Social Icons

Thursday 1 November 2012

முஹம்மது நபி (ஸல்) வரலாறு சிறிய வினாவிடைகள்

Q1) முஹம்மது நபி (ஸல்) எத்தகைய மக்கள் வாழ்ந்த காலத்தில் பிறந்தார்கள்?
கற்களையும், சிலைகளையும், வாழ்ந்து மறைந்த நல்லடியார்களின் உருவங்களையும் கடவுள் எனவும், கடவுளுக்கு நெருக்கமானவர்கள் எனவும் வழிபட்ட அறியாமைக் கால மக்கள் வாழ்ந்த சமூகத்திலே பிறந்தார்கள்.
Q2) அறியாமைக் கால மக்கள் வணங்கிக் கொண்டிருந்த கடவுளர்களின் பெயர்கள் சிலவற்றைக் கூறுக:
லாத், மனாத்,உஸ்ஸா,ஹுப்ல் – இவைகள் முஹம்மது நபி (ஸல்) பிறந்த கால கட்டத்தில் வாழ்ந்த மக்களின் கடவுள்களாகும்.

Q3) முஹம்மது நபி (ஸல்) பிறந்த கால கட்டத்தில் வாழ்ந்த மக்களின் சமூகம் எப்படியிருந்தது?
அநியாயம் பரவிக் கிடந்தது. பலவீனர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. பெண் குழந்தைகள் உயிருடன் புதைக்கப்பட்டனர். புனிதமானவைகள் அலட்சியப்படுத்தப்பட்டன. பலமுள்ளவர்கள் பலவீனர்களின் உரிமைகளைச் சுரண்டித் தின்றனர். கணக்கின்றி பல மனைவியரை வைத்திருந்தனர். விபச்சாரம் பரவிக்கிடந்தது. அற்பக் காரணங்களுக்காக பல குலங்களிடையே போர்கள் நடந்துகொண்டிருந்தன.
Q4) முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த நபியின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்?
நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மகனார் நபி இஸ்மாயில் (அலை) அவர்களின் வம்சா வழியைச் சேர்ந்தவராவார்கள்.
Q5) நபி (ஸல்) அவர்கள் எந்த குலத்தைச் சேர்ந்தவர்கள்?
அரேயிர்களின் உயர் குலமான குரைஷிக் குலத்தைச் சேர்ந்தவர்கள்.
Q6) முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் பெயர் என்ன?
அப்துல் முத்தலிஃப்
Q7) முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தந்தையார் பெயர் என்ன?
அப்துல்லாஹ்
Q8) முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தாயார் பெயர் என்ன?
ஆமினா அம்மையார்
Q9) முஹம்மது (ஸல்) அவர்களின் தாயார் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவராவார்?
ஆமினா அம்மையார் பனூஸஹ்ரா கோத்திரத்தைச் சேர்ந்த வஹ்ப் என்பவரின் மகளாவார்.
Q10) முஹம்மது (ஸல்) அவர்களின் தந்தை எங்கு, எப்போது மரணமடைந்தார்கள்?
முஹம்மது (ஸல்) அவர்கள் தன் தம் தாயின் வயிற்றில் சில மாத கருவாக இருந்தபோது, சிரியா நாட்டிற்கு வியாபாரத்திற்காக செல்லும் வழியில் மதினாவில் நோய்வாய்பட்டு இறந்தார்.
Q11) முஹம்மது (ஸல்) அவர்கள் எந்த வருடம் பிறந்தார்கள்?
கி.பி. 570 ஆம் ஆண்டு, ரபியுல் அவ்வல் மாதம் பிறந்தார்கள். பிறந்த தேதியில் கருத்து வேறுபாடு உண்டு. ஆயினும் பல அறிஞர்களின் கருத்துப்படி ரபியுல் அவ்வல் மாதம் 12-ல் பிறந்தார்கள் என்பதாகும்.
Q12) முஹம்மது (ஸல்) அவர்கள் பிறந்த வருடம் வரலாற்று ஆசிரியர்களிடையே எப்படி அழைக்கப்படுகிறது?
யானை ஆண்டு என அழைக்கப்படுகிறது.
Q13) முஹம்மது (ஸல்) அவர்கள் பிறந்த வருடம் யானை ஆண்டு என்று ஏன் அழைக்கப்படுகிறது?
நபிகள் நாயகம் பிறப்பதற்கு ஐம்பது நாட்களுக்கு முன்பு கஃபதுல்லாஹ்வை இடிப்பதற்காக படைதிரட்டி வந்த ஆப்ரஹாம் என்ற கிறிஸ்தவ ஆட்சியாளரின் யானைப் படையினர் மீது அல்லாஹ் ‘அபாபீல்’ என்னும் பறவைகளை அனுப்பி அவற்றை அழித்தான். இதன் காரணமாக அந்த ஆண்டை யானை ஆண்டு என்கின்றனர்.
Q14) முஹம்மது (ஸல்) அவர்கள் குழந்தையாக இருந்த போது அவர்களுக்குப் பாலூட்டிய செவிலித் தாய் யார்?
பனூஸஃத் கோத்திரத்தைச் சேர்ந்த கிராமவாசியான ஹலீமத்துஸ் ஸஃதிய்யா என்ற அம்மையார்.
Q15) முஹம்மது (ஸல்) அவர்களின் தாயார் எப்போது மரணமடைந்தார்கள்?
நபி (ஸல்) அவர்கள் ஆறு வயதாக இருக்கும் போது மதினாவிலிருந்து திரும்பும் வழியில் அப்வாஃ என்னுமிடத்தில் ஆமினா அம்மையார் மரணமடைந்தார்கள்.
Q16) முஹம்மது (ஸல்) அவர்களின் தாயார் மரணத்திற்குப் பின்னர் யார் பொறுப்பில் வளர்ந்தார்கள்?
தமது பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களின் பொறுப்பில் வளர்ந்தார்கள்.
Q17) முஹம்மது (ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் எப்போது மரணமடைந்தார்கள்?
நபி (ஸல்) அவர்களுக்கு எட்டு வயதாக இருக்கும் போது.
Q18) அப்துல் முத்தலிப் அவர்களின் மரணத்திற்குப்பிறகு முஹம்மது (ஸல்) அவர்கள் யார் பொறுப்பில் வளர்ந்தார்கள்?
நபி (ஸல்) அவர்களின் பெரிய தகப்பனார் அபுதாலிப் அவர்களின் பொறுப்பில் வளர்ந்தார்கள்.
Q19) முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அச்சமூக மக்களால் வழங்கப்பட்ட பெயர்கள் யாவை? ஏன்?
உண்மையாளர், மற்றும் நம்பிக்கையாளர் (அல்-அமீன்) என்று அழைக்கப்பட்டார்கள்.
காரணம் இவ்விரண்டு குணங்களின் அடிப்ப டையிலேயே வளர்ந்து வந்தார்கள். நம்பிக்கைக்குரியவர் வந்து விட்டாரெனக் கூறப்பட்டால் நிச்சயமாக அது நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் தான் என்று புரிந்துகொள்ளப்படும்.
Q20) முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது ஆரம்பக் காலத்தில் செய்த தொழில் என்ன?
குரைஷிகளில் ஒருவரிடம் கூலிக்கு ஆடுகள் மேய்க்கும் வேலையைச் செய்தார்கள்.
Q21) முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த நாட்டுக்கு வியாபாரத்திற்காகச் சென்றார்கள்?
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சிரியா நாட்டுக்கு வியாபாரத்திற்காகச் சென்றார்கள்.
Q22) முஹம்மது நபி (ஸல்) அவர்களின் முதல் திருமணம் எப்போது யாருடன் நடந்தது?
நபி (ஸல்) அவர்களுக்கு 25 வயதாக இருக்கும் போது விதவையான 40 வயதான கதீஜா (ரலி)அம்மையாருடன் நடந்தது.
Q23) முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு கதீஜா (ரலி) அவர்கள் மூலமாகப் பிறந்த குழந்தைகள் யாவர்?
ஸைனப் (ரலி), ருகைய்யா (ரலி), உம்முகுல்ஸும் (ரலி), ஃபாத்திமா (ரலி) ஆகிய பெண் மக்க ளையும் காசிம் (ரலி), அப்துல்லாஹ் (ரலி) என்ற இரு ஆண் மக்களையும் பெற்றெடுத்;தார்கள்.
காசிம் (ரலி), அப்துல்லாஹ் (ரலி) ஆகிய இருவரும் சிறுவயதிலேயே இறந்துவிட்டார்கள்.
Q24) முஹம்மது நபி (ஸல்) அவர்களின் எத்தனையாவது வயதில் வஹி இறங்க ஆரம்பித்தது?
40 ஆம் வயதில்.
Q25) முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எந்த இடத்தில் முதன்முதலாக வஹீ இறங்கியது?
மக்காவிலுள்ள ஜபல் அல்-நூர் என்று சொல்லப்படக்கூடிய மலையிலுள்ள ஹிரா என்னும் குகையில்
Q26) முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறைவனிடமிருந்து வஹியை கொண்டு வந்த வானவர் பெயர் என்ன?
ஜிப்ரயீல் (அலை)
Q27) முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முதன் முதலாக இறங்கிய வஹி எது?
அல்-குர்ஆனின் 96 வது அத்தியாயத்தின் முதல் ஐந்து வசனங்கள். (96:1-5)
Q28) முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முதன் முதலாக வஹி இறங்கிய நிகழ்ச்சியைக் கூறுக:
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் இருபத்தொன்றாம் இரவில் ஹிரா குகையில் தங்கியிருந்த போது ஜீப்ரீல் (அலை), நபி (ஸல்) அவர்களிடம் வந்து நீர் ஓதுவீராக! எனக் கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எனக்கு ஓதத்தெரியாது எனக் கூறினார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் இரண்டாம் முறையும், மூன்றாம் முறையும் ஓதுவீராக எனக் கூறினார்கள். மூன்றாம் முறை ”படைத்த உம் இறைவனின் திருப் பெயர் கொண்டு ஓதுவீராக! கருவறைச் சுவற்றில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு நிலையிலிருந்து அவன் மனிதனைப் படைத்தான். ஓதுவீராக! உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில் அவனே எழுது கோலின் மூலம் கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றை யெல்லாம் கற்றுக் கொடுத்தான்”(96:1-5) எனக் கூறினார்கள். பின்னர் அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள்.
Q29) ஜிப்ரயீல் (அலை) அவர்களைக் கண்டு பயந்திருந்த நபி (ஸல்) அவர்களை யாரிடம் கதீஜா (ரலி) அவர்கள் அழைத்துச் சென்றார்கள்?
வரகா இப்னு நவ்பல் என்ற கிறிஸ்தவ அறிஞரிடம்.
Q30) முதன் முதலில் வணக்கத்திற்குரியவன் ஏக இறைவனான அல்லாஹ் ஒருவனே என்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் எனவும் ஏற்றுக்கொண்டவர் யார்?
நபி (ஸல்) அவர்களின் மனைவி கதீஜா (ரலி) அவர்கள்.
Q31) நபி (ஸல்) அவர்கள் எத்தனை ஆண்டுகள் இரகசியமாக பிரச்சாரம் செய்தார்கள்?
மூன்றாண்டுகள். இந்த மூன்றாண்டுகளில் அநேகர் இஸ்லாத்திற்கு வந்தனர். ஆயினும் குரைஷிகளின் துன்புறுத்தலுக்குப் பயந்து அதை இரகசியமாக வைத்திருந்தனர்.
Q32) மக்கத்து காஃபிர்களும் திருமறை வசனங்களுக்கு கட்டுண்டு இறைவனை சிரம் பணிந்த நிகழ்ச்சியைக் கூறுக:
ஒரு முறை ரமலானில் நபி (ஸல்) அவர்கள் கஃபாவிற்குச் சென்றார்கள். அங்கு நின்றுகொண்டு திடீரென நஜ்ம் அத்தியாயத்தை ஓத ஆரம்பித்தார்கள். இதற்கு முன் அல்லாஹ்வின் வார்த்தையைச் கேட்டிராத இறை நிராகரிப்பாளர்களான குரைஷிகள் இப்போது நபி (ஸல்) அவர்கள் திடீரென இந்த அத்தியாயத்தை ஓதிக்காட்டியபோது- ஈர்ப்பு சக்தியுள்ள இத்தெய்வீக வாக்கு அவர்களின் செவிகளைத் தட்டியபோது அவர்களில் ஒவ்வொருவரும் அதை செவிதாழ்த்திக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். இறுதியாக ”அல்லாஹ்வுக்கே சிரம்பணியுங்கள்! அவனையே வணங்குங்கள்!”என்ற வசனத்தை ஓதி நபி (ஸல்) அவர்கள் சிரம்பணிந்தபோது அவர்களில் யாரும் தன்னைக் கட்டுப்ப டுத்திக்கொள்ள முடியாமல் விழுந்து சிரம்பணிந்தார்கள்.
Q33) நபி (ஸல்) அவர்கள் பகிரங்க அழைப்பு விடுக்கவேண்டும் என இறங்கிய வசனம் எது?
”உமக்கு கட்டளையிடப்பட்டிருப்பதை பகிரங்மாக அறிவிப்பீராக! இணைவைப்பவர்களைப் புறக்கணிப்பீராக!”(15:94)
Q34) நபி (ஸல்) அவர்கள் செய்த முதல் பகிரங்க பிரச்சாரம் எது?
நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் ஸஃபா குன்றின் மீது நின்று கொண்டு குரைஷிகளை அழைத்தார்கள். அவர்கள் முன் அதிகமானோர் ஒன்று கூடினார்கள் அப்போது அவர்களை நோக்கி,
”இம்மலைக்குப் பின்னால் எதிரிகள் உங்களை அழிக்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என நான் உங்களிடம் கூறினால் நீங்கள் என்னை நம்புவீர்களா?” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள் ஆம்! உண்மையையும் நம்பிக்கையையும்; தவிர வேறு எதையுமே நாங்கள் உங்களிடம் அறிந்ததில்லை எனக் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், நிச்சயமாக நான் கடுமையான வேதனையை விட்டும் உங்களை எச்சரிக்கை செய்கிறேன் எனக் கூறினார்கள். பின்பு அவர்களை அல்லாஹ்வின் பக்கமும் சிலை வணக்கங்களை விட்டுவிடுமாறும் அழைக்க ஆரம்பித்தார்கள். அப்போது அக்கூட்ட த்திலிருந்த அபூலஹப் கொதித்தெழுந்தான். உனக்கு நாசம் உண்டாகட்டும்! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்? எனக் கேட்டான். இதன் பிறகு அல்லாஹ் இந்த அத்தியாயத்தை இறக்கிவைத்தான்: ”அபூலஹபின் இரு கைகளும் நாசமாகட்டும்! அவனும் நாசமாகட்டும்! அவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்தவையும் அவனுக்;கு எந்தப் பல னையும் அளிக்கவில்லை. விரைவில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் போடப்படு வான். (இங்கும்அங்கும்)புறம்பேசித்திரிபவளான அவனுடைய மனைவியும் (நெருப்பில்போடப் படுவாள்) அவளின் கழுத்தில் முறுக்கேற்றப்பட்ட கயிறு இருக்கும்”.(111:1-5)
Q35) இஸ்லாத்திற்காக முதன்முதலாக உயிர்தியாகம் செய்தவர் யார்?
இஸ்லாத்தில் முதன் முதலாக உயிர்த்தியாகம் செய்தவர் சுமையா (ரலி) என்ற பெண்மணி ஆவார்கள்.
Q36) இஸ்லாத்தை ஏற்றதற்காக பிலால் (ரலி) அவர்கள் பட்ட கஷ்டங்கள் யாவை?
பிலால்(ரலி) அவர்கள் இஸ்லாத்தை விட்டுவிட வேண்டுமென்பதற்காக பிலால் (ரலி) அவர்களின் எஜமான் உமையா பின்கலஃப், பிலால்(ரலி) அவர்களைச் சங்கிலியால் கட்டி மக்காவிற்கு வெளியே கொண்டு வந்து அனல் பறக்கும் மணலில் படுக்க வைத்து அவர்களின் நெஞ்சில் மிகப் பெரும் பாரங்கல்லை வைத்து அவனும் அவனைச் சாந்தவர்களும் அவர்களைச் சாட்டையால் மாறி மாறி அடித்தனர். பிலால்(ரலி) அவர்கள் ஏகன், ஏகன் என்றே திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந் தார்கள். இந்நிலையில் அபூபக்கர்(ரலி) உமையாவிட மிருந்து பிலால்(ரலி) அவர்களை விலைக்கு வாங்கி சுதந்திரமானவர்களாக அல்லாஹ்வின் பாதையில் விடுதலை செய்தார்கள்.
Q37) முஸ்லிம்கள் முதன் முதலாக எந்த நாட்டிற்குச் ஹிஜ்ரத் சென்றார்கள்?
மக்கத்து இறை நிராகரிப்பாளர்களின் கொடுமைகளிலிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக சுமார் 70 முஸ்லிம்கள் தத்தம் குடும்பத்தார்களுடன் நஜ்ஜாஸி மன்னர் ஆட்சி செய்து கொண்டிருந்த அபீஸீனியாவிற்கு ஹிஜ்ரத் சென்றார்கள்.
Q38) உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற விதத்தைக் கூறுக:
நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்வதற்காக உருவிய வாளுடன் புறப்பட்டுச் சென்ற உமர் (ரலி) அவர்கள் வழியில் தம் சகோதரி இஸ்லாத்தை தழுவிய செய்தி கேட்டு அவரின் வீட்டிற்குச் சென்று, அங்கே திருக்குர்ஆனைச் செவியுற்று இஸ்லாத்தை ஏற்றார்.
Q39) இஸ்லாத்தை விட்டு விட வேண்டுமென்பதற்காக முஸ்லிம்களையும் பனூ ஹாஷிம் குலத்தவர்களையும் எத்தனை ஆண்டுகள் சமூக புறக்கணிப்பு செய்தனர்?
மூன்றாண்டுகள். முஸ்லிம்கள் மக்காவிற்கு வெளியே உள்ள கணவாய்களில் ஒன்றான அபூதாலிப் கணவாய்க்கு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளானார்கள். அங்கு முஸ்லிம்கள் மிகக்கடுமையான கஷ்டத்திற் காளானார்கள். பசியையும் பல்வேறு கஷ்டங்களையும் அனுபவித்தனர். அவர்களில் வசதியுள்ளவர்கள் தங்களின் பெரும் பொருளைச் செலவிட்டனர். கதீஜா(ரலி) அவர்கள் தம் செல்வம் அனைத்தையும் செலவு செய்தார்கள். அவர்களிடம் நோய் பரவியது. பெரும்பாலோர் அழிந்துவிடும் நிலைக்கு ஆளானார்கள். எனினும் அவர்கள் நிலை குலையாமல் உறுதியோடும் பொறுமையோடும் இருந்தார்கள். அவர்களில் எவரும் தன் மார்க்கத்திலிருந்து பின்வாங்கவில்லை.
Q40) பிரச்சாரத்திற்காக தாயிப் நகர் சென்ற நபி (ஸல்) அவர்களை அந்த நகரின் மக்கள் எவ்வாறு நடத்தினார்கள்?
இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதது மட்டுமல்லாம்ல் நபி (ஸல்) அவர்களை மிக மோசமாக நடத்தினார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக சிறுவர்களைத் தூண்டிவிட்டனர். அவர்கள் நபிகள் நாயகம்(ஸல்)அவர்களைக் கல்லால் எறிந்து அவர்களின் இரு கணுக்கால்களில் இரத்தம் வரும் அளவுக்கு காயப்படுத்தினார்கள்.
Q41) மக்கத்து இறை நிராகரிப்பாளர்கள் இஸ்லாத்தை ஏற்க வேண்டுமென்பதற்காக நபி (ஸல்) அவர்கள் செய்து காட்டிய அற்புதம் என்ன?
ஒரு முறை மக்கத்து இறை நிராகரிப்பாளர்கள் சந்திரனை இரு கூறாகப் பிளந்து காட்டும்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வேண்டினார்கள். அதை அவர்கள் தமது இறைவனிடம் வேண்டி சந்திரனை இரு கூறாகப் பிளந்து காட்டினார்கள். குரைஷிகள் அவ்வற்புதத்தை நீண்ட நேரம் கண்டார்கள். எனினும் அவர்கள் அதை நம்பவில்லை. முஹம்மத் எங்களுக்கு சூனியம் செய்துவிட்டாரெனக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் இவர் உங்களுக்கு சூனியம் செய்து விட்டாலும் அனைத்து மக்களுக்கும் அவரால் சூனியம் செய்ய முடியாது. எனவே இதன் உண்மை நிலையை அறிந்துகொள்வதற்காக பயணக் கூட்டத் தினரை எதிர்பாருங்கள் எனக் கூறினார். பின்னர் பயணிகள் வந்தபோது அவர்களிடம் இது பற்றிக் கேட்டனர். அதற்கவர்கள் ஆம்! நாங்களும் அதைக் கண்டோம் எனக் கூறினர். எனினும் குரைஷிகள் இதன் பின்னரும்; நிராகரிப்பிலேயே பிடிவாதமாக இருந்தனர்.
Q42) நபி (ஸல்) அவர்களின் மிஹ்ராஜ் பயணம் பற்றிக் கூறுக.
நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ரஜப் மாதம் 27-ஆம் இரவு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு ஃபலஸ்தீனிலுள்ள பைத்துல் முகத்தஸுக்கு கொண்டு சென்றார்கள். பிறகு அங்கிருந்து அவர்களை வானத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு அவர்கள் தமது இறைவனின் மாபெரும் அத்தாட்சிகளைக் கண்டார்கள். வானில் வைத்தே ஐவேளைத் தொழுகைகள் கடமையாக்க ப்பட்டன. அதே இரவில் அவர்கள் தெளிந்த உள்ளத்துடனும் அழுத்தமான உறுதியுடனும் மக்காவிற்குத் திரும்பி வந்தார்கள்.
Q43) உமர் (ரலி) அவர்கள் மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்த நிகழ்ச்சியைக் கூறுக:
முஸ்லிம்கள் அனைவரும் பயந்தவர்களாக இரகசியமாக மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த சமயத்தில் உமர்(ரலி) அவர்களின் ஹிஜ்ரத் வீரத்திற்கும் சவாலுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கியது. ஏனெனில் அவர்கள் தமது வாளை உருவிக்கொண்டு தமது வில்லை யும் ஏந்திக் கொண்டு கஃபதுல்லாவிற்குச் சென்று அதை வலம்வந்துவிட்டு பின்னர் இணை வைப்பவர்களை நோக்கி, ”எவன் தனது மiனைவியை விதவையாக்க விரும்புகிறானோ அல்லது தனது குழந்தையை அநாதையாக்க விரும்புகிறானோ அவன் என்னிடம் வரட்டும்! இதோ நான் ஹிஜ்ரத் புறப்படுகிறேன்!” எனக் கூறிவிட்டுச் சென்றார்கள். எவரும் அவரைத் தடுக்கத் துணியவில்லை.
Q44) நபி (ஸல்) அவர்கள் மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்த நிகழ்ச்சியைக் கூறுக:
நபி (ஸல்) அவர்களின் பிரச்சாரத்தை நிறுத்தமுடியாத மக்கத்து இறைநிராகரிப்பாளர்கள் ஆலோசனை நடத்தி நபி (ஸல்) அவர்களைக் கொன்றுவிடத் தீர்மானித்தார்கள். இச்சதித்திட்டத்தை அல்லாஹ் சங்கைக்குரிய தனது நபிக்கு தெரிவித்துவிட்டான். நபி (ஸல்)அவர்கள் அபூபக்கர்(ரலி)அவர்களுடன் ஹிஜ்ரத்துச் செய்ய முடிவு செய்தார்கள். அந்த இரவில் நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் அலீ(ரலி)யிடம் தம்முடைய இடத்தில் உறங்க வைத்தார்கள். சதிகாரர்கள் வந்து வீட்டை முற்றுகையிட்டார்கள். படுக்கையிலிருந்த அலீ (ரலி) யைப் பார்த்துவிட்டு அவர் முஹம்மதுதான் என எண்ணிக்கொண்டார்கள். அவர் எப்போது வெளியே வருவார் என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் . நபி (ஸல்) அவர்கள் மண்ணை அள்ளி அவர்களின் தலையில் தூவிவிட்டு வீட்டைவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்கள். அல்லாஹ் அவர்களின் பார்வையைப் பறித்துவிட்டான். ஆகவே அவர்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்றதை உணரவில்லை.
Q45) நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செல்லும் வழியில் எந்த குகையில் தங்கினார்கள்?
நபி (ஸல்) அவர்ககளும் அபூபக்கர்(ரலி) அவர்களும் சுமார் ஐந்து மைல் தூரம் சென்று ஸவ்ர் எனும் குகையில் ஒழிந்து கொண்டனர். குரைஷிகள் எல்லா பாகங்களிலும் நபி (ஸல்) அவர்களைத் தேடுவதற்கு ஆள் அனுப்பினார்கள். நபி (ஸல்) அவர்களை உயிருடனோ பிணமாகவோ கொண்டு வருபவருக்கு நூறு ஒட்டகங்கள் பரிசாகத் தரப்படுமென அறிவித்தார்கள். அவர்கள் நபி (ஸல்)அவர்களைத் தேடி குகை வாசலுக்கே வந்துவிட்டார்கள். எந்த அளவுக்கு என் றால் அவர்களில் ஒருவன் கீழே குனிந்து பார்த்துவிட்டால் அவர்கள் இருவரையும் கண்டு கொள்வான். நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என அபூபக்கர் (ரலி)கடுமையான கவலை கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அபூ பக்கரே! நாம் இரண்டு பேர்தான் இருக்கிறோம் என எண்ணிக்கொண்டீரா? அல்லாஹ் மூன்றாவது ஆளாக இருக்கிறான்! நீங்கள் கவலைப்படாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்! எனக் கூறினார்கள். ஆனால் அக்கூட்டத்தினர் அவ்விருவரையும் பார்க்க வில்லை. இருவரும் குகையில் மூன்று நாட்கள் தங்கியிருந்துவிட்டு பிறகு மதீனாவை நோக்கி நடந்தனர்.
Q46) நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செல்லும் வழியல் நடைபெற்ற அற்புதம் என்ன?
நபி (ஸல்) அவர்ககளும் அபூபக்கர்(ரலி) அவர்களும் ஹிஜ்ரத் செல்லும் வழியில் உம்மு மஃபத் எனச் சொல்லப்படும் ஒரு பெண்மணியைக் கண்டனர். அவரிடம் உணவும் தண்ணீரும் கேட்டனர். அவரிடம் மெலிந்த ஒரே ஒரு ஆட்டைத் தவிர எதுவுமே இல்லை. அதில் துளிப் பால் கூட இல்லை. நபி (ஸல்) அவர்கள் அதன் அருகில் சென்று அதன் பால் மடியைத் தடவி பால் கறந்து ஒரு பெரிய பாத்திரத்தை நிரப்பினார்கள். அதைப் பார்த்து விட்டு உம்மு மஃபத் திகைத்துப்போய் நின்று கொண்டிருந்தார். பிறகு அனைவரும் தாகம் தீர அருந்தினர். பிறகு இரண்டாம் முறையும் பால் கறந்து பாத்திரத்தை நிறைத்து விட்டு அதை உம்மு மஃபதிடம் கொடுத்துவிட்டு நடையைத் தொடர்ந்தனர்.
Q47) நபி (ஸல்) அவர்களால் கட்டப்பட்ட இஸ்லாத்தின் முதல் பள்ளிவாசல் எது?
ஹிஜ்ரத் சென்ற நபி (ஸல்) அவர்கள் மதினாவின் குபா என்ற பகுதியை அடைந்து அங்கு நான்கு நாட்கள் தங்கியிருந்து அங்கு ‘குபா பள்ளிவாசலை’ கட்டியெழுப்பினார்கள்.
Q48) ஹிஜ்ரத் சென்று மதினா வந்தடைந்தவுடன் நபி (ஸல்) அவர்கள் யார் வீட்டில் தங்கினார்கள்?
நபி (ஸல்) அவர்கள் அபூ அய்யூப் அல்-அன்சாரி வீட்டில் தங்கினார்கள்.
Q49) முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகள் என்பவர்கள் யார்?
மக்காவிலிருந்து தம் சொத்து, உறவினர்கள் மற்றும் அனைத்தையும் துறந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்தவர்கள் முஹாஜிர்கள் ஆவார்கள். முஹாஜிர்களுக்கு உதவி செய்த மதீனாவாசிகள் அன்ஸாரிகள் ஆவார்கள்.
Q50) பத்ருப் போர் எப்போது நடைபெற்றது?
ஹஜ்ரி 2 ஆம் ஆண்டு ரமலான் 17 அன்று வெள்ளிக் கிழமை
Q51) துறவி பஹீரா என்பவர் யார்?
நபி (ஸல்) அவர்கள் சிறுவராக இருந்தபோது ஷாம் நாட்டின் புஷ்ரா நகரில் வசிந்து வந்தவர் தான் ‘பஹீரா’ என்ற பிரபலமான துறவி. அவரது பெயர் ‘ஜர்ஜீஸ்’ என்று சொல்லப்படுகிறது. அவர் எங்கும் வெளியில் செல்ல மாட்டார். எனினும், அபுதாலிப் அவர்களுடன் ஷாம் தேசம் சென்ற பன்னிரண்டு வயது சிறுவரான நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்காக இந்த பஹீரா என்ற துறவி வெளியில் வந்தார்.
Q52) துறவி பஹீரா (ஜர்ஜீஸ்), சிறுவராக இருந்த நபி (ஸல்) அவர்களைக் குறித்துக் கூறியது என்ன?
அபுதாலிப் அவர்களுடன் சென்ற வியாபாரக் கூட்டம் புஸ்ரா (ஷாம் தேசம்) சென்றதும், துறவி பஹீரா (ஜர்ஜீஸ்) சிறுவராக இருந்த நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க வந்தார். வணிகக் கூட்டத்தைப் பிளந்துகொண்டு வந்து சிறுவரான நபி (ஸல்) அவர்களின் கரத்தைப் பற்றிக்கொண்டு ‘இதோ உலகத்தாரின் தலைவர்! இதோ உலகத்தாரின் இறைவனுடைய தூதர்! இவரை அல்லாஹ் அகிலத்தாருக்கு அருட்கொடையாக அனுப்புவான்’ என்று கூறினார். அவரிடம் அபூதாலிபும் குறைஷிப் பெரியவர்களும் ‘இது எப்படி உமக்குத் தெரியும்?’ என வினவினர். அவர் ‘நீங்கள் கணவாய் வழியாக வந்தபோது கற்களும் மரங்களும் சிரம் பணிந்தன. அவை இறைத்தூதர்களுக்கே தவிர வேறு எவருக்கும் சிரம் பணியமாட்டா. மேலும், அவரது புஜத்துக்குக் கீழிருக்கும் ஆப்பிளைப் போன்ற இறுதித் தூதரின் முத்திரையைக் கொண்டும் நான் அவரை அறிவேன். எங்களது வேதங்களில் அது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது’ என்று கூறினார். பிறகு அவர்களுக்கு விருந்தளித்து உபசரித்தார். இச்சிறுவரை ஷாமுக்கு அழைத்துச் சென்றால் அங்குள்ள ரோமர்கள் மற்றும் யூதர்களால் இவருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே, இவரை இங்கிருந்தே மக்கா திருப்பி அனுப்பி விடுங்கள் என்று பஹீரா அபூதாலிபிடம் கூறினார். அதற்கினங்க அபூதாலிப் நபி (ஸல்) அவர்களை சில வாலிபர்களுடன் மக்காவுக்கு அனுப்பி வைத்தார்.
Q53) நபித்துவத்திற்கு முன் நபி (ஸல்) அவர்கள் கலந்துக் கொண்ட போர் எது?
நபி (ஸல்) அவர்களின் இருபதாவது வயதில் உக்காள் சந்தையில் குறைஷியரும் கினானாவும் கைஸ் அய்லான் குலத்தவருடன் சண்டையிட்டனர். அதற்கு ‘ஹர்புல் ஃபிஜார்’ என்று சொல்லப்படும். இந்தப் போர் புனித மாதத்தில் ஏற்பட்டு அதன் கண்ணியத்தைக் குலைத்து விட்டதால் அதற்கு ‘பாவப்போர்’ எனப் பெயரிட்டனர். நபி (ஸல்) அவர்கள் இதில் கலந்துகொண்டு தந்தையின் சகோதரர்களுக்கு அம்பெடுத்துக் கொடுக்கும் பணியைச் செய்தார்கள்.
Q54) ‘ஹர்புல் ஃபிஜார்’ என்ற போர் நடைபெறக் காரணம் என்ன?
கினானாவைச் சேர்ந்த ‘பர்ராழ்’ என்பவன் கைஸ் அய்லானைச் சேர்ந்த மூன்று நபர்களைக் கடத்திச் சென்று கொலை செய்துவிட்டான். இந்தச் செய்தி உக்காள் சந்தையில் பரவியது. அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினரும் சண்டையிட்டனர். குறைஷ் மற்றும் பனூ கினானாவுக்கு ‘ஹர்ப் இப்னு உமய்யா’ தலைமை தாங்கினார். போரின் ஆரம்பத்தில் கைஸ் தரப்பினருக்கு வெற்றி கிட்டியது. ஆனால், நடுப் பகலுக்குப்பின் நிலைமை கைஸுக்கு எதிராகத் திரும்பியது. இந்நிலையில் சில குறைஷியர்கள் சமாதான உடன்படிக்கை செய்துகொள்ள விரும்பினர். எந்தத் தரப்பில் அதிக உயிர்ச் சேதம் ஏற்பட்டதோ அந்த அதிக எண்ணிக்கைக்கு மட்டும் நஷ்டஈடு தரவேண்டுமென்று ஒப்பந்தம் செய்து சமாதானமாயினர்.
Q55) ‘ஹில்ஃபுல் ஃபுழூல்’ என்றால் என்ன?
‘ஹர்புல் ஃபிஜார்’ என்ற போருக்குப்பின் அப்துல்லாஹ் இப்னு ஜத்ஆன் அத்தைமீ வீட்டில் நடைபெற்ற சிறப்பு மிகு ஒப்பந்தத்திற்கு ‘ஹில்ஃபுல் ஃபுழூல்’ என்று பெயர். ‘மக்காவாசிகளாயினும் வெளியூர்வாசிகளாயினும் அவர்களில் எவருக்கேனும் அநீதி இழைக்கப் பட்டால் அவருக்கு முழுமையாக உதவி செய்து நீதி கிடைக்கச் செய்வதில் அனைவரும் இணைந்து முயற்சிக்க வேண்டும்’ என உடன்படிக்கை செய்து கொண்டனர். இவ்வுடன்படிக்கையில் நபி (ஸல்) அவர்களும் கலந்து கொண்டார்கள்.
Q56) ‘ஹில்ஃபுல் ஃபுழூல்’என்ற உடன்படிக்கைக்கு காரணமான நிகழ்ச்சி எது?
ஜுபைத் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தனது வணிகப் பொருட்களுடன் மக்கா வந்தார். ஸஹ்மாவைச் சேர்ந்த ஆஸ் இப்னு வாயில் அவரிடமிருந்து சரக்குகளை வாங்கிக் கொண்டு அதற்கான விலையைக் கொடுக்க மறுத்துவிட்டார். பறிகொடுத்தவர் தனது நேச கோத்திரங்களாகிய அப்துத் தார், மக்ஜூம், ஸஹ்ம் ஆகியோரிடம் சென்று உதவி கேட்டபோது எவரும் அவரது கோரிக்கையை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. உடனே அவர் அபூ குபைஸ் மலையில் ஏறிக்கொண்டு தனக்கிழைக்கப்பட்ட அநீதத்தை உரத்த குரலில் கவிதையாகக் கூறினார். அதைக் கேட்ட ஜுபைர் ‘இப்னு அப்துல் முத்தலிப் ஏன் இவ்வாறு இவர் கைவிடப்பட்டார்’ என வினவினார்கள். அப்போதுதான் மேற்கூறப்பட்ட கோத்திரத்தார் இணைந்து இச்சிறப்புமிகு ஒப்பந்தத்தை நிறைவேற்றினர். அதன் பின் அனைவரும் ஆஸ் இப்னு வாயிலிடமிருந்து அந்த பாதிக்கப்பட்டவருக்கு அவரது உரிமையை பெற்றுத் தந்தனர்.
Q57) ‘ஹில்ஃபுல் ஃபுழூல்’என்ற உடன்படிக்கை குறித்து நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சிலாகித்துக் கூறினார்கள்?
இவ்வுடன்படிக்கையில் கலந்து கொண்டது பற்றி நபித்துவம் கிடைத்ததற்குப் பின் நபி (ஸல்) இவ்வாறு கூறினார்கள்: அப்துல்லாஹ் இப்னு ஜத்ஆன் வீட்டில் நடந்த ஒப்பந்தத்தில் நான் கலந்து கொண்டேன். எனக்கு செந்நிற ஒட்டகைகள் கிடைப்பதைவிட அந்த ஒப்பந்தத்தில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இஸ்லாமின் வருகைக்குப் பின்பும் எனக்கு (அதுபோன்ற) ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டால் அதை நான் ஒப்புக் கொள்வேன்.
Q58) நபி (ஸல்) அவர்கள் தமது வாலிபப்பருவத்தில் யாருடன் சேர்ந்து வணிகத்தில் ஈடுபட்டார்கள்?
நபி (ஸல்) அவர்கள், ஸாம்ப் இப்னு அபூஸாம்ப் அல் மக்ஜூமி என்பவருடன் இணைந்து வணிகம் செய்தார்கள். அவருக்கு நம்பிக்கைக்குரிய மிகச் சிறந்த தொழில் நண்பராக நபி (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள். மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளன்று அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். ‘என் சகோதரரே!, என் தொழில் நண்பரே!’ எனக் கூறி அவரை நபி (ஸல்) அவர்கள் வரவேற்றார்கள்.
Q59) நபி (ஸல்) அவர்களுடன் வணிகத்திற்காக ஷாம் தேசத்திற்கு சென்ற கதீஜா (ரலி) அவர்களுடைய அடிமையின் பெயர் என்ன?
கதீஜா (ரலி) அவர்கள், தமது அடிமை மய்ஸராவை நபி (ஸல்) அவர்களுடன் அனுப்பினார்கள்.
Q60) நபி (ஸல்) அவர்கள் குறித்து கதீஜா (ரலி) அவர்களின் அடிமை மய்ஸரா கூறியது என்ன?
நபி (ஸல்) அவர்களுடன் வணிகத்திற்குச் ஷாம் தேசத்திற்குச் சென்ற மய்ஸரா, அங்கிருந்து திரும்பி வந்ததும் கதீஜா (ரலி) அவர்களிடம், தான் நபி (ஸல்) அவர்களிடம் கண்ட நற்பண்புகள், உயர் சிந்தனை, பேச்சில் உண்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றை விவரித்தார்.
Q61) நபி (ஸல்) அவர்களை மணமுடிக்க விரும்பிய கதீஜா (ரலி) அவர்கள் தமது விருப்பத்தை யார் மூலமாக தெரிவித்தார்கள்?
கதீஜா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களை மணமுடிக்கும் தனது எண்ணத்தை தோழி நஃபீஸா பின்த் முநப்பிஹ் இடத்தில் தெரிவித்தார். நஃபீஸா நபி (ஸல்) அவர்களிடம் கதீஜாவின் விருப்பத்தைக் கூற நபி (ஸல்) அவர்களும் அதை ஒப்புக் கொண்டார்கள்.
Q62) நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களை மணக்கும் போது மஹராக எதைக் கொடுத்தார்கள்?
நபி (ஸல்) அவர்கள் 20 மாடுகளை மஹராகக் கொடுத்தார்கள்.
Q63) கதீஜா (ரலி) அவர்கள் உயிருடன் இருக்கின்ற காலத்தில் நபி (ஸல்) அவர்கள் வேறு திருமணம் செய்தார்களா?
கதீஜா (ரலி) அவர்கள் உயிருடன் இருக்கின்ற காலத்தில் நபி (ஸல்) அவர்கள் வேறு திருமணம் செய்யவில்லை! இவர் மரணித்த பின்பே நபி (ஸல்) அவர்கள் வேறு பெண்களை மணமுடித்தார்கள்.
Q64) நபி (ஸல்) அவர்களுக்கு அபுல் காஸிம் என்ற புனைப்பெயர் ஏன் கூறப்படுகிறது?
அன்னை கதீஜாவுக்குப் (ரலி) பிறந்த முதல் குழந்தை காஸிம். இவருடன் இணைத்தே நபியவர்களுக்கு ‘அபுல் காஸிம்’ என்ற புனைப்பெயர் கூறப்படுகிறது.
Q65) கதீஜா (ரலி) அவர்கள் மூலமாக நபி (ஸல்) அவர்களுக்குப் பிறந்த அப்துல்லாஹ் (ரலி) அவர்களுக்குரிய வேறு பெயர்கள் யாவை?
அப்துல்லாஹ்வுக்கு தய்யிப், தார் என்ற வேறு பெயர்களும் உண்டு.
Q66) கதீஜா (ரலி) அவர்கள் மூலமாகப் பிறந்த நபி (ஸல்) அவர்களின் பெண்மக்கள் எப்போது மரணமடைந்தார்கள்?
ஜைனப், ருகைய்யா, உம்மு குல்ஸூம் (ரலி) ஆகிய மூவரும் நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே மரணமடைந்து விட்டனர். நபி (ஸல்) அவர்களின் மரணத்துக்குப் பின் ஆறுமாதம் கழித்து ஃபாத்திமா (ரலி) மரணமடைந்தார்.
Q67) நபித்துவத்திற்கு எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு குரைஷிகள் கஅபாவை புதுபித்தனர்?
நபித்துவத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் மக்காவில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கஅபாவின் கட்டடம் பாதிப்படைந்தது. அதனால் குரைஷிகள் கஅபாவை புதுப்பித்துக் கட்டினர்.
Q68) குரைஷிகள் கஅபாவைப் புதுப்பித்துக் கட்டும் போது ஏற்பட்ட சர்ச்சையை நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு தீர்த்து வைத்தார்கள்?
கஅபாவை பல பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு கோத்திரத்தாரும் ஒரு பகுதியைக் கட்ட வேண்டுமென முடிவு செய்து ஒவ்வொரு கோத்திரத்தாரும் ‘பாகூம்’ என்ற ரோமானிய பொறியியல் வல்லுனரின் மேற்பார்வையில் கட்டத் தொடங்கினர். இறுதியாக, ஹஜ்ருல் அஸ்வதின்’ இடம் வந்தபோது அதை அதற்குரிய இடத்தில் வைப்பது யார் என்பதில் பிரச்சனை எழுந்தது. அது பற்றிய சர்ச்சை நான்கு அல்லது ஐந்து நாட்களாகத் தொடர்ந்தது. சர்ச்சை கடுமையாகி போராக மாறிவிடும் அபாயம் எழுந்தது. அப்போது அபூ உமய்யா இப்னு முகீரா – மக்ஜூமி அம்மக்களிடம், ‘இப்புனிதப் பள்ளிவாசலில் முதன்முதலாக நுழைபவரை நடுவராக்கி அவரது ஆலோசனையை ஒப்புக் கொள்ளுங்கள்’ என்று கூறினார். இக்கருத்தை அனைவரும் மனமார ஏற்றனர். அவர்கள் ஆவலுடன் காத்திருக்க, நபி (ஸல்) அவர்களே முதலாமவராக நுழைந்தார்கள். அவர்களைக் கண்ட அம்மக்கள் ‘இதோ முஹம்மது வந்துவிட்டார். இவர்தான் நம்பிக்கைக்குரியவர். இவரை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்’ என்றனர். நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு அருகில் வந்தவுடன் விவரத்தைக் கூறினர். நபி (ஸல்) அவர்கள் ஒரு விரிப்பை வரவழைத்து அதன் நடுவே ஹஜ்ருல் அஸ்வதை வைத்தார்கள். பிறகு சச்சரவிட்டுக் கொண்டிருந்த கோத்திரத்தாரின் தலைவர்களை அழைத்து விரிப்பின் ஓரங்களைப் பிடித்துத் தூக்குமாறு கூற, அதை அவர்கள் தூக்கினர். கஅபாவுக்கு அருகில் கொண்டு வந்தவுடன் தனது கரத்தால் ஹஜ்ருல் அஸ்வதை எடுத்து உரிய இடத்தில் வைத்தார்கள். இது அனைவரும் ஒப்புக் கொண்ட மிக அழகிய தீர்வாக அமைந்தது.
Q69) நபித்துவத்திற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்காவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்?
ஏறத்தாழ பதிமூன்று ஆண்டுகள்
Q70) நபித்துவத்திற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்?
ஏறத்தாழ பத்து ஆண்டுகள்.
Q71) நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்து இறை தியானத்தில் ஈடுபட்டிருந்த ஹிரா குகையின் அளவு என்ன?
ஹிரா குகை நான்கு முழ நீளமும் ஒன்றே முக்கால் முழ அகலமும் கொண்டது.
Q72) நபித்துவம் அருளப்படப்போவதற்கு அடையாளங்களாக ஆறுமாதங்களாக நடைபெற்ற நிகழ்வுகள் யாவை?
பரிபூரணத்தின் தொடக்கமாகிய 40 வயது நிறைவானபோது நபித்துவ அடையாளங்கள் தெரிய ஆரம்பித்தன. அவற்றில் சில: மக்காவிலிருந்த கல் ஒன்று அவர்களுக்கு ஸலாம் கூறி வந்தது உண்மையான கனவுகளைக் கண்டார்கள்; அவை அதிகாலையின் விடியலைப் போன்று நிதர்சனமாக நடந்து விடும்; இந்த நிலையில் ஆறு மாதங்கள் கழிந்தன. பிறகு தான் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலமாக வஹீ இறங்கியது.
Q73) முதல் வஹீ ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலமாக அருளப்பட்டவுடன் அந்த நிகழ்வைக் கண்டு நடுக்கமுற்ற நபி (ஸல்) அவர்களுக்கு அன்னை கதீஜா (ரலி) அவர்கள் எவ்வாறு ஆறுதல் கூறினர்?
ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அல்-குர்ஆனின் 96:1-5 வசனங்களை நபி (ஸல்) அவர்களுக்கு ஓதிக்காட்டிய பிறகு அந்த வசனங்களுடன் இதயம் நடுங்க (தமது துணைவியார்) கதீஜா (ரழி) அவர்களிடம் வந்து ‘என்னைப் போர்த்துங்கள், என்னைப் போர்த்துங்கள்’ என்றார்கள். கதீஜா (ரழி) நபி (ஸல்) அவர்களைப் போர்த்தினார்கள். (நடுக்கம் தீர்ந்ததும்) கதீஜாவிடம் நடந்த செய்தியைத் தெரிவித்து விட்டுத் தமக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ எனத் தாம் அஞ்சுவதாகக் கூறினார்கள்.
அதற்கு கதீஜா (ரழி) ‘அவ்வாறு கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் உங்களை ஒருபோதும் இழிவுபடுத்தமாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) சுமைகளை சுமந்து கொள்கிறீர்கள். வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; உண்மையான சோதனைகளில் (சிக்குண்டோருக்கு) உதவி புரிகின்றீர்கள்’ என்றார்கள்.
Q74) முதல் வஹீ இறங்கிய செய்தியைக் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு அறிந்த வரகா இப்னு நவ்பல் என்ற கிறிஸ்தவ அறிஞர் கூறியது என்ன?
வரகா கிருஸ்துவராக இருந்தார். அவர் இப்ரானி (ஹிப்ரூ) மொழியை அறிந்தவர்; இன்ஜீல் வேதத்தைக் கற்றவர்; வயது முதிர்ந்தவர்; கண்பார்வையற்றவர்; அவரிடம் கதீஜா (ரழி) ‘என் சகோதரரே! உம் சகோதரன் மகன் கூறுவதைக் கேளுங்கள்!’ என்றார். ‘என் சகோதரர் மகனே! நீர் எதைக் கண்டீர்!’ என வரகா கேட்க, நபி (ஸல்) அவர்கள் தாம் பார்த்த செய்திகளை அவரிடம் சொன்னார்கள். அதற்கு வரகா ‘இவர்தாம் மூஸாவிடம் இறைவன் அனுப்பிய நாமூஸ் (ஜிப்ரீல்) ஆவார்’ என்று கூறிவிட்டு, உங்களது சமூகத்தார் உங்களை உங்கள் ஊரிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருக்க வேண்டுமே என்று அங்கலாய்த்தார். நபி (ஸல்) அவர்கள் ‘மக்கள் என்னையா வெளியேற்றுவார்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கவர் ‘ஆம்! நீங்கள் கொண்டு வந்திருப்பது போன்ற சத்தியத்தைக் கொண்டு வந்த எந்த மனிதரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. (நீங்கள் வெளியேற்றப்படும்) அந்நாளில் நான் உயிருடன் இருந்தால் உங்களுக்கு பலமான உதவி செய்வேன்’ என்று கூறினார். இந்நிகழ்ச்சிக்குப் பின் வரகா குறுகிய காலத்தில் இறந்துவிட்டார்.
Q75) நபி (ஸல்) அவர்களுக்கு இரண்டாவது வஹீ அருளப்பட்ட நிகழ்வைக் கூறுக:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஹிரா குகையில் ஒரு மாதம் தங்கியிருந்து பிறகு திரும்பினேன். நான் பள்ளத்தாக்கில் நடந்து கொண்டிருக்கும்போது என்னை அழைக்கும் குரலைக் கேட்டு வலப்பக்கம் பார்த்தேன். அங்கு எதையும் நான் காணவில்லை. இடப்பக்கம் பார்த்தேன், எதையும் நான் காணவில்லை. ஆகவே, என் தலையை உயர்த்திப் பார்த்தேன். அங்கு நான் ஒன்றைக் கண்டேன். ஹிரா குகையில் என்னிடம் வந்த வானவர் ஜிப்ரீல் (அலை) வானுக்கும் பூமிக்குமிடையே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். நான் கதீஜாவிடம் சென்று ‘என்னைப் போர்த்துங்கள்; என்னைப் போர்த்துங்கள்; குளிர்ந்த நீரை என் மீது ஊற்றுங்கள்’ என்று கூறினேன். அவர்கள் என்னைப் போர்த்தி குளிர்ந்த நீரை என்மீது ஊற்றினார்கள். அப்போது இவ்வசனங்கள் அருளப்பட்டன.
(வஹியின் அதிர்ச்சியால்) போர்வை போர்த்திக் கொண்டிருக்கும் (நபி
யே!) நீங்கள் எழுந்து நின்று (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்! உங்கள் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள்! உங்களது ஆடையை பரிசுத்தமாக்கி வைத்துக் கொள்ளுங்கள்! அசுத்தங்களை வெறுத்து விடுங்கள்! உங்கள் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக(க் கஷ்டங்களை) நீங்கள் பொறுத்திருங்கள். (அல்குர்ஆன் 74 : 1-5)

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்