Social Icons

Wednesday 17 October 2012

தயம்மும், ஆடை, நிய்யத், தக்பீர் தஹ்ரீமா

தயம்மும்    சில நேரங்களில் உளூச் செய்வதற்கோ, கடமையான குளிப்பை குளிப்பதற்கோ தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படலாம். அல்லது தண்ணீர் இருந்தும் கடுங்குளிர், நோய் காரணங்களால் அதனைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படலாம். அல்லது தண்ணீரும் இருந்து பயன்படுத்தக் கூடிய நிலையும் இருந்து உளூச் செய்வதாலோ, கடமையான குளிப்பை குளிப்பதாலோ குடிப்பதற்கு தண்ணீர் இல்லாது போய் விடுமோ என்ற பயம் ஏற்படலாம். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் உளூவிற்கும் கடமையான குளிப்பிற்கும் மாற்றுப் பரிகாரமே தயம்மும் என்பதாகும்.

  தயம்மும் எப்படி செய்வது
    இரு கைகளையும் தூய்மையான மண்ணில் ஒரு முறை அடித்து, கையில் படிந்துள்ள தூசியை வாயால் ஊதிவிட்டு முகத்திலும் மணிக்கட்டு வரை இரு கைகளிலும் தடவிக் கொள்வதே தயம்மும் ஆகும்.


    “நீங்கள் நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால் உங்களில் எவரேனும் மலங்களித்து விட்டு வந்தாலும் அல்லது பெண்களைத் தீண்டினாலும் (அந்நேரத்தில்) தண்ணீர் கிடைக்காவிட்டால் தூய மண்ணில் தயம்மும் செய்து கொள்ளுங்கள்” (அல்குர்ஆன் 5:6)
     “தயம்மும் என்பது முகத்தில் தடவுவதற்காகவும் கைகளில் தடவுவதற்காகவும் ஒரு தடவை கைகளை தரையில் அடிப்பதாகும்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்” அறிவிப்பவர்: அம்மார் பின் யாஸிர் رَضِيَ اللَّهُ عَنْهُ நுல்: அஹ்மத்
    மேற்கூறிய இறை வசனத்திலும், ஹதீஸிலும் பொதுவாக கைகள் என்று கூறப்பட்டிருப்பினும் அதே நபித்தோழர் அறிவிக்கும் மற்றோரு அறிவிப்பில் மணிக்கட்டுவரை என்று கூறப்பட்டுள்ளது.
   நபி صلى الله عليه وسلم அவர்கள் தம் இரு உள்ளங்கைகளாலும் தரையில் அடித்து, அதில் வாயால் ஊதிவிட்டு  அந்தக் கைகளை முகத்திலும் மணிக்கட்டு வரை கைகளிலும் தடவி விட்டு “இவ்வாறு செய்வது உமக்குப் போதுமாகும்” என கூறினார்கள். அறிவிப்பவர்: அம்மார் பின் யாஸிர் رَضِيَ اللَّهُ عَنْهُ நுல்: அஹ்மத்
  தயம்மும் செய்து தொழுதபின் தண்ணீர் கிடைத்து விட்டால்
   தயம்மும் செய்து தொழுதபின் தண்ணீர் கிடைத்து விட்டால் உளூச் செய்து மீண்டும் அத்தொழுகையை தொழ வேண்டியதில்லை.
    இரண்டு நபர்கள் பிரயாணத்தில் சென்றார்கள். தொழுகை நேரம் வந்தது. அப்போது அவர்களிடம் தண்ணீர் இல்லை. எனவே, அந்த இருவரும் சுத்தமான மண்ணில் தயம்மும் செய்து தொழுதனர். பின்பு, அத்தொழுகையின் நேரத்திலேயே அவர்களுக்குத் தண்ணீர் கிடைத்து விட்டது. அப்போது அந்த இருவரில் ஒருவர் உளூச் செய்து விட்டு மீண்டும் தொழுதார். இன்னொருவர் தொழவில்லை. பிரயாணத்திலிருந்து ஊர் திரும்பியதும் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் இதனை அவ்விருவரும் கூறினர். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகையை மீண்டும் தொழாத நபரை நோக்கி, “நீர் எனது வழிமுறையைக் கடைபிடித்தீர். (தயம்மும் செய்து நீர் தொழுத) உமது தொழுகையையே உமக்கு போதும்” என்றும், உளூச் செய்து விட்டு மீண்டும் தொழுத நபரை நோக்கி “உமக்கு இரு கூலிகள் உள்ளது” என்றும் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, அபூதாவூத்
    கடுங்குளிரின் கேடு காரணமாக தயம்மும் செய்ததை நபி صلى الله عليه وسلم அங்கீகரித்துள்ளார்கள்
   “தாதுஸ்ஸலாஸில்” எனும் போருக்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் என்னை அனுப்பி வைத்தார்கள். கடுங்குளிரான ஓர் இரவில் எனக்கு ஸ்கலிதம் ஏற்பட்டு விட்டது. குளித்தால் எனக்குக் கேடு ஏற்படும் எனக் கருதிய நான் தயம்மும் செய்து என் தோழர்களுக்கு ஸுப்ஹு (அதிகாலை தொழுகை) தொழுவித்தேன். மதீனாவிற்கு நாங்கள் திரும்பியதும் என் செயல் பற்றி நபி صلى الله عليه وسلم அவர்களிடம் என் தோழர்கள் கூறினர். உடனே நபி صلى الله عليه وسلم அவர்கள் “அம்ரே! குளிப்பு கடமையான நிலையில் உம் தோழர்களுக்குத் தொழுவித்தீராமே” என்று என்னிடம் கேட்டார்கள். “உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள் என்ற இறை வசனம் என் நினைவுக்கு வந்ததால் தான் தயம்மும் செய்து தொழுதேன்” என்றேன். இதனை கேட்டு நபி صلى الله عليه وسلم அவர்கள் சிரித்தார்களே தவிர குறை காணவில்லை. அறிவிப்பவர்: அம்ர்பின் அல்ஆஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், அபூதாவூத்
    மேற்கண்ட ஹதீஸிலிருந்து குளிரின் காரணமாகத் தயம்மும் செய்ததை நபி صلى الله عليه وسلم அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.
 ஆடை
   ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள். (அல்குர்அன் 7:31)
    இந்த ஆடைதான் அணிந்து தொழவேண்டுமென்று நிர்ணயிக்கப்படவில்லை. ஆடையணிவது அவரவர்களின் வசதியை பொருத்தது. ஒரே ஒரு துணி மட்டும் உள்ளதென்றால் அதனை அணிந்து கொள்ளலாம்.
   நபிصلى الله عليه وسلم அவர்கள் ஒரே ஒரு ஆடையை அணிந்துகொண்டு அதன் இரு ஓரத்தையும் இரு தோள்களின் மீதும் மாற்றிப் போட்டுக்கொண்டு தொழுதார்கள். அறிவிப்பவர்: உமர்பின் அபீஸலமா رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்: புகாரி
   தொடைப்பகுதியை மறைக்க வேண்டும்
   “தொடைப்பகுதி மறைக்க வேண்டிய பகுதியாகும்” என நபி صلى الله عليه وسلم  அவர்கள் கூறியுள்ளார்கள்.” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்: புகாரி
   பெண்கள் உடல் முழுவதையும் கண்டிப்பாக மறைக்க வேண்டும். ஆனால் முகம், முன்கை, கால் பாதங்கள் ஆகியவற்றை மறைக்கத் தேவையில்லை. சிலர் தொழுகைக்காக காலுறை அணிகின்றனர். இது கட்டாயம் என்றும் எண்ணுகின்றர். நபி صلى الله عليه وسلم காலத்தில் வாழ்ந்த எந்தப் பெண்களும் காலுறை அணிந்து தொழுததாக எவ்வித ஆதாரமும் இல்லை. விரும்பினால் அணியலாம்.
   “நபி صلى الله عليه وسلم  அவர்கள் ஃபஜ்ர் தொழுகையைத் தொழுதார்கள். முஃமினான பெண்கள் ஆடைகளால் தங்கள்  உடல் முழுவதையும் சுற்றி மறைத்தவர்களாக அவர்களுடன் தொழுதார்கள். பின்னர் தங்கள் வீடுகளுக்குச் சென்று விடுவார்கள். அவர்கள் யார் யார்? என்பதை யாரும் அறியமாட்டார்கள்.” அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்: புகாரி
   பருவமடைந்த பெண்
   “பருவமடைந்த பெண் முக்காடில்லாமல் தொழுதால் இறைவன் அதை ஏற்றுக்கொள்ள மாட்டான்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்கள்: அபூதாவூத், திர்மிதி
   பார்வையை ஈர்க்ககூடிய வண்ண ஆடைகள்
   “நபி صلى الله عليه وسلم  அவர்கள் பல வண்ணங்கள் உள்ள ஒரு ஆடையை அணிந்து தொழுதபோது அந்த வண்ணங்களின் பக்கம் பார்வையைச் செலுத்தினார்கள். அவர்கள் தொழுகையை முடித்த பின்னர் “என்னுடைய இந்த ஆடையைக் கொண்டுபோய் அபூஜஹ்ம் வசம் கொடுத்துவிட்டு, அவருடைய (வண்ணங்களில்லாத) ஆடையைக் கொண்டு வாருங்கள். இந்த ஆடை சிறிது நேரத்திற்கு முன் எனது தொழுகையை விட்டு என் கவனத்தைத் திருப்பிவிட்டது” எனக்கூறினார்கள்.  அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
   உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட ஆடைகள்
   ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ  யிடத்தில் (உருவப் படங்கள் நிறைந்த) ஒரு திரை இருந்தது. அதனால் தங்கள் வீட்டின் ஒரு ஓரத்தை மறைத்திருந்தார்கள். இதை கண்ட நபி صلى الله عليه وسلم ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ யிடம் “உன்னுடைய இந்தத் திரையை நம்மை விட்டும் அகற்றிவிடு. அதிலுள்ள படங்கள் நான் தொழுது கொண்டிருக்கும்போது (என் எண்ணத்தில்) குறிக்கிடுகின்றன” எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
   நிய்யத்
      எந்த ஒரு வணக்க வழிபாட்டுக்கும் நிய்யத் என்ற எண்ணம் அவசியம். ஆகவே தொழுகை என்ற செயலுக்கும் நிய்யத் எனும் எண்ணம் தேவை.
    “செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொருத்ததேயாகும்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
    “நிச்சயமாக இறைவன் உங்கள் உடல்களையோ தோற்றங்களையோ பார்ப்பதில்லை. உங்கள் உள்ளங்களைத்தான் பார்க்கிறான்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: முஸ்லிம்
        தக்பீர் தஹ்ரீமா
    தொழுகையில் ஆரம்பமாக கூறப்படும் தக்பீருக்கு தக்பீர் தஹ்ரீமா எனப்படும்.
    “நீ தொழுகைக்காக தயாராகிவிட்டால் முழுமையாகச் உளூச் செய்து கஅபாவை முன்னோக்கி “அல்லாஹு அக்பர் எனக்கூறு” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: முஸ்லிம்
    அல்லாஹு அக்பர் எனக் கூறி இரு கைகளையும் தோள் புஜங்கள் வரையோ அல்லது காது சோனைகள் வரையோ உயர்த்திட வேண்டும்.
    “நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும்போது தங்களது இரு கைகளையும் இரு தோள் புஜங்கள் வரை உயர்த்தக் கூடியவர்களாக இருந்தார்கள்.” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
    “நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகைக்காக நின்றால் தங்களது இரு கைகளின் விரல்களும் மடக்கப்படாமல் இருக்கும் விதமாக தம் இரு கைகளையும் உயர்த்தக் கூடியவர்களாக இருந்தார்கள்.” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, திர்மிதீ
    உயர்த்திய கைகளை நெஞ்சின் மீதுதான் வைக்க வேண்டும்
        “நபி صلى الله عليه وسلم அவர்கள் (தொழுகையில் ஸலாம் கூறும் போது) தமது வலது புறமும், இடது புறமும் திரும்பியதை நான் பார்த்தேன். மேலும்  (தொழுகையில்) வலது கையை இடது கையின் மணிக்கட்டு மீது வைத்து நெஞ்சின் மீது வைத்ததைப் பார்த்தேன்.” அறிவிப்பவர்: ஹுல்புத்தாயி رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அஹ்மத்
    “நபி صلى الله عليه وسلم அவர்கள் தங்களது வலது கையை இடது முன்கை மீதும் இடது மணிக்கட்டின் மீதும் இடது குடங்கை மீதும் வைத்தார்கள்.” அறிவிப்பவர்: இப்னு ஹுஜ்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ
    “நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகையில் நின்ற போது தங்களது வளக்கையைால் இடககையை பிடித்திருந்ததை நான் பார்த்தேன்.” அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ
    தொப்புளுக்குக் கீழே கைகளைக் கட்டவேண்டும் என்று சில அறிவிப்புகள் இருந்தாலும் அவை அனைத்துமே பலகீனமானவை என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
    1, தொழுகையில் தொப்புகளுக்குக் கீழே (இடது) முன்கை மீது (வடது) முன்கையை வைப்பது சுன்னத்தாகும். என அலீ رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்: அபூதாவூத்
    2, தொழுகையில் தொப்புகளுக் கீழே முன்கையை, முன்கை மீது வைத்துக் கொள்ள வேண்டும். என அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் குறிப்பிட்டார்கள். நூல்: அபூதாவூத்
    இந்த இரண்டு ஹதீஸ்களின் அறிவிப்பாளர் வரிசையில் அப்துர் ரஹ்மான் பின் இஸ்ஹாக் அல் கூஃபி என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரைப் பற்றி ஹதீஸ் கலை வல்லுனர்களின் வருமாறு:
    “பலவீனமானவர்” என இப்னு முயீன், இப்னு ஹிப்பான், அபூஸர்ஆ, அபூஹாதம், இப்னு குஸைமா, உகைலீ, அஜலீ, புகாரி, நவவீ ஆகியோர் விமர்சித்துள்ளனர். “இவரது ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டும்” என அபூஹாதம், ஸாஜி ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். தம் நூல்களில் பதிவு செய்துள்ள அபூதாவூத் அவர்களும் “இவரது ஹதீஸ்கள் ஏற்கத்தக்கவை அல்ல” என விமர்சனம் செய்துள்ளனர். எனவே இந்த ஆதாரமற்ற செய்தியின் அடிப்படையில் செயல்படலாகாது.
    3, “தொப்புளுக்கு கீழே கையை வைப்பார்கள்” என  இப்றாஹீம் கூறுவதாக ஒரு செய்தி முஸன்னப் இப்னு ஷைபா என்ற நூலில் உள்ளது. ஆனால் அப்படி வைப்பது யார் என்ற விபரமில்லை. மேலும் இப்றாஹீம் என்பவர் நபி صلى الله عليه وسلم அவர்களின் காலத்தைச் சேர்ந்தவரில்லை.
    4, அலீ ரலி அவர்கள் நெஞ்சில் தொப்புளுக்கு மேல் கையைக் கட்டியதாக ஜரீர் அறிவிக்கும் செய்தி அபூதாவூதில் இடம்பெற்றுள்ளது. இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நபி صلى الله عليه وسلم அவர்கள் நெஞ்சில் கட்டியதாக தெளிவான ஹதீஸ் இருக்கும்போது அதையே ஏற்கவேண்டும்.
    ஸனா ஓதுதல்  அல்லாஹு அக்பர் என தக்பீர் கூறி நெஞ்சில் கைகளைக் கட்டிக் கொண்டதும் ஸனா ஓதவேண்டும்.
    நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகைக்காக தக்பீர் கூறினால் குர்ஆன் வசனங்களை ஓதுவதற்கு முன்பு சிறிது நேரம் மவுனமாக இருப்பார்கள். “இறைத்தூதரே! என் தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே தாங்கள் என்ன ஓதுகிறீர்கள்?” என நான் கேட்டேன். அதற்கு,
  اللَّهُمَّ بَاعِدْ بَيْنِيْ وَبَيْنَ خَطَايَاىَ كَمَا بَاعَدتَّ بَيْنَ اْلَمشْرِقِ وَالْمَغْرِبِ اللَّهُمَّ نَقَّنِيْ مِنَ الْخَطَاياَ كَمَا يُنَقَّى اثَّوْبُ الأبْيَضُ مِن الدَّنَسِ اللَّهُمَّ اغْسِلْ خَطَايَاىَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ
        ஸனாவின் பொருள்: இறைவா! கிழக்குக்கும் மேற்குக்கும் இடையை வெகு தூரத்தை நீ ஏற்படுத்தியதைப் போல எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக!
    இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போல என்னை என் தவறுகளிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக!
    இறைவா! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவி விடுவாயாக!
    தக்பீர் கட்டியதும் கீழ்காணும் இந்த வாசகங்களையும் கூறலாம்.
    நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழும் போது அல்லாஹு அக்பர் என தக்பீர் கூறியதும்,

     பொருள்: இணைவைத்தவர்களில் ஒருவனாக நான் இல்லாமலும், கட்டுப்பட்ட முஸ்லிமாகவும் வானங்களையும் பூமியையும் படைத்தவனை நோக்கி என் முகத்தைத் திருப்புகிறேன். என் தொழுகையும் என் இதர வணக்கங்களுக்கும் என் வாழ்வும் என் மரணமும் அகில உலகையும் படைத்து இரட்சிக்கும் இறைவனுக்கே உரியன. அவனுக்கு நிகராக எவருமில்லை. இவ்வாறு தான் ஏவப்பட்டுள்ளேன். கட்டுப்பட்டு நடப்பவர்களில் நானும் ஒருவன் இறைவனே! நீயே அதிபதி. உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவருமில்லை. நீ தூய்மையானவன். நீ புகழுக்குரியவன்.
அறிவிப்பவர் அலி
رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்:முஸ்லிம்
தொழுகையின் ஆரம்பத்தில் மட்டும் அவூது ஓதுதல்
   ஸனா ஓதி முடித்தபின் “அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம்” என்று ஆரம்பித்து “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” எனக் கூறி சூரத்துல் பாத்திஹாவை ஓதவேண்டும்.
   “(நபியே) நீர் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் இறைவனிடம் காவல் தேடுவீராக!” (அல்குர்ஆன் 16:98)
اَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
      பொருள்: எடுத்தெறியப்பட்ட ஷைத்தானின் தீங்கை விட்டும் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
      முதல் ரக்அத்தில் மட்டும்தான் “அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம்” கூறவேண்டும். மற்ற ரக்அத்களில் இதனை ஓதுவதற்கு ஆதாரம் இல்லை.
      “நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டாம் ரக்அத்துக்கு எழுந்ததும் அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்” என்று ஓதத் தொடங்கி விடுவார்கள். (முதல் ரக்அத்தில் சிறிது நேரம் மவுனமாக  இருந்தது போல் இரண்டாம் ரக்அத்தில்) மவுனமாக இருக்கமாட்டார்கள்” (அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, முஸ்லிம்
     ஒவ்வொரு ரக்அத்திலும் சூராக்களை ஆரம்பிக்கும்போது بسم الله الرحمن الرحيم பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என கூற வேண்டும். 
       பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்) அடுத்து பிஸ்மியை தொடர்ந்து சூரத்துல் பாத்திஹா ஓதவேண்டும்.
     சூரத்துல் ஃபாத்திஹா
     “சூரத்துல் ஃபாத்திஹா ஓதாதவருக்கு தொழுகையில்லை” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உபாதா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, திர்மிதீ
       الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ  الرَّحْمـنِ الرَّحِيمِ  مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّينَ
       பொருள்:1. சர்வ புகழும் அல்லாஹ்வுக்கே சர்வ உலகங்களையும் (படைத்து) பரிபாலித்து இரட்சிப்பவன் 2. அளவற்ற அருவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். 3.தீர்ப்பு நாளின் எஜமானன். 4. உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; இன்னும் உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம். 5. நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக. 6. நீ எவர்களின் மீது அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி(யில் நடத்துவாயாக!) 7.(உனது)  கோபத்திற்குள்ளானவர்களும் வழி தவறியவர்களும் சென்ற வழியல்ல.
       இமாமைப் பின்பற்றித் தொழுபவர் இமாம் சப்தமிட்டு ஓதக்கூடிய ரக்அத்துகளில் எதனையும் ஓதாமல் இமாம் ஓதுவதைத் கேட்கவேண்டும். இமாம் சப்தமிட்டு ஓதாத ரக்அத்துகளில் அவரும் ஓதியாக வேண்டும்.
     “குர்ஆன் ஓதப்பட்டால் அதைச் செவி தாழ்த்திக் கேளுங்கள். மவுனமாக இருங்கள்” என இறைவன் கூறியுள்ளான். (அல்குர்ஆன் 7:204)
   “இமாம் ஏற்படுத்தப்பட்டிருப்பது பின்பற்றப்படுவதற்கே! அவர் தக்பீர் கூறும்பொழுது நீங்களும் தக்பீர் கூறுங்கள்! அவர் ஓதும்போது நீங்கள் மவுனமாக இருங்கள்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்: முஸ்லிம்
     சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடிந்ததும் “ஆமீன்” கூற வேண்டும். சப்தமிட்டு ஓதும் தொழுகைகளில் இமாம் ஃசூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி முடித்ததும் இமாமும் (தொழவைப்பவரும்) மஃமூமும் (பின் நின்று தொழுபவரும்) சப்தமிட்டு ஆமீன் கூற வேண்டும்.
    “நபி صلى الله عليه وسلم அவர்கள் வலழ்ழாள்ளீன் என்று கூறியதும் முதல் வரிசைக்கு கேட்குமளவிற்கு ஆமீன் கூறுவார்கள்” அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அபூதாவூத், இப்னுமாஜ்ஜா
     “இமாம் கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்” எனக்கூறும்போது நீங்கள் ஆமீன் கூறுங்கள்! ஏனெனில் எவர் கூறும் ஆமீன் மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைந்து விடுகிறதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
     இந்தப் பள்ளிவாசலில் (சுமார்) 200 நபித்தோழர்களைக் கண்டுள்ளேன். (அவர்கள்) இமாம் “கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்” எனக் கூறும்போது “ஆமீன்” என்ற பெரும் சப்தத்தை நான் கேட்டுள்ளேன். அறிவிப்பவர்: அதா நூல்: பைஹகீ
    இந்த ஹதீஸை கவனித்தால் ஆமீன் சப்தமிட்டே கூறவேண்டுமென அறியலாம்.
    ஸூரத்துல் ஃபாத்திஹாவுக்குப் பின் வேறு வசனங்களை ஓதும் முறை
    ஸூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி முடித்தபின் குர்ஆனில் வேறு வசனங்களையோ, அத்தியாயங்களையோ ஓதவேண்டும். நபி صلى الله عليه وسلم அவர்கள் லுஹரின் முதலிரண்டு ரக்அத்துகளில் ஸூரத்துல் ஃபாத்திஹாவையும் வேறு இரு ஸூராக்களையும் ஓதுவார்கள். ஆறிவிப்பவர்: அபூகதாதா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்
     முதலிரண்டு ரக்அத்துகளைப் பொறுத்தவரை எல்லா நேரங்களிலும் ஸூரத்துல் ஃபாத்திஹாவுடன் வேறு வசனங்களை நபி صلى الله عليه وسلم அவர்கள் ஓதியுள்ளனர். ஆனால் மூன்றாம் நான்காம் ரக்அத்களில் ஸூரத்துல் ஃபாத்திஹாவை ஓதியிருக்கிறார்கள். சில சமயங்களில் ஸூரத்துல் பாத்திஹாவுடன் வேறு வசனங்களையும் ஓதியிருக்கிறார்கள். எனவே முதலிரண்டு ரக்அத்களில் ஸூரத்துல் ஃபாத்திஹாவுடன் வேறு வசனங்களை ஓதவேண்டும். மற்ற இரண்டு ரக்அத்களில் ஃஸூரத்துல் பாத்திஹாவை மட்டும் ஓதலாம். அல்லது வேறு வசனங்களையும் ஓதலாம்.
     நபி صلى الله عليه وسلم அவர்கள் லுஹரின் முதலிரண்டு ரக்அத்களில்  முப்பது ஆயத்துகள் அளவு ஓதுவார்கள். பின்னிரண்டு ரக்அத்களில் பதினைந்து ஆயத்துக்கள் அளவு ஓதுவார்கள். அறிவிப்பவர்: அபூஸயீதுல்குத்ரீ (ரலி) நூல்கள்: அஹ்மத், முஸ்லிம்
     முழு அத்தியாயமாக ஓதுதல்
   முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் மிகப் பெரும் ஸுராக்கைைள ஒதித் தொழுவித்து மக்களுக்குக் கஷ்டம் கொடுப்பதை நபி صلى الله عليه وسلم அவர்களிடம் முறையிட்டபோது “முஆதே! நீ குழப்பத்தை ஏற்படுத்துகிறாயா? ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா, வஷ்ஷம்ஸிவலுஹாஹா வல்லைலி இதாயக்ஷா ஆகியவற்றை ஓதியிருக்கலாகாதா? என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் வினவினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்
    ஆங்காங்கே சில வசனங்கள் ஓதுதல்
    குர் ஆனின் முழு அத்தியாயம் இல்லாமல் அதிலுள்ள சில வசனங்களை மட்டும் ஓதலாம்.
    நபி صلى الله عليه وسلم அவர்கள் ஃபஜ்ருடைய இரண்டு ரக் அத்களில் முதல் ரக்அத்தில் பகரா அத்தியாயத்தில் உள்ள கூலூ ஆமின்னா பில்லாஹி (2:136) என்ற வசனத்தையும் இரண்டாம் ரக்அத்தில் “ஆமன்னா பில்லாஹி வஷ்ஹத் பிஅன்னா முஸ்லிமூன்”(3:52) என்ற வசனத்தையும் ஓதினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத்
     ஒரே அத்தியாயத்தை திரும்பத் திரும்ப ஓதுதல்
       நபி صلى الله عليه وسلم அவர்கள் ஸுப்ஹுத் தொழுகையில் இரண்டு ரக்அத்களிலும் இதா ஸுல்ஸிலதில் அர்ளு என்பதையே ஓதினார்கள். நூல்: அபூதாவூத்
     ஒரே அத்தியாயத்தை பகுதி பகுதியாக இரண்டு ரக்அத்களில் ஓதுதல்
     நபி صلى الله عليه وسلم அவர்கள் அஃசராப் ஸூராவை மஃரிபின் இரண்டு ரக்அத்களிலும் பகுதி பகுதியாக ஓதினார்கள். அறிவிப்பவர்: ஆயிஸா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ
     அத்தியாயங்களை வரிசை தவறி ஓதுதல்
     நபி صلى الله عليه وسلم அவர்களுடன் நான் ஒரு நாள் இரவில் தொழுதேன். முதலில் பகரா ஓதி பின்னர் நிஸா ஓதி பின்னர் ஆல இம்ரான் ஓதினார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், நஸயீ
      இரண்டாம் ரக்அத்தைவிட முதல் ரக்அத்தில் அதிக அளவு ஓதுதல்
    நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டாம் ரக்அத்தை முதல் ரக்அத்தை நீட்டுவார்கள்.  அறிவிப்பவர்: அபூகதாதா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்