Social Icons

Saturday 8 March 2014

அல்லாஹ்வை நேசிப்போம். ஈமானைப் பாதுகாப்போம்


ந்த உலகத்தில் வாழக்கூடிய நேரத்தில் ஒவ்வொரு முஃமினுடைய உள்ளமும் மூன்று விதமாக அல்லாஹ்வைப் பற்றி நினைக்கிறது. அவனது உள்ளம் அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தை உணருவது ஒரு நிலை. அல்லாஹ் தனக்கு சொர்க்கத்தை தர வேண்டும் என்று இறைவனின் கருணையை எதிர்பார்ப்பது இன்னொரு நிலை. அல்லாஹ்வை நேசிப்பது மற்றொரு நிலை.
நாம் அனைவரும் இறந்து அல்லாஹ் நமக்குத் தயார் செய்து வைத்துள்ள சொர்க்கத்தை அடைந்து விட்டால் இந்த மூன்று நிலைகளில் அல்லாஹ்வை அஞ்சுவது அவனது சொர்க்கத்தை எதிர்பார்ப்பது ஆகிய இரு நிலைகள் நமது உள்ளத்தை விட்டும் அகன்றுவிடும். ஏனென்றால் சொர்க்கவாசியாகிய பிறகு இறைவனுக்கு பயப்படும் சூழ்நிலை இருக்காது. சொர்க்கத்தை அடைந்த உடன் சொர்க்கத்தை அடைய வேண்டும் என்ற ஆசை பூர்த்தியாகிவிடுகின்றது. ஆனால் இந்த உலகத்திலும் வாழும் போதும் சரி மறுஉலகத்தில் சொர்க்கத்திற்கு சென்ற பிறகும் சரி சதா காலமும் நம் உள்ளத்தை விட்டும் நீங்காமல் என்றும் நிலைத்திருக்கக்கூடியது அல்லாஹ்வின் நேசம் மட்டும் தான். இதைப் பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாக பார்க்கவிருக்கிறோம்.

தன்னை முஸ்லிம் என்று சொல்லிக்கொள்பவர்களில் ஏராளமானோர் அல்லாஹ்வை நேசிப்பதின் அவசியத்தை உணராதவர்களாகத் தான் இருக்கிறார்கள். எனவே தான் தன் தாய் தந்தை நண்பர்கள் இன்ன பிற உறவினர்களை விரும்புவது போல் கூட அல்லாஹ்வை அவர்கள் நேசிப்பதில்லை. தொழுகைக்கு வரும் தொழுகையாளிகளில் உண்மையில் அல்லாஹ்வின் மீது உள்ள நேசத்தால் தொழக்கூடியவர்கள் எத்தனை பேர்அல்லாஹ்வை விரும்பியதினால் மனப்பூர்வமாக இஸ்லாத்தை ஏற்றுள்ளவர்கள் எத்தனை பேர்?
இந்த நேசத்தை நம் மனம் சுவைக்காத காரணத்தினால் தான் மக்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் சுமையாகத் தெரிகிறது. இறைவனை வழிபடுவது மலையாகத் தெரிகிறது. அவனுடைய நேசத்திற்கு ஒரு பெரும் பகுதியை நம் உள்ளத்தில் ஒதுக்கியிருந்தால் தொழுவதே நமக்கு இன்பமாக மாறியிருக்கும். நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை நேசித்தக் காரணத்தினால் தொழுவது அவர்களுக்கு இன்பத்தைத் தரக்கூடியதாக இருந்தது.
                அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எனது கண்குளிர்ச்சி தொழுகையில் வைக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : நஸயீ (3879)
                அல்லாஹ்வின் நேசம் ஒருவரை நல்லகாரியங்களைச் செய்யத் தூண்டும் என்று பின்வரும் வசனம் கூறுகின்றது.
                அவனை நேசித்ததற்காக ஏழைக்கும்அனாதைக்கும்சிறைப் பட்டவருக்கும் உணவளிப்பார்கள்.
அல்குர்ஆன் (76 : 8)
அல்லாஹ்வின் மீது வைக்க வேண்டிய பாசத்தை உள்ளத்தில் வைக்காமல் விட்டுவிட்டவர்கள் இணைவைக்கக்கூடியவர்களாகத் தான் இருக்கிறார்கள். அல்லாஹ்வை நேசிப்பவன் மாத்திரம் தான் முஸ்லிமாக இருக்க முடியும். நபி (ஸல்) அவர்களை நேசிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு மவ்லூத் என்றப் பெயரில் நபி (ஸல்) அவர்களை வரம்பு மீறிப் புகழும் இணைவைப்பாளர்கள் வார்த்தைக்கு வார்த்தை யா ரஸலுல்லாஹ் (அல்லாஹ்வின் தூதரே) என்றும் யா முஹ்யித்தீன் (முஹ்யித்தீனே) என்றும் அழைப்பார்களேத் தவிர அல்லாஹ்வை மறந்துவிடுகிறார்கள்.
நயவஞ்சகன் தான் அல்லாஹ்வை நேசிக்கமாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் விளங்கியிருந்தார்கள். ஒருவரை ஏசும் போது அல்லாஹ்வை விரும்பாத நயவஞ்சகன் இவன் என்று நபித்தோழர்கள் கூறியிருக்கிறார்கள். 
நூல் : புகாரி (425)

நாக்கிற்கு சுவைக்கக்கூடிய பண்பை அல்லாஹ் வழங்கியிருப்பதினால் அது சுவைத்துப் பார்த்து உடலுக்குத் தேவையான பொருட்களை வாய்க்குள் செல்ல அனுமதிக்கிறது. மோசமான சுவையுடையதாக இருந்தால் வெளியே துப்பிவிடுகிறது. இப்பண்பு அதற்கு இருப்பதினால் தான் கல்லையும் கற்கண்டையும் பிரித்தரிந்து கற்கண்டை உள்ளேயும் கல்லை வெளியேயும் அனுப்புகிறது.
நாக்கு ருசியை உணர்வது போல நல்ல கெட்ட விஷயங்களை சுவைக்கும் பண்பு உள்ளத்திற்கும் உண்டு. இக்குணம் மனிதனின் உள்ளத்திற்கு வந்துவிட்டால் அவன் உள்ளம் நல்லக்கருத்துக்களை உள்ளே வைத்துக்கொண்டு கெட்டக் கருத்துக்களை வெளியே அனுப்பிவிடுகிறது. ஆனால் நம் உள்ளம் இந்த பாக்கியத்தை அடைய வேண்டுமென்றால்  மூன்று விஷயங்கள் நம்மிடத்தில் வர வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (மூன்று தன்மைகள் அமையப்பெறாத) எவரும் இறைநம்பிக்கையின் சுவையை உணரமாட்டார். (அவை)
1.            ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்விற்காகவே நேசிப்பது.
2.            இறைமறுப்பிலிருந்து அல்லாஹ் காப்பாற்றியப் பிறகு மீண்டும் அதற்குத் திரும்புவதை விட நெருப்பில் வீசப்படுவதையே விரும்புவது.
3.            அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மற்றெதையும் விட அவருக்கு நேசத்திற்குரியோராவது.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : புகாரி (6041)
எல்லாருடைய நேசத்தையும் விட அல்லாஹ்வையே நாம் அதிகம் நேசிக்க வேண்டும் என்ற விஷயம் மூன்றாவதாக கூறப்பட்டாலும் நன்கு கவனித்துப் பார்க்கும் போது முதலிரண்டு விஷயங்களும் அல்லாஹ்வை நேசிப்பதினா ஏற்படக்கூடியவை என்பதை சந்தேகமற அறியலாம்.

ஈமானுக்குத் தேவையான எத்தனையோ விஷயங்களை நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடத்தில் வேண்டியுள்ளார்கள். அல்லாஹ்வை நேசிப்பது ஈமானுக்கு மிக முக்கியமான அம்சம் என்பதினால் நபி (ஸல்) அவர்கள் இத்தன்மை தன்னிடத்தில் இருக்க வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.
(இறைவா) உன்னை நேசிப்பதையும் உன்னை யார் நேசிப்பார்களோ அவர்களை நேசிப்பதையும் உனது நேசத்தின் பால் எந்தக் காரியம் நெருக்கி வைக்குமோ அந்த நற்காரியத்தை (நான்) விரும்புவதையும் உன்னிடத்தில் வேண்டுகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஆத் பின் ஜபல் (ரலி)
நூல் : திர்மிதி (3159)
அல்லாஹ்வின் மீது வைக்க வேண்டிய பாசத்தை அடியார்கள் மேல் இவர்கள் வைத்துவிட்டக் காரணத்தினால் தான் இணைவைப்பில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்களை நேசிக்கக்கூடாது என்று சொல்லவரவில்லை. நபி (ஸல்) அவர்களை நேசிக்காதவன் இறைநம்பிக்கையாளனாக இருக்க முடியாது என்பதில் நமக்கு மாற்றுக்கருத்தும் இல்லை.
Ads by ShowPasswordAd Options
ஆனால் அல்லாஹ்வை நேசிப்பதற்கு என்று ஒவ்வொரு முஃமினுடைய உள்ளத்திலும் ஒரு தனி இடம் இருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்களை நேசிப்பதற்கு என்று ஒரு தனி இடத்தை உள்ளத்தில் ஒதுக்க வேண்டும். அல்லாஹ்விற்குக் கொடுக்க வேண்டிய அந்தஸ்த்தை நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருக்கும் கொடுத்து விடக் கூடாது. அல்லாஹ்வை நாம் கடுமையாக நேசிக்க வேண்டும் என்றும் அவனை நேசிப்பது போல் யாரை நேசித்தாலும் அது இணைவைப்பு என்றும் அல்லாஹ் திருக்குர்ஆனில் சொல்கிறான்.
அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து,அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள். அநீதி இழைத்தோர் வேதனையைக் காணும் போது அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே என்பதையும்அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதையும் கண்டு கொள்வார்கள்.
அல்குர்ஆன் (2 : 165)

ஒருவன் அல்லாஹ்வை நேசிக்காமல் நபி (ஸல்) அவர்களை மட்டும் நேசிப்பானால் அவன் முஸ்லிமாக இருக்க முடியாது. அவன் நபி (ஸல்) அவர்களை நேசித்தவனாகவும் ஆக முடியாது. ஏனென்றால் அல்லாஹ்வை நேசிப்பவன் கண்டிப்பாக நபி (ஸல்) அவர்களை நேசிப்பான். நபி (ஸல்) அவர்களை நேசிப்பவன் கண்டிப்பாக அல்லாஹ்வை நேசிப்பான்.

நபி (ஸல்) அவர்களைக் கூட நாம் எதற்காக நேசிக்கிறோம் என்பதை விளங்கிக் கொண்டால் அல்லாஹ்வை நேசிப்பது எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம். நபி (ஸல்) அவர்கள் இறைவனால் நியமிக்கப்பட்ட தூதர். வாழ்க்கை வழிகாட்டி என்பதற்காக அவர்களை நேசிக்கிறோம். இந்தத் தூதுப் பணியை இறைவன் அவர்களுக்கு வழங்கியிருக்காவிட்டால் நபி (ஸல்) அவர்கள் யாரென்றே நமக்குத் தெரியாமல் போயிருக்கும். ஆனால் இன்றைக்கு கோடானகோடி மக்களுடைய மனதில் பெரும் இடத்தை அவர்கள் பிடித்திருப்பது அவர்கள் இறைவனின் தூதர் என்பதால் தான்.
ஒவ்வொரு நாட்டிலிருந்து வரும் தூதுவர்களை மற்ற நாடுகள் மதித்து நடக்கின்றன. ஏனென்றால் அவ்வாறு நடந்தால் தான் அத்தூதரை அனுப்பிய மன்னரை கண்ணியப்படுத்தியதாக அமையும். தூதரை கேவலப்படுத்தினால் அரசனையும் கேவலப்படுத்தியதாக அமையும். ஒரு மன்னரின் சார்பாக அனுப்பப்பட்ட தூதரை நேசிப்பவர்கள் அந்த மன்னரை அதை விடவும் அதிகமாக நேசிப்பார்கள். எனவே அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட தூதரை நேசிக்கக்கூடிய நாம் அல்லாஹ்வை அதை விடவும் கடுமையாக நேசிக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்களின் வழிப்படி நடப்பது எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதை விடவும் அல்லாஹ்வை நேசிப்பது முக்கியமானது. ஏனென்றால் நபி (ஸல்) அவர்களை பின்பற்றுவதின் அவசியத்தை உணர்த்தும் போது அல்லாஹ்வை நேசிப்பதை நிபந்தனையாக வைத்து அல்லாஹ் கூறுகிறான்.
''நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்நிகரற்ற அன்புடையோன்''என்று கூறுவீராக!
அல்குர்ஆன் (3 : 31)
நம் நேசத்திற்குரியவர்களுக்கு எதிராக யார் நடந்தாலும் அவரை நாம் விரும்பமாட்டோம். நம்மால் நேசிக்கப்படுபவர்கள் யாரை வெறுக்கிறார்களோ அவர்களை நாமும் வெறுப்போம். இந்த அடிப்படையில் அல்லாஹ்விற்கு மாற்றமான காரியங்களை நமது தாயோ தந்தையோ சகோதர சகோதரிகளோ மனைவியோ பிள்ளைகளோ யார் செய்தாலும் அவர்கள் அல்லாஹ்விற்கு பிடிக்காத காரியத்தை செய்வதால் அவர்களை நாம் வெறுக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகிறது. 
அப்படியானால் தாய் தந்தை மற்ற உடன்பிறப்புகளை நேசிப்பதை விட அல்லாஹ்வை நேசிப்பதின் அவசியத்தை இதிலிருந்து உணர முடிகிறது. அல்லாஹ்வின் மீது நாம் இத்தகைய நேசத்தைக் காட்டுகிறோமா என்று நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.   ஒருவர் இதற்கு மாற்றமாக அல்லாஹ்வின் கட்டளைகளை பின்தள்ளிவிட்டு தனது உறவுகளின் மேல் உள்ள பாசத்தால் உறவினர்களுடன் ஒத்துப்போவாரேயானால் அவர் உண்மை நம்பிக்கையாளராக இருக்க முடியாது.
அல்லாஹ்வையும்இறுதி நாளையும் நம்பக் கூடிய சமுதாயத்தினர்,அல்லாஹ்வையும்அவனது தூதரையும் பகைப்போர் தமது பெற்றோராக இருந்தாலும்பிள்ளைகளாக இருந்தாலும்,சகோதரர்களாக இருந்தாலும்தமது குடும்பத்தினராக இருந்தாலும் அவர்களை நேசிப்பதை நீர் காணமாட்டீர். அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். தனது ரூஹு மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்கிறான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள்.
அல்குர்ஆன் (58 : 22)
செல்வங்களையும் சொத்துக்களையும் மனிதன் கடுமையாக நேசிக்கிறான். அல்லாஹ் வேண்டுமாஅல்லது செல்வம் வேண்டுமா?என்ற கேள்வி எழும் போது செல்வங்களை ஒருவன் தேர்வு செய்தால் அவன் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகுகிறான். அப்படியானால் அல்லாஹ்வை நேசிப்பதற்கு  நிகராக எதையும் நேசிக்கக்கூடாது என்ற அளவிற்கு இறைவனை நேசிப்பது மார்க்கத்தில் வலியுறுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது.
''உங்கள் பெற்றோரும்உங்கள் பிள்ளைகளும்உங்கள் உடன்பிறந்தாரும்உங்கள் வாழ்க்கைத் துணைவியரும்உங்களின் குடும்பத்தாரும்நீங்கள் திரட்டிய செல்வங்களும்நஷ்டத்திற்கு நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும்நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விடஅவனது தூதரை விடஅவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்'' என்று கூறுவீராக!
அல்குர்ஆன் (9 : 24)
அல்லாஹ்வை நேசிப்பதே வெற்றிக்கு உதவும்
                அல்லாஹ்வை நேசிப்பதை சாதாரண ஒரு விஷயமாக நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது. தொழுகை நோன்பு தர்மம் இவற்றையெல்லாம் விட மறுஉலக வெற்றிக்கு மிக அவசியமானதாக அது இருந்துகொண்டிருக்கிறது. ஏனென்றால் இது இருந்தால் தான் முஸ்லிம் என்ற வட்டத்திற்குள் மனிதன் வருகிறான். இத்தன்மை எப்போது அவனை விட்டும் நீங்கிவிடுகிறதோ அப்போது இஸ்லாத்தை விட்டும் அவன் வெளியேறிவிடுகிறான்.
                ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே மறுமைநாள் எப்போது வரும்என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அதற்காக நீ என்ன முயற்சி செய்துள்ளாய்என்று கேட்டார்கள். அதற்கு அவர் அதற்காக நான் அதிகமான தொழுகையையோ நோன்பையோ தான தர்மங்களையோ முன் ஏற்பாடாகச் செய்து வைக்கவில்லை. ஆயினும் நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் நீ யாரை நேசிக்கின்றாயோ அவருடன் (மறுமையில்) இருப்பாய் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : புகாரி (6171)
                அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மூன்று விஷயங்கள் யாரிடத்தில் இருக்கின்றதோ அவர் நரகத்தை விட்டும் தடுக்கப்படுவார். நரகம் அவரை விட்டும் தடுக்கப்படும். (அவை) அல்லாஹ்வை நம்புவது. அல்லாஹ்வை நேசிப்பது. இணைவைப்பிற்கு திரும்பிச் செல்வதை விட நெருப்பில் போடப்பட்டு கருக்கப்படுவது அவருக்கு விருப்பமானதாக வேண்டும்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : அஹ்மத் (11679)
                மறுமையில் மட்டுமல்லாது இவ்வுலகில் அல்லாஹ்வின் கோபப்பார்வையிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் அல்லாஹ்வை நேசிக்க வேண்டும். அவனை நேசிக்காமல் அவனை மறந்து வாழ்ந்தால் நம்மை அழித்துவிட்டு அவனை நேசிக்கும் நல்லக்கூட்டத்தாரை அல்லாஹ் படைப்பான்.
                நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறி விட்டால் அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டோரிடம் பணிவாகவும், (ஏக இறை வனை) மறுப்போரிடம் தலை நிமிர்ந்தும் இருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவார்கள். பழிப்போரின் பழிச் சொல்லுக்கு அவர்கள் அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியோருக்கு அதை அவன் அளிப்பான். அல்லாஹ் தாராளமானவன்அறிந்தவன்.
அல்குர்ஆன் (5 : 54)
                பல காரணங்களினால் நாம் ஒருவரை நேசிக்க ஆரம்பிக்கிறோம். எந்த விதமானத் தகுதிகளும் இல்லாமல் தன்னை நேசிக்க வேண்டும் என்று அல்லாஹ் நம்மிடம் எதிர்பார்க்கவில்லை. மற்றனைவர்களையும் விட எல்லா விதமானத் தகுதிகளையும் பெற்றுக்கொண்டு தான் நம்மிடத்தில் உரிமை கொண்டாடுகிறான்.
அள்ளித்தருவதில் அல்லாஹ் குறைந்தவனா?
                மனிதன் பிறர் செய்யும் உபகாரத்திற்கு அடிமையாவான் என்று அரபியில் ஒரு பழமொழி கூட சொல்வார்கள். நமக்கு நன்மை செய்பவர்களை நாம் நேசிப்பதும் அவர்களுக்காக உயிரையும் கொடுப்பது மனித இயல்பு. ஒரு டீயை வாங்கிக்கொடுத்ததற்காக சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு அவருக்குப் பின்னால் அலைந்துகொண்டிருப்பவர்களும் உண்டு.
                அன்னை தெரஸா நோயாளிகளுக்கும் ஏழைகளுக்கும் உதவிய காரணத்தினால் அவரின் சேவையால் பலனடையாதவர்களும் அவர்களை நேசிக்கிறார்கள். புகழ்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் பெரும் பெரும் உதவியை ஒவ்வொரு நேரத்திலும் நாம் அனுபவித்துக்கொண்டு அவனை நேசிக்காமல் இருப்பது நன்றிகெட்டத் தனமில்லையாஇறைவன் நமக்குக் கொடுத்துள்ள ஆரோக்கியம் உடல் உறுப்புகள் அவற்றின் இயக்கம் தன்மை இவையனைத்தையும் விட பெரிய உதவி வேறு என்ன இருக்க முடியும்?. மனிதனுக்கு இறைவன் தந்திருக்கக்கூடிய பாக்கியங்களைப் பற்றி குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
                அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் உங்களால் எண்ண முடியாது. அல்லாஹ் மன்னிப்பவன்நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் (16 : 18)
                உங்களிடம் உள்ள ஒவ்வொரு அருட்கொடையும் அல்லாஹ்வுடையது. பின்னர் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனிடமே முறையிடுகின்றீர்கள்.
அல்குர்ஆன் (16 : 53)
அல்லாஹ் தான்வானங்களையும்பூமியையும் படைத்தான். வானிலிருந்து தண்ணீரை இறக்கினான். அதன் மூலம் உங்களுக்கு உணவாகக் கனிகளை வெளிப்படுத்தினான். அவனது கட்டளைப்படி கடலில் செல்வதற்காக கப்பலையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான். ஆறுகளையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான்.
அல்குர்ஆன் (14 : 32)
அல்லாஹ் அழகில் குறைந்தவனா?
                உடல் தோற்றம் அழகாக இருப்பதினால் ஒருவரின் மீது நேசம் வருகிறது. நடிகன் நடிகர்களிடத்தில் ஏதோ ஒரு கவர்ச்சி இருப்பதினால் அவர்களுக்குப் பின்னால் விளங்காத கூட்டம் சென்றுகொண்டிருக்கிறது. இவர்களின் தோலும் தோற்றமும் வேண்டுமானால் வெண்மையாக இருக்கலாம். ஆனால் இவர்களின் எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் அசிங்கமானவை. ஆபத்தானவை.
அல்லாஹ்வைப் பொறுத்தவரையில் அவனது தோற்றமும் அழகானது. அவனது எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் அழகானது. அவன் விரும்புகின்ற விஷயங்களும் அழகானது. அழகிற்காக ஒருவரை நேசிப்பதாக இருந்தால் முதலில் அல்லாஹ்வைத் தான் நாம் நேசிக்க வேண்டும்.
நிச்சயமாக அல்லாஹ் அழகானவன். அவன் அழகையே விரும்புகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : முஸ்லிம் (147)
சொர்க்கத்தில் சொர்க்கவாசிகளுக்கு கிடைக்கும் இன்பங்கள் எல்லாவற்றையும் விடவும் அல்லாஹ்வை பாôப்பது தான் அவர்களுக்கு மிகவும் இன்பமாக இருக்கும். அல்லாஹ்வை பார்ப்பதே இனிமையாக இருக்கும் என்றால் அவன் எப்படிப்பட்ட அழகைக் கொண்டவனாக இருப்பான் என்பதை கவனிக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்துவிடும் போது (அவர்களிடம்) அல்லாஹ் உங்களுக்கு நான் இன்னும் கூடுதலாக ஏதேனும் வழங்க வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களாஎன்று கேட்பான். அதற்கு அவர்கள் இறைவா நீ எங்கள் முகங்களை வெண்மையாக்கவில்லையாஎங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி சொர்க்கத்திற்குள் பிரவேசிக்கச் செய்யவில்லையா? (இதைவிடக் கூடுதலாக எங்களுக்கு வேறென்ன வேண்டும்)என்று கேட்பார்கள்.
அப்போது அல்லாஹ் (தன்னைச் சுற்றிலும் இருக்கும்) திரையை விலக்கி (அவர்களுக்கு தரிசனம் தந்தி)டுவான். அப்போது தம் இறைவனைக் (காணும் அவர்களுக்கு அவனைக்) காண்பதைவிட மிகவும் விருப்பமானது வேறெதுவும் வழங்கப்பட்டிராது.
அறிவிப்பாளர் : ஸஹைப் (ரலி)
நூல் : முஸ்லிம் (297)
அல்லாஹ் அன்பு செலுத்துவதில் குறைந்தவனா?
நம்மீது ஒருவர் அன்புகாட்டினால் அவர் மீது நமக்கு அன்பு ஏற்படத்தொடங்கிவிடுகிறது. பெற்றெடுத்தத் தாய் குழந்தையின் மீது அதிக பாசத்தை பொழிவதால் குழந்தைக்கு தாயின் மீது அதிக பாசம் ஏற்படுகிறது. இந்தக் கோணத்தில் சிந்தித்துப் பார்த்தாலும் அல்லாஹ்வை அதிகம் அதிகமாக நேசிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். ஏனென்றால் அல்லாஹ் நம்மீது வைத்திருக்கும் அன்பைப் போல் எவரும் நம்மீது அன்புகாட்ட இயலாது.
இன்றைக்கு தாயின் பாசம் தான் உயர்ந்த நேசமாக உலகத்தில் சிறப்பித்துக் கூறப்படுகிறது. ஆனால் அல்லாஹ் அடியார்கள் மீது காட்டும் அன்பையும் ஒரு தாய் தன் குழந்தையின் மீது காட்டும் அன்பையும் ஒப்பிட்டுப்பார்த்தால் அல்லாஹ் அடியார்கள் மீது பொழியும் பாசத்தில் கடுகளவுக்குக் கூட தாய்ப்பாசம் நிகராகாது. சகல சக்திகளையும் பெற்று எல்லா வகையிலும் சிறந்து விளங்கும் இறைவன் அற்பமான மனிதர்களை மிகவும் நேசிக்கிறான் என்றால் அவனை நாம் நேசிக்காமல் இருக்கலாமா?பின்வரும் ஹதீஸ்கள் அல்லாஹ்வின் அன்பை விவரிக்கக்கூடியவையாக இருக்கிறது.
(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள். குழந்தை கிடைக்கவில்லை.) கைதிகளில் (தன்) குழந்தையை அவள் கண்டபோது அதை வாரி எடுத்து தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளாசொல்லுங்கள் என்றார்கள். நாங்கள் இல்லை. எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது என்று சொன்னோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்கள் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : உமர் பின் கத்தாப் (ரலி)
நூல் : புகாரி (5999)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்விற்கே உரியவையாகும். அவற்றில் ஒன்றை ஜின் மனிதன் மிருகங்கள் ஊர்வன ஆகியவற்றுக்கிடையே இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் அவை ஒன்றொன் மீதொன்று பாசம் கொள்கின்றன. பரிவு காட்டுகின்றன. அதன் மூலம் தான் விலங்குகூட தன் குட்டிமீது பாசம் காட்டுகிறது. (அவற்றில்) தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பை அல்லாஹ் ஒதுக்கி வைத்துள்ளான். அவற்றின் மூலம் மறுமை நாளில் தன் அடியார்களுக்கு அன்பு காட்டுவான்.
அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (5312)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களுக்கு முன் (ஒரு காலத்தில்) ஒரு மனிதர் இருந்தார். அல்லாஹ் அவருக்கு செல்வத்தை வழங்கியிருந்தான். அவருக்கு மரணம் நெருங்கிவிட்ட போது தன் மகன்களிடம் உங்களுக்கு எப்படிப்பட்ட தந்தையாக நான் இருந்தேன்என்று கேட்டார். அவர்கள் சிறந்த தந்தையாக இருந்தீர்கள் என்று கூறினார்கள். அதற்கு அவர் நான் நற்செயல் எதுவும் செய்யவில்லை. ஆகவே நான் இறந்துவிட்டால் என்னை எரித்துவிடுங்கள். பிறகு என்னை பொடிபொடியாக்கி சூறாவளிக் காற்று வீசும் நாளில் (காற்றில்) என்னைத் தூவிவிடுங்கள் என்று சொன்னார். அவர்களும் அவ்வாறே செய்தனர். அவரை அல்லாஹ் ஒன்று திரட்டி (முழு உருவை மீண்டும் அளித்து) இப்படிச் செய்ய உத்திரவிடும்படி உன்னைத் தூண்டியது எதுஎன்று கேட்டான். அவர் உன் (மீது எனக்குள்ள) அச்சம் தான் என்று கூறினார். உடனே அவரைத் தன் கருணையால் அல்லாஹ் அரவணைத்துக் கொண்டான்.
அறிவிப்பவர் : அபூசயீத் (ரலி)
நூல் : புகாரி (3478)

அல்லாஹ்வின் கருணையை விவரிக்கும் செய்திகள் ஏராளமாக இருக்கின்றன. உதாரணத்திற்காக சிலவற்றை மாத்திரம் கூறியுள்ளோம். அதிகமான வணக்க வழிபாடுகள் துன்பம் வரும் போது அல்லாஹ்வின் பக்கம் திரும்புவது நன்மை ஏற்படும் போது அவனைப் புகழ்வது நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த பிரார்த்தனைகள் போன்ற நற்காரியங்களை தொடர்ந்து செய்து வந்தால் அல்லாஹ்வின் நேசம் நம் மனதில் குடியேறத் தொடங்கிவிடும்.
எனவே நேசிப்பதற்குத் தேவையான அனைத்துத் தகுதிகளையும் பெற்ற இறைவனை நேசித்து இறைநம்பிக்கையை பாதுகாத்துக்கொள்ளும் சிறப்பை நம்மனைவருக்கும் அல்லாஹ் வழங்குவானாக. 

 (நன்றி தீன்குலப் பெண்மணி)

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்