Social Icons

Tuesday 2 October 2012

உடலை அடக்கம் செய்தல்



வீடுகளில் அடக்கம் செய்யக் கூடாது
இறந்தவர்களை குறிப்பாக சிறுவர்களை வீடுகளில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையில் வீடுகளில் அடக்கம் செய்யும் வழக்கம் சில பகுதிகளில் நிலவுகிறது.
இந்த நம்பிக்கை தவறானதாகும். வீடுகளில் அடக்கம் செய்யக் கூடாது.
'(கடமையில்லாத) உங்கள் தொழுகைகளில் சிலவற்றை உங்கள் வீடுகளில் வைத்துக் கொள்ளுங்கள். வீடுகளை மண்ணறைகளாக ஆக்கி விடாதீர்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
றிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)  நூல்: புகாரி 432, 1187
வீடுகளை மண்ணறைகளாக ஆக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்திருப்பதால், குடியிருக்கும் வீட்டில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யக் கூடாது.

அடக்கம் செய்யக் கூடாத நேரங்கள்
சூரியன் உதிக்கும் போதும், உச்சிக்கு வரும் போதும், மறையும் போதும் ஆகிய மூன்று நேரங்களில் நாங்கள் தொழுவதையும், இறந்தவர்களை அடக்கம் செய்வதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)  நூல்: முஸ்லிம் 1373
இந்த மூன்று நேரங்களில் தவிர மற்ற நேரங்களில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யலாம்.
இரவில் அடக்கம் செய்யும் அவசியம் ஏற்பட்டால் இரவில் அடக்கம் செய்வது தவறில்லை.
தமது தோழர் ஒருவர் மரணித்து, குறைவான அளவு கஃபனிடப்பட்டு இரவில் அடக்கம் செய்யப்பட்டதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் உரை நிகழ்த்திய போது குறிப்பிட்டார்கள். 'நான் தொழுகை நடத்தும் வரை இரவில் ஒருவரை அடக்கம் செய்ய வேண்டாம்; இதற்கான அவசியம் ஏற்பட்டால் தவிர' என்று குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)  நூல்: முஸ்லிம் 1567
இரவில் அடக்கம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது என்றாலும் அவசியம் ஏற்பட்டால் இரவில் அடக்கம் செய்யலாம் என்பதற்கு இது ஆதாரமாகவுள்ளது.

ஒரு குழிக்குள் பலரை அடக்கம் செய்தல்
ஒரு நேரத்தில் அதிகமான மக்கள் இறந்து விட்டால் அனைவருக்கும் தனித் தனியாக குழிகள் வெட்டுவது சாத்தியமில்லாமல் போகலாம். இது போன்ற சந்தர்ப்பங்களில் பெரிய அளவில் குழிகள் வெட்டி இருவர் அல்லது மூவரை அந்தக் குழியில் அடக்கம் செய்யலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களை ஒரு கப்ருக்கு இருவர் என்ற முறையில் அடக்கம் செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)  நூல்: புகாரி 1345

குழியை விசாலமாகத் தோண்டுதல்
அடக்கம் செய்வதற்காகக் குழிகளை வெட்டும் போது தாராளமாகவும், விசாலமாகவும் வெட்ட வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு ஜனாஸாவைப் பின் தொடர்ந்தோம். அவர்கள் கப்ருக்கு அருகில் நின்று கொண்டு, 'தலைப் பக்கம் விசாலமாக்கு! கால் பக்கம் விசாலமாக்கு!' என்று குழி வெட்டுபவரிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அன்ஸாரித் தோழர்   நூல்: அபூ தாவூத் 2894

மூன்று பிடி மண் அள்ளிப் போடுதல்
அடக்கம் செய்யும் போது அதில் கலந்து கொண்டவர்கள் மூன்று பிடி மண் அள்ளி கப்ரின் மேலே போடுகின்றனர்.
இந்தக் கருத்தில் வரும் ஹதீஸ்கள் பலவீனமாக இருந்தாலும் கீழ்க்காணும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமாக அமைந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவுக்குத் தொழுகை நடத்தினார்கள். பின்னர் அடக்கத்தலம் வந்து அவரது தலைமாட்டில் மூன்று கைப்பிடி மண் அள்ளிப் போட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)  நூல்: இப்னு மாஜா 1554
இவ்வாறு மண் அள்ளிப் போடும் போது 'மின்ஹா கலக்னாகும் வபீஹா நுயீதுக்கும் வமின்ஹா நுக்ரிஜகும் தாரதன் உக்ரா' என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை.

உடலை கப்ருக்குள் வைக்கும் போது கூற வேண்டியவை
குழிக்குள் உடலை வைக்கும் போது 'பிஸ்மில்லாஹி வஅலா ஸுன்ன(த்)தி ரசூலில்லாஹ்' எனக் கூறுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: அஹ்மத் 4982, 51115 
குழிக்குள் உடலை வைக்கும் போது 'பிஸ்மில்லாஹி வஅலா ஸுன்ன(த்)தி ரசூலில்லாஹ்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)  நூல்: அபூதாவூத் 2798
குழிக்குள் உடலை வைக்கும் போது 'பிஸ்மில்லாஹி வஅலா மில்ல(த்)தி ரசூலில்லாஹ்' எனக் கூறுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: அஹ்மத் 4581, 4748
அடக்கம் செய்யப்பட்ட உடலைத் தோண்டி எடுத்தல்
என் தந்தையுடன் மற்றொருவரும் சேர்ந்து ஒரு குழியில் அடக்கம் செய்யப்பட்டார். இதை என் மனம் ஒப்பவில்லை. எனவே என் தந்தையின் உடலை வெளியே எடுத்துத் தனியாக வேறு கப்ரில் மறு அடக்கம் செய்தேன்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)  நூல்: புகாரி 1352
மற்றொரு அறிவிப்பில் ஆறு மாதம் கழித்து அவரது உடலை வெளியே எடுத்தேன். அவரது காதைத் தவிர உடலின் மற்ற பாகங்கள் சற்று முன் வைக்கப்பட்டது போல் இருந்தன என்று கூறப்படுகிறது. (புகாரி 1351)
உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்கள் இருவருக்கு ஒரு கப்ர் என்ற முறையில் அடக்கம் செய்யப்பட்டனர். இதை ஜாபிர் (ரலி) அவர்கள் மனம் ஒப்பாமல் தம் தந்தையை மட்டும் வெளியே எடுத்து தனி கப்ரில் அடக்கம் செய்தனர். இது உஹதுப் போர் நடந்து ஆறு மாதத்தில் நடந்துள்ளது. இந்தச் சமயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்தனர். இதன் பின்னர் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்.
ஜாபிர் (ரலி) அவர்களின் இந்தச் செயல் நபியவர்களுக்குத் தெரியாமல் இருக்க முடியாது.
இது போன்ற சாதாரண காரணத்துக்காக உடலை வெளியே எடுக்கலாம் என்றால் மரணத்தில் சந்தேகம் ஏற்படும் போது உண்மையைக் கண்டறிவதற்காக வெளியே எடுப்பது தவறில்லை என்பதை அறியலாம்.

கப்ரின் மேல் செடி கொடிகளை நடுதல்
அடக்கம் செய்தவுடன் அந்த இடத்தில் ஏதாவது செடி கொடிகளை நட்டு வைக்கும் வழக்கம் தமிழகத்தில் காணப்படுகிறது. பின்வரும் ஹதீஸ்களை இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு தோட்டத்தின் அருகில் கடந்து சென்றனர். அப்போது தமது கப்ருகளில் வேதனை செய்யப்படும் இருவரின் சப்தத்தைக் கேட்டார்கள். 'இவ்விருவரும் பெரும் பாவங்களுக்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது மறைத்துக் கொள்ளாதவராக இருந்தார்; மற்றொருவர் கோள் சொல்லிக் கொண்டிருந்தார்' என்று கூறினார்கள். பின்னர் பேரீச்சை மட்டை ஒன்றைக் கொண்டு வரச் செய்து அதை இரண்டாக முறித்து ஒவ்வொரு கப்ரிலும் ஒரு துண்டை வைத்தார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! ஏன் இவ்வாறு செய்தீர்கள்?' என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள் 'இது காய்வது வரை இவ்விருவரின் வேதனை இலேசாக்கப்படக் கூடும்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 216, 218, 1361
புகாரியின் மற்றொரு அறிவிப்பில் (211, 1273) 'அந்த மட்டையை இரண்டாகப் பிளந்து பாதியை ஒரு கப்ரிலும், மறுபாதியை மற்றொரு கப்ரிலும் வைத்தார்கள்' என்று கூறப்பட்டுள்ளது.
இதை ஆதாரமாகக் கொண்டே இவ்வாறு செடி கொடிகளை வைக்கும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.
நபிகள் நாயகத்தின் இந்த நடவடிக்கையைச் சரியான முறையில் புரிந்து கொள்ளாதது தான் இதற்குக் காரணம்.
பேரீச்சை மட்டைகள் ஊன்றி வைத்தால் முளைக்கக் கூடிய தன்மை உடையது அல்ல. அதை இரண்டாகப் பிளந்தால் இன்னும் சீக்கிரத்தில் காய்ந்து போய் விடும்.
கப்ரின் மேலே காலா காலம் செடி கொடிகள் இருப்பது பயன் தரும் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள்.
விரைவில் காய்ந்து விடும் தன்மை கொண்ட பேரீச்சை மட்டையைத் தேடி, அதைச் சீக்கிரம் காய்ந்து விடும் வகையில் இரண்டாகப் பிளந்து வைத்ததிலிருந்து செடி கொடிகள் கப்ரின் வேதனையிலிருந்து காக்கும் என்பதற்காகச் செய்யவில்லை என்று அறியலாம். அப்படி இருந்தால் பேரீச்சை மட்டைக்குப் பதிலாக பேரீச்சை மரத்தை அதன் மேல் நட்டியிருப்பார்கள்.
அப்படியானால் வேறு எதற்காக வைத்தார்கள்? இது காயும் வரை வேதனை இலேசாக்கப்படக் கூடும் என்று கூறியது ஏன்?
இந்தக் கேள்விக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே விடையளித்து விட்டனர்.
'நான் செய்த துஆவின் காரணமாக இவ்விரு மட்டைகளும் காய்வது வரை வேதனை இலேசாக்கப்பட வேண்டும் என்று விரும்பினேன்' என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 5328
தமது உம்மத்தினர் இருவர் வேதனை செய்யப்படுவது இறைத் தூதர் என்ற முறையில் அவர்களுக்குக் காட்டித் தரப்படுகிறது. இதைக் கண்ட பின் அவர்கள் மனம் இவ்விருவருக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறது. 'இறைவா! இம்மட்டை காய்வது வரையாவது இவர்களின் வேதனையை இலேசாக்கு' என்று துஆச் செய்திருக்கிறார்கள். அந்த துஆவின் காரணமாகவே வேதனை இலேசாக்கக் கூடும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள். மேற்கண்ட அறிவிப்பைச் சிந்திப்பவர்கள் இதை உணரலாம்.
மரம் செடிகளை நடுவது பயன் தரும் என்றால் இறந்த ஒவ்வொருவருக்கும் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருப்பார்கள். அப்படிச் செய்யவில்லை.
மேலும் நபித்தோழர்களும் இதை நபிகள் நாயகத்துக்கே உரிய சிறப்புச் சலுகை என்று விளங்கியதால் தான் கப்ருகள் மீது அவர்கள் மரம் செடிகள் நட்டதாகக் காண முடியவில்லை.
மேலும் கப்ரு வேதனையைத் தமது காதுகளால் கேட்டதன் அடிப்படையில் தான் மட்டையை ஊன்றினார்கள். கப்ரு வேதனையைக் கேட்காத மற்றவர்கள் நபிகள் நாயகத்துடன் போட்டியிடுவது என்ன நியாயம்?

தோண்டி எடுத்த மண்ணை மட்டும் போட்டு மூட வேண்டும்
உடலை அடக்கம் செய்த பின் எந்த அளவு மண்ணை வெட்டி எடுத்தோமோ அதை மட்டும் போட்டு மூட வேண்டும்.
உயரமாக கப்ரு தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக மண்ணை அதிகமாக்கக் கூடாது.
கப்ருகள் மீது கட்டுவதையும், அதில் அதிகப்படுத்தப்படுவதையும், பூசப்படுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்கள்: நஸயீ 2000, அபூதாவூத் 2807
மண்ணைக் கூட அதிகமாக்கக் கூடாது என்று கட்டளையிட்டுள்ள போது சிமிண்ட், செங்கல் போன்றவற்றால் நிரந்தரமாகக் கட்டுவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை நாம் அறியலாம்.

கப்ரின் மேல் எழுதக் கூடாது
அடக்கத் தலத்தின் மேல் மீஸான் என்ற பெயரில் கல்வெட்டை ஊன்றி வைக்கும் வழக்கம் சில பகுதிகளில் உள்ளது. சில ஊர்களில் இதற்காகக் கூடுதல் கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு வசதி படைத்தவர்கள் மட்டும் இவ்வாறு கல்வெட்டு வைக்க அனுமதிக்கப்படுகின்றனர். சமரசம் உலாவும் அடக்கத் தலத்திலும் இறந்த பிறகு கூட அநியாயமான இந்தப் பாரபட்சம் காட்டப்பட்டு வருகிறது.
கப்ருகள் மீது எழுதுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். 
 அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: அபூதாவூத் 2807
மேலே சுட்டிக் காட்டிய ஹதீஸில் கப்ரின் மேல் எழுதுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளனர். இத்தடையில் மேற்கண்ட செயலும் அடங்கும் என்பதில் ஐயமும் இல்லை.
மக்கள் தொகை அதிகரித்து அடக்கத்தலம் சுருங்கிவிட்ட இன்றைய காலத்தில் ஒரு இடத்தில் ஒருவர் அடக்கம் செய்யப்பட்டால் குறிப்பிட்ட காலத்துக்குப் பின் அதே இடத்தில் மற்றொருவரை அடக்கினால் தான் நெருக்கடி குறையும். வசதி படைத்தவர்கள் அடக்கத்தலத்திலும் தங்களுக்கென ஒரு இடத்தை நிரந்தரமாகச் சொந்தமாக்கிக் கொண்டால் எதிர் காலத்தில் அடக்கம் செய்ய அறவே இடம் இல்லை என்ற நிலைமை ஏற்பட்டு விடும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கப்ருகளைக் கட்டக் கூடாது
ஒருவர் இறந்து விட்டால் அவர் எவ்வளவு பெரிய மகான் என்று நாம் கருதினாலும் அவரது அடக்கத் தலத்தின் மேல் கட்டுமானம் எழுப்பக் கூடாது..
இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.
நபியின் மனைவியரான உம்மு ஹபீபா (ரலி), உம்மு ஸலமா (ரலி) ஆகிய இருவரும் அபீஸீனியாவில் தாங்கள் பார்த்த ஆலயத்தைப் பற்றியும், அதில் உள்ள உருவங்களைப் பற்றியும் நபிகள் நாயகத்திடம் கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் இறந்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேலே வழிபாட்டுத் தலத்தை கட்டிக் கொள்கிறார்கள். அவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுகிறார்கள். கியாமத் நாளில் இவர்கள் தான் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 427, 34, 1341, 3850, 3873
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மரணம் நெருங்கிய போது தமது போர்வையை முகத்தில் போட்டுக் கொண்டார்கள். காய்ச்சல் தணிந்ததும் முகத்தைத் திறந்தார்கள். இந்த நிலையில் இருக்கும் போது 'யஹூதிகள் மீதும் நஸாராக்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உள்ளது. (ஏனெனில்) அவர்கள் தங்களது நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கி விட்டனர்' என்று கூறினார்கள். அவர்களின் செயலை எச்சரிக்கும் வகையில் இவ்வாறு கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 436, 3454, 4444, 5816
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணத்தைத் தழுவிக் கொண்ட அந்த நோயின் போது 'யஹூதிகளையும், நஸாராக்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்கள் நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக (தர்காவாக) ஆக்கிக் கொண்டனர்' என்று குறிப்பிட்டார்கள். இவ்வாறு எச்சரிக்கை செய்து இருக்காவிட்டால் அவர்களின் கப்ரையும் உயர்த்தி இருப்பார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 1330, 1390, 4441
'உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் தங்கள் நபிமார்கள் மற்றும் நல்லோரின் கப்ருகளை வழிபாட்டுத் தலங்களாக (தர்காக்களாக) ஆக்கி விட்டனர். எச்சரிக்கை! கப்ருகளை தர்காக்களாக ஆக்காதீர்கள். இதை விட்டு உங்களை நான் தடுக்கிறேன்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுன்துப் ((ரலி)  நூல்: முஸ்லிம் 827
நல்லடியார்கள் ஆனாலும் அவர்களின் அடக்கத் தலங்களைக் கட்டுவதையும், அதன் மேல் ஆலயம் எழுப்புவதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வளவு கடுமையாகக் கண்டித்துள்ளனர் என்பதை மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து அறியலாம்.
நல்லடியார்களில் நபிமார்கள் தான் முதலிடத்தில் உள்ளவர்கள். மற்றவர்களை நல்லடியார்கள் என்று நாம் திட்டவட்டமாகக் கூற முடியாது. நம்மால் நல்லடியார்கள் எனக் கருதப்பட்டவர்கள் மறுமையில் கெட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் நபிமார்கள் நல்லடியார்கள் தான் என்பதில் ஐயமில்லை.
நபிமார்களுக்குக் கூட தர்காக்கள் கட்டக் கூடாது என்றால் மற்றவர்களுக்கு எப்படிக் கட்டலாம்?
மேலும் நமது முன்னோர்கள் அவ்வாறு கட்டிச் சென்றிருப்பார்களானால் நமக்குச் சக்தியும், அதிகாரமும் இருந்தால் அவற்றை இடித்துத் தள்ளுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை எதற்கு அனுப்பினார்களோ அதற்காக உன்னை நான் அனுப்புகிறேன். எந்தச் சிலைகளையும் தகர்க்காது விடாதே! உயர்த்தப்பட்ட எந்தச் சமாதியையும் தரை மட்டமாக்காமல் விடாதே!' என்று அலீ (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுல் ஹய்யாஜ்  நூல்: முஸ்லிம் 1609
இவ்வளவு தெளிவான கட்டளைக்குப் பின்னரும் போலி மார்க்க அறிஞர்கள் இந்த நபிமொழிக்குத் தவறான பொருள் கூறி மக்களை வழி கெடுத்து வருவதையும் நாம் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
மேற்கண்ட நபிமொழியில் 'கப்ரைத் தரை மட்டமாக்காமல் விடாதே' என்று கூறப்படவில்லை. மாறாக 'கப்ரைச் சீர்படுத்து' என்று தான் உள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.
'தரை மட்டமாக்கு' என்று நாம் பொருள் கொண்ட இடத்தில் ஸவ்வைத்தஹு என்ற மூலச் சொல் இடம் பெற்றுள்ளது. ஸவ்வா என்பதிலிருந்து இச்சொல் பிறந்துள்ளது. இச்சொல்லின் நேரடிப் பொருள் 'சீர்படுத்துதல்' என்பது தான் எனவும் வாதிடுகின்றனர்.
கப்ரை அழகான முறையில் கட்ட வேண்டும் என்பதைத் தான் மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது என்று சாதிக்கின்றனர்.
வானத்தை ஒழுங்கு படுத்தினான் என்று பல வசனங்களில் இதே ஸவ்வா என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்படியானால் வானத்தைத் தரை மட்டமாக்கினான் என்று பொருள் கொள்வீர்களா? என்று நம்மைப் பார்த்துக் கேட்கின்றனர்.
ஸவ்வா என்பதன் பொருள் சீர்படுத்துவது தான். ஒவ்வொன்றையும் சீர்படுத்தும் முறைகள் வெவ்வேறாகவுள்ளதால் இடத்திற்கு ஏற்ப அதற்குப் பொருள் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையை இவர்கள் அறியாததே இந்த விளக்கத்துக்குக் காரணம்.
கிழிந்த துணியைச் சீராக்கு என்று கூறினால் அதைத் தைக்க வேண்டும் என்று பொருள்.
அழுக்குத் துணியைச் சீராக்கு என்றால் அதைக் கழுவு எனப் பொருள்.
அளவுக்குப் பொருந்தாமல் பெரிதாகத் தைக்கப்பட்ட ஆடையைச் சீராக்கு என்றால் அதிகப்படியானதை வெட்டிக் குறைத்தல் என்பது பொருள்.
இச்சொல்லுடன் சேர்க்கப்படும் அடைமொழிக்கேற்ப பொருளும் மாறும். கிழிந்த, அழுக்கான, பெரியதாக என்பன போன்ற அடை மொழிகள் சேர்க்கப்படும் போது அந்த அம்சத்தைச் சரி செய்ய வேண்டும் என்ற பொருளைத் தரும்.
உயரமாக்கப்பட்ட எந்தக் கப்ரையும்... என்ற சொற்றொடரில் உயரமாக்கப்பட்ட என்ற அடைமொழி காரணமாக உயரத்தை நீக்குவது தான், அதாவது இடிப்பது தான் இங்கே சரி செய்வது எனக் கூறப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுன் நபவி கட்டிய இடத்தில் சில குட்டிச் சுவர்கள் இருந்தன. அதைச் சரி செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர். (புகாரி 410, 1735, 3963)
இந்த இடத்திலும் ஸவ்வா என்ற சொல்லே இடம் பெற்றுள்ளது.
குட்டிச் சுவருக்கு வெள்ளை அடித்து அழகு படுத்த வேண்டும் என்று நபித்தோழர்கள் பொருள் கொண்டிருந்தால் மஸ்ஜிதுன்னபவிக்குள் இன்று வரை அந்தக் குட்டிச் சுவர்கள் நின்று கொண்டிருக்க வேண்டும். ஆனால் அந்தக் குட்டிச் சுவர்கள் இடிக்கப்பட்டு சரிசமமாக ஆக்கப்பட்டன.
'உயரமாக்கப்பட்ட எந்தக் கப்ரையும் சரிப்படுத்தாமல் விடாதே!' என்பதற்கு 'தரை மட்டமாக்காமல் விடாதே!' என்பதைத் தவிர வேறு பொருள் கொள்ள முடியாது. மேலும் கப்ரின் மேல் வெளிப் பொருள்களால் அதிகப்படுத்தக் கூடாது என்பதை முன்னரே நாம் எடுத்துக் காட்டியிருக்கிறோம்.
அதன் அடிப்படையில் சிந்திக்கும் போது கப்ரிலிருந்து எடுக்கப்பட்ட மண் நாளடைவில் படிந்து தரை மட்டமாகி விடும். அதற்கு மேல் இருப்பது அனைத்தும் அதிகமாக்கப்பட்டவை தான். அதிகமாக்கப்பட்டதை அப்புறப்படுத்துவது தான் மேற்கண்ட கட்டளையைச் செயல்படுத்துவதாக அமையும்.
நபிகள் நாயகத்தின் கப்ர் மீது குப்பா எழுப்பப்பட்டதையும் இவர்கள் ஆதாரமாகக் காட்டுவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்குப் பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்த ஒன்றை மற்றவர்கள் செய்தால் அது எப்படி ஆதாரமாகும் என்பதைக் கூட இவர்கள் விளங்க மறுக்கின்றனர்..
ஸுஃப்யான் அத்தம்மார் என்பவர் நபிகள் நாயகத்தின் கப்ரை உயரமாகப் பார்த்தார் என்று புகாரி (1302) செய்தியையும் எடுத்துக் காட்டுகின்றனர்.
ஸுஃப்யான் அத்தம்மார் என்பவர் நபித்தோழர் அல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகத் தடை செய்த ஒன்றை இது போன்ற செய்திகளால் முறியடிப்பதில் இவர்கள் கவனம் செலுத்துகின்றனர்.
நபிகள் நாயகத்தின் பெயராலேயே அவர்களின் கட்டளையை மீறுவதை ஷைத்தான் இவர்களுக்கு அழகாக்கிக் காட்டியுள்ளான்.

கப்ருகளைப் பூசக் கூடாது
அடக்கம் செய்து மண்ணை அள்ளிப் போட்டதும் ஆரம்பத்தில் சற்று உயரமாகத் தான் இருக்கும். உள்ளே உடல் வைக்கப்பட்டதாலும் வெட்டி எடுக்கப்பட்ட மண் அழுத்தம் குறைவாகி விட்டதாலும் உயரமாக இருப்பது பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. சில நாட்களில் மண் இறுகி, பழைய நிலைக்கு வந்து விடும்.
ஆனால் அந்த நிலையைத் தக்க வைப்பதற்காக கப்ரின் மேல் சுண்ணாம்பு, காரை, சிமிண்ட் போன்ற பொருட்களால் பூசக் கூடாது.
கப்ருகளைப் பூசுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தனர்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் 1610
கட்டுவது மட்டுமின்றி பூசுவதும் தெளிவாகத் தடை செய்யப்பட்டுள்ளது. சிமிண்ட் சுண்ணாம்பு போன்றவற்றால் பூசுவதும், சந்தனம் பூசுவதும், வேறு எதனைப் பூசுவதும் குற்றமாகும். யாருடைய கப்ருக்கும் இதில் எந்த வித்தியாசமும் இல்லை.

நபிகள் நாயகத்தின் கப்ரும், பள்ளிவாசலும்
நபிகள் நாயகத்தின் அடக்கத் தலம் பள்ளிவாசலை ஒட்டி அமைந்திருந்த அவர்களின் வீட்டில் தான் இருந்தது. அபூ பக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி) ஆகியோரின் ஆட்சிக் காலம் முழுவதும் நபிகள் நாயகத்தின் அடக்கத் தலம் பள்ளியின் ஒரு பகுதியாக ஆக்கப்படவில்லை.
பின்னர் வலீத் பின் அப்துல் மாலிக் (இவர் இஸ்லாத்தை அறவே பேணாதவர்) ஆட்சியில் ஹிஜ்ரி 88ஆம் ஆண்டு மஸ்ஜிதுன் நபவி இடிக்கப்பட்டு புதிதாகக் கட்டப்பட்டது. இவ்வாறு கட்டும் போது தான் நபிகள் நாயகத்தின் அடக்கத் தலத்தையும் பள்ளிவாசலுக்குள் அவர் கொண்டு வந்தார்.
இந்தச் சமயத்தில் மதீனாவில் எந்த ஒரு நபித் தோழரும் உயிருடன் இருக்கவில்லை. நபித்தோழர்களில் மதீனாவில் கடைசியாக மரணித்தவர் ஜாபிர் (ரலி) அவர்கள். இவர்கள் ஹிஜ்ரி 78ஆம் ஆண்டு மரணித்தார்கள். மதீனாவில் ஒரு நபித்தோழரும் உயிருடன் இல்லாத 88ஆம் ஆண்டு தான் இந்தத் தவறை வலீத் என்ற மன்னர் செய்தார்.
உஸ்மான் (ரலி) அவர்கள் தான் கப்ரை பள்ளியில் சேர்த்தார் என்பது கட்டுக் கதையாகும். அவர்கள் காலத்தில் பள்ளிவாசலை விரிவுபடுத்திய போது நபிகள் நாயகத்தின் அடக்கத் தலத்தையும் நபிகள் நாயகத்தின் மனைவியர் வசித்த அறைகளையும் தவிர்த்து விட்டுத் தான் விரிவுபடுத்தினார். அவர் மரணித்து சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் வலீத் இக்காரியத்தைச் செய்தார்.

கப்ரைக் கண்டு கொள்ள அடையாளம் வைத்தல்
உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாறாங்கல்லை தூக்க முடியாமல் தூக்கி வந்து அவரது தலைமாட்டில் வைத்தார்கள். 'எனது சகோதரர் உஸ்மானின் கப்ரை நான் அடையாளம் கண்டு என் குடும்பத்தில் யாரேனும் இறந்தால் இவருக்கு அருகில் அடக்குவதற்காக இந்த அடையாளம்' என்றும் கூறினார்கள். நூல்: அபூ தாவூத் 2791
இது கப்ரைக் கட்டக் கூடாது என்பதற்கு மேலும் வலுவான சான்றாகவுள்ளது. அவரது கப்ரை அடையாளம் காண விரும்பிய போதும் அந்த இடத்தில் ஒரு கல்லை எடுத்துப் போட்டார்களே தவிர நிரந்தரமாக இருக்கும் வகையில் கல்வெட்டு கூட வைக்கவில்லை. நினைத்தால் அப்புறப்படுத்தும் வகையில் ஏதேனும் ஒரு பொருளை அடையாளம் காண்பதற்காக வைத்தால் தவறில்லை.

ஒருவரது உடலுக்கு அருகில் அவரது உறவினரை அடக்கம் செய்தல்
ஒருவரை அடக்கம் செய்த இடத்தில் அவரது குடும்பத்தாரை அருகில் அடக்கம் செய்ய சிலர் விரும்புகின்றனர். இதில் எந்தத் தவறும் இல்லை என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து அறியலாம்.
அதற்கான வாய்ப்பு இருந்து அதனால் யாருக்கும் இடைஞ்சல் இல்லாவிட்டால் அப்படிச் செய்வதில் குற்றம் இல்லை.

தல்கீன் ஓதுதல்
ஒருவரை அடக்கம் செய்து முடித்தவுடன் அவரது தலைமாட்டில் இருந்து கொண்டு மோதினார் தல்கீன் என்ற பெயரில் எதையோ கூறுவர்.
'உன்னிடம் வானவர்கள் வருவார்கள். உன் இறைவன் யார் எனக் கேட்பார்கள். அல்லாஹ் என்று பதில் கூறு! உன் மார்க்கம் எது எனக் கேட்பார்கள். இஸ்லாம் என்று கூறு' என்று அரபு மொழியில் நீண்ட அறிவுரை கூறுவது தான் தல்கீன்.
ஒருவர் உயிருடன் இருக்கும் போது சொல்லிக் கொடுக்க வேண்டியதை இறந்த பின் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
இப்படிச் சொல்லிக் கொடுத்து, அது இறந்தவருக்குக் கேட்டு, அவரும் இந்த விடையைச் சொல்ல முடியும் என்றால் இதை விட உச்ச கட்ட மடமை வேறு என்ன இருக்க முடியும்?
இது போன்ற மூடத்தனத்தைத் தவிர்க்க வேண்டும்.
அடக்கம் செய்து முடித்தவுடன் அதன் அருகில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு (மக்களை நோக்கி) 'உங்கள் சகோதரருக்காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள். அவருக்காக உறுதிப்பாட்டைக் கேளுங்கள். ஏனெனில் அவர் இப்போது விசாரிக்கப்படுகிறார்' என்று கூறுவார்கள். அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி).
நூல்: அபூ தாவூத் 2894, ஹாகிம் 1/370 பைஹகீ 4/56
எனவே மய்யித்திற்குச் சொல்லிக் கொடுக்கும் தல்கீனை ஒழித்துக்கட்டி அல்லாஹ்விடம் அவர் நல்ல முறையில் பதில் சொல்ல அனைவரும் துஆச் செய்ய வேண்டும்.

பித்அத்கள்
* மய்யித்துக்கு நகம் வெட்டுதல்; பல் துலக்குதல்; அக்குள் மற்றும் மர்மஸ்தான முடிகளை நீக்குதல்
* மய்யித்தின் பின் துவாரத்திலும் மூக்கிலும் பஞ்சு வைத்து அடைத்தல்
* மய்யித்தின் வயிற்றை அழுத்தி உடலில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றுதல் நி ஜனாஸாவைக் குளிப்பாட்டும் போது சில திக்ருகளை ஓதுதல்
* குளிப்பாட்டும் போது மய்யித்தின் நெற்றியில் சந்தனத்தாலோ, அல்லது வேறு நறுமணப் பொருட்களாலோ எதையும் எழுதுதல்
* ஜனாஸா எடுத்துச் செல்லும் போது சில திக்ருகளைக் கூறுதல்
* ஜனாஸா தொழுகையில் ஒவ்வொரு தக்பீரின் போதும் கைகளை அவிழ்த்து உயர்த்துதல்
* இறந்தவருக்காக யாஸீன் ஓதுதல்
* இறந்தவருக்காக மூன்றாம் ஃபாத்திஹா, ஏழாம் ஃபாத்திஹா, நாற்பதாம் ஃபாத்திஹா, கத்தம், வருட ஃபாத்திஹாக்கள் ஓதுதல்
* இறந்தவருக்காக ஹல்கா, திக்ருகள், ராத்திபுகள் நடத்துதல்
* இறந்தவர் வீட்டில் விருந்து அளித்தல்
* வெளியூரில் இறந்தவருக்காகத் தொழுகை நடத்துதல்
* கப்ரின் மேல் செடி கொடிகளை நடுதல்
* கப்ரின் மேல் எழுதுதல்; கல்வெட்டு வைத்தல்
* கப்ருகளைக் கட்டுதல்; கப்ருகளைப் பூசுதல்
* கப்ருக்கு அருகே நின்று தல்கீன் ஓதுதல்
* ஆண்டு முழுவதும் சோகம் அனுஷ்டித்தல்
* சோகத்துக்கு அடையாளமாக கருப்பு ஆடையை அணிதல்
* உடலுக்கு அருகில் விளக்கேற்றி வைத்தல்
* உடலுக்கு அருகில் ரொட்டி போன்ற உணவுகளை வைத்தல்
* இறந்தவர் வருவார் என்ற நம்பிக்கையில் வீட்டின் வாசலில் விடிய விடிய விளக்கு போடுதல்
* அடக்கம் செய்து முடிக்கும் வரை இறந்தவரின் குடும்பத்தார் சாப்பிடாமல் இருத்தல்
*இறந்தவரின் வீட்டிலிருந்து மாதவிடாய் மற்றும் குளிப்புக் கடமையானவரை வெளியேற்றுதல்
* பூக்கள் மற்றும் மாலைகள்
* உடலுடன் உணவுப் பொருள் கொண்டு சென்று கப்ரில் வினியோகம் செய்தல்
* கப்ரில் பன்னீர் தெளித்தல் நி அடக்கம் செய்தவுடன் இறந்தவரின் உறவினரிடம் முஸாஃபஹா
* அடக்கம் செய்து விட்டு, இறந்தவரின் வீடு வரை வந்து விட்டுச் செல்லுதல்; அங்கு முஸாஃபஹா செய்தல்
* இறந்தவர் விரும்பிச் சாப்பிட்டதை தர்மம் செய்தல்
* இறந்தவருக்காகக் குர்ஆன் ஓதுதல்
* அடக்கம் செய்த மறுநாள் காலையில் கப்ரைப் போய் பார்த்தல்
* தனக்காக முன்னரே கப்ரை தயார் செய்தல்
* வெள்ளிக்கிழமை தோறும் பெற்றோர் கப்ரை ஸியாரத் செய்தல்
* ஷஃபான் 15 அன்று கப்ருக்குச் செல்லுதல்
* ஷஃபான் 15 அன்று இறந்தவர் பெயரால் உணவு சமைத்தல் பாத்திஹாக்கள் ஓதுதல்
* ஷஃபான் 15ல் அடக்கத்தலத்தை அலங்காரம் செய்தல்
* இரண்டு பெருநாட்களிலும் கப்ருகளுக்குச் செல்லுதல்
* கப்ரின் முன்னே கைகளைக் கட்டிக் கொண்டு நிற்பது
* திரும்பும் போது கப்ருக்கு முதுகைக் காட்டாமல் திரும்புதல்
இது போன்ற செயல்கள் அனைத்தும் பித்அத்களாகும். இவை அனைத்தும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.
அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லித் தராததைச் செய்தால் அது நன்மையின் வடிவத்தில் இருந்தாலும் அதன் விளைவு நரகமாகும்.
பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட போலிச் சடங்குகளை விட்டொழித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தவற்றை மட்டும் செய்து நன்மைகளை அடைவோம்.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்