Social Icons

Thursday 18 October 2012

வேதங்களை நம்புதல்

வேதங்களை நம்புதல்

மனித  சமுதாயம் இவ்வுலகில் நேரான வழியில் நடப்பதற்காகவும் மறுமையில் வெற்றி பெறுவதற்காகவும் இறைவனால் இறைத்தூதர்களுக்கு வழங்கப்பட்டதே வேதங்களாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் வழங்கப்பட்டது போல் அவர்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களுக்கும் அவரவரின் மொழியில் வேதங்கள் அருளப்பட்டன.

14:4


எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

(அல்குர்ஆன் 14:4)

திருக்குர்ஆனில் பெயர் கூறப்பட்டுள்ள வேதங்கள்

திருக்குர்ஆனில் நான்கு வேதங்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. அவைகள் பின்வருமாறு :

1.    ஸபூர்          :     தாவூத் (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது
(அல்குர்ஆன் 4:163)

2.    தவ்ராத்      :     மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது.
(அல்குர்ஆன் 5:44)

3.    இஞ்சில்      :     ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது.
(அல்குர்ஆன் 5:46)

4.    திருக்குர்ஆன்:     முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது
(அல்குர்ஆன் 6:19)

எல்லா இறைத்தூதர்களுக்கும் அல்லாஹ் வேதங்களை அருளியுள்ளான். ஆனால், அவற்றின் பெயர்களைக் குறிப்பிடவில்லை.

மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும், நற்செய்தி கூறவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவர்களுடன் உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அருளினான்.

(அல்குர்ஆன் 2:213)



கிதாப், ஸுஹுஃபு வேறுபாடு


பெரிய அளவில் வழங்கப்படும் கிதாப் எனும் வேதம், சிறிய அளவில் வழங்கப்படும் ஸுஹுஃப் எனும் சிற்றேடு என்று சிலர் இரு வகைகளாக இறை வேதங்களை பிரித்துள்ளனர்.

இதற்கு திருக்குர்ஆனிலோ, ஆதாரப் பூர்வமான நபிமொழிகளிலோ எந்தச் சான்றும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு கிதாப் எனும் வேதம் மட்டுமே வழங்கப்பட்டது; ஸுஹுஃபு எனும் சிற்றேடு வழங்கப்படவில்லை என்று இவர்கள் கூறுவார்கள்.

98:2

இவர் அல்லாஹ்வின் தூதராவார். தூய்மையான ஏடுகளைக் கூறுகிறார். 

(அல்குர்ஆன் 98:2)

இவ்வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸுஹுஃபை ஓதிக் காட்டுவார்கள் என்று கூறப்படுகிறது.

ஸுஹுஃபு என்பதையும், கிதாப் என்பதையும் அல்லாஹ்  ஒரே கருத்தில்தான் 
பயன்படுத்தியுள்ளான் என்பதை இதி­ருந்து அறியலாம்.






மாற்றப்பட்ட வேதங்கள்

முன்னர் அருளப்பட்ட வேதங்களை நம்புவதென்றால் அதைக் கடைப்பிடித்து நடக்கவேண்டும் என்று புரிந்து கொள்ளக்கூடாது.

முன்னர் அருளப்பட்ட வேதங்களை நம்புவது என்றால் அதைக் கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்று புரிந்து கொள்ளக் கூடாது. முஹம்மது நபிக்கு மட்டும் தான் வேதம் அருளப்பட்டது. அதற்கு முன் எவருக்கும் அருளப்படவில்லைஎன எண்ணாமல் எல்லா இறைத் தூதர்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டன என்ற அடிப்படையை நம்ப வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.

ஏனெனில் முந்தைய வேதங்களை நம்பச் சொல்லும் திருக்குர்ஆன் அந்த வேதங்களில் மனிதக் கருத்துக்கள் சேர்ந்து விட்டன, மாற்றப்பட்டன, மறைக்கப்பட்டன,  திருத்தப்பட்டன எனவும் பல இடங்களில் கூறுகிறது.

அவர்கள் (இஸ்ரவேலர்கள்) உங்களை நம்புவார்கள் என்று ஆசைப்படுகின்றீர்களா? அவர்களில் ஒரு பகுதியினர் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர்.

(அல் குர்ஆன் 2:75)


3:78

அவர்களில் ஒரு பகுதியினர் உள்ளனர். வேதத்தில் இல்லாததை வேதம் என்று நீங்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக வேதத்தை வாசிப்பது போல் தமது நாவுகளை வளைக்கின்றனர். இது அல்லாஹ்விடமிருந்து வந்ததுஎனவும் கூறுகின்றனர். அது அல்லாஹ்விடமிருந்து வந்ததல்ல. அறிந்து கொண்டே அல்லாஹ்வின் பெயரால் பொய் கூறுகின்றனர்.

(அல் குர்ஆன் 3:78)


இறுதி வேதம்

திருக்குர்ஆனைத் தவிர எந்தவித மாறுதலுக்கும் உள்ளாகாத ஒரு வேதமும் உலகில் கிடையாது. அல்லாஹ் இதனை பாதுகாத்துள்ளான். கியாமத் நாள் வரை இதுதான் பின்பற்றப்படவேண்டும்.

15:9

அல்லாஹ் கூறுகிறான் :
நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.

(அல்குர்ஆன் 15:9)


இந்தக் குர்ஆன் மூலம் உங்களையும், இதை அடைவோரையும் நான் எச்சரிக்கை செய்வதற்காக இது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுஎனக் கூறுவீராக!

(அல்குர்ஆன் 6:19)

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்