுவார் (பாங்கு கூறுபவர்) லாயிஇலாஹ இல்லல்லாஹு எனக்கூறுவார். (அதைக்கேட்பவர்) மனதார (இதயத்திலிருந்து) லாயிலாஹ இல்லல்லாஹு எனக்கூறினால் சுவனம் புகுந்து விட்டார், என என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் பின் கத்தாபு ரளியல்லாஹு அன்ஹு

ஹதீஸ் எண் : 200

பாங்கு கூறுபவர் பாங்கு கூறி முடிக்கும் சமயத்தில், “அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்கலஹு வஅன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு ரளீத்து பில்லாஹி ரப்பன், வபி முஹம்மதின் ரசூலன், வபில் இஸ்லாமி தீனன் என யார் கூறுகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப்பட்டு விடுகிறது என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஅது பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு: அதன் பொருள்:-

வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி வேறெவருமில்லை, அவன் தனித்தவன் (எவ்வகையிலும் எவரும்) அவனுக்கு கூட்டில்லை என்றும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனின் அடியாரென்றும், அவனின் தூதர் என்றும் நான் சாட்சி கூறுகிறேன். அல்லாஹ்வை இரட்சகனாவும், முஹம்மதை தூதராகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும் நான் பொருந்திக் கொண்டேன்.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்