Social Icons

Friday 28 September 2012

56.அறப்போரும் அதன் வழிமுறைகளும்




பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2782
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நற்செயல்களில் சிறந்தது எது?’ என்று கேட்டேன். அவர்கள், ‘தொழுகையை அதற்குரிய வேளையில் தொழுவது” என்று கூறினார்கள். ‘பிறகு எது (சிறந்தது?)” என்று கேட்டேன் அவர்கள், ‘பிறகு தாய்தந்தையருக்கு நன்மை செய்வது” என்று பதிலளித்தார்கள். நான், ‘பிறகு எது (சிறந்தது?)” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இறைவழியில் அறப்போரிடுவதாகும்” என்று பதில் சொன்னார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம் வேறெதுவும் கேட்காமல் மௌனமாகி விட்டேன். நான் இன்னும் கேட்டிருந்தால் அவர்கள் இன்னும் பதிலளித்திருப்பார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2783
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(மக்காவின்) வெற்றிக்குப் பின்னால் (மக்காவிலிருந்து) ஜிஹாத் (இறைவழியில் தாயகம் துறந்து செல்வது) என்பது கிடையாது. ஆனால், அறப்போரிடுவதும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் கொள்வதும் உண்டு. போருக்குப் புறப்படும்படி நீங்கள் அழைக்கப்பட்டால் உடனே போருக்குச் செல்லுங்கள்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2784

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நான் (நபி(ஸல்) அவர்களிடம்), ‘இறைத்தூதர் அவர்களே! அறப்போர் புரிவதை சிறந்த நற்செயலாக நாங்கள் கருதுகிறோம். எனவே, (பெண்களாகிய) நாங்களும் அறப்போர் புரியலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(பெண்களான) உங்களுக்குச் சிறந்த அறப்போர், பாவச் செயல் கலவாத ஹஜ் தான்” என்று பதிலளித்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2785
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘ஜிஹாத் என்னும் (இறைவழியில் புரியும்) அறப்போருக்குச் சமமான ஒரு நற்செயலை எனக்கு அறிவியுங்கள்” என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘அப்படி எதையும் நான் காணவில்லை” என்று கூறிவிட்டு, ‘அறப்போர் வீரன் (போருக்காகப்) புறப்பட்டுச் சென்றுவிட்டால் (அவனுக்கு) இணையான நற்செயல் புரிந்திட வேண்டி) நீ உன் வணக்கத் தலத்திற்குச் சென்று இடைவிடாமல் தொழுது கொண்டும் தொடர்ந்து நோன்பு நோற்றுக் கொண்டும் இருக்க உன்னால் முடியுமா?’ என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ‘அது யாரால் முடியும்?’ என்று பதிலளித்தார்.
“அறப்போர் வீரனின் குதிரை, அதைக்கட்டி வைத்துள்ள மேய்ச்சல் கயிற்றுக்கிடையே (கால்களை உதைத்துக் கொண்டு) சில குதிகள் குதித்துச் சென்றால் அதுவும் அவனுக்கு நற்பலனாக எழுதப்படும்” என்று அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2786
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். “இறைத்தூதர் அவர்களே! மக்களில் சிறந்தவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இறைவழியில் தன் உயிராலும் தன் பொருளாலும் போராடுபவரே (மக்களில் சிறந்தவர்)” என்று பதிலளித்தார்கள். மக்கள், ‘பிறகு யார்?’ என்று கேட்டார்கள். ‘மலைக் கணவாய்களில் ஒன்றில் வசித்துக் கொண்டு, அல்லாஹ்வை அஞ்சிய வண்ணம் தன்னால் மக்களுக்குத் தீங்கு நேராமல் தவிர்த்து வருபவரே சிறந்தவர்” என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2787
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” இறைவழியில் போராடுபவரின் நிலையானது, உண்மையாகப் போராடுபவர் யார் என்பது (அவரின் எண்ணத்தைப் பொருத்து) அல்லாஹ்வுக்கே தெரியும் – (அல்லாஹ்வைத்) தொழுதும், (அவனுக்காக) நோன்பு நோற்றும் வருபவரின் நிலையைப் போன்றதாகும். அல்லாஹ், தன் பாதையில் போராடுபவரின் உயிர்த் தியாகத்தை ஏற்று, அவரை சொர்க்கத்தில் நுழைய வைக்க உத்தரவாதம் அளித்துள்ளான் அல்லது நன்மையுடனோ, போர்ச் செல்வத்துடனோ அவரைத் திரும்ப வைக்க உத்தரவாதம் அளித்துள்ளான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2788-2789
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உம்மு ஹராம் பின்த்து மில்ஹான்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்பவராக இருந்தார்கள். அப்போதெல்லாம் அவர் நபி(ஸல்) அவர்களுக்கு உணவு தருவது வழக்கம். உம்மு ஹராம்(ரலி), உபாதா இப்னு ஸாமித்(ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (இவ்வாறே ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் உம்மு ஹராம்(ரலி) அவர்களிடம் சென்றார்கள். அவர் நபி(ஸல்) அவர்களுக்கு உணவு கொடுத்துவிட்டு அவர்களின் தலையில் பேன் பார்க்கத் தொடங்கினார்கள். அப்படியே நபி(ஸல்) அவர்கள் தூங்கிவிட்டார்கள். பிறகு, சிரித்துக் கொண்டே கண் விழித்தார்கள். உம்மு ஹராம்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! ஏன் (இப்படிச்) சிரிக்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சிலர், இறைவழியில் அறப்போர் வீரர்களாக எனக்கு (கனவில்) எடுத்துக் காட்டப்பட்டார்கள். அவர்கள் இந்தக் கடலின் முதுகில் கட்டில்களில் (சாய்ந்து) அமர்ந்திருக்கும் மன்னர்களாக அல்லது கட்டில்களில் அமர்ந்திருக்கும் மன்னர்களைப் போல்… ஏறிச் செல்கிறார்கள்” என்று பதிலளித்தார்கள். அதற்கு உம்மு ஹராம்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! அவர்களில் ஒருத்தியாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார்கள். எனவே, இறைத்தூதர்(ரலி) அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். பிறகு, தம் தலையை(த் தலையணையில்) வைத்(து உறங்க ஆரம்பித்)தார்கள்; பிறகு, சிரித்தபடியே விழித்தெழுந்தார்கள். அப்போது உம்மு ஹராம்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! ஏன் சிரிக்கிறீர்கள்” என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சிலர், இறைவழியில் அறப்போர் புரிபவர்களாக எனக்கு எடுத்துக் காட்டப்பட்டனர்..” என்று முன்பு போன்றே கூறினார்கள். உம்மு ஹராம்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! அவர்களில் ஒருத்தியாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் (அறப்போருக்காகக் கடலில்) முதன்முதலாகப் பயணிப்பவர்களில் ஒருவராக இருப்பீர்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே, முஆவியா இப்னு அபீ சுஃப்யான்(ரலி) அவர்களின் (ஆட்சிக்) காலத்தில் (சைப்ரஸ் தீவின் மீது அறப்போர் புரியச் சென்றவர்களுடன் உம்மு ஹராம்(ரலி) அவர்களும் கடல் பயணம் செய்து கடலிலிருந்து (தீவின் ஒரு பகுதிக்குப்) புறப்பட்டபோது தம் வாகனத்திலிருந்து விழுந்து மரணமடைந்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2790
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். “அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலை நிறுத்தி, ரமளானில் நோன்பும் நோற்ற மனிதரை சொர்க்கத்தில் புகச் செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது; அவர் இறைவழியில் அறப்போர் புரிந்தாலும் சரி; அல்லது அவர் பறந்த பூமியில் உட்கார்ந்து கொண்டாலும் சரி” என்று கூறினார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் மக்களுக்க இந்த நற்செய்தியை அறிவிக்கலாமா?’ என்று (நபித் தோழர்கள்) கேட்டதற்கு அவர்கள், ‘சொர்க்கத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன. அவற்றை அல்லாஹ்? தன் பாதையில் அறப்போர் புரிபவர்களுக்காகத் தயார்படுத்தி வைத்துள்ளான். இரண்டு படித்தரங்களுக்கிடையே வானத்திற்கும் பூமிக்கும் இடையிலுள்ளது போன்ற தொலைவு உள்ளது. நீங்கள் அல்லாஹ்விடம் கேட்டால், ஃபிர்தவ்ஸ் என்னும் (சொர்க்கத்தின்) படித்தரத்தையே கேளுங்கள்; ஏனெனில், அதுவே சொர்க்கத்தின் மிகச் சிறந்த படித்தரமும் மிக உயர்ந்த படித்தரமும் ஆகும்” என்று கூறினார்கள். (அறிவிப்பாளரான யஹ்யா இப்னு சாலிஹ்(ரஹ்) கூறினார்:
மேலும், ‘அதற்கு மேலே கருணையாள(னான இறைவ)னின் அர்ஷு – சிம்மாசனம் இருக்கிறது. இன்னும், அதிலிருந்தே சொர்க்கத்தின் ஆறுகள் பாய்கின்றன” என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் கருதுகிறேன்.
மற்றோர் அறிவிப்பாளரான முஹம்மத் இப்னு ஃபுலைஹ்(ரஹ்), தம் தந்தையிடமிருந்து, ‘அதற்கு மேலே ரஹ்மானின் அர்ஷு இருக்கிறது” என்று (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என சந்தேகத்தொனியின்றி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2791
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” இன்றிரவு இரண்டு பேரைக் (கனவில்) கண்டேன்; அவர்கள் இருவரும் என்னிடம் வந்து, என்னை ஒரு மரத்தின் மீதேற்றி அழகான, சிறந்த ஒரு வீட்டினுள் புகச் செய்தார்கள். அதை விட அழகான ஒரு வீட்டை நான் பார்த்ததேயில்லை; (அவர்களில் ஒருவர்), ‘இந்த வீடு இறைவழியில் உயிர்த் தியாகம் புரிந்தவர்களின் வீடாகும்” என்றார்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2792

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” இறைவழியில் காலை நேரத்தில் சிறிது நேரம் அல்லது ஒரு மாலை நேரத்தில் சிறிது நேரம் போர் புரியச் செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் விடச் சிறந்ததாகும். இதை அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2793

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” சொர்க்கத்தில் ஒரு வில்லுக்குச் சமமான (ஒரு முழம்) அளவு (இடம் கிடைப்பது) சூரியன் எதன் மீது உதித்து மறைகிறதோ அந்த உலகத்தை விடச் சிறந்ததாகும். மேலும், இறைவழியில் ஒரு காலை நேரத்தில் சிறிது நேரம் போர் புரியச் செல்வது அல்லது ஒரு மாலை நேரத்தில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது சூரியன் எதன் மீது உதித்து மறைகிறதோ அந்த உலகத்தை விடச் சிறந்ததாகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2794
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” இறைவழியில் காலையிலும் மாலையிலும் சிறிதுநேரம் போர் புரியச் செல்வது உலகத்தை விடவும் அதிலுள்ள பொருட்களை விடவும் சிறந்ததாகும். என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2795

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” அல்லாஹ்விடம் நற்பலன் பெறுபவராக இறந்து போகிற எந்த (நல்ல) அடியாரும் இந்த உலகமும் அதிலுள்ளவை அனைத்தும் அவருக்குக் கிடைக்கும் என்றிருந்தாலும் கூட உலகிற்குத் திரும்பி வர விரும்ப மாட்டார்; இறைவழியில் உயிர்த்தியாகம் புரிந்தவரைத் தவிர் ஏனெனில், உயிர்த்தியாகத்தின் சிறப்பை (மறுமையில்) அவர் காண்கிறார். எனவே, இந்த உலகிற்கு மீண்டும் வந்து மறுபடியும் ஒருமுறை (இறைவழியில் போரிட்டுக்) கொல்லப்படுவதை அவர் விரும்புவார். இதை அனஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2796

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” இறைவழியில் காலையில் சிறிது நேரம் அல்லது, மாலையில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் விடச் சிறந்தது. உங்களில் ஒருவரின் வில்லின் அளவுக்குச் சமமான, அல்லது ஒரு சாட்டையளவுக்குச் சமமான (ஒரு முழம்) இடம் கிடைப்பது உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்தது. சொர்க்கவாசிகளில் (ஹூருல் ஈன்களில்) ஒரு பெண், உலகத்தாரை எட்டிப் பார்த்தால் வானத்திற்கும் பூமிக்குமிடையே உள்ள அனைத்தையும் பிரகாசமாக்கி விடுவாள்; பூமியை நறுமணத்தால் நிரப்பி விடுவாள். அவளுடைய தலையிலுள்ள முக்காடோ உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாகும். என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2797

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! என்னைவிட்டுப் பின்தங்கி விடுவதால் இறை நம்பிக்கையாளர் சிலரின் உள்ளங்களில் வருத்தம் உண்டாகாது என்றிருக்குமாயின் மேலும், அவர்களை ஏற்றிச் செல்ல வாகனங்களும் என்னிடம் இருந்திருக்குமாயின் இறைவழியில் போரிடச் செல்லும் எந்தச் சிறுபடையையும்விட்டு நான் பின்தங்கியிருந்திருக்க மாட்டேன். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நான் இறைவழியில் கொல்லப்பட்டு, பிறகு உயிராக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட்டு, பிறகு உயிராக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட்டு, பிறகு உயிராக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்படவேண்டும் என்றே விரும்புகிறேன். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2798

அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது (மூத்தா போர்க் களத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை இங்கிருந்து கொண்டே நேரில் காண்பது போல் கூறலானார்கள்:) ‘ஸைத் இப்னு ஹாரிஸா கொடியைக் கையிலெடுத்து (இஸ்லாமியச் சேனைக்குத் தலைமை தாங்கி)க கொண்டுள்ளார். இப்போது அவர் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு, ஜஅஃபர் அதை(த் தம் கையில்) எடுத்து (தலைமை தாங்கியபடி போரிட்டு)க் கொண்டுள்ளார். அவரும் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு, அதை அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (தம் கையில்) எடுத்து (தலைமை தாங்கியபடி போரிட்டுக் கொண்டு)ள்ளார்; இப்போது அவரும் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு, காலித் இப்னு வலீத் (தளபதியாக) நியமிக்கப்படாமலேயே அதைக் கையிலெடுத்துள்ளார். அவருக்கு வெற்றியளிக்கப்பட்டு விட்டது. (வீர மரணத்தினால் அவர்கள் பெற்ற பெரும் பேற்றினை நாம் அறிந்த பிறகும்) அவர்கள் நம்முடன் இருப்பது நமக்கு மகிழ்ச்சியளிக்காது.”
அறிவிப்பாளர் அய்யூப்(ரஹ்), ‘அல்லது, ‘அவர்கள் நம்முடன் இருப்பது அவர்களுக்கே மகிழ்ச்சியளிக்காது’ என்றும் அறிவிக்கப்பட்டிருக்கலாம்” என்று கூறுகிறார். இதைக் கூறியபோது நபி(ஸல்) அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2799-2800

உம்மு ஹராம் பின்த்து மில்ஹான்(ரலி) அறிவித்தார். ஒருநாள் நபி(ஸல்) அவர்கள் எனக்கு அருகில் உறங்கினார்கள். பிறகு புன்னகைத்துக் கொண்டே கண்விழித்தார்கள். நான், ‘ஏன் சிரிக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சிலர் இந்தப் பசுங்கடலில் கட்டில்களில் (சாய்ந்து) அமர்ந்திருக்கும் அரசர்களைப் போல் (கப்பல்களில் ஏறிப்) பயணம் செய்து கொண்டிருப்பதாக எனக்கு (கனவில்) எடுத்துக் காட்டப்பட்டது” என்று கூறினார்கள். நான், ‘அவர்களில் ஒருத்தியாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னேன். (அவ்வாறே) அவர்கள் எனக்காகப் பிரார்த்தித்தார்கள். பிறகு, இரண்டாம் முறையாக உறங்கினார்கள். முன்பு செய்தது போன்றே செய்தார்கள். முன்பு கேட்டது போன்றே நானும் கேட்டேன். முன்பு பதில் சொன்னது போன்றே அவர்களும் பதில் சொன்னார்கள். நான், ‘அவர்களில் ஒருத்தியாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினேன். அவர்கள், ‘முதன் முதலாகச் செல்பவர்களில் நீங்களும் ஒருவர் தாம்” என்று கூறினார்கள்.
(உம்மு ஹராம்(ரலி) அவர்களின் சகோதரி மகன் அனஸ் இப்னு மாலிக்(ரலி) தெரிவிக்கிறார்கள்:) அவ்வாறே, தளபதி முஆவியா(ரலி) அவர்களுடன் முஸ்லிம்கள் (சைப்ரஸ் தீவில் அறப்போர் புரிய) கடலில் பயணம் செய்த முதல் படையினரில் ஓர் அறப்போர் வீரராக, தம் கணவர் உபாதா இப்னு ஸாமித்(ரலி) அவர்களுடன் உம்மு ஹராம்(ரலி) புறப்பட்டுப் போனார்கள். தம் படையெடுப்பிலிருந்து அவர்கள் திரும்பி வந்தபோது ஷாம் நாட்டு திசைநோக்கிச் சென்றார்கள். உம்மு ஹராம்(ரலி) ஏறிக் கொள்வதற்காக அவர்களுக்கருகே வாகனம் ஒன்று கொண்டு வரப்பட்டது. (அவர்கள் அதில் ஏறிக் கொள்ள) அது அவர்களைக் கீழே தள்ளிவிட்டது; அதனால் அவர்கள் இறந்துவிட்டார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2801
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பனூ சுலைம் குலத்தவர் சிலருடன் எழுபது பேர் (கொண்ட வேத அறிஞர்களான அன்சாரி)களை பனூ ஆமிர் குலத்தாரிடம் (இஸ்லாத்தை எடுத்துரைப்பதற்காக) அனுப்பினார்கள். அவர்கள் (அங்கு) சென்றபோது என் தாய்மாமன் (தம்முடன் வந்த தோழர்களிடம்), ‘உங்களுக்கு முன்னால் நான் போகிறேன். அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதரைக் குறித்து நான் எடுத்துரைத்திட (அவர்கள் என்னை அனுமதித்து) எனக்குப் பாதுகாப்பளித்தால் நான் எடுத்துரைக்கிறேன்; இல்லையென்றால் நீங்கள் என் (பின்னால் என்) அரும்லேயே இருங்கள்” என்று கூறிவிட்டு சற்று முன்னால் சென்றார். அவர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தார்கள்; அவரை எதுவும் செய்யவில்லை. நபி(ஸல்) அவர்களைப் பற்றி அவர் அவர்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருந்தபோது தங்களில் ஒருவரைப் பார்த்து அவர்கள் சைகை செய்தார்கள். அவன் என் தாய் மாமனை (ஈட்டியால்) குத்தி அவரைக் கொன்றுவிட்டான். (உயிர் பிரியும் வேளையில்) அவர், ‘அல்லாஹ் மிகப் பெரியவன். கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக! நான் வெற்றி பெற்றுவிட்டேன்” என்று கூறினார். பிறகு, அவரின் எஞ்சிய தோழர்களின் மீதும் பாய்ந்து அவர்களையும் கொன்றுவிட்டார்கள்; மலையின் மீதேறிக் கொண்ட கால் ஊனமுற்ற ஒரு மனிதரைத் தவிர.
அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹம்மாம்(ரஹ்), ‘கால் ஊனமுற்ற அந்த மனிதருடன் மற்றொருவரும் (தப்பித்துக் கொண்டார்)’ என்று (அறிவிக்கப்பட்டதாக) கருதுகிறேன்” என்று கூறுகிறார்.
ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு, ‘நீங்கள் அனுப்பிய போதகர்கள் தங்கள் இறைவனிடம் சென்று சேர்ந்துவிட்டனர். அவர்களைக் குறித்து அவன் திருப்தியடைந்தான். அவர்களும் (தான் பெற்ற நற்பலனைக் குறித்து திருப்தி) கொள்ளும்படிச் செய்தான்’ என்று அறிவித்தார்கள். நாங்கள் (அப்போது அருளப்பட்ட), ‘ ‘நாங்கள் எங்கள் இறைவனைச் சென்றடைந்து விட்டோம். எங்களைக் குறித்து அவன் திருப்தியடைந்து விட்டான். அவனைக் குறித்து நாங்கள் திருப்தியடைந்தோம். தன்(வெகு மதியி)னைக் குறித்து எங்களைத் திருப்தியடையும்படி அவன் செய்தான்’ என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்து விடுங்கள்” என்னும் இறை வசனத்தை ஓதிக் கொண்டிருந்தோம். அது பின்னாளில் (இறைவனால்) நீக்கப்பட்டுவிட்டது. நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்த (பனூ சுலைம் குலத்தாரைச் சேர்ந்த) ரிஅல், தக்வான், பனூ லிஹ்யான், பனூ உஸைய்யா ஆகிய கிளையினருக்குக் கேடு நேர, நாற்பது நாள்கள் காலை (தொழுகை) நேரங்களில் பிரார்த்தனை செய்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2802
ஜுன்தப் இப்னு சுஃப்யான்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் போர் ஒன்றில் பங்கு கொண்டபோது அவர்களின் விரலில் (காயம் ஏற்பட்டு) ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. அப்போது அவர்கள், ‘நீ இரத்தம் சொட்டுகிற ஒரு விரல் தானே? நீ அடைந்த (பழு)தெல்லாம் இறைவழியில் தானே!” என்று (ஈரடிச் சீர் பாடல் போன்ற வடிவில்) கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2803

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! இறைவழியில் காயப்படுத்தப்படுபவர் – உண்மையில் தன் பாதையில் காயப்படுத்தப்படுபவர் யார் என்பதை ‘(அவரின் எண்ணத்தைப் பொருத்து) அல்லாஹ்வே அறிந்தவன் – மறுமை நாளில் இரத்த நிறம் கொண்டவராகவும் கஸ்தூரி மணம் கமழ்கிறவராகவுமே வருவார். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2804

அபூ சுஃப்யான்(ரலி) அறிவித்தார். என்னிடம் (ரோம சக்கரவர்த்தி) ஹிராக்ளியஸ், ‘முஹம்மதை எதிர்த்து நீங்கள் புரிகிற போர் (முடிவு) எப்படியுள்ளது?’ என்று கேட்டேன். அதற்கு நீங்கள், ‘போர் (முடிவு எங்களிடையே) மாறி மாறி வரும்’ என்று பதிலளித்தீர்கள். இறைத்தூதர்கள் இப்படித் தான் சோதிக்கப்படுவார்கள். பிறகு, அவர்களுக்குச் சாதமாகவே இறுதி முடிவு இருக்கும்” என்று கூறினார்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2805

அனஸ்(ரலி) அறிவித்தார். என் தந்தையின் சகோதரர் அனஸ் இப்னு நள்ர்(ரலி) பத்ருப் போரில் கலந்து கொள்ளாமல் எங்கோ சென்றார். அவர் (திரும்பி வந்தவுடன்) ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் இணைவைப்பவர்களுடன் நடத்திய முதல் போரில் நான் கலந்து கொள்ளவில்லை; இணைவைப்பவர்களுக்கெதிரான போரில் அல்லாஹ் என்னைப் பங்குபெற வைத்திருந்தால் நான் செய்வதை (வீரமாகப் போரிடுவதை) அவன் நிச்சயம் பார்த்திருப்பான். பின்பு உஹுதுப் போரின்போது முஸ்லிம்கள் தோல்வியுற்ற நேரத்தில் அவர், ‘இறைவா! என் தோழர்கள் செய்த (பின்வாங்கிச் சென்ற) செயலுக்காக உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன். இணைவைப்பவர்கள் செய்த (நபியவர்களுக்கெதிரான) இந்தப் போருக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று அறிவிக்கிறேன்” என்று கூறிவிட்டு, பிறகு (போர்க் களத்தில்) முன்னேறிச் சென்றார். ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவருக்கெதிரில் வரக்(கண்டு), ‘ஸஅத் இப்னு முஆத் அவர்களே! நான் சொர்க்கத்தையே விரும்புகிறேன். என் தந்தை நள்ருடைய இறைவன் மீது சத்தியமாக! நான் சொர்க்கத்தின் வாடையை உஹுது மலையிலிருந்து பெறுகிறேன்” என்று கூறினார். ஸஅத்(ரலி) இதை நபி(ஸல்) அவர்களிடம் கூறிவிட்டு, ‘அவர் செய்த (வீராவேசமான) போரை வர்ணிக்க என்னால் முடியவில்லை, இறைத்தூதர் அவர்களே!” என்று கூறினார். நாங்கள் அவர் உடலில் வாளால் வெட்டப்பட்டும், ஈட்டியால் குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப்பட்டும் இருந்த எண்பதுக்கும் மேற்பட்ட காயங்களைக் கண்டோம். மேலும், இணைவைப்பவர்கள் அவரின் உடல் உறுப்புகளைச் சிதைத்து விட்டிருந்த நிலையில் அவர் கொல்லப்பட்டிருக்கக் கண்டோம். அவரின் சகோதரியைத் தவிர வேறெவரும் அவரை (இன்னாரென்று) அறிந்து கொள்ள முடியவில்லை; அவரின் சகோதரி கூட அவரின் விரல்(நுனி)களை வைத்துத் தான் அவரை அடையாளம் காண முடிந்தது.
“அல்லாஹ்விடம் தாம் கொடுத்த உறுதிமொழியை மெய்ப்படுத்தி விட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களிடையே உள்ளனர்.” என்கிற (திருக்குர்ஆன் 33:23) இறைவசனம் இவர் விஷயத்திலும் இவரைப் போன்ற மற்ற உயிர்த் தியாகிகள் விஷயத்திலும் தான் அருளப்பட்டது என்றே நாங்கள் கருதி வந்தோம்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2806
அனஸ்(ரலி) அறிவித்தார். என் தந்தையின் சகோதரர் அனஸ் இப்னு நள்ரு(ரலி) அவர்களின் சகோதரி ‘ருபய்யிஉ’ எனப்படுபவர் ஒரு பெண்ணின் முன்பல்லை உடைத்துவிட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பழிக்குப்பழி வாங்கும்படி உத்தரவிட்டார்கள். அனஸ் இப்னு நள்ரு(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! தங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அவளுடைய முன்பல் (பழிக்குப் பழியாக) உடைக்கப்படாது” என்று கூறினார். அவ்வாறே, அந்தப் பெண்ணின் குலத்தார் இழப்பீட்டுத் தொகையை ஏற்றுக் கொள்ள சம்மதித்துப் பழிவாங்காமல் விட்டுவிட்டனர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு (இப்படி நடக்க வேண்டும் என்று சபதம் செய்து)விட்டால் அதை அல்லாஹ் நிறைவேற்றி விடுகிறான்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2807
ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார். நான் திருக்குர்ஆனைப் பல ஏடுகளில் பிரதியெடுத்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்த, ‘அல்அஹ்ஸாப்’ அத்தியாயத்தைச் சேர்ந்த இறைவசனம் ஒன்று (அதில்) இல்லாதிருப்பதைக் கண்டேன். நான் அதை குஸைமா இப்னு ஸாபித் அல் அன்சாரீ(ரலி) அவர்களிடம் தான் பெற்றேன். (ஒரு வழக்கின் போது) அவரின் சாட்சியத்தை இரண்டு மனிதர்களின் சாட்சியத்திற்குச் சமமாக நபி(ஸல்) அவர்கள் கருதியிருந்தார்கள். அந்த இறைவசனம் இதுதான்:
அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை மெய்ப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். அவர்களில் சிலர் (இறை வழியில் மரணமடைய வேண்டும் என்ற) தம் இலட்சியத்தை நிறைவேற்றிவிட்டார்கள். அவர்களில் சிலர் (அதை நிறைவேற்றத் தருணம்) எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். (திருக்குர்ஆன் 33:23)
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2808
பராஉ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் இரும்பு முகமூடி அணிந்த ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் முதலில் (இறைவழியில்) போர் புரிந்துவிட்டு இஸ்லாத்தை ஏற்கட்டுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘(முதலில்) நீ இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, பிறகு போரிடு” என்று கூறினார்கள். எனவே, அந்த மனிதர் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு (இறை வழியில்) போரிட்டார்; (அதில்) கொல்லப்பட்டார். நபி(ஸல்) அவர்கள் (அவரைப் பற்றி), ‘இவர் சிறிதளவே செயல்பட்டு அதிக நற்பலனைப் பெற்றார்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2809
அனஸ்(ரலி) அறிவித்தார். ஹாரிஸா இப்னு சுராகா(ரலி) அவர்களின் தாயாரான உம்மு ருபைய்யிஉ பின்த்து பராஉ(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! ஹாரிஸாவைப் பற்றி தாங்கள் எனக்குச் செய்தியறிவிக்க மாட்டீர்களா? அவர் பத்ருப் போரன்று கொல்லப்பட்டிருந்தார்; அவரின் மீது எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று பாய்ந்து விட்டிருந்தது. அவர் சொர்க்கத்தில் இருந்தால் நான் பொறுமையைக் கைக்கொள்வோன்; அவர் வேறெந்த (துன்ப) நிலையிலாவது இருந்தால் அவருக்காக நான் கடுமையாக அழுவேன்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘ஹாரிஸாவின் தாயே! சொர்க்கத்தில் பல (படித்தரங்கள் கொண்ட) தோட்டங்கள் உள்ளன. உன் மகன் (அவற்றில்) மிக உயர்ந்த ஃபிர்தவ்ஸ் என்னும் சொர்க்கத் (தோட்டத்)தை (தன் உயிர்த் தியாகத்திற்கான பிரதிபலனாகப்) பெற்றார்” என்று பதிலளித்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2810
அபூ மூஸா(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘ஒருவர் போரில் கிடைக்கும் செல்வங்களுக்காகப் போரிடுகிறார்; மற்றொரு மனிதர் புகழுக்காகப் போரிடுகிறார்; இன்னொரு மனிதர் தன் வீரத்தைப் பிறர் பார்க்கட்டும் என்பதற்காகப் போரிடுகிறார். (இவர்களில்) இறைவழியில் போரிடுபவர் எவர்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘(இவர்களில் எவருமே இறைவழியில் போரிடுபவராக இல்லை.) அல்லாஹ்வின் (ஏகத்துவ) வாக்கு மேலோங்க வேண்டும் என்பதற்காகப் போரிடுகிறவரே இறைவழியில் போரிடுபவராவார்” என்று பதிலளித்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2811

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” ஓர் அடியானின் பாதங்கள் இரண்டிலும் இறைவழியில் புழுதி படிந்திருக்க, அதை நரக நெருப்புத் தீண்டுவதில்லை.என அபூ அப்ஸ் அப்துர் ரஹ்மான் இப்னு ஜப்ர்(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2812
இக்ரிமா(ரஹ்) அறிவித்தார். இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடமும் அவரின் மகன் அலீயிடமும், ‘அபூ ஸயீத்(ரலி) அவர்களிடம் சென்று அவரின் ஹதீஸைச் செவிமடுங்கள்” என்று கூறினார்கள். எனவே, அபூ ஸயீத்(ரலி) அவர்களும் அவர்களின் (பால்குடிச்) சகோதரரும் தங்கள் தோட்டம் ஒன்றுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தபோது நாங்களிருவரும் சென்றோம். அபூ ஸயீத்(ரலி) எங்களைப் பார்த்தவுடன் முழங்கால்களைக் கைகளால் கட்டிப்பிடித்தபடி அமர்ந்தார்கள். பிறகு கூறலானார்கள்; நாங்கள் (மஸ்ஜிதுந் நபவி) பள்ளிவாசலின் செங்கற்களை ஒவ்வொன்றாக (சுமந்து) கொண்டு சென்றோம். அம்மார் இரண்டிரண்டு செங்கற்களாக (சுமந்து) கொண்டு சென்றார். அப்போது அவரை நபி(ஸல்) அவர்கள் கடந்து சென்றார்கள். அவரின் தலையிலிருந்து புழுதியைத் துடைத்துவிட்டு, ‘பாவம் அம்மார்! அம்மாரை ஒரு கலகக் கூட்டத்தினர் கொன்று விடுவார்கள். அம்மார், அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்துக் கொண்டிருக்க, அந்தக் கூட்டத்தினர் அவரை நரக நெருப்பின் பக்கம் அழைத்துக் கொண்டிருப்பார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2813

ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஹிஜ்ரீ 4, அல்லது 5-ம் ஆண்டில் நடந்த) அகழ்ப் போரின்போது (போர் முடிந்து) திரும்பி வந்து ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுக் குளித்தார்கள். அப்போது ஜிப்ரீல்(அலை) தம் தலையைப் புழுதி மூடியிருக்க வந்தார்கள். நபி(ஸல்) அவர்களை நோக்கி, ‘நீங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதைக் கீழே வைக்கவில்லை” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் எங்கே (போர் புரியப்) போகிறீர்கள்?’ என்று கேட்க, ஜிப்ரீல்(அலை) அவர்கள், ‘இதோ இங்கே!” என்று பனூ குறைழா (என்னும் யூதக்) குலத்தினரை (அவர்கள் வசிக்குமிடம்) நோக்கி சைகை காட்டினார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதரும் அவர்களை நோக்கிப் புறப்பட்டார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2814

அனஸ்(ரலி) அறிவித்தார். ‘பிஃரு மஊனா’ (என்னுமிடத்தில் பிரசாரத்திற்காகச் சென்ற தம்) தோழர்களைக் கொன்றவர்களுக்குத் தீங்கு நேர அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்த (பனூ சுலைம் கோத்திரத்தைச் சேர்ந்த) ரிஅல், தக்வான் மற்றும் உஸய்யா ஆகிய குலத்தினருக்குக் கேடு நேர – இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முப்பது காலை (தொழுகை) நேரங்களில் பிரார்த்தித்தார்கள். பிஃரு மஊனாவில் கொல்லப்பட்டவர்களின் விஷயத்தில் குர்ஆன் வசனம் ஒன்று அருளப்பட்டது. அதை நாங்கள் ஓதி வந்தோம்; பின்னாளில் அது (இறைவனால்) நீக்கப்பட்டுவிட்டது. ‘நாங்கள் எங்கள் இறைவனிடம் சென்று நேர்ந்து விட்டோம். அவன் எங்களைக் குறித்து திருப்தியடைந்துவிட்டான்; நாங்கள் அவனைக் குறித்து திருப்தியடைந்தோம்’ என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்து விடுங்கள்” என்பதே அந்த வசனம்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2815
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். உஹுதுப்போர் அன்று காலையில் சிலர் மது அருந்தினார்கள். பிறகு உயிர்த் தியாகிகளாகக் கொல்லப்பட்டார்கள். அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்களிடம், ‘அந்த நாளின் இறுதியில் (அவர்கள் உயிர்த் தியாகிகளாகக் கொல்லப்பட்டார்கள்) என்றா (அறிவிக்கப்பட்டுள்ளது)?’ என்று கேட்கப்பட்டது. அவர், ‘(‘அந்த நாளின் இறுதியில்’ என்ற) இந்த வாசகம் அறிவிப்பில் இல்லை” என்று பதிலளித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2816
ஜாபிர்(ரலி) அறிவித்தார். (உஹுதுப் போரின் போது) என் தந்தை, உடல் சிதைக்கப்பட்ட நிலையில் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டு அவர்கள் முன்னே வைக்கப்பட்டார். நான் என் தந்தையின் முகத்திலிருந்து (துணியை) விலக்கச் சென்றேன். என் குலத்தார் என்னைத் தடுத்தார்கள். அப்போது ஒப்பாரி வைத்து அழும் பெண் ஒருத்தியின் குரலை நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், அம்ர்(ரலி) அவர்களின் மகள் என்றோ – அவர்களின் சகோதரி என்றோ கூறப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஏன் அழுகிறாய்?’ நீ அழுதாலும் அழாவிட்டாலும் வானவர்கள் தங்கள் இறக்கைகளை விரித்து அப்துல்லாஹ்வுக்கு நிழல் கொடுத்துக் கொண்டேயிருப்பார்கள்” என்று கூறினார்கள்.
(புகாரீயாகி) நான் அறிவிப்பாளர் ஸதகா இப்னு ஃபள்ல்(ரஹ்) அவர்களிடம், ‘அவர் உயர்த்தப்படும் வரை (நிழல் கொடுத்துக் கொண்டேயிருப்பார்கள்) என்று அறிவிப்பில் உள்ளதா?’ என்று கேட்க, அவர்கள், ‘ஜாபிர்(ரலி) அ(ந்த வாசகத்)தைக் கூறியிருக்கலாம் (என்று எனக்கு இதை அறிவித்த சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) உறுதியின்றிக் கூறினார்கள்)” என்று பதிலளித்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2817
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் சொர்க்கத்தில் நுழையும் எவரும் உலம்லுள்ள பொருட்களெல்லாம் அவருக்குக் கிடைப்பதாக இருந்தாலும் உலகிற்குத் திரும்பி வர விரும்ப மாட்டார்; உயிர்த் தியாகியைத் தவிர. அவர் தனக்கு (இறைவனிடத்தில்) கிடைக்கும் கண்ணியத்தைக் கண்டுவிட்ட காரணத்தால் உலகத்திற்குத் திரும்பி வந்து (இறைவழியில்) பத்துமுறை கொல்லப்பட வேண்டும் என்று ஆசைப்படுவார். என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2818
உமர் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்) அவர்களின் அடிமையான சாலிம்(ரஹ்) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) உமர் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்) அவர்களுக்கு, ‘சொர்க்கம் வாட்களின் நிழல்களில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என (கடிதம்) எழுதினார்கள். மூஸா இப்னு உக்பா(ரலி) அவர்களிடமிருந்து இப்னு அபிஸ் ஸினாத்(ரஹ்) வாயிலாக உவைஸீ(ரஹ்) அவர்களும் இதே போன்று அறிவித்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2819
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” தாவூத்(அலை) அவர்களின் புதல்வர் சுலைமான்(அலை) அவர்கள் (ஒரு முறை), ‘நான் இன்றிரவு (என்னுடைய) நூறு அல்லது தொண்ணூற்றொன்பது – மனைவிகளிடமும் சென்று (உடலுறவு கொண்டு) வருவேன். அவர்களில் ஒவ்வொருத்தியும் இறைவழியில் அறப்போர் புரியும் (குதிரை) வீரன் ஒருவனைப் பெற்றெடுப்பாள்” என்று கூறினார்கள். அவர்களின் தோழா ஒருவர், (அவர்கள் மறந்திருக்கலாம் என்று கருதி) ‘இன்ஷா அல்லாஹ் – அல்லாஹ் நாடினால்.. என்று சொல்லுங்கள்” என்று கூறினார். சுலைமான்(அலை) அவர்கள் ‘இன்ஷா அல்லாஹ்’ என்று (தம் வாயால்) கூறாமலிருந்து விட்டார்கள். எனவே, (அவர்களின் மனைவிமார்களில் ஒரே ஒருவரைத் தவிர வேறெவரும் கர்ப்படையவில்லை. அவரும் ஒரு புஜமுடைய பாதி மனிதரைத் தான் பெற்றெடுத்தார். முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! அவர், ‘இன்ஷா அல்லாஹ் – அல்லாஹ் நாடினால்’ என்று (தம் வாயாலும்) கூறியிருந்தால் (அந்த நூறு மனைவியரும் கர்ப்பமுற்றுப் பிள்ளைகள் பெற, அப்பிள்ளைகள்) அனைவருமே இறைவழியில் அறப்போர் புரிகிற வீரர்களாய் ஆகியிருப்பார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2820
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்களிலேயே அழகானவர்களாகவும் மக்களிலேயே வீரமிக்கவர்களாகவும் மக்களிலேயே தாராள மனமுடையவர்களாகவும் இருந்தார்கள். ‘(ஒரு முறை, மதீனாவின் மீது பகைவர்கள் படையெடுத்து வருகிறார்கள் என்று வதந்தி பரவவே) மதீனாவாசிகள் பீதிக்குள்ளானார்கள். அப்போது அவர்களை நபி(ஸல்) அவர்கள் முந்திச் சென்று, குதிரையில் ஏறி (மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் எதிரியை எதிர்கொள்ளப்) புறப்பட்டார்கள்; மேலும், ‘இந்தக் குதிரையைத் தங்கு தடையின்றி வேகமாக ஓடக் கூடியதாகக் கண்டேன்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2821
ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘ஹுனைன்’ போரிலிருந்து திரும்பி வந்தபோது நான் அவர்களுடன் சென்று கொண்டிருந்தேன். மக்களும் உடன் இருந்தனர். அப்போது (ம்ராம) மக்கள் நபியவர்களைச் சூழ்ந்து (தர்மம்) கேட்கலானார்கள்; ‘சமுரா’ என்னும் (கருவேல) முள் மரம் வரை நபி(ஸல்) அவர்களை நெருக்கித் தள்ளிவிட்டார்கள். நபியவர்களின் சால்வை முள்மரத்தில் சிக்கிக் கொண்டது. எனவே, நபி(ஸல்) அவர்கள் சற்ற நின்று, ‘என் சால்வையை என்னிடம் கொடுங்கள். என்னிடம் இந்த முள்மரங்களின் எண்ணிக்கையில் ஒட்டகங்கள் இருந்திருந்தாலும் கூட அவற்றை உங்களிடையே பங்கிட்டு விட்டிருப்பேன். பிறகு என்னை நீங்கள் கருமியாகவும் காண மாட்டீர்கள்; பொய்யனாகவும் காண மாட்டீர்கள்; கோழையாகவும் காணமாட்டீர்கள்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2822
அம்ர் இப்னு மைமூன் அல் அவ்தீ(ரஹ்) கூறினார். ஆசிரியர் சிறுவர்களுக்குப் பகுதி போதிப்பதைப் போன்று, ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) தம் மக்களுக்குப் பின்வரும் (பிரார்த்தனை) வாசகங்களைக் கற்றுக் கொடுத்தார்கள்; அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஜுப்னி, வஅஊது பிக்க அன் உரத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வஅஊது பிக்க மின் அதாபில் கப்ரி – ‘இறைவா! நான் கோழைத்தனத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்; மூப்பின் மோசமான நிலையை அடைவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்; உலகின் சோதனைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்; புதைகுழியின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று கூறிவிட்டு, ‘இந்த விஷயங்களிலிருந்தெல்லாம் நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்குப் பின்பு பாதுகாப்புக் கோரி வந்தார்கள்” என்றும் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல் மலிக் இப்னு உமைர்(ரஹ்) கூறினார்: இந்த ஹதீஸை நான் முஸ்அப்(ரஹ்) அவர்களிடம் அறிவித்தேன். இது உண்மையானது தான் என அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2823

அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! நான் இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், மூப்பிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப்பின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், புதைகுழியின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று பிரார்த்திப்பது வழக்கம்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2824
சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார். நான் தல்ஹா இப்னு உபைதில்லாஹ்(ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி), மிக்தாத் இப்னு அஸ்வத்(ரலி) மற்றும் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) ஆகியோருடன் தோழமை கொண்டிருந்தேன். அவர்களில் ஒருவரும் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து (நபிமொழி எதையும்) அறிவித்ததை நான் கேட்டதில்லை. ஆனால், தல்ஹா(ரலி) உஹுதுப் போரின் நாள் குறித்து அறிவித்ததை கேட்டிருக்கிறேன்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2825

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில், ‘(மக்காவின்) வெற்றிக்குப் பின்பு (மக்காவிலிருந்து) ஹிஜ்ரத் என்பது கிடையாது; ஆனால், அறப்போரிடுவதும் (அதற்காகவும் பிற நற்செயல்களுக்காகவும்) நாட்டம் கொள்வதும் உண்டு. நீங்கள் அறப்போருக்காகப் புறப்படும்படி (உங்கள் தலைவரின் தரப்பிலிருந்து) கோரப்பட்டால் புறப்பட்டுச் செல்லுங்கள்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2826

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் இரண்டு மனிதர்களைப் பார்த்துச் சிரிக்கிறான். அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரைக் கொன்றுவிடுகிறார். இருவருமே சொர்க்கத்தில் நுழைகிறார்கள். இவர் இறைவழியில் போரிட்டுக் கொல்லப்படுகிறார். பிறகு (அவரைக்) கொன்றவர் பாவமன்னிப்புக் கோர, அதை ஏற்று அவரை அல்லாஹ் மன்னித்து விடுகிறான். பிறகு அவரும் அறப்போரில் (கொல்லப்பட்டு) உயிர்த் தியாகியாகி விடுகிறார். என அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2827
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். கைபர் வெற்றிக்குப் பிறகு அங்கிருந்த இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். ‘இறைத்தூதர் அவர்களே! எனக்கு (போரில் கிடைத்த செல்வத்தில்) ஒரு பங்கு கொடுங்கள்” என்று கேட்டேன். அப்போது ஸயீத் இப்னு ஆஸ் உடைய மகன்களில் ஒருவர் (அபான் என்பவர்), ‘இவருக்குப் பங்கு கொடுக்காதீர்கள், இறைத்தூதர் அவர்களே!” என்று கூறினார். உடனே நான், ‘இவர் (நுஃமான்) இப்னு கவ்கல் அவர்களை (உஹுதுப் போரில்) கொன்றவர்” என்று கூறினேன். அதற்கு ஸயீத் இப்னு ஆஸ் அவர்களின் மகன் (என்னைப் பற்றி), ‘என்ன ஆச்சரியம்! (தன்னுடைய ‘தவ்ஸ்’ குலத்தார் வசிக்கின்ற) ‘ளஃன்’ என்னும் மலை உச்சியிலிருந்து வந்திருக்கும் இந்தக் குழிமுயல் ஒரு முஸ்லிமைக் கொன்றுவிட்டதற்காக என்னைக் குறை சொல்கிறதே! அவரை அல்லாஹ் என் கைகளால் கண்ணியப்படுத்தியுள்ளான். அவர் கைகளால் என்னை அவன் கேவலப்படுத்தி விடவில்லை” என்று கூறினார்.
அறிவிப்பாளர்களில் ஒருவர், ‘நபி(ஸல்) அவர்கள் அபானுக்குப் பங்கு கொடுத்தார்களா, பங்கு கொடுக்கவில்லையா என்று எனக்குத் தெரியாது” என்று கூறுகிறார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2828
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். அபூ தல்ஹா(ரலி), நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (புனிதப்) போர்களில் பங்கெடுத்த காரணத்தால் நோன்பு நோற்காதவராக இருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் இறந்த பின் (இஸ்லாம் பலம் பெற்றுவிட்ட நிலையில்), நான் அபூ தல்ஹா(ரலி) அவர்களை ஈதுல் ஃபித்ருடைய நாளிலும் மற்றும் ஈதுல் அள்ஹாவுடைய நாளிலும் தவிர (வேறெந்த நாளிலும்) நோன்பு நோற்காதவராகக் கண்டதில்லை.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2829
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” உயிர்த் தியாகிகள் ஐந்து பேர்கள் ஆவர்:
1. பிளேக் நோயால் இறந்தவர் 2. வயிற்று(ப் போக்கு போன்ற) வியாதிகளால் இறந்தவர் 3. தண்ணீரில் மூழ்கி இறந்தவர். 4. வீடு, கட்டிடம் ஆகியவை இடிந்து விழும் போது) இடிபாட்டில் சிக்கி இறந்தவர் 5. இறைவழியில் (அறப்போரில் ஈடுபட்டு) இறந்தவர். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2830
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” பிளேக் (போன்ற கொள்ளை) நோயால் இறக்கிற ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உயிர்த்தியாகியின் அந்தஸ்து கிடைக்கும்.என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2831
பராஉ(ரலி) அறிவித்தார். “இறை நம்பிக்கை கொண்டோரில் (அறப்போரில் கலந்து கொள்ளாமல்) தங்கி விடுவோரும், இறைவழியில் தம் உடைமைகளாலும் உயிர்களாலும் அறப்போர் புரிபவர்களும் சம அந்தஸ்து கொண்டவர்களாக முடியாது.” என்னும் வசனம் அருளப்பட்டபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களை அழைத்தார்கள். அவர் அகலமான எலும்பு ஒன்றைக் கொண்டு வந்து, அந்த வசனத்தை எழுதினார். (அருகில் இருந்த கண்பார்வையற்ற) அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி) தம் கண்பார்வையில்லாத நிலை குறித்து முறையிட்டார்கள். அப்போது, ‘தகுந்த காரணமின்றி” என்ற (வாசகம் சேர்ந்த) முழு வசனம் (திருக்குர்ஆன் 04:95) அருளப்பட்டது.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2832
ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாஇதீ(ரலி) அறிவித்தார். நான் மர்வான் இப்னு ஹகமைப் பள்ளிவாசலில் பார்த்தேன். நான் அவரை நோக்கிச் சென்று அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டேன். அப்போது அவர் எங்களுக்கு அறிவித்தார். ஸைத் இப்னு ஸாபித்(ரலி) என்னிடம் தெரிவித்தார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு, ‘இறைநம்பிக்கை கொண்டவர்களில் (அறப்போர் புரியச் செல்லாமல் தங்கள் இருப்பிடத்திலேயே) தங்கிவிட்டவர்களும் இறைவழியில் போரிடச் சென்றவர்களும் சமஅந்தஸ்துடையவர்களாக மாட்டார்கள்” என்னும் (திருக்குர்ஆன் 04:95) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள். அதை நபி(ஸல்) அவர்கள் எனக்கு ஓதிக் காட்டிக் கொண்டிருந்தபோது அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி) வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என்னால் அறப்போரில் கலந்து கொள்ள முடியுமென்றால் நான் அறப்போரில் பங்கெடுத்திருப்பேன்” என்று கூறினார்கள். அவர் கண்பார்வையற்ற மனிதராக இருந்தார். எனவே, அப்போது அல்லாஹ் தன் தூதருக்கு (வேத வெளிப்பாட்டை) அருளினான். நபி(ஸல்) அவர்களின் தொடை அப்போது என் தொடையின் மீதிருந்தது. (வேத வெளிப்பாடு வரத் தொடங்கிய காரணத்தால்) அது என் மீது (கனத்துப் போய்) கடுமையாக (அழுத்த) ஆரம்பித்தது. எந்த அளவிற்கென்றால் நான் என் தொடையின் மீதிருந்தது. (வேத வெளிப்பாடு வரத் தொடங்கிய காரணத்தால்) அது என் மீது (கனத்துப் போய்) கடுமையாக (அழுத்த) ஆரம்பித்தது. எந்த அளவிற்கென்றால் நான் என் தொடை நசுங்கி விடும் என்று அஞ்சினேன். பிறகு அவர்களுக்கு (இந்நிலை நீக்கப்பட்டு) லேசாக்கப்பட்டது. அப்போது அல்லாஹ், ‘தகுந்த காரணமின்றி (தங்கிவிட்டவர்கள்)” என்னும் வாசகத்தை (மேற்கண்ட வசனத்துடன் சேர்த்து) அருளியிருந்தான்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2833
சாலிம் அபுந் நள்ர்(ரஹ்) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) (உமர் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்) அவர்களுக்குக்) கடிதம் எழுதினார்கள். நான் அதைப் படித்தேன். அதில் அவர், ‘பகைவர்களை நீங்கள் சந்தித்தால் பொறுமையுடன் (நிலை குலையாமல்) இருங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என எழுதியிருந்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2834
அனஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அகழ்ப்போரின் போது) அகழ் (வெட்டும் பணி நடக்கும் இடத்தை) நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது முஹாஜிர்களும் அன்சாரிகளும் (கடும்) குளிரான காலை நேரத்தில் (அகழ்) தோண்டிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பணியை அவர்களுக்காகச் செய்திட அவர்களிடம் அடிமை (ஊழியர்)கள் இல்லை. அவர்களுக்கு ஏற்பட்டிருந்த களைப்பையும் பசியையும் கண்டபோது நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! (நிலையான) வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கை தான். எனவே, அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ மன்னிப்பளி” என்று (பாடிய வண்ணம்) கூறினார்கள். இதைக் கேட்ட நபித் தோழர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு பதிலளித்தவண்ணம், ‘நாங்கள் வாழும் காலமெல்லாம் இறைவழியில் அறப்போர் புரிந்து கொண்டிருப்போம்” என்று முஹம்மத்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி தந்துள்ளோம்” என்று (பாடியபடி) கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2835
அனஸ்(ரலி) அறிவித்தார். முஹாஜிர்களும் அன்சாரிகளும் மதீனாவைச் சுற்றிலும் அகழ் தோண்டி மண்ணைத் தம் முதுகுகளின் மீது சுமந்து, (வேறிடத்திற்குக்) கொண்டு செல்லத் தொடங்கினார்கள். அப்போது அவர்கள், ‘நாங்கள் உயிர் வாழும் காலமெல்லாம் அறப்போர் புரிந்து கொண்டிருப்போம் என்று முஹம்மத்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்திருக்கிறோம்” என்று பாடலானார்கள்.
அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! மறுமையின் நன்மையைத் தவிர வேறு நன்மை எதுவும் இல்லை. அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் உன் அருள் வளத்தைக் கொடு” என்று (பாடலிலேயே) பதிலளித்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2836

பராஉ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (அகழ்ப் போருக்காக அகழ் தோண்டிய போது) மண்ணைச் சுமந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது, ‘(இறைவா!) நீ இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம்” என்று (பாடிய படி) கூறிக் கொண்டிருந்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2837
பராஉ(ரலி) அறிவித்தார். அகழ்ப் போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மண்ணைச் சுமந்து கொண்டு செல்வதை பார்த்தேன். மண் அவர்களின் வயிற்றின் வெண்மையை மறைத்(துப் படிந்)திருந்தது. அப்போது அவர்கள் இவ்வாறு (பாடிய வண்ணம்) கூறிக்கொண்டிருந்தார்கள்.
(இறைவா!) நீ இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழி அடைந்திருக்க மாட்டோம்” தருமம் செய்திருக்கவும் மாட்டோம்; தொழுதிருக்கவும் மாட்டோம். நாங்கள் பகைவர்களைச் சந்திக்கும்போது எங்களின் மீது அமைதியை இறக்கியருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இவர்கள் (குறைஷிகள்) எங்களின் மீது அக்கிரமம் புரிந்துவிட்டார்கள். இவர்கள் எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால் அதற்கு நாங்கள் இடம் தர மாட்டோம்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2838
அனஸ்(ரலி) அறிவித்தார். நாங்கள் தபூக் போரிலிருந்து நபி(ஸல்) அவர்களுடன் திரும்பி வந்தோம்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2839
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போரில் (தபூக் போரில்) ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அவர்கள், ‘மதீனாவில் (நம்முடன் வராமல் தங்கிவிட்ட) சிலர் இருக்கின்றனர். நாம் எந்த மலைக் கணவாயையும் பள்ளத்தாக்கையும், அவர்களும் நம்முடன் அதில் (வந்து கொண்டு) இருக்கும் நிலையிலேயே தவிர கடந்து காரணங்களே (புனிதப் போரில் கலந்து கொள்ளவிடாமல்) அவர்களைத் தடுத்தவிட்டன” என்று கூறினார்கள்.
“இந்த நபிமொழியின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள அறிவிப்பாளர் ஹுமைத்(ரஹ்) அவர்களிடம் மூஸா இப்னு அனஸ்(ரஹ்) வழியாக அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பும் உள்ளது. ஆனால், முந்தியதே மிகவும் ஆதாரப் பூர்வமானது” என்று அபூ அப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகிறேன்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2840
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” இறைவழியில் (அறப் போருக்குச் செல்லும்போது) ஒரு நாள் நோன்பு நோற்றவரின் முகத்தை அல்லாஹ் நரக நெருப்பைவிட்டு எழுபது ஆண்டுகள் (பயணத்) தொலைவிற்கு அப்புறப்படுத்தி விடுவான். என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2841
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். “இறைவழியில் (ஏதேனும் ஒரு பொருளின்) இரண்டு ஜோடிகளைச் செலவிட்டவரை சொர்க்க வாசல்களின் காவலர்கள் ஒவ்வொருவரும், ‘இன்னாரே! இங்கே வாரும்’ என்று அழைப்பார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட அபூ பக்ர்(ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! இப்படிப்பட்டவருக்குக் கவலையே கிடையாது (எந்த வாசல் வழியாகவும் அவர் சொர்க்கத்தினுள் நுழையலாம்)” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அவர்களில் நீங்களும் ஒருவர் தாம் என்று நம்புகிறேன்” என்றார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2842
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மிம்பரின் மீது நின்று, ‘எனக்குப் பின், உங்களின் விஷயத்தில் நான் அஞ்சுவதெல்லாம் பூமியின் அருள்வளங்கள் உங்களுக்குத் திறந்துவிடப்பட விருப்பதைத்தான்” என்று கூறிவிட்டு, உலகின் அழகையும் செழிப்பையும் கூறினார்கள். (அவற்றில்) முதலில் ஒன்றைக் கூறி, பிறகு மற்றொன்றை இரண்டாவதாகக் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (செல்வம் என்ற) நன்மை, தீமையைக் கொண்டு வருமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் அவருக்கு பதிலளிக்காமல் மௌனமாக இருந்தார்கள். இதைக் கண்ட நாங்கள், ‘நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) (இறைச்செய்தி) (வேத வெளிப்பாடு) அருளப்படுகிறது” என்று கூறிக் கொண்டோம். மக்கள் அனைவரும் தம் தலைகளில் பறவைகள் அமர்ந்திருப்பது போல் (ஆடாமல் அசையாமல்) மௌனமாக இருந்தனர். பிறகு நபி(ஸல்) அவர்கள் தம் முகத்திலிருந்து (வழிந்த) வியர்வையைத் துடைத்துவிட்டு, ‘சற்று முன்பு கேள்வி கேட்டவர் எங்கே? (செல்வம்) ஒரு நன்மையா?’ என்று மூன்று முறை கூறினார்கள். பிறகு, ‘(உண்மையிலேயே) நன்மை(யாக இருக்கும் ஒரு பொருள்) நன்மையைத் தவிர வேறெதையும் கொண்டு வராது தான். மேலும், நீர்நிலைகளின் கரைகளில் தாவரங்கள் விளையும் போதெல்லாம் அவற்றைக் கால்நடைகள் மேய (அவை நச்சுத் தன்மையுடைய புற்பூண்டுகளையும் சேர்த்துத் தின்பதாலும் அதிகமாகத் தின்று விடுவதாலும்) அவை அவற்றை வயிற்று நோயால் கொன்று விடுகின்றன் அல்லது மரணத்தின் விளிம்புக்கே கொண்டு போகின்றன் பசுமையான (நல்லவகைத்) தாவரங்களை (தாங்கும் அளவுக்கு) உண்பவற்றைத் தவிர அவை அவற்றை வயிறு நிரம்ப உண்டு, சூரியனை (வெப்பத்திற்காக) முன்னோக்கி நிற்கின்றன. பிறகு சாணம் போட்டு சிறுநீர் கழித்துவிட்டு (செரித்தவுடன்) மீண்டும் மேய்கின்றன. (இவ்வாறே) இச்செல்வமும் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். அதை முறைப்படி அடைந்து, அதை அல்லாஹ்வின் பாதையிலும் அனாதைகளுக்காகவும் ஏழை எளியவர்களுக்காகவும் செலவிட்ட முஸ்லிமுக்கு அச்செல்வம் சிறந்த தோழனாகும். அதை முறைப்படி அடையாதவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவன் ஆவான். அச்செல்வம் மறுமை நாளில் அவனுக்கெதிராக சாட்சி சொல்லும்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2843
‘இறைவழியில் போரிடும் ஒருவருக்குப் பயண வசதி செய்து கொக்கிறவரும் புனிதப்போரில் பங்கு கொண்டவராவார். அறப்போர் வீரர் புறப்பட்டுச் சென்ற பின் அவரின் வீட்டாரின் நலத்தைப் பாதுகாக்கிறவரும் புனிதப் போரில் பங்கு கொண்டவராவார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என ஸைத் இப்னு காலித்(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2844
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் (என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்களின் வீட்டைத் தவிர தம் மனைவிமார்களின் வீடுகளல்லாமல் வேறெவருடைய வீட்டிற்கும் (அதிகமாகச்) செல்வதில்லை. அவர்களிடம் அது குறித்துக் கேட்கப்பட்டபோது, ‘நான் அவரிடம் இரக்கம் காட்டுகிறேன். அவரின் சகோதரர் (ஹராம் இப்னு மில்ஹான்(ரலி)) என்னோடு (என் பிரசாரப் படையினரோடு) இருந்தபோது (பிஃரு மவூனா என்னுமிடத்தில்) கொல்லப்பட்டார்” என்றார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2845
மூஸா இப்னு அனஸ்(ரஹ்) யமாமா போரை நினைவு கூர்ந்த வண்ணம் கூறினார். (என் தந்தை) அனஸ் இப்னு மாலிக்(ரலி) ஸாபித் இப்னு கைஸ்(ரலி) அவர்களிடம் வந்தார்கள். ஸாபித் இப்னு கைஸ்(ரலி) தம் தொடைகளைத் திறந்து நறுமணம் பூசிக் கொண்டிருந்தார்கள். அனஸ்(ரலி), ‘என் சிற்றப்பாவே! நீங்கள் (அறப் போருக்கு) ஏன் வரவில்லை?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘இதோ! இப்போது வருகிறேன்” என்று கூறிவிட்டு நறுமணம் பூசத் தொடங்கிவிட்டார்கள். பிறகு வந்து (அறப்போர் வீரர்களுடன்) உட்கார்ந்துவிட்டார்கள். அப்போது மக்கள் தோற்றுப் பின்வாங்கியதாக (என் தந்தை) கூறினார்கள் – (மக்கள் தோற்றுப் பின்வாங்குவதைக் கண்ட) ஸாபித்(ரலி), ‘எனக்கு விலம் வழிவிடுங்கள். நான் எதிரிகளுடன் போரிடுவேன். நாங்கள் அல்லாஹ்வின் தூதருடன் இருந்த பொழுது இப்படிப் பின்வாங்கி (ஓடி)யதில்லை. நீங்கள் உங்கள் எதிரிகளுக்குப் பழக்கப்படுத்தும் இந்த விஷயம் (நீங்கள் பின்வாங்கியோட, அவர்கள் உங்களை விரட்டி வரும் இந்த குணம்) மிக மோசமானது” என்று கூறினார்கள்.
இதை ஹம்மாத்(ரஹ்) அவர்களும் ஸாபித் அல் புனானி(ரஹ்) என்பவர் வாயிலாக அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2846
ஜாபிர்(ரலி) அறிவித்தார். அனைத்துக் குலங்களும் நம்மை எதிர்த்துப் போரிடும் (இந்த அகழ்ப் போர்) நாளில் அந்தக் குலத்தாரின் செய்தியை என்னிடம் (உளவறிந்து) கொண்டு வருபவர் யார்? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஸுபைர்(ரலி), ‘நான் (உளவறிந்து கொண்டு வருகிறேன்)” என்று கூறினார்கள். பிறகு (மீண்டும்) நபி(ஸல்) அவர்கள், ‘அந்தக் குலத்தாரின் செய்தியை என்னிடம் (உளவறிந்து) கொண்டு வருபவர் யார்?’ என்று கேட்க, ஸுபைர்(ரலி), ‘நான்” என்று கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், ‘ஒவ்வோர் இறைத்தூதருக்கும் பிரத்யேகமான தூய தோழர் ஒருவர் உண்டு. என் பிரத்யேகமான தூய தோழர் ஸுபைராவார்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2847
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார். (உளவுப் பணிக்காக) நபி(ஸல்) மக்களை அழைத்தார்கள். ‘அது அகழ்ப் போரின்போது என்று நினைக்கிறேன்” என அறிவிப்பாளர் ஸதகா இப்னு ஃபள்ல்(ரஹ்) கூறினார். – ஸுபைர்(ரலி) (அதற்குத் தாம் தயாராக இருப்பதாக) பதிலளித்தார்கள். மீண்டும் நபி(ஸல்) அவர்கள் மக்களை (எதிரிகளை வேவு பார்த்து வரும்படி) அழைத்தார்கள். (மீண்டும்) ஸுபைர்(ரலி) (அதற்குத் தாம் தாயாராக இருப்பதாக) பதிலளித்தார்கள். மீண்டும் நபி(ஸல்) அவர்கள் மக்களை அழைத்தார்கள்; அப்போதும் ஸுபைர்(ரலி) (தாம் அதற்குத் தயாராக இருப்பதாக) பதிலளித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘ஒவ்வோர் இறைத்தூதருக்கும் பிரத்யேகமான தூய தோழர் ஒருவர் நிச்சயம் உண்டு. என் பிரத்யேகமான தூய தோழர் அவ்வாமின் மகன் ஸுபைராவார்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2848

மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) கூறினார். நான் நபி(ஸல்) அவர்களிடமிருந்து திரும்பினேன். அப்போது எனக்கும் என் நண்பர் ஒருவருக்கும் நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் இருவரும் பயணத்தில் தொழுகை நேரம் வந்தால் பாங்கும் இகாமத்தும் சொல்லுங்கள். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்கு இமாமாக நின்று தொழுகை நடத்தட்டும்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2849
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” (இறைவழியில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள் வரைக்கும் நன்மை உள்ளது. என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2850

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள் வரை நன்மை பிணைக்கப்பட்டிருக்கிறது. என உர்வா இப்னு அபில் ஜஃத்(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2851
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” (இறைவழியில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் பரக்கத் (அருள்வளம்) உள்ளது.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2852

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” (இறைவழியில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் மறுமைநாள் வரை நன்மை பிணைக்கப்பட்டிருக்கிறது. அந்த நன்மை யாதெனில் அந்தக் குதிரையில் ஏறி அறப்போரிடுதல் கிடைக்கும் நன்மையும், போரில் கிடைக்கும் செல்வமும் ஆகும். என உர்வா அல் பாரிகீ(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2853

‘அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டும் அவனுடைய வாக்குறுதியை நம்பியும் இறைவழியில் (போரிடுவதற்காக) ஒரு குதிரையப் கட்டி வைக்கிறவர், அதற்குப் போடுகிற தீனி, புகட்டுகிற தண்ணீர் மற்றும் அதன் சாணம், சிறுநீர் ஆகியவையும் (நன்மைகளாக) அவரின் தட்டில் (வைத்து எடை) போடப்படும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2854
அபூ கதாதா(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் (ஹுதைபிய்யா ஆண்டில் மக்காவுக்குப்) புறப்பட்டேன். (வழியில்) என்னுடைய தோழர்கள் சிலருடன் நான் பின்தங்கி விட்டேன். அவர்கள் இஹ்ராம் அணிந்திருந்தார்கள்; நான் இஹ்ராம் அணிந்திருக்கவில்லை. என் தோழர்கள் நான் பார்ப்பதற்கு முன்னால் ஒரு காட்டுக் கழுதையைப் பார்த்தார்கள். அதைப் பார்த்த பொழுது அதை நானாகப் பார்க்கட்டும் என்றுவிட்டுவிட்டார்கள். (நான் அதைப் பார்த்தவுடன்) ‘ஜராதா’ என்றழைக்கப்பட்ட என்னுடைய குதிரையின் மீது ஏறிக் கொண்டு என் தோழர்களிடம் என்னுடைய சாட்டையை எடுத்துத் தரும்படி கேட்டேன். அவர்கள் (இஹ்ராம் அணிந்திருந்ததால்) அதை (எடுத்துத் தர) மறுத்துவிட்டார்கள். எனவே, நான் அதை எடுத்து (அந்தக் காட்டுக் கழுதையைத்) தாக்கி, அதை (அதன் கால் நரம்புகளில்) வெட்டினேன். பிறகு (அதை அறுத்து) நான் உண்டேன்; அவர்களும் உண்டார்கள். பிறகு (அதை உண்டதற்காக) வருந்தினார்கள். அவர்கள் நபி(ஸல்) அவர்களை அடைந்தபோது நபி(ஸல்) அவர்கள், ‘அதிலிருந்து ஏதேனும் (ஒரு பகுதி இறைச்சி) உங்களிடம் இருக்கிறதா?’ என்று கேட்டார்கள். ‘அதனுடைய கால் எங்களிடம் இருக்கிறது” என்று அவர்கள் பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அதை எடுத்து உண்டார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2855
ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாஇதீ(ரலி) அறிவித்தார். எங்கள் தோட்டத்தில் நபி(ஸல்) அவர்களுக்கு (சொந்தமான) ‘லுஹைஃப்’ என்றழைக்கப்பட்ட குதிரையொன்று இருந்தது.
அபூ அப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகிறேன்; அவர்களில் சிலர் அதன் பெயர் ‘லுஃகைஃப்’ என்று கூறுகிறார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2856
முஆத்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் ‘உஃபைர்’ என்றழைக்கப்பட்ட கழுதையின் மீது அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், ‘முஆதே! அல்லாஹ்வுக்கு மக்களின் மீதுள்ள உரிமை என்ன, மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?’ என்று (என்னிடம்) கேட்டார்கள். நான், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று பதில் கூறினேன். நபி(ஸல்) அவர்கள், ‘மக்களின் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென்றால், அவர்கள் அவனை(யே) வணங்கிட வேண்டும், அவனுக்கு எதனையும் (எவரையும்) இணை கற்பிக்கக் கூடாது என்பதாகும். அல்லாஹ்வின் மீது மக்களுக்குள்ள உரிமை, அவனுக்கு இணை கற்பிக்காமலிருப்பவரை அவன் வேதனைப்படுத்தாமல் இருப்பதாகும்” என்று பதில் கூறினார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! நான் மக்களுக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கட்டுமா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அவர்களுக்கு (இந்த நற்செய்தியை) அறிவிக்காதீர்கள். அவர்கள் இதையே நம்பி (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்து விடுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2857
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். மதீனாவில் (போர் பற்றி) பீதி ஏற்பட்டது. உடனே, நபி(ஸல்) அவர்கள் ‘மன்தூப்’ என்றழைக்கப்பட்ட எங்கள் குதிரை ஒன்றை இரவல் வாங்கினார்கள். (அதில் ஏறிச் சவாரி செய்த பிறகு) ‘பீதி(க்கான காரணம்) எதையும் நாம் பார்க்கவில்லை. மேலும், இந்த குதிரையை தங்கு தடையின்றி வேகமாக ஓடக் கூடியதாக நாம் கண்டோம்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2858
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார். “அபசகுணம் என்பது (எதிலாவது இருக்க முடியும் என்றால்) குதிரை, பெண், வீடு ஆகிய மூன்று விஷயங்களில் மட்டுமே (இருக்க முடியும்)” என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2859
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” அபசகுணம் எதிலாவது இருக்குமானால் பெண்ணிலும் குதிரையிலும், வீட்டிலும் தான் இருக்கும். என ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாஇதீ(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2860
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” குதிரை வைத்திருப்பது மூன்று பேருக்கு மூன்றுவகையான விளைவுகளைத் தருவதாகும். ஒருவருக்கு நற்கூலி பெற்றுத் தருவதாகும். மற்றொரு மனிதருக்குப் (பொருளாதாரப்) பாதுகாப்பளிக்கக் கூடியதாகும். இன்னொரு மனிதருக்குப் பாவச் சுமையாகும். அதை இறைவழியில் பயன்படுத்துவதற்காக பசுமையான ஒரு வெட்டவெளியில் அல்லது ஒரு தோட்டத்தில் ஒரு நீண்ட கயிற்றால் கட்டிவைத்துப் பராமரிக்கும் மனிதருக்கு அது (மறுமையில்) நற்பலனைப் பெற்றுத்தரும். அந்த குதிரை, தன்னைக் கட்டி வைத்திருக்கும் கயிற்றின் நீளத்திற்கேற்ப எந்த அளவிற்குப் பசும்புல் வெளிகளில் அல்லது தோட்டங்களில் மேயுமோ அந்த அளவிற்கு அவருக்கு நற்பலன் கிடைக்கும். அதன் கயிறு துண்டிக்கப்பட்டு, அது ஓரிரு முறை குதித்து (அல்லது ஒன்றிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றால் அதனுடைய (குளம்பின்) சுவடுகள் அளவிற்கும் அதனுடைய விட்டைகளின் அளவிற்கும் அவருக்கு நற்பலன்கள் எழுதப்படும். அந்த குதிரை ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது, அதிலிருந்து தண்ணீர் குடித்தால், அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் அதன் உரிமையாளருக்கு இல்லாமலிருந்தாலும் அதுவும் (அவர் புகட்டியதாகவே கருதப்பட்டு) அவர் செய்த நன்மைகளின் கணக்கில் எழுதப்படும். குதிரை பாவச் சுமையாக மாறும் மனிதன் யாரெனில், அதைப் பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் முஸ்லிம்களுடன் பகைமை பாராட்டுவதற்காகவும் கட்டி வைத்துப் பராமரிக்கும் மனிதனாவான். அது அவன் மீதுள்ள பாவச் சுமையாகும்.
நபி(ஸல்) அவர்களிடம் கழுதைகளின் ஸகாத் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘அவற்றைக் குறித்து எந்த இறைகட்டளையும் எனக்கு அருளப்படவில்லை. ‘எவன் அணுவளவு நன்மை செய்திருந்தானோ அவன் அதனை (அதன் நற்பலனைக்) கண்டு கொள்வான். மேலும், எவன் அணுவளவு தீமை புரிந்திருந்தானோ அவனும் அதனை (அதற்கான தண்டனையைக்) கண்டு கொள்வான்” என்னும் இந்த ஒருங்கிணைந்த, தனித் தன்மை வாய்ந்த திருக்குர்ஆன் வசனத்தைத் தவிர” என்று கூறினார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2861
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் அல்அன்சாரீ(ரலி) அறிவித்தார். நான் ஒரு பயணத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தேன். அறிவிப்பாளர் அபூ அகீல்(ரஹ்), ‘அது போருக்கான பயணமா, உம்ராவுக்கான பயணமாக என்று எனக்குத் தெரியாது” என்று கூறுகிறார்… (திரும்பி வரும் நேரத்தில்) நாங்கள் முன்னேறிச் சென்றபோது நபி(ஸல்) அவர்கள், ‘தன் வீட்டாரிடம் சீக்கிரமாகச் செல்ல விரும்புபவர் சீக்கிரம் செல்லட்டும்” என்று கூறினார்கள். நான் எனக்குச் சொந்தமான – குறை ஏதுமற்ற, கருஞ்சிவப்பு நிறமுள்ள ஒட்டகம் ஒன்றின் மீது அமர்ந்து (சவாரி செய்து) கொண்டிருக்க, நாங்கள் முன்னேறிச் சென்றோம். (மற்ற) மக்கள் என் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள். நான் அவ்வாறு சென்று கொண்டிருக்கையில், திடீரென என் ஒட்டகம் (களைப்பினால்) நின்றுவிட்டது. நபி(ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து, ‘ஜாபிரே! காத்திரு” என்று கூறிவிட்டு, தம் சாட்டையால் அதை அடித்தார்கள். உடனே, ஒட்டகம் தன் இடத்திலிருந்து வேகமாக ஓடியது. நபி(ஸல்) அவர்கள், ‘ஒட்டகத்தை நீ விற்பாயா?’ என்று கேட்க, நான், ‘ஆம் (விற்பேன்)” என்று கேட்க, நான், ‘ஆம் (விற்பேன்)” என்று பதிலளித்தேன். நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது நபி(ஸல்) அவர்கள், தம் தோழர்கள் புடைய சூழ பள்ளிவாசலுக்குள் நுழைந்தார்கள். நான் அவர்களிடம் சென்றேன். ஒட்டகத்தை (கற்கள் பரப்பப்பட்ட) பள்ளிவாசலின் நடைபாதையில் கட்டிவிட்டு, ‘இது தங்களின் ஒட்டகம்” என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள் வெளியே வந்து ஒட்டகத்தை (ஆராயும் வகையில்) சுற்றிவரத் தொடங்கினார்கள். (பிறகு) ‘இந்த ஒட்டகம் நம்முடைய ஒட்டகம்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் (ஐந்து) ஊக்கியாக்கள் தங்கத்தைக் கொடுத்து அனுப்பி வைத்து, ‘இதை ஜாபிரிடம் கொடுங்கள்” என்று கூறினார்கள். பிறகு, ‘(ஒட்டகத்தின்) விலை முழுவதையும் பெற்றுக் கொண்டாயா?’ என்று (என்னிடம்) கேட்டார்கள். நான், ‘ஆம் (பெற்றுக் கொண்டேன்)” என்று பதிலளித்தேன். நபி(ஸல்) அவர்கள், ‘விலையும், ஒட்டகமும் உனக்கே உரியவை (இரண்டையும் நீயே வைத்துக் கொள்)” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2862
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். மதீனாவில் (பகைவர்கள் படையெடுத்து வருவதாகப்) பீதி ஏற்பட்டிருந்தது. எனவே, நபி(ஸல்) அவர்கள் அபூ தல்ஹா(ரலி) அவர்களுக்குச் சொந்தமான ‘மன்தூப்’ என்றழைக்கப்பட்டு வந்த குதிரை ஒன்றை இரவல் வாங்கி அதில் ஏறிச் சவாரி செய்தார்கள். பிறகு (எல்லைகளைப் பார்த்துவிட்டு வந்து), ‘பீதி எதையும் நாம் பார்க்கவில்லை. இந்த குதிரையை(க் காண காரணம்) தங்கு தடையின்றி வேகமாக ஓடக் கூடியதாக நாம் கண்டோம்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2863
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் போரில் கிடைத்த செல்வத்திலிருந்து குதிரைக்கு இரண்டு பங்குகளையும் (அதல்லாமல்) அதன் உரிமையாளருக்கு ஒரு பங்கையும் கொடுத்தார்கள்.
மாலிக்(ரஹ்), ‘அரபு குதிரைகளுக்கும் பிற நாட்டு (ஐரோப்பிய குதிரைகளான) துருக்கிய குதிரைகளுக்கும் போரில் கிடைக்கும் செல்வங்களிலிருந்து பங்கு கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில், அல்லாஹ், ‘குதிரைகளையும், கோவேறுக் கழுதைகளையும், கழுதைகளையும் நீங்கள் பயணம் செய்வதற்காக(வும் அலங்காரமாகவும்) படைத்தான்’ (திருக்குர்ஆன் 16:08) என்று கூறுகிறான். மேலும், ஒரு குதிரையை விட அதிகமானவற்றுக்குப் பங்கு தரக் கூடாது” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2864
அபூ இஸ்ஹாக்(ரஹ்) அறிவித்தார். ஒருவர் பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அவர்களிடம், ‘நீங்கள் அல்லாஹ்வின் தூதரைவிட்டுவிட்டு ஹுனைன் (போர்) அன்று பின்வாங்கி விட்டீர்களா(மே, உண்மை தானா)?’ என்று கேட்டதற்கு அவர்கள், ‘(ஆம், உண்மைதான்.) ஆனால், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்வாங்கிச் செல்லவில்லை. ஹவாஸின் குலத்தார் அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவர்களாயிருந்தார்கள். நாங்கள் அவர்களை (போரில்) சந்தித்தபோது அவர்களின் மீது (கடும்) தாக்குதல் நடத்தினோம். அதனால் அவர்கள் தோற்றுப் போய்விட்டார்கள். எனவே, முஸ்லிம்கள் (போர்க் களத்திலிருந்த) எதிரிகளின் செல்வங்களை எடுத்துச் செல்ல முனைந்தார்கள். எதிரிகள் அம்புகளை எய்து எங்களை எதிர் கொண்டார்கள். இறைத்தூதர் அவர்களோ பின்வாங்கிச் செல்லவில்லை. (நாங்கள் தான் பின் வாங்கி ஓடிவந்து விட்டோம்.) நான் நபி(ஸல்) அவர்களை தம் ‘பைளா’ என்னும் வெண்ணிறக் கோவேறுக் கழுதையில் அமர்ந்திருந்த நிலையில் பார்த்தேன். அபூ சுப்யான்(ரலி) அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘நான் இறைத்தூதராவேன். இது பொய்யல்ல. நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகனாவேன்” என்று (பாடியபடி) கூறிக் கொண்டிருந்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2865
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் காலை அங்கவடியில் நுழைத்து, தம் ஒட்டகம் நிலைக்கு வந்துவிடும்போது துல்ஹுலைஃபா பள்ளிவாசலிலிருந்து (ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து) தல்பியா கூறுவார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2866
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் சேணம் பூட்டப்படாத, திறந்த மேனி கொண்ட ஒரு குதிரையின் மீது ஏறி சவாரி செய்தபடி, அவர்களின் கழுத்தில் வாளொன்று தொங்கிக் கொண்டிருக்க, மதீனா வாசிகளை நோக்கி வந்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2867
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். மதீனாவாசிகள் ஒரு முறை (எதிரிகள் படையெடுத்து வருவதாகக் கேள்விப்பட்ட) பீதிக்குள்ளானார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள் அபூ தல்ஹா(ரலி) அவர்களுக்குச் சொந்தமான, மந்தமாக நடக்கும் குணமுடைய ஒரு குதிரையின் மீது ஏறி சவாரி செய்தார்கள். திரும்பி வந்தபோது, ‘உங்களுடைய இந்த குதிரையை தங்குதடையின்றி வேகமாக ஓடக் கூடியதாகக் நாம் கண்டோம்” என்று கூறினார்கள். அதற்குப் பிறகு அந்த குதிரை வேறெந்த குதிரையும் அதை (வெல்ல முடியாத அளவிற்கு பந்தயத்தில்) முந்த முடியாததாக மாறிவிட்டது.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2868
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மெலிய வைக்கப்பட்ட (பயிற்சியளிக்கப்பட்ட) குதிரைகளை ‘ஹஃப்யா’ எனுமிடத்திலிருந்து ‘சனிய்யத்துல் வதா’ எனும் மலைக் குன்று வரை (வேகப் பந்தயத்தில்) ஓடச் செய்தார்கள். மெலிய வைக்கப்படாத (பயிற்சியளிக்கப்படாத) குதிரைகளை ‘சனிய்யத்துல் வதா’விலிருந்து ‘பனூ ஸுரைக்’ பள்ளிவாசல் வரை (வேகப் பந்தயத்தில்) ஓடச் செய்தார்கள். மெலிய வைக்கப்படாத (பயிற்சியளிக்கப்படாத) குதிரைகளை ‘சனிய்யத்துல் வதா’விலிருந்து ‘பனூ ஸுரைக்’ பள்ளிவாசல் வரை (வேகப் பந்தயத்தில்) ஓடச் செய்தார்கள். நானும் பந்தயத்தில் (என் குதிரையுடன்) கலந்து கொண்டேன்.
அறிவிப்பாளர் சுஃப்யான் சவ்ரீ(ரஹ்), ‘ஹஃப்யாவுக்கும் சனிய்யத்துல் வதாவுக்கும் இடையே ஐந்து அல்லது ஆறு மைல்கள் தூரம் இருக்கும். சனிய்யத்துல் வதாவுக்கும் பனூ ஸுரைக் பள்ளிவாசலுக்கும் இடையே பனூ ஸுரைக் பள்ளிவாசலுக்கும் இடையே ஒரு மைல் தூரம் இருக்கும்” என்று கூறுகிறார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2869
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மெலிய வைக்கப்படாத (பயிற்சி பெறாத) குதிரைகளுக்கிடையே பந்தயம் வைத்தார்கள். அவற்றின் (பந்தய) தூரம் ‘சனிய்யத்துல் வதா’விலிருந்து பனூ ஸுரைக் குலத்தாரின் பள்ளிவாசல் வரை(யுள்ள தொலைவாக) இருந்தது. நானும் இத்தகைய குதிரைகளுக்கிடையேயான பந்தயங்களில் கலந்து கொள்வேன்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2870
நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார். “இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மெலிய வைக்கப்பட்ட (பயிற்சி அளிக்கப்பட்ட) குதிரைகளுக்கிடையே பந்தயம் வைத்தார்கள். அவற்றை ‘ஹஃப்யா’விலிருந்து அனுப்பினார்கள். அவற்றின் (பந்தய) எல்லை ‘சனிய்யத்துல் வதா’வாக இருந்தது” என்று இப்னு உமர்(ரலி) கூறினார்.
நான் (அறிவிப்பாளர்) மூஸா இப்னு உக்பா(ரஹ்) அவர்களிடம், ‘அவ்விரண்டுக்குமிடையே எவ்வளவு தொலைவிலிருந்தது?’ என்று கேட்டேன். அவர், ‘ஆறு அல்லது ஏழு மைல்கள் தொலைவிலிருந்து” என்று பதிலளித்தார்” என (மற்றோர் அறிவிப்பாளரான) அபூ இஸ்ஹாக்(ரஹ்) கூறினார்.
தொடர்ந்து நாஃபிஉ(ரஹ்) கூறினார். “நபி(ஸல்) அவர்கள் மெலிய வைக்கப்படாத (பயிற்சி பெறாத) குதிரைகளுக்கிடையேயும் பந்தயம் வைத்தார்கள். அவற்றை சனிய்யத்துல் வதாவிலிருந்து அனுப்பினார்கள். அவற்றின் (பந்தய) எல்லை பனூ ஸுரைக் குலத்தாரின் பள்ளிவாசலாக இருந்தது” என்று இப்னு உமர்(ரலி) கூறினார். மேலும், இப்னு உமர்(ரலி) அவர்களும் (தம் குதிரையுடன்) பந்தயத்தில் பங்கெடுத்தார்கள்.
“நான் மூஸா இப்னு உக்பா(ரஹ்) அவர்களிடம், ‘அவ்விரண்டுக்குமிடையே எவ்வளவு தொலைவிருந்தது?’ என்று கேட்க, ‘சுமார் ஒரு மைல்’ என்று அவர்கள் பதிலளித்தார்கள்” என அபூ இஸ்ஹாக்(ரஹ்) கூறினார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2871
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் ஒட்டகம் ‘அள்பா’ என்று அழைக்கப்பட்டு வந்தது.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2872

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் ‘அள்பா’ என்று அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது. அது பந்தயத்தில் எவரும் அதை முந்த முடியாத (அளவுக்கு விரைவாக ஓடக் கூடிய)தாக இருந்தது. அப்போது கிராமவாசி ஒருவர் ஆறு வயதுக்குட்பட்ட ஒட்டகம் ஒன்றின் மீது வந்தார். அது நபி(ஸல்) அவர்களின் ஒட்டகத்தை முந்தியது. இது முஸ்லிம்களுக்கு மனவேதனையை அளித்த. இதையறிந்தபோது நபி(ஸல்) அவர்கள், ‘உலகில் உயர்ந்து விடுகிற பொருள் எதுவாயினும் (ஒருநாள்) அதைக் கீழே கொண்டு வருவதே அல்லாஹ்வின் நியதியாகும்” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸை அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து ஸாபித்(ரஹ்) அவர்களும், அவர்களிடமிருந்து ஹம்மாத்(ரஹ்) அவர்களும், அவர்களிடமிருந்து மூஸா(ரஹ்) அவர்களும் நீண்டதாக அறிவித்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2873
அம்ர் இப்னு ஹாரிஸ்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் (தம் மரணத்தின் போது) தம் வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையையும், தம் ஆயுதத்தையும், தருமமாக விட்டுச் சென்ற ஒரு நிலத்தையும் தவிர வேறெதையும்விட்டுச் செல்லவில்லை.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2874
பராஉ(ரலி) அறிவித்தார். என்னிடம் ஒருவர், ‘அபூ உமாராவே! ஹுனைன் போரின்போது நீங்கள் பின்வாங்கிச் சென்று விட்டீர்களே?’ என்று கேட்டார். நான், ‘இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் பின்வாங்கிச் செல்லவில்லை. ஆனால், அவசர புத்தியுள்ள மக்கள் தான் பின்வாங்கிச் சென்றார்கள். எனவே, ஹவாஸின் குலத்தார் அவர்களை அம்புகளால் தாக்கினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையின் மீது சவாரி செய்து கொண்டிருந்தார்கள். அபூ சுஃப்யான் இப்னு ஹாரிஸ்(ரலி) அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நான் உண்மையான இறைதூதரே. இதில் பொய் எதுவும் இல்லை. நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகனாவேன்” என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2875
இறைநம்பிக்கையாளர்களின் தாயார் ஆயிஷா(ரலி) கூறினார். நான் நபி(ஸல்) அவர்களிடம் அறப்போரில் ஈடுபட அனுமதி கேட்டேன். அதற்கு அவர்கள், ‘(பெண்களாகிய) உங்கள் ஜிஹாத் ஹஜ் செய்வது தான்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2876
இறைநம்பிக்கையாளர்களின் தாயார், ஆயிஷா(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்களிடம் அவர்களின் மனைவிமார்கள் அறப்போர் குறித்து (ஜிஹாதில் ஈடுபட அனுமதியளிக்கும்படி) கேட்டார்கள். அதற்கவர்கள், ‘ஹஜ் செய்வது (உங்களுக்கு) சிறந்த ஜிஹாத் ஆகும்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2877-2878

அனஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மில்ஹானின் மகளான உம்மு ஹராம்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கு சாய்ந்து அமர்ந்து (உறங்கிக்) கொண்டிருந்து, பிறகு (விழித்தெழுந்து) சிரித்தார்கள். உம்முஹராம்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! ஏன் சிரிக்கிறீர்கள்?’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தில் சிலர் இறைவழியில் (போரிடுவதற்காகக்) கடலில் பயணம் செய்வார்கள். அவர்களின் நிலை, கட்டில்களில் (சாய்ந்து) வீற்றிருக்கும் அரசர்களைப் போன்றதாகும்” என்று கூறினார்கள். அதற்கு உம்மு ஹராம்(ரலி), ‘என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! இவரையும் அவர்களில் ஒருவராக ஆக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். பிறகு மீண்டும் அவ்வாறே (சாய்ந்து அமர்ந்தவாறு உறங்கிக் கொண்டிருந்துவிட்டு பிறகு விழித்தெழுந்து) சிரித்தார்கள். முன்பு கேட்டதைப் போன்றே, ‘ஏன் சிரிக்கிறீர்கள்?’ என்று நபி(ஸல்) அவர்களிடம் உம்மு ஹராம்(ரலி) கேட்டார்கள். நபி(ஸல்) அவர்களும் முன்பு (பதிலளித்ததைப்) போன்றே பதிலளித்தார்கள். அதைக் கேட்டு உம்மு ஹராம்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம், ‘என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் (கடல் பயணம் செய்து அறப்போருக்கு) முதலாவதாகச் செல்பவர்களில் ஒருவராக இருப்பீர்கள். பிற்பாடு செல்பவர்களில் ஒருவராக இருக்க மாட்டீர்கள்” என்று கூறினார்கள். பிறகு, உம்மு ஹராம்(ரலி) உபாதா இப்னு ஸாமித்(ரலி) அவர்களை மணந்தார்கள். பிறகு கரழா இப்னு அப்தி அம்ர் என்பவரின் மகளுடன் (அறப் போருக்காகக்) கடல் பயணம் செய்தார்கள். அவர்கள் (போர் முடிந்து) புறப்பட்டபோது தம் வாகனப் பிராணியின் மீது ஏற, அது அவர்களைக் கீழே தள்ளிவிட்டது. அவர்கள் அதிலிருந்து விழுந்து இறந்துவிட்டார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2879
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் வெளியே (பயணம்) செல்ல நாடினால் தம் மனைவியரிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டு எவருடைய பெயர் வருகிறதோ அவரை (மட்டும்) அழைத்துக் கொண்டு செல்வார்கள். இவ்வாறே, அவர்கள் (புரிந்த) ஒரு புனிதப் போருக்குச் சென்றபோது (அவர்களின் மனைவிமார்களாகிய) எங்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அதில் என்னுடைய பெயர் வரவே, நான் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டேன். இது (பெண்கள் அந்நிய ஆண்களிடமிருந்து தம்மைத் திரையிட்டு மறைத்துக் கொள்ள வேண்டும் என்கிற) ‘ஹிஜாப்’ சட்டம் அருளப்பட்ட பின்னால் நடந்தது.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2880
அனஸ்(ரலி) அறிவித்தார். உஹுதுப் போரின்போது மக்கள் நபி(ஸல்) அவர்களைவிட்டுவிட்டுத் தோல்வியுற்று (பின்வாங்கிச்) சென்றபோது நான் ஆயிஷா பின்த்து அபீ பக்ர்(ரலி) அவர்களையும் உம்மு சுலைம்(ரலி) அவர்களையும் கண்டேன். அப்போது அவர்கள் இருவரும் (தண்ணீர் நிரம்பிய) தோல் பைகளைத் தம் முதுகுகளில் சுமந்து கொண்டு வேக வேகமாக நடந்து (சென்று காயமுற்று வீழ்ந்து கிடக்கும்) மக்களின் வாய்களில் தண்ணீரை ஊற்றுவதும் பிறகு (தண்ணீர் காலியானதும்) திரும்பிச் சென்று அவற்றை நிரப்பிக் கொண்டு, மீண்டும் வந்து மக்களின் வாய்களில் தண்ணீரை ஊற்றுவதுமாக இருந்தார்கள். நான் அவர்களின் கால்களில் அணிந்திருந்த தண்டைகளைப் பார்க்கும் அளவிற்கு வரிந்து கட்டிக் கொண்டு (மும்முரமாகப்) பணிபுரிந்து கொண்டிருந்தார்கள்.
“தோல் பைகளைத் தம் முதுகுகளில் சுமந்து வேகமாக நடந்து சென்று” என்பதற்கு பதிலாக, ‘தோல் பைகளைத் தம் முதுகுகளில் சுமந்து எடுத்துச் சென்று” என்று மற்றோர் அறிவிப்பாளர் கூறினார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2881
சஅலபா இப்னு அபீ மாலிக்(ரலி) கூறினார். உமர் இப்னு கத்தாப்(ரலி) (பட்டால் அல்லது கம்பளியால் ஆன) கீழங்கிகளை மதீனா நகரப் பெண்களிடையே பங்கிட்டார்கள். அப்போது அதில் தரமானதொரு கீழங்கி மீதமாயிற்று. அதைக் கண்டு, அவர்களிடமிருந்த சிலர், ‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! இதைஉங்களிடமிருக்கும் அல்லாஹ்வின் தூதருடைய மகளுக்குக் கொடுங்கள்” என்று கூறினார்கள் – அவர்கள் அலீ(ரலி) அவர்களின் மகளார் உம்மு குல்தூம் அவர்களைக் கருத்தில் கொண்டே இப்படிக் கூறினார்கள். (உமர்(ரலி), ‘உம்மு சுலைத்(ரலி) தாம் இதற்கு மிகவும் அருகதையுடையவர்கள். உம்மு சுலைத்(ரலி), இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்த அன்சாரிப் பெண்களில் ஒருவராவார்” என்று கூறிவிட்டு, ‘அவர் உஹுதுப் போரின்போது எங்களுக்காக (இஸ்லாமிய வீரர்களுக்காக) தோல் பைகளைச் சுமந்து நீர் புகட்டுபவராய் இருந்தார்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2882

ருபய்யிஉ பின்த்து முஅவ்வித்(ரலி) கூறினார். (பெண்களாகிய) நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (புனிதப் போரில்) இருந்தோம். (புனிதப் போரில்) காயமுற்றவர்களுக்கு நீர் புகட்டியும் மருந்திட்டும் வந்தோம். கொல்லப்பட்டவர்களை (போர்க் களத்திலிருந்து) மதீனாவிற்கு எடுத்துச் சென்று கொண்டும் இருந்தோம்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2883
ருபய்யிஉ பின்த்து முஅவ்வித்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புனிதப் போரில் கலந்து கொள்வோம்; அப்போது (போரில் காயமுற்ற) மக்களுக்கு நீர் புகட்டுவோம்; அவர்களுக்குப் பணிவிடைகள் செய்வோம்; கொல்லப்பட்டவர்களையும் காயமுற்றவர்களையும் மதீனாவுக்குத் திரும்பக் கொண்டு வருவோம்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2884

அபூ மூஸா(ரலி) அறிவித்தார். என் தந்தையின் சகோதரர் அபூ ஆமிர்(ரலி) அவர்களின் முழங்காலருகில் அம்பு துளைத்து (அதிலேயே தங்கி) விட்டிருந்தது. நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் (என்னிடம்), ‘இந்த அம்பைப் பிடுங்கி விடு” என்று கூறினார்கள். நான் அதைப் பிடுங்கி விட்டேன். அதிலிருந்து தண்ணீர் கொட்டியது. பிறகு நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன்; அவர்களுக்கு நடந்ததைத் தெரிவித்தேன். (அதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! உபைத் அபூ அமீருக்கு மன்னிப்பளி” என்று பிரார்த்தித்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2885

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த பின், முதலில் இரவில் கண் விழித்திருந்தார்கள். மதீனாவுக்கு வந்து சிறிது காலம் கழித்து, ‘என் தோழர்களிடையே எனக்கு இரவில் காவல் காப்பதற்கு ஏற்ற மனிதர் ஒருவர் இருந்தால் நன்றாயிருக்குமே” என்று கூறினார்கள். அப்போது நாங்கள் ஆயுதத்தின் ஓசையைக் கேட்டோம். நபி(ஸல்) அவர்கள், ‘யாரது?’ என்று கேட்டார்கள். வந்தவர், ‘நானே ஸஅத் இப்னு அபீ வக்காஸ். தங்களுக்குக் காவல் இருப்பதற்காக வந்துள்ளேன்” என்று கூறினார். பிறகு நபி(ஸல்) அவர்கள் (நிம்மதியாக) உறங்கினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2886
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” பொற்காசு, வெள்ளிக்காசு, பூம்பட்டுத் துணி, சதுர கருப்புத் துணி ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்ட மனிதன் துர்பாக்கியவானாவான். அவனுக்கு (செல்வம்) கிடைத்தால் திருப்தியடைவான்; செல்வம் வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2887
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். பொற்காசின் அடிமையும், வெள்ளிக் காசின் அடிமையும், கருப்புத் துணியின் அடிமையும் துர்பாக்கியவான் ஆவான். அவனுக்கு (செல்வம்) கிடைத்தால் திருப்தியடைவான்; செல்வம் வழங்கப்படாவிட்டால் கோபமடைவான். அவன் துர்பாக்கியவானாகட்டும். அவன் மீண்டும் மீண்டும் சறுக்கி விழட்டும். அவனுக்கு முள் தைத்துவிட்டால் அதை எடுக்க ஆளில்லாமல் தவிக்கட்டும். இறைவழியில் (போர் புரிந்திட) தன் குதிரையின் கடிவாளத்தைக் கையில் பிடித்துக் கொண்டு, பரட்டைத் தலையுடன் இரண்டு கால்களும் புழுதியடைந்தவனாகச் செல்கிற அடியானுக்கு சொர்க்கம் கிடைக்கட்டும். (அவன் எத்தகையவன் என்றால்) அவன் (படையின் முன்னணிக்) காவல் அணியில் நியமிக்கப்பட்டிருப்பானாயின் அதிலேயே (ஆட்சேபணை ஏதுமின்றி) இருப்பான்; பின்னணிப் படையில் நியமிக்கப்பட்டிருப்பானாயின் அதிலும் (எந்த முணுமுணுப்புமின்றி திருப்தியுடன்) இருப்பான். அவன் (யாரையும் சந்திக்க) அனுமதி கேட்டால் அவனுக்கு அனுமதி தரப்படாது; அவன் பரிந்துரை செய்தால் அது (மக்களால்) ஏற்கப்படாது. (அந்த அளவிற்கு சாமானியனாக, எளியவனாகக் கருதப்படுவான்.)

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2889

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். கைபர் போரின்போது நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டே சென்றேன். நபி(ஸல்) அவர்கள் திரும்பி வந்தபோது அவர்களுக்கு உஹுது மலை தென்பட்டதும், ‘இது எத்தகைய மலையென்றால் இது நம்மை நேசிக்கிறது; நாம் இதை நேசிக்கிறோம்; நாம் இதை நேசிக்கிறோம்” என்று கூறினார்கள். பின்னர், மதீனாவை நோக்கித் தம் கரத்தால் சைகை செய்து, ‘இறைவா! இப்ராஹீம்(அலை) அவர்கள் மக்காவைப் புனிதமானதாக அறிவித்ததைப் போன்று, நான் (இந்த) இருமலைகளுக்கிடையேயுள்ள நிலப் பகுதியை (மதீனாவை) புனிதமானதாக அறிவிக்கிறேன். இறைவா! எங்கள் (அளவைகளான) ஸாவுகளிலும், முத்துகளிலும் எங்களுக்கு பரக்கத்தைக் கொடு” என்று பிரார்த்தித்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2890

அனஸ்(ரலி) அறிவித்தார். (ஒரு பயணத்தில்) நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். (அன்று) தம் ஆடையால் தமக்குத் தாமே நிழலிட்டுக் கொண்டிருந்தவரே எங்களில் அதிக நிழல் பெற்றவராய் இருந்தார். (அந்த அளவுக்கு வெயில் கடுமையாக இருந்தது; ஒதுங்க இடமில்லை.) நோன்பு நோற்றவர்கள் எந்த வேலையும் செய்யவில்லை. நோன்பு நோற்காமல்விட்டுவிட்டவர்கள் வாகனங்களை (ஒட்டகங்களை) எழுப்பி, (தண்ணீர் புகட்டியும் தீனி போட்டும்) வேலை செய்தார்கள்; நோன்பாளிகளுக்கு (ஓய்வெடுக்க கூடாரம் அடித்தும்) பணி புரிந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இன்று நோன்பை (நோற்காமல்)விட்டவர்கள் மறுமையில் (அதிக) நன்மையைக் கொண்டு சென்றார்கள்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2891
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” மனிதனின் (உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது கடமையாகும். ஒருவருக்கு அவரின் வாகனத்தில் ஏறிட உதவுவது, அல்லது அவரின் வாகனத்தின் மீது அவரின் மூட்டை முடிச்சுகளை ஏற்றி வைப்பது கூட தர்மமாகும். நல்ல சொல்லும் தொழுகைக்கு நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும், (வழியறியாமல் தடுமாறும் ஒருவருக்குச் சரியான) பாதையை அறிவித்துத் தருவதும் தர்மமாகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2892
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” இறைவழியில் ஒருந்hள் (நாட்டின்) எல்லையைக் காவல் புரிவது உலகத்தை விடவும் அதன் மீதிருப்பவற்றை விடவும் சிறந்ததாகும். உங்களில் ஒருவருக்கு சொர்க்கத்தில், ஒரு சாட்டையை வைக்குமளவிற்குள்ள இடம் கிடைப்பது உலகத்தை விடவும் அதன் மீதிருப்பவற்றை விடவும் சிறந்ததாகும். ஓர் அடியான் இறைவழியில் செல்கிற மாலை நேரம் அல்லது காலை நேரமானது உலகத்தை விடவும் அதன் மீதிருப்பவற்றை விடவும் சிறந்ததாகும். என ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாஇதீ(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2893
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை) அபூ தல்ஹா(ரலி) அவர்களிடம், ‘உங்கள் சிறுவர்களில் ஒரு சிறுவனை எனக்குப் பணிவிடை புரிவதற்காகத் தேடுங்கள்; நான் கைபருக்குப் புறப்பட வேண்டும்” என்று கட்டளையிட்டார்கள். எனவே, அபூ தல்ஹா(ரலி) என்னை (தம் வாகனத்தில்) பின்னால் அமர வைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். அப்போது நான் பருவ வயதை நெருங்கி விட்டிருந்த சிறுவனாக இருந்தேன். இறைத்தூதர்(ஸல்) எங்கேனும் தங்கினால் அவர்களுக்கு நான் பணிவிடைகள் புரிந்து வந்தேன். அப்போது அவர்கள், ‘இறைவா! துக்கத்திலிருந்தும், கவலையிலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கஞ்சத் தனத்திலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், பிற மனிதர்களின் அடக்கு முறையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று பிரார்த்திப்பதை அதிகமாகச் செவியுற்று வந்தேன். பிறகு நாங்கள் கைபருக்குச் சென்று சேர்ந்தோம். நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் (கமூஸ்) கோட்டையின் வெற்றியை அளித்தபோது, ஸஃபிய்யா பின்த்து ஹுயை இப்னி அக்தப் அவர்களின் அழகு பற்றி அவர்களுக்குக் கூறப்பட்டது. அப்போது (நடந்த போரில்) ஸஃபிய்யாவின் கணவர் கொல்லப்பட்டிருந்தார். அவர் புதுமணப் பெண்ணாகவும் இருந்தார். நபி(ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவைத் தமக்காக (விரும்பித்) தேர்ந்தெடுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். நாங்கள், ‘சத்துஸ் ஸஹ்பா’ எனுமிடத்தை அடைந்தவுடன் ஸஃபிய்யா(ரலி) மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்தார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள் அவருடன் (உறவு கொண்டு) வீடு கூடினார்கள். பிறகு, சிறிய பாத்திரம் ஒன்றில் (பேரீச்சம் பழம், நெய், பாலாடை ஆகியவற்றைக் கலந்து) ‘ஹைஸ்’ என்ற உணவைத் தயாரித்தார்கள். பிறகு, ‘உன்னைச் சுற்றிலுமிருப்பவர்களுக்கு (மண் விருந்துக்கு வரும்படி) அறிவி” என்று உத்தரவிட்டார்கள். அது ஸஃபிய்யா(ரலி) அவர்களை மணந்ததற்காக நபி(ஸல்) அவர்கள் அறித்த மணவிருந்தாக அமைந்தது. பின்னர் நாங்கள் மதீனாவுக்குப் புறப்பட்டோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் (வாகனத்தில்) தமக்குப் பின்னால் போர்வை (போன்ற ஓர் அங்கி)யால் ஸஃபிய்யா(ரலி) அவர்களைச் சுற்றிலும் திரையமைத்தார்கள். பிறகு, தம் ஒட்டகத்தின் அருகே அமர்ந்து தம் முழங்காலை வைத்தார்கள். நபி(ஸல்) அவர்களின் முழங்காலின் மீது தம் காலை வைத்து ஸஃபிய்யா(ரலி) (ஒட்டகத்தில்) ஏறினார்கள். நாங்கள் மதீனாவை நெருங்கியபோது நபி(ஸல்) அவர்கள் உஹுது மலையைப் பார்த்து, ‘இது நம்மை நேசிக்கிற மலை; நாமும் இதை நேசிக்கிறோம்” என்று கூறினார்கள். பிறகு மதீனாவின் பக்கம் பார்த்து, ‘இறைவா! இப்ராஹீம்(அலை) அவர்கள் மக்காவைப் புனிதமாக அறிவித்ததைப் போன்று இந்த இரண்டு மலைகளுக்கிடையிலுள்ள நிலப்பகுதியை (மதீனாவை) புனிதமானதாக அறிவிக்கிறேன். இறைவா! மதீனா வாசிகளின் முத்து, அவர்களின் ஸாவு ஆகியவற்றில் பரக்கத்தை அளிப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2894-2895
அனஸ்(ரலி) அறிவித்தார். ஒருநாள் நபி(ஸல்) அவர்கள் உம்மு ஹராம்(ரலி) அவர்களின் வீட்டில் மதிய ஓய்வு எடுத்தார்கள். (உறக்கத்திலிருந்து) சிரித்தபடியே விழித்தார்கள். உம்மு ஹராம்(ரலி), ‘அல்லாய்வின் தூதரே! ஏன் சிரிக்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். ‘என் சமுதாயத்தில் ஒரு கூட்டத்தினர் அரசர்கள் கட்டில்களில் அமர்ந்திருப்பதைப் போல் கடல் பயணம் செய்வதை (கனவில்) கண்டு நான் வியந்தேன். (எனவேதான் சிரிக்கிறேன்)” என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அதற்கு உம்மு ஹராம்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! அவர்களில் ஒருத்தியாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் நீங்கள் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் அவர்களில் ஒருவர் தாம்” என்று கூறினார்கள். மீண்டும் உறங்கி, சிரித்தபடியே விழித்தெழுந்தார்கள். (முன்பு உறங்கியதைப் போன்றே உறங்கி விழித்தெழுந்து) முன்பு கூறியதைப் போன்றே இரண்டு அல்லது மூன்று முறை கூறினார்கள். உம்மு ஹராம்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூற, நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் (புனிதப் போருக்காகப் பயணம் செய்யும்) முதல் (படைக்) குழுவினரில் ஒருவராவீர்கள்” என்று கூறினார்கள். பிறகு உம்மு ஹராம்(ரலி) மணந்தார்கள். பின்னர், அவர்களைத் தம்முடன் அழைத்துக் கொண்டு (கடல் பயணம் செய்து) புனிதப் போருக்குச் சென்றார்கள். திரும்பி வரும்போது உம்மு ஹராம்(ரலி) ஏறி அமர்வதற்காக வாகனம் (கோவேறுக் கழுதை) ஒன்று அருகில் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள் (அதிலிருந்து தவறிக்) கீழே விழுந்து அவர்களின் கழுத்து முறிந்துவிட்டது. (அதனால் அவர்கள் இறந்துவிட்டார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2896
முஸ்அப் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். (என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி), (தம் வீரச் செயல்களின் காரணத்தினால்) தமக்குப் பிறரை விட ஒரு சிறப்பு இருக்க வேண்டும் (போரில் கிடைக்கும் செல்வத்தில் அதிகப் பங்கு கிடைக்க வேண்டும்) எனக் கருதினார்கள். எனவே நபி(ஸல்) அவர்கள், ‘உங்களிடையேயுள்ள பலவீனர்களின் (சாமானிய மக்களின்) பொருட்டால் தான் உங்களுக்கு (இறைவனின் தரப்பிலிருந்து) உதவி கிட்டுகிறது” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2897
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” மக்களில் ஒரு குழுவினர் புனிதப் போர் புரியச் செல்கிற ஒரு காலம் வரும் அப்போது, ‘நபி(ஸல்) அவர்களிடம் தோழமை கொண்டிருந்தவர்கள் எவரும் உங்களிடையே இருக்கிறார்களா?’ என்று கேட்கப்படும். அதற்கு, ‘ஆம் (இருக்கிறார்கள்)” என்று பதிலளிக்கப்படும். உடனே அவர்களக்கு வெற்றியளிக்கப்படும். பிறகு, இன்னொரு காலம் வரும். (அப்போதும் புனிதப் போர் புரிய ஒரு குழுவினர் செல்வார்கள்.) அப்போது, ‘நபி(ஸல்) அவர்களின் தோழர்களுடன் நட்பு கொண்டவர்கள் உங்களிடையே இருக்கிறார்களா?’ என்று கேட்கப்படும். அதற்கு, ‘ஆம் (இருக்கிறார்கள்)” என்று பதிலளிக்கப்படும். உடனே (அவர்களுக்கு) வெற்றியளிக்கப்படும். பிறகு இன்னுமொரு காலம் வரும். (அப்போதும் ஒரு குழுவினர் புனிதப் போருக்காகச் செல்வார்கள்.) அப்போது, ‘நபித் தோழர்களின் தோழருடன் நட்பு கொண்டவர்கள் உங்களிடையே இருக்கிறார்களா?’ என்று கேட்கப்படும். அதற்கு, ‘ஆம் (இருக்கிறார்கள்)” என்று பதிலளிக்கப்படும். உடனே அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும். என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2898
ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாஇதீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களும் இணைவைப்போரும் (கைபர் போர்கள்ளத்தில்) சந்தித்துப் போரிட்டனர். நபியவர்கள் தம் படையினர் பக்கம் சென்று விட மற்றவர்களும் தம் படையின் பக்கம் சென்றுவிட்டனர். அப்போது நபி(ஸல்) அவர்களின் தோழர்களுக்கிடையே ஒருவர் இருந்தார். அவர் (எதிரிகளில்) போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பவர், படையிலிருந்து விலம்ப் போய் தனியே சென்றவர் (அதாவது எதிர்த்து நிற்பவர், பணிந்து செல்பவர் என்று) எவரையும் நபித் தோழர்களுக்குவிட்டு வைக்காமல் அனைவரையும் தம் வாளால் வெட்டியபடி துரத்திச் சென்று (மூர்க்கமாகப் போரிட்டுக்) கொண்டிருந்தார். (அவரின் துணிச்சலான போரைக் கண்ட) நபித்தோழர்கள், ‘இந்த மனிதர் போரிட்டதைப் போல் இன்று நம்மில் வேறெவரும் தேவை தீரப் போரிடவில்லை” என்று (வியந்து) கூறினார்கள். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், ‘அவரோ நரகவாசியாவார்” என்று கூறினார்கள். அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர், ‘நான் அவருடன் இருக்கிறேன் (அவர் என்ன சொல்லிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார். அவர் நின்ற போதெல்லாம் இவரும் நின்றார். அவர் விரைந்தால் இவரும் விரைந்தார். (ஒரு கட்டத்தில்) அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அதனால் சீக்கிரமாக மரணித்து விட விரும்பி, தன் வாளின் (கைப்பிடியுள்ள) முனையை பூமியில் ஊன்றி, அதன் கூரான முனையைத் தன் இரண்டு மார்புகளுக்கு இடையே வைத்து, அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்தார். (இதை உடனிருந்து கண்காணித்துவிட்டு) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, ‘தாங்கள் இறைத்தூதர் தாம் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன்” என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘என்ன விஷயம்?’ என்று கேட்டார்கள். அவர், ‘சற்று முன்பு தாங்கள் ஒருவரைப் பற்றி ‘அவர் நரகவாசி’ என்று கூறிறீர்கள் அல்லவா? அதைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். நான் (மக்களிடம்), ‘உங்களுக்காக (அவரின் நிலைகளை அறிந்து வர) நான் அவருடன் போய் வருகிறேன்” என்று கூறிவிட்டு, அவரைத் தேடிப் புறப்பட்டேன். அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். உடனே, அவர் சீக்கிரமாக மரணமடைய விரும்பி, வாளின் பிடிமுனையை பூமியில் நட்டு, அதன் கூர்முனையைத் தன் இரண்டு மார்புகளுக்கிடையே வைத்து, அதன் மீது தன்னை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்தார்” என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘மக்களின் வெளிப் பார்வைக்கு ஒருவர் சொர்க்கத்திற்குரிய (நற்) செயலைச் செய்து வருவார். ஆனால், அவர் (உண்மையில்) நரகவாசியாக இருப்பார். மக்களின் வெளிப்பார்வைக்கு ஒருவர் நரகத்திற்குரிய செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார்” என்றார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2899

ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார். பனூ அஸ்லம் குலத்தார் சிலர் அம்பெய்யும் போட்டியில் ஈடுபட்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் அவர்களைக் கடந்து சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இஸ்மாயீலின் சந்ததிகளே! அம்பெய்யுங்கள். ஏனெனில், உங்கள் தந்தை (இஸ்மாயீல் (அலை) அவர்கள்) அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்கள். நீங்கள் அம்பெய்யுங்கள். (போட்டியில்) நான் இன்ன குலத்தாருடன் இருக்கிறேன்” என்று கூறினார்கள். உடனே, இரண்டு பிரிவினரில் ஒரு சாரார் அம்பெய்வதை நிறுத்தினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உங்களுக்கென்ன ஆயிற்று? ஏன் அம்பெய்யாமலிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘தாங்கள் அவர்களுடன் (எதிர் தரப்பினருடன்) இருக்க, நாங்கள் எப்படி அம்பெய்வோம்?’ என்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியானால் நான் உங்கள் அனைவருடனும் இருக்கிறேன். நீங்கள் அம்பெய்யுங்கள்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2900

அபூ உஸைத்(ரலி) அறிவித்தார். பத்ருப் போரின்போது நாங்கள் குறைஷிகளுக்கெதிராகவும் குறைஷிகள் எங்களுக்கெதிராகவும் (போர் வியூகம் அமைத்து) அணிவகுத்து நின்றபோது நபி(ஸல்) அவர்கள், ‘(குறைஷிகள்) உங்களை நெருங்கினால் நீங்கள் அம்புகளைப் பயன்படுத்துங்கள்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2901
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) அபிசீனியர்கள் (எத்தியோப்பியர்கள்) நபி(ஸல்) அவர்கள் முன்னே தங்கள் ஈட்டிகளால் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது உமர்(ரலி) வந்து, (இதைப் பார்த்துக் கோபமடைந்து) குனிந்து சிறு கற்களை எடுத்து, அவற்றால் அவர்களை அடித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘உமரே! அவர்களைவிட்டு விடுங்கள்” என்று கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில், இந்த விளையாட்டு பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது’ என்று வந்துள்ளது.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2902
அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார். அபூ தல்ஹா(ரலி), நபி(ஸல்) அவர்களுடன் தம்மை ஒரே கேடயத்தைக் கொண்டே தற்காத்துக் கொள்வார்கள். அபூ தல்ஹா(ரலி) நன்கு அம்பெய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் அம்பெய்தால் நபி(ஸல்) அவர்கள் தலையை உயர்த்தி, அவர்களின் அம்பின் இலக்கைப் பார்ப்பார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2903
ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். உஹுதுப் போரின்போது நபி(ஸல்) அவர்களின் தலைக் கவசம் அவர்களின் தலையில் வைத்தே நொறுக்கப்பட்டு, முகம் முழுவதும் இரத்த மயமாம், அவர்களின் நடுப் பல் உடைக்கப்பட்டுவிட்டபோது, அலீ(ரலி) (காயத்தைக் கழுவுவதற்காக) கேடயத்தில் அவ்வப்போது தண்ணீர் கொண்டு வர, ஃபாத்திமா(ரலி) காயத்தைக் கழுவி வந்தார்கள். இரத்தம் தண்ணீரை மிஞ்சி அதிகமாக வழிவதைக் கண்ட ஃபாத்திமா(ரலி), ஒரு பாயை எடுத்து அதை எரித்து, (அதன் சாம்பலை) நபி(ஸல்) அவர்களின் காயத்தின் மேல் வைத்து அழுத்தி விட,இரத்தம் (வழிவது) நின்றுவிட்டது.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2904
உமர்(ரலி) அறிவித்தார். பனூ நளீர் குலத்தாரின் செல்வங்கள் அல்லாஹ் தன் தூதருக்கு அளித்தவையாகும். அதைப் பெறுவதற்காக முஸ்லிம்கள் (தங்கள்) குதிரைகளையோ, ஒட்டகங்களையோ செலுத்திப் போரிட்டிதிருக்கவில்லை. எனவே, அவை அல்லாஹ்வின் தூதருக்கு மட்டுமே உரியவையாக இருந்தன. அவற்றிலிருந்து அவர்கள் தங்களின் ஆண்டுச் செலவுக்காகத் தம் வீட்டாருக்குக் கொடுத்து வந்தார்கள். பிறகு, மீதமானவற்றை இறைவழியில் (போரிடுவதற்கான) ஆயத்தப் பொருள்கள் வாங்க, ஆயுதங்களுக்காகவும் குதிரைகளுக்காகவும் செலவிட்டு வந்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2905
அலீ(ரலி) அறிவித்தார்.ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களுக்குப் பிறகு வேறெவருக்கும் தம் தாய் தந்தையை அர்ப்பணிப்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டதில்லை. ஸஅத்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள், ‘அம்பெய்யுங்கள். உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்” என்று கூறியதை கேட்டேன்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2906
ஆயிஷா(ரலி) அறிவித்தார். என் முன்னால் (அன்சாரிச்) சிறுமிகள் இருவர் புஆஸ்8 போரைப் பற்றிய பாடலைப் பாடிக் காட்டிக் கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். படுக்கையில் சாய்ந்து தம் முகத்தை (வேறு திசையில்) திருப்பினார்கள். (பாட வேண்டாம் என்று அவர்களைத் தடுக்கவில்லை.) அப்போது, (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) வந்து என்னை அதட்டி, ‘அல்லாஹ்வின் தூதருக்கு முன்பாக ஷைத்தானின் இசைச் கருவியா?’ என்று கடிந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களை நோக்கி, ‘அவர்களை (பாட) விடுங்கள்” என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களின் கவனம் திசை திரும்பிவிட்டபோது, நான் அவ்விரு சிறுமிகளுக்கும் கண்ணால் சாடை செய்தேன். உடனே, அவர்கள் வெளியேறிவிட்டார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2907
மேலும், ஆயிஷா(ரலி) அறிவித்தார். அன்று ஈத் (பெருநாள்) தினமாக இருந்தது. (ஆப்பிரிக்கக்) கருப்பர்கள் தோல் கேடயத்தாலும் ஈட்டிகளாலும் (வீர விளையாட்டு) விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரிடம் நான் (விளையாட்டைப் பார்க்க அனுமதி) கேட்டிருக்க வேண்டும்; அல்லது அவர்களே என்னிடம், ‘நீ இவர்களுடைய (வீர விiளாயட்டைப்) பார்க்க விரும்புகிறாயா?’ என்று கேட்டிருக்க வேண்டும். நான், ‘ஆம்” என்று பதிலளித்தேன். உடனே, அவர்கள் என் கன்னம் அவர்களின் கன்னத்தின் மீது ஒட்டியபடி இருக்க, என்னைத் தமக்குப் பின்னால் நிற்க வைத்தார்கள். ‘அர்ஃபிதாவின் மக்களே! (எத்தியோப்பியர்களே!) விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். இறுதியில் நான் (விளையாட்டை நன்கு ரசித்து) சலிப்புற்றுவிட்டபோது, ‘போதுமா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்க நான், ‘ஆம், போதும்” என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியானால் நீ போ!” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2908

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், மக்களிலேயே அழகானவர்களாக, வீரமிக்கவர்களாக இருந்தார்கள். மதீனா நகர மக்கள் ஓரிரவு (எதிரிகள் படையெடுத்து வருவதாக வதந்தி பரவி) பீதிக்குள்ளானார்கள். எனவே, அவர்கள் சத்தம் வரும் திசையை நோக்கிப் புறப்பட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், அதற்குள் செய்தியைத் தீர விசாரித்துவிட்டு அபூ தல்ஹா(ரலி) அவர்களின் சேணம் பூட்டப்படாத குதிரை மீது சவாரி செய்தவர்களாக வந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் கழுத்தில் வாள் (மாட்டப்பட்டுத்) தொங்கிக் கொண்டிருந்தது. அவர்கள், ‘பயப்படாதீர்கள். பயப்படாதீர்கள்” என்று கூறிக் கொண்டிருந்தார்கள். பிறகு, ‘நாம் இந்தக் குதிரையைத் தங்குதடையின்றி வேகமாக ஓடக் கூடியதாகக் கண்டோம்” என்று கூறினார்கள். அல்லது, ‘இந்தக் குதிரை தங்குதடையின்றி வேகமாக ஓடக் கூடியது” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2909
அபூ உமாமா(ரலி) அறிவித்தார். ஒரு சமுதாயத்தினர் வெற்றிகள் பலவற்றை ஈட்டியுள்ளனர். அவர்களின் வாட்கள் தங்கத்தாலோ வெள்ளியாலோ அலங்கரிக்கப்பட்டிருக்கவில்லை. அவர்களின் (வாட்களின்) ஆபரணங்களெல்லாம் (வாளுறையின் அடிமுனை அல்லது மேல் முனையில் சுற்றி வைக்கப்படும்) பச்சைத் தோல், ஈயம் மற்றும் இரும்பு ஆகியன தாம்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2910
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நஜ்து நாட்டை நோக்கி ஒரு புனிதப் போருக்காகச் சென்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (போரிலிருந்து) திரும்பியபோது அவர்களுடன் நானும் திரும்பினேன். அப்போது முள்மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்கில் நாங்கள் வந்து கொண்டிருந்தபோது மதிய ஓய்வு கொள்ளும் நேரம் வந்துவிட்டது. உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அங்கு தயங்கினார்கள். மக்கள் (ஓய்வெடுப்பதற்காக) மரங்களின் நிழல் தேடி (பல திசைகளிலும்) பிரிந்து போய்விட்டனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு (கருவேல) மரத்தின் கீழே தங்கினார்கள். தம் வாளை மரத்தில் மாட்டித் தொங்கவிட்டார்கள். நாங்கள் சற்று நேரம் உறங்கினோம். அதற்குள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். (நாங்கள் கண்விழித்துப் பார்த்தால்) அப்போது அவர்களுக்கு அருகே ஒரு கிராமவாசி நின்றிருந்தார். நபி(ஸல்) அவர்கள், ‘இவர் நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது (நான் மரத்தில் தொங்க விட்டிருந்த என்னுடைய) வாளை எனக்கெதிராக உருவினார். நான் கண்விழித்துப் பார்த்தபோது இவரின் கையில் உறையிலிருந்து உருவிய (என்னுடைய) வாள் இருந்தது. இவர், ‘என்னிடமிருந்து உன்னை யார் காப்hற்றுவார்?’ என்று கேட்டார். நான் ‘அல்லாஹ்’ என்று (மூன்று முறை) கூறினேன்” என்றார்கள். அந்த கிராமவாசி (அங்கே) அமர்ந்திருந்தும் கூட, அவரை நபியவர்கள் தண்டிக்கவில்லை.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2911
ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட காயத்தைப் பற்றி உஹுதுப் போரின்போது என்னிடம் கேட்கப்பட்டது. நான், ‘நபி(ஸல்) அவர்களின் முகம் காயப்படுத்தப்பட்டது. அவர்களின் நடுப்பல் உடைக்கப்பட்டது. (அவர்களின்) தலைக்கவசம் அவர்களின் தலை மீதே (வைத்து) நொறுக்கப்பட்டது. ஃபாத்திமா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் (நபியவர்களின் மேனியிலிருந்து வழிந்த) இரத்தத்தைக் கழுவிக் கொண்டிருந்தார்கள். அலீ – ரலியல்லாஹு அன்ஹு – அவர்கள் அதைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்து வந்தார்கள். ஃபாத்திமா(ரலி), இரத்தம் இன்னும் அதிகமாம்க் கொண்டே போகிறது (நிற்கக் காணோம்) என்பதைப் பார்த்தபோது ஒரு பாயை எடுத்துச் சாம்பலாகும் வரை அதை, எரித்தார்கள். பிறகு, அதை காயத்தில் வைத்து அழுத்தினார்கள். உடனே, இரத்தம் (வெளியேறுவது) நின்றுவிட்டது” என்று கூறினேன்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2912
அம்ர் இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இறக்கும்போது தம் ஆயுதத்தையும், வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையையும், கைபரில் அவர்களுக்கிருந்த ஒருநிலத்தையும் தவிர வேறெதையும் அவர்கள்விட்டுச் செல்லவில்லை; அந்த நிலத்தையும் அவர்கள் தருமமாக ஆக்கி விட்டிருந்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2913

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு புனிதப் போருக்குச் சென்றேன். (திரும்பி வரும் வேளையில்) முள்மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கில் நாங்கள் வந்து கொண்டிருந்தபோது மதிய ஓய்வு கொள்ளும் நேரம் வந்தது. மக்கள் அந்த மரங்களிடையே பிரிந்து சென்று அவற்றின் நிழல்களில் (ஓய்வுக்காக) ஒதுங்கலானார்கள். நபி(ஸல்) அவர்கள் ஒரு மரத்திற்குக் கீழே தங்கினார்கள். அதில் தம் வாளைத் தொங்கவிட்டார்கள். பிறகு தூங்கிவிட்டார்கள். பிறகு கண்விழித்தபோது நபியவர்களுக்கே தெரியாமல் அங்கே ஒருவர் நின்றிருந்தார். (அவரைப் பற்றி) நபி(ஸல்) அவர்கள், ‘இந்த மனிதர் என் வாளை உருவிக் கொண்டு, ‘உன்னை (என்னிடமிருந்து) பாதுகாப்பவர் யார்?’ என்று கேட்டார். நான், ‘அல்லாஹ்’ என்று பதிலளித்தேன். உடனே, வாளை உறையில் போட்டார். அவர் இதோ அமர்ந்திருக்கிறார்” என்றார்கள். அதற்கு பிறகு நபி(ஸல்) அவர்கள் அவரை தண்டிக்கவில்லை.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2914
அபூ கத்தாதா(ரலி) அறிவித்தார். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் மக்காவை நோக்கிச் செல்லும் சாலை ஒன்றில் இருந்தபோது இஹ்ராம் அணிந்திருந்த தம் தோழர்களைவிட்டுப் பின்தங்கிவிட்டார்கள். நான் மட்டும் இஹ்ராம் அணிந்திருக்கவில்லை. அப்போது காட்டுக் கழுதை ஒன்றை கண்டேன். குதிரை மீதேறி அமர்ந்து கொண்டு என் சகாக்களிடம் என்னுடைய சாட்டையை எடுத்துத் தரும்படி கேட்டேன். அவர்கள் எடுத்துத் தரமறுத்தார்கள். பிறகு நானே அதை எடுத்துக் கொண்டு கழுதையின் மீது பாய்ச்சி அதைக் கொன்று விட்டேன். நபித் தோழர்களில் சிலர் அந்தக் கழுதையின் இறைச்சியை உண்டார்கள். மற்றும் சிலர் உண்ண மறுத்துவிட்டார்கள். அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களை அடைந்த பொழுது அதைப் பற்றி அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘அது அல்லாஹ் உங்களுக்கு அளித்த உணவாகும்” என்று பதிலளித்தார்கள்.
மற்றோர் அறிவிப்பில், ‘அதன் இறைச்சியில் மீதம் ஏதும் உங்களிடம் உண்டா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். என்று காணப்படுகிறது.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2915
நபி(ஸல்) அவர்கள் (பத்ருப் போரின் போது) ஒரு கூடாரத்தில் இருந்தபடி, ‘இறைவா! நான் உன் உறுதிமொழியையும் வாக்குறுதியையும் உன்னிடமிருந்து கோருகிறேன். இறைவா! உன்னுடைய நாட்டம் (முஸ்லிம்களாகிய) நாங்கள் தோற்றுப் போக வேண்டும் என்று) இருக்குமானால் இன்றைக்குப் பிறகு உன்னை வணங்குவது நின்று போய் விடும். (மக்கள் கற்பனையான பொய்க் கடவுள்களையே வணங்கிக் கொண்டிருப்பார்கள்)” என்று (முஸ்லிம்களுக்கு வெற்றியைத் தரும்படி) மன்றாடிப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு, ‘போதும், இறைத்தூதர் அவர்களே! தங்கள் இறைவனிடம் தாங்கள் நிறையவே மன்றாடி விட்டீர்கள்’ என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் கவச உடை அணிந்திருந்தார்கள். பிறகு ‘இந்த (இறைமறுப்பாளர்) படை விரைவில் தோற்கடிக்கப்படும்; மேலும், இவர்கள் புறமுதும்ட்டு ஓடுவார்கள். ஆயினும், இவர்களின் (கணக்கைத் தீர்த்திட) வாக்களிக்கப்பட்ட நேரம் மறுமை நாளாகும். மறுமை நாளோ மிகக் கடுமையானதும், மிகக் கசப்பானதும் ஆகும்” என்னும் திருக்குர்ஆன் வசனத்தை (திருக்குர்ஆன் 54:45, 46) ஓதியபடி அங்கிருந்து நபியவர்கள் வெளியேறினார்கள். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
மற்றோர் அறிவிப்பில், ‘பத்ருப் போரின் போது” என்னும் வாசகம் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2916
ஆயிஷா(ரலி) அறிவித்தார். தம் போர்க் கவசம் முப்பது ஸாவுகள் வாற்கோதுமைக்குப் பகரமாக ஒரு யூதரிடம் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
மற்றோர் அறிவிப்பில், ‘இரும்புக் கவசம்” என்றும் இன்னோர் அறிவிப்பில், ‘இரும்புக் கவசம் ஒன்றை யூதரிடம் அடகு வைத்தார்கள்” என்றும் இடம் பெற்றுள்ளது.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2917
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (தருமம் செய்யாத) கஞ்சனுக்கும் தருமம் செய்பவனுக்கும் உவமை, இரும்பு அங்கிகள் அணிந்த இரண்டு மனிதர்கள் ஆவர். அவர்களின் கைகள் அவர்களின் கழுத்தெலும்புகளோடு ஒட்டியிருக்கும். (அந்த அளவிற்கு அவை இறுக்கமானவை.) தருமம் செய்பவர் தருமம் செய்ய நாடும்போது (அவர் அணிந்திருக்கும் அந்த) அங்கி அவருக்கு விசாலமாம் விடுகிறது. எந்த அளவிற்கென்றால் அவர் (நடந்து செல்லும்போது அது நீண்டு) அவரின் பாதச் சுவட்டை அது அழித்து விடுகிறது. (அதாவது, தருமம் அவரின் குற்றங்குறைகளை மறைத்து விடுகிறது.) கஞ்சன் தருமம் செய்ய நாடும் போதெல்லாம் (அவனுடைய இரும்பு அங்கியின்) ஒவ்வொரு வளையமும் அடுத்த வளையத்தை நெருக்குகிறது; அவனை (தன் பாரத்தால்) அழுத்துகிறது. அவனுடைய இரண்டு கைகளும் கழுத்தெலும்புகளுடன் ஒட்டிக் கொள்கின்றன.
(இதை நபி(ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கும்) அபூ ஹுரைரா(ரலி) கூறினார். (இதை அறிவித்த போது) நபி(ஸல்) அவர்கள், ‘கஞ்சன் அந்த அங்கியை விசாலமாக்க முயற்சி செய்வான். ஆனால், அது விசாலமாகாது” என்று (பலமுறை) சொன்னார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2918
முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மல ஜலம் கழிக்கும்) தேவையை நிறைவேற்றிக் கொள்ளச் சென்றார்கள். பிறகு, திரும்பி வந்தபோது, நான் தண்ணீர் எடுத்துக் கொண்டு சென்று, (வரும் வழியில்) அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள் ஷாம் நாட்டு அங்கியொன்றை அணிந்திருந்தார்கள். அவர்கள் (நான் கொண்டு சென்ற தண்ணீரில்) வாய் கொப்பளித்து, மூக்கில் நீர் செலுத்தினார்கள். தம் முகத்தைக் கழுவினார்கள். அங்கியின் கைப்பகுதிகள் வழியாக தம் கைகளை வெளியே எடுக்கலானார்கள். அப்பகுதிகள் மிகவும் இறுக்கமாக இருந்தன. எனவே, கீழ்ப் பகுதி வழியாக இரண்டு கைகளையும் வெளியே எடுத்தார்கள். பிறகு அவற்றைக் கழுவினார்கள். தம் தலையைத் துடைத்தார்கள்; தம் காலுறைகளின் மீதும் துடைத்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2919
அனஸ்(ரலி) அறிவித்தார். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ஸுபைர்(ரலி) ஆகியோருக்கிருந்த சிரங்கு நோயின் காரணத்தால் அவர்களுக்கு (மட்டும்) பட்டாடை அணிந்து கொள்ள நபி(ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2920
அனஸ்(ரலி) அறிவித்தார். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களும் ஸுபைர்(ரலி) அவர்களும் நபி(ஸல்) அவர்களிடம் (தம் உடலில் சிரங்குண்டாக்கிய) ஒட்டுண்ணிகளைக் குறித்து முறையிட்டார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள் அவ்விருவருக்கும் பட்டாடை அணியச் சலுகை கொடுத்தார்கள். எனவே, ஒரு புனிதப் போரில் அவ்விருவரும் பட்டாடை அணிந்திருப்பதை கண்டேன்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2921
அனஸ்(ரலி) அறிவித்தார். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களுக்கும் ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்களுக்கும் பட்டாடை அணிய நபி(ஸல்) அவர்கள் சலுகை கொடுத்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2922
அனஸ்(ரலி) அறிவித்தார். அவ்விருவருக்கும் இருந்த சிரங்கின் காரணமாக, அவர்களுக்கு (பட்டாடை அணிய) நபி(ஸல்) அவர்கள் சலுகை கொடுத்தார்கள். அல்லது சலுகை கொடுக்கப்பட்டது.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2923
அம்ர் இப்னு உமய்யா(ரலி) அறிவித்தார். (ஆட்டின்) ஒரு தொடை இறைச்சியை (கத்தியால்) துண்டு போட்டு உண்பவர்களாக நபி(ஸல்) அவர்களை பார்த்தேன். பிறகு, தொழுகைக்கு அழைக்கப்பட்டவுன் அவர்கள் தொழுதார்கள். (ஆனால், புதிதாக) உளூச் செய்யவில்லை.
மற்றோர் அறிவிப்பில், ‘தொழுகைக்கு அழைக்கப்பட்டவுடன் நபி(ஸல்) அவர்கள் கத்தியைக் கீழே போட்டுவிட்டார்கள்” என்று அதிகப்படியாக வந்துள்ளது.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2924
உமைர் இப்னு அஸ்வத் அல் அன்ஸீ(ரஹ்) அறிவித்தார். உபாதா இப்னு ஸாமித்(ரலி) ‘ஹிம்ஸ்’ கடற்கரையில் தம் கட்டிடம் ஒன்றில் (தம் மனைவி) உம்மு ஹராம்(ரலி) அவர்களுடன் தங்கியிருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். அப்போது உம்மு ஹராம்(ரலி) எம்மிடம் அறிவித்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தினரில் முதலில் கடலில் (சென்று) புனிதப் போர் புரியும் படையினர் (சொர்க்கம் புகுவதற்கான தகுதியை) ஏற்படுத்தினார்கள்” என்று கூறினார்கள். இதைச் செவியுற்ற நான், ‘இறைத்தூதர் அவர்களே! நான் அவர்களில் ஒருத்தியா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் அவர்களில் ஒருவர் தாம்” என்று பதிலளித்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தினரில் சீசருடைய நகரத்தின் (பழைய கான்ஸ்டான்டி நோபிள் அல்லது தற்போதைய இஸ்தான்பூலின்) மீது படையெடுக்கும் முதலாவது படையினர் மன்னிக்கப்பட்டவர்கள் ஆவர்” என்று கூறினார்கள். ‘அவர்களில் நானும் ஒருத்தியா? இறைத்தூதர் அவர்களே!” என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘இல்லை” என்று பதிலளித்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2925
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” (முஸ்லிம்களாகிய) நீங்கள் யூதர்களுடன் போரிடுவீர்கள். எந்த அளவுக்கென்றால் அவர்களில் ஒருவர் கல்லின் பின்னால் ஒளிந்து கொள்ள, அந்தக் கல், ‘அல்லாஹ்வின் அடியானே! இதோ, என் பின்னால் ஒரு யூதன் இருக்கிறான். அவனைக் கொன்று விடு” என்று கூறும். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2926
நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். நீங்கள் யூதர்களுடன் போரிடாதவரை இறுதி நாள் வராது. எந்த அளவிற்கென்றால கல்லின் பின்னால் யூதன் ஒருவன் (ஒளிந்து கொண்டு) இருப்பான். அந்தக் கல், ‘முஸ்லிமே! இதோ, என் பின்னே ஒரு யூதன் (ஒளிந்து கொண்டு) இருக்கிறான். அவனை நீ கொன்று விடு” என்று கூறும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2927
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” முடியாலான செருப்புகளை அணிகிற ஒரு சமுதாயத்தினருடன் நீங்கள் போரிடுவது, இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்றாகும். தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்று அகலமான முகங்களையுடைய ஒரு சமுதாயத்தினருடன் நீங்கள் போரிடுதல் இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்றாகும். என அம்ர் இப்னு தக்லிப்(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2928
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” சிறிய கண்களும் சிவந்த முகங்களும் குட்டையான (சப்பை) மூக்குகளும் கொண்ட துருக்கியர்களுடன் நீங்கள் போர் புரியாத வரை இறுதிநாள் ஏற்படாது. அவர்களின் முகங்கள் தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்று இருக்கும். முடியாலான செருப்புகளை அணிந்திருக்கும் ஒரு சமுதாயத்தினருடன் நீங்கள் போர் புரியாதவரை இறுதி நாள் ஏற்படாது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2929
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். முடியாலான செருப்புகளை அணியும் ஒரு கூட்டத்தாருடன் நீங்கள் போர் புரியாத வரை இறுதி நாள் ஏற்படாது. தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்ற முகங்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தினருடன் நீங்கள் போரிடாத வரை இறுதி நாள் ஏற்படாது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்: அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்தே மற்றொரு வழியாக அறிவிக்கப்படுகிற ஓர் அறிவிப்பில், (‘தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்ற முகங்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தினருடன்’ என்னும் வாசகத்திற்கு முன்னால்).. ‘சிறிய கண்களும் சப்பை மூக்குகளும் கொண்ட” என்னும் சொற்கள் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளன.
பராஉ(ரலி) அவர்களிடம் ஒருவர், ‘அபூ உமாராவே! நீங்கள் ஹுனைன் போரின்போது பின்வாங்கி ஓடினீர்களா?’ என்று கேட்க, அதற்கு அவர்கள், ‘இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புறமுதும்ட்டுச் செல்லவில்லை. ஆயினும், அவர்கள், ‘இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புறமுதும்ட்டுச் செல்லவில்லை. ஆயினும், அவர்களின் தோழர்களில் வாலிபர்களும் ஆயுதபலமில்லாதவர்களும் களைத்துப் போய் நிராயுதபாணிகளாக வெளியேறினர். அவர்கள் ஹவாஸின் மற்றும் பனூ நஸ்ர் சமுதாயத்தாரின் வில் வீரர்களைக் கடந்து சென்றனர். அவர்களின் எந்த அம்பும் இலக்கு தவறி விழுவதில்லை. அவர்கள் குறி தவறாமல் அம்புகளை எய்தார்கள். எனவே, முஸ்லிம்கள் மீண்டும் நபி(ஸல்) அவர்களை நோக்கிச் சென்றார்கள். அப்போது ஒரு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையை நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தையின் மகன் அபூ சுஃப்யான் இப்னு ஹாரிஸ் இப்னி அப்தில் முத்தலிப்(ரலி) ஓட்டிக் கொண்டு வர, அதன் மீது நபி(ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தார்கள். (செய்தியறிந்ததும் அதைவிட்டு) இறங்கி அல்லாஹ்விடம் உதவி கோரிப் பிரார்த்தித்தார்கள். பிறகு, ‘நான் இறைத்தூதர் தான். இது பொய் அல்ல. நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகன் ஆவேன்” என்று கூறினார்கள். பிறகு தம் தோழர்களை அணிவகுக்கச் செய்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2931
அலீ(ரலி) அறிவித்தார். அஹ்ஸாப் (அரபுக் குலங்கள் அனைத்தும் ஒன்றுதிரண்டு தாக்க வந்த அகழ்ப்) போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் (எதிரிகளுடைய) வீடுகளையும் புதை குழிகளையும் நெருப்பால் நிரப்புவனாக! அவர்கள் சூரியன் மறையும் நேரம் வரை நடுத் தொழுகை(யான அஸர் தொழுகை)யிலிருந்து நம்முடைய கவனத்தைத் திருப்பிவிட்டார்கள்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2932
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (ஸுப்ஹுத் தொழுகையில்) குனூத் ஓதும்போது, ‘இறைவா! ஸலமா இப்னு ஹாஷிமைக் காப்பாற்றுவாயாக! வலீத் இப்னு வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! அய்யாஷ் இப்னு அபீ ரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறை நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவாயாக! இறைவா! உன் (தண்டனைப்) பிடிளை முளர் குலத்தாரின் மீது (இறுக்கிக்) கடுமைப்படுத்துவாயாக!” யூசுஃப்(அலை) அவர்களின் காலத்து (எம்ப்திய மக்களுக்கு அளித்த) கொடிய பஞ்சம் நிறைந்த (ஏழு) ஆண்டுகளைப் போல் அவர்களுக்கும் சில ஆண்டுகளை (தண்டனையாக) அளிப்பாயாக!” என்று அவர்களுக்குக் கேடு நேரப் பிரார்த்தித்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2933
அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அகழ்ப்போரின்போது இணை வைப்பவர்களுக்கு எதிராகப் பிரார்த்தனை புரிந்தார்கள். அப்போது, ‘இறைவா! திருக்குர்ஆனை அருள்பவனே! விரைவாகக் கணக்கு வாங்குபவனே! இறைவா! (சத்திய மார்க்கத்தை வேரறுக்கப் பல குலங்களிலிருந்தும் ஒன்று திரண்டு படையெடுத்து வந்துள்ள இந்தக்) கூட்டத்தார்களைத் தோற்கடிப்பாயாக! இறைவா! இவர்களைத் தோல்வியுறச் செய்து நடுக்கத்திற்குள்ளாக்குவாயாக!” என்று அவர்களுக்குக் கேடு நேரப் பிரார்த்தித்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2934
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது அபூ ஜஹ்லும் குறைஷிகளில் சிலரும் (ஒட்டகத்தின் கருப்பைச் சவ்வுகளைக் கொண்டு வரும்படி) உத்தரவிட்டார்கள். அப்போது மக்காவின் ஒரு பகுதியில் ஒட்டகம் ஒன்று அறுக்கப்பட்டிருந்தது. (அதை எடுத்து வர அவர்கள்) ஆளனுப்பினார்கள். பின்னர், அதன் கருப்பைச் சவ்வை எடுத்து நபி(ஸல்) அவர்களின் (தோள்) மீது போட்டார்கள். அப்போது ஃபாத்திமா(ரலி) வந்து, அதை நபி(ஸல்) அவர்களின் மீதிருந்து அப்புறப்படுத்தினார்கள். அப்போது, நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! குறைஷிகளை நீ கவனித்துக் கொள். இறைவா! குறைஷிகளை நீ கவனித்துக் கொள். ஹாஷிமின் மகன் அபூ ஜஹ்லையும் உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா, உபை இப்னு கலஃப் மற்றும் உக்பா இப்னு அபீ முஐத் ஆகியோரையும் (நீ தண்டித்து விடு)” என்று அவர்களுக்குக் கேடு நேரப் பிரார்த்தித்தார்கள். இவர்களை நான் (பின்னாளில்) பத்ரின் ஒரு பாழுங் கிணற்றில் கொல்லப்பட்டவர்களாக (எறியப்பட்டிருக்க)க் கண்டேன்.
அறிவிப்பாளர் அபூ இஸ்ஹாக்(ரஹ்), ‘நபி(ஸல்) அவர்கள் கேடு நேரப் பிரார்த்தித்த ஏழாமவனின் பெயரை நான் மறந்து விட்டேன்” என்று கூறுகிறார்கள்.
அபூ இஸ்ஹாக்(ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், ‘அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா(ரஹ்), ‘உமய்யா அல்லது உபை’ என்று (ஐந்தாமவனின் பெயரை) சந்தேகத்துடன் குறிப்பிடுகிறார். ஆயினும், (அந்த ஐந்தாமவனின் பெயர்) ‘உமய்யா’ என்பதே சரியானதாகும்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2935
ஆயிஷா(ரலி) அறிவித்தார். யூதர்கள் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, (முகமன் கூறும் சாக்கில்) ‘அஸ்ஸாமு அலைக்க” (“உங்களின் மீது மரணம் உண்டாகட்டும்”) என்று கூறினார்கள். நான் அந்த யூதர்களைச் சபித்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உனக்கென்ன நேர்ந்தது? (ஏன் அவர்களைச் சபிக்கிறாய்?)” என்று கேட்டார்கள். நான், ‘அவர்கள் கூறியதைத் தாங்கள் செவியுறவில்லையா?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘நான் (அவர்களுக்கு பதிலளித்த போது) அவர்களிடம், ‘வ அலைக்கும் – (உங்களின் மீதும் அவ்வாறே உண்டாகட்டும்)’ என்று கூறியதை நீ கேட்கவில்லையா?’ என்றார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2936
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ரோமாபுரியின் சக்கரவர்த்தி) சீசருக்குக் கடிதம் எழுதினார்கள். (அதில்) ‘நீர் (இஸ்லாமிய அழைப்பைப்) புறக்கணிப்பீராயின், உம் (பாமரக்) குடிமக்கள் (இஸ்லாத்தை ஏற்காமல் போவதின்) பாவம் உம்மைச் சேரும்” என்று கூறியிருந்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2937
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். துஃபல் இப்னு அம்ர் அத்தவ்ஸீ(ரலி) அவர்களும் அவர்களின் தோழர்களும் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (எங்கள்) ‘தவ்ஸ்’ குலத்தார் மாறுசெய்து (இஸ்லாத்தை ஏற்க மறுத்து)விட்டார்கள். அவர்களுக்குக் தீங்கு நேரப் பிரார்த்தியுங்கள்” என்று கேட்டுக் கொண்டனர். அப்போது, ‘தவ்ஸ் குலத்தார் அழியட்டும்” என்று கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! தவ்ஸ் குலத்தாரை நேர்வழியில் செலுத்துவாயாக! அவர்களை (இஸ்லாத்திற்குக்) கொண்டு வருவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2938
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (பைஸாந்திய) ரோமர்களுக்கு (அழைப்புக்) கடிதம் எழுத விரும்பிய பொழுது, ‘அவர்கள் (அரசின்) முத்திரையிடப்பட்ட கடிதத்தைத் தவிர வேறெதையும் படிக்கமாட்டார்கள்’ என்று கூறப்பட்டது. எனவே, நபி(ஸல்) அவர்கள் வெள்ளியாலான மோதிரம் (இலச்சினை) ஒன்றைத் தயாரித்தார்கள். (இப்போதும்) நான் அவர்களின் கரத்தில் அதன் வெண்மையைப் பார்ப்பது போன்றுள்ளது. அதில், ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ ‘இறைத்தூதர் முஹம்மது’ என்று நபி(ஸல்) அவர்கள் பொறித்திருந்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2939
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் கடிதத்தை பாரசீக மன்னர் குஸ்ரூவுக்கு (அப்துல்லாஹ் இப்னு ஹுதஃபா அஸ் ஸஹ்மீ(ரலி) வாயிலாக) அனுப்பி வைத்தார்கள். அதை பஹ்ரைனுடைய ஆட்சியாளரிடம் கொடுத்து, அதை அவர் குஸ்ரூவிடம் கொடுக்க வேண்டும் என்று சொல்லும் படி (அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா(ரலி) அவர்களுக்கு) உத்தரவிட்டார்கள். (அவ்வாறே அவர் அதைக் கொண்டு சென்று ஒப்படைக்க,) அதைப் பாரசீக மன்னன் குஸ்ரூ படித்தபோது, (கோபப்பட்டு) அதைக் கிழித்துவிட்டான்.
(எனவே,) ‘அவர்கள் துண்டு துண்டாக்கப்பட வேண்டும்’ என்று நபி(ஸல்) அவர்கள் அவர்களுக்குக் கேடு நேரப் பிரார்த்தித்தார்கள்’ என்று ஸயீத் இப்னு முஹய்யப்(ரஹ்) கூறினார்கள் என எண்ணுகிறேன்” என்று அறிவிப்பாளர் ஒருவர் கூறுகிறார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2940
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ரோம சக்கரவர்த்தி சீசருக்கு இஸ்லாத்திற்கு வரும்படி அழைப்புக் கொடுத்து கடிதம் எழுதினார்கள். திஹ்யா அல் கல்பீ என்னும் நபித் தோழரிடம் தம் கடிதத்தைக் கொடுத்தனுப்பினார்கள். ரோம சக்கரவர்த்தி சீசரிடம் கொடுப்பதற்காக புஸ்ராவின் அரசனிடம் அதைக் கொடுத்து விடும்படி அத் தோழருக்கு நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். பாரசீகப் படைகளின் மீது அல்லாஹ் சீசருக்கு வெற்றியை அளித்தபோது, அவர் ‘ஹிம்ஸ்’ பகுதியிலிருந்து ஈலியாவை (புனித நகரமான ஜெரூசலத்தை) நோக்கி, அல்லாஹ் அளித்த வெற்றிப் பரிசுக்கான நன்றியைச் செலுத்தும் வகையில் சென்றார். சீசரிடம் அல்லாஹ்வின் தூதருடைய கடிதம் வந்த நேரத்தில் அவர் அதைப் படித்தபோது, ‘எனக்காக இங்கு இந்த மனிதரின் சமுதாயத்தைச் சேர்ந்த எவரையேனும் தேடிக் (கண்டு பிடித்துக்) கொண்டு வாருங்கள். அல்லாஹ்வின் தூதரைப் பற்றி அவர்களிடம் நான் கேட்பேன்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2941
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். அபூ சுஃப்யான் இப்னு ஹர்ப்(ரலி) எனக்குப் பின்வருமாறு அறிவித்தார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கும் குறைஷிக் குல இறைமறுப்பாளர்களுக்கு இடையிலான (சமாதான ஒப்பந்தம் அமலில் இருந்த) கால கட்டத்தில் வியாபாரிகளாக வந்த குறைஷிகளில் சிலரிடையே நானும் ஷாம் நாட்டில் இருந்தேன். சீசருடைய தூதர் எங்களை ஷாமின் ஒரு பகுதியில் கண்டார். என்னையும் என் தோழர்களையும் அழைத்துச் சென்றார். நாங்கள் (அனைவரும்) ஈலியாவை அடைந்தோம். நாங்கள் சீசரிடம் கொண்டு செல்லப்பட்டோம். அவர் தன் அரசவையில் கிரீடம் அணிந்தவராய் அமர்ந்திருந்தார். அப்போது அவரைச் சுற்றிலும் ரோம நாட்டு ஆட்சியாளர்கள் பலரும் அமர்ந்திருந்தனர். தன் மொழி பெயர்ப்பாளரிடம் சீசர், ‘தன்னை இறைத்தூதர் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கும் இந்த மனிதருக்கு இவர்களில் நெருங்கிய உறவினர் யார்’ என்று நீ அவர்களிடம் கேள்” என்று கூறினார். (அவ்வாறே அவர் கேட்டபோது,) நான், ‘இவர்களில் அவருக்கு நானே நெருங்கிய உறவினன்” என்று சொன்னேன். உடனே அவர், ‘உமக்கும் அவருக்குமிடையில் என்ன உறவு?’ என்று கேட்டார். நான், ‘அவர் என் தந்தையின் சகோதரர் மகன்” என்று கூறினேன். அந்த நேரத்தில் (எங்கள்) பயணக் குழுவில் (நபியவர்களின் முப்பாட்டனார்) அப்து மனாஃபின் மக்களில் என்னைத் தவிர வேறெவரும் இருக்கவில்லை. உடனே சீசர், ‘அவரை என்னருகில் கொண்டு வாருங்கள்” என்று கூறிவிட்டு, என் தோழர்களை என் முதுகுக்குப் பின்னே நிற்க வைக்கும்படி உத்தரவிட்டார். அவர்கள் அவ்வாறே என் முதுகுக்குப் பின்னே நிற்க வைக்கப்பட்டார்கள். பிறகு சீசர், தன் மொழிபெயர்ப்பாளரிடம், ‘தன்னை நபி (இறைத் தூதர்) என்று வலியுறுத்திக் கூறும் இந்த மனிதரைக் குறித்து இவரிடம் நான் (விபரங்கள்) கேட்கப் போகிறேன்” என்றும், ‘இவர் பொய் சொன்னால் அதைப் பொய் என்று (நமக்குத்) தெரிவிக்கும்படி இவருடைய சகாக்களிடம் சொல்” என்றும் சொன்னார்… அல்லாஹ்வின் மீதாணையாக! என் தோழர்கள் என்னைக் குறித்து நான் பொய் சொன்னதாகத் தெரிவித்து விடுவார்களே என்னும் வெட்கம் மட்டும் எனக்கில்லாதிருந்திருந்தால் நான் (முஹம்மத்(ஸல்) அவர்களைப் பற்றி சீசர் என்னிடம் கேட்டபோது, அவரிடம் (அவர்களைக் குறித்து உண்மைக்கு மாறான தகவல்கள் தந்து) பொய் சொல்லியிருப்பேன். ஆனால், என்னைப் பற்றி நான் பொய் கூறினார்கள் என அவர்கள் தெரிவித்து விடுவார்களே என்று நான் வெட்கப்பட்டேன். எனவே, தான் (முஹம்மத்(ஸல்) அவர்களைப் பற்றி) உண்மையைச் சொன்னேன்… பிறகு சீசர், தன் மொழிபெயர்ப்பாளரிடம், ‘அந்த மனிதரின் குலம் எப்படிப்பட்டது என்று இவரிடம் கேள்” என்றார். நான், ‘அவர் எங்களிடையே உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவராவார்” என்று கூறினேன். அதற்கு அவர், ‘உங்களில் எவரேனும் இதற்கு முன் (நான் நபி- இறைத்தூதர் என்னும்) இந்த வாதத்தை முன்வைத்திருக்கிறாரா?’ என்று கேட்டார். நான், ‘இல்லை” என்று பதிலளித்தேன். சீசர், ‘அவரின் முன்னோர்களில் அரசர் எவராவது (வாழ்ந்து) சென்றிருக்கிறாரா?’ என்று கேட்டார். நான், ‘இல்லை” என்றேன். ‘அவரை மக்களில் மேட்டுக் குடியினர் பின்பற்றுகின்றனரா? அல்லது அவர்களில் பலவீனர்கள் (ஒடுக்கப்பட்டவர்கள்) பின்பற்றுகின்றனரா?’ என்று கேட்டார். நான், ‘அவர்களில் பலவீனர்கள் தான் அவரைப் பின்பற்றுகின்றனர்” என்று கூறினேன். அவர், ‘அவரைப் பின்பற்றுவோர் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்களா? அல்லது குறைந்து கொண்டே போகிறார்களா?’ என்று கேட்டார். நான், ‘அவர்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர்” என்று கூறினேன். பிறகு ‘(அவரின் மார்க்கத்தை ஏற்ற பிறகு) தன் புதிய மார்க்கத்தின் மீது அதிருப்தியடைந்து எவரேனும் மதம் மாறிச் செல்வதுண்டா?’ என்று கேட்டார். நான், ‘இல்லை” என்றேன். அவர், ‘அந்த மனிதர் வாக்கு மீறுகிறாரா?’ என்று கேட்க, நான், ‘இல்லை. ஆனால், நாங்கள் இப்போது அவருடன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சமாதான ஒப்பந்தம் செய்துள்ளோம். அவர் வாக்கு மீறி விடுவாரென்று நாங்கள் அஞ்சுகிறோம்” என்று பதிலளித்தேன்… இதைத் தவிர என்னை என் தோழர்கள் காட்டிக் கொடுத்து விடுவார்களே என்று அஞ்சாமல் அவரைக் குறைசொல்லக் கூடிய வார்த்தை வேறு எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை… பிறகு அவர், ‘நீங்கள் அவருடனும் அவர் உங்களுடனும் போர் புரிந்ததுண்டா?’ என்று கேட்டார். நான், ‘உண்டு” என்றேன். அதற்கு அவர், ‘உங்களுக்கிடையிலான போர்(களின் முடிவு)கள் எவ்வாறிருந்தன?’ என்று கேட்டார். நான், ‘அவை (அவற்றின் வெற்றியும் தோல்வியும்) எங்களிடையே சுழல்முறையில் மாறிமாறி வருகின்றன. ஒருமுறை அவர் எங்களை வெற்றி கொள்வார்; மறுமுறை அவரை நாங்கள் வெற்றி கொள்வோம்” என்று பதிலளித்தேன். சீசர், ‘என்ன செய்யும்படி அவர் உங்களுக்குக் கட்டளையிடுகிறார்?’ என்று கேட்டார். நான், ‘அல்லாஹ்வை மட்டுமே நாங்கள் வணங்கி வர வேண்டுமென்றும் அவனுக்கு எதையும் இணை கற்பிக்கக் கூடாது என்றும் அவர் எங்களுக்குக் கட்டளையிடுகிறார். எங்கள் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வங்களை நாங்கள் வணங்கக் கூடாது என்று எங்களைத் தடுக்கிறார். தொழுகையை நிறைவேற்றும்படியும் தான தருமம் செய்யும்படியும் கற்பைப் பேணி வரும்படியும் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் படியும் நம்பி ஒப்படைக்கப்பட்ட அடைக்கலப் பொருளைப் பாதுகாப்பாகத் திருப்பித் தரும்படியும். எங்களுக்குக் கட்டளையிடுகிறார்” என்று கூறினேன். நான் இதை சீசரிடம் சொன்னபோது அவர் தன் மொழி பெயர்ப்பாளரிடம் கூறினார்; அவரிடம் கூறுங்கள்: நான் உம்மிடம், ‘உங்களிடையே அவரின் குலம் எப்படிப்பட்டது?’ என்று கேட்டேன். ‘அவர் உயர்குலத்தைச் சேர்ந்தவர்” என்று நீர் பதிலளித்தீர். இவ்வாறே, இறைத்தூதர்கள் தம் சமுதாயத்தின் நற்குடியில் தான் அனுப்பப்படுவர். நான், ‘இவருக்கு முன்னர் உங்களில் எவராவது இந்த வாதத்தை முன் வைத்ததுண்டா?’ என்று கேட்டேன். ‘இல்லை” என்று நீர் பதிலளித்தீர். இவருக்கு முன்னரும் எவரேனும் இந்த வாதத்தை முன் வைத்திருந்ததாக நீர் சொல்லியிருந்தால், ‘தமக்கு முன்னர் (சிலரால்) முன் வைக்கப்பட்ட ஒரு வாதத்தையே பின்பற்றிச் சொல்கிற ஒருவர் இவர்” என்று நான் சொல்லியிருப்பேன். ‘அவர் இந்த வாதத்தை முன் வைப்பதற்கு முன்பு, அவர் பொய் சொன்னதாக நீங்கள் குற்றம் சாட்டியதுண்டா?’ என்று நான் உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர், ‘இல்லை” என்று பதிலளித்தீர். (அதிலிருந்து) மக்களிடம் பொய் சொல்ல(த் துணிய)hத அவர், அல்லாஹ்வின் மீது பொய் சொல்ல(த் துணிய) மாட்டார் என்று புரிந்து கொண்டேன். ‘அவரின் முன்னோர்களிடையே அரசர் எவரேனும் இருந்திருக்கிறாரா?’ என்று நான் உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர், ‘இல்லை” என்றீர். அவரின் முன்னோர்களிடையே அரசர் எவரும் இருந்திருப்பாராயின், ‘தம் முன்னோர்களின் ஆட்சியதிகாரத்தை (தாமும்) அடைய விரும்பும் ஒருவர் இவர்” என்று கூறியிருப்பேன். ‘மக்களில் மேட்டுக் குடியினர் அவரைப் பின்பற்றுகிறார்களா? மக்களிடையேயுள்ள பலவீனர்கள் பின்பற்றுகிறார்களா?’ என்று நான் உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர், ‘ஒடுக்கப்பட்ட மக்களே அவரைப் பின்பற்றுகின்றனர்” என்று பதிலளித்தீர். அவர்கள் தாம் (எப்போதும்) இறைத்தூதர்களைப் பின்பற்றுவோர் (நாளுக்கு நாள்) அதிகரித்து வருகின்றனரா? குறைந்து கொண்டே வருகின்றனரா?’ என்று கேட்டேன். அதற்கு நீர், ‘அதிகரித்துக் கொண்டே வருகின்றனர்” என்று பதிலளித்தீர் இறைநம்பிக்கை இத்தகையது தான். அது முழுமையடையும் வரை (அதிகரித்து கொண்டே செல்லும்.) ‘அவரின் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டோரில் எவராவது தம் (புதிய) மார்க்கத்தின் மீது அதிருப்தியடைந்து அதிலிருந்து வெளியேறிச் செல்வதுண்டா?’ என்று நான் உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர், ‘இல்லை” என்று பதிலளித்தீர். இறைநம்பிக்கை இத்தகையதே. அதன் எழில், இதயங்களில் கலக்கும்போது அதைக் குறித்து எவருமே அதிருப்தியடைய மாட்டார். ‘அவர் வாக்கு மீறுவாரா?’ என்று நான் உம்மைக் கேட்டதற்கு நீர், ‘இல்லை” என்று பதிலளித்தீர். இறைத் தூதர்கள் இத்தகையவர்களே. அவர்கள் வாக்கு மீறுவதில்லை. மேலும், நான், ‘நீங்கள் அவருடனும் அவர் உங்களுடனும் போர் புரிந்துண்டா?’ என்று கேட்டேன். அதற்கு நீர், ‘போர் புரிந்ததுண்டு’ என்றும், ‘உங்களுக்கும் அவருக்குமிடையே போர் (முடிவுகளான வெற்றியும் தோல்வியும்) மாறி மாறி (சுழன்று) வந்து கொண்டிருக்கும் என்றும்; ஒரு முறை உங்களுக்கு வெற்றி கிடைத்தால் மறுமுறை அவருக்கு வெற்றி கிடைக்கும்’ என்றும் பதிலளித்தீர். இப்படித் தான் இறைத்தூதர்கள் சோதிக்கப்படுவார்கள். ஆனால், இறுதி வெற்றி அவர்களுக்கே கிடைக்கும். ‘உங்களுக்கு அவர் என்ன கட்டறையிடுகிறார்?’ என்று நான் உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர், அல்லாஹ்வை வணங்கும்படியும் அவனுக்கு எதனையும் இணையாக்காமல் இருக்கும்படியும் கட்டளையிடுகிறார் என்றும் உங்கள் முன்னோர்கள் வணங்கிவந்தவற்றை நீங்கள் வணங்க வேண்டாமென்று உங்களைத் தடுக்கிறார் என்றும், தொழுகையை(நிலை நிறுத்தும்படி)யும் வாய்மையையும் நல்லொழுக்கத்தையும் கைக்கொள்ளும்படியும் ஒப்பந்தங்களைச் சரிவர நிறைவேற்றும்படியும் அடைக்கலப் பொருளைப் பாதுகாப்பாகச் திருப்பித் தரும்படியும் அவர் உங்களுக்குக் கட்டளையிடுக்கிறார் என்றும் பதிலளித்தீர். எந்த இறைத்தூதர் வரவிருப்பதாக நான் அறிந்திருந்தேனோ அவரின் பண்புகள் இவை தாம். ஆனால், அவர் உங்களிலிருந்து வருவார் என்று நான் அறிந்திருக்கவில்லை. நீர் சொல்வது உண்மையாயிருப்பின், என்னுடைய இவ்விரு பாதங்கள் பதிந்துள்ள இந்த இடத்திற்கு விரைவில் அவர் அதிபதியாவார். நான் அவரைச் சந்திப்பேன். அவரிடம் நான் இருந்திருப்பேனாயின் அவரின் கால்களைக் கழுவியிருப்பேன்” என்று கூறினார். பிறகு, சீசர் அல்லாஹ்வின் தூதருடைய கடிதத்தைக் கொண்டு வரும்படி உத்தரவிட்டார். (அது கொண்டு வரப்பட்டதும்) அது அவருக்குப் படித்துக் காட்டப்பட்டது.
அதில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது: அளவற்ற அருளாளன், கருணையன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்… இது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாகிய முஹம்மதிடமிருந்து ரோமாபுரியின் அதிபர் ஹெராக்ளியஸுக்கு (எழுதப்படும் கடிதம்).
நேர்வழியைப் பின்பற்றியவர் மீது (இறைவனின்) சாந்தி பொழியட்டும். நிற்க, நான் உங்களை இஸ்லாத்தை ஏற்கும்படி அழைக்கிறேன். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். (நீங்கள் நம்பிக்கை கொண்டதற்காக) உங்களுக்குச் சேர வேண்டிய நன்மையை இருமடங்காகத் தருவான். நீங்கள் புறக்கணித்தால், உங்கள் குடிமக்களின் பாவமும் (அவர்கள் இஸ்லாத்தை ஏற்காமல் போவதின் குற்றமும்) உங்களையே சேரும்.
வேதம் வழங்கப்பட்டவர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் இடையிள்ள பொதுவான ஒரு கொள்கையின் பக்கம் வாருங்கள்: அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் நாம் வணங்கமாட்டோம். எதனையும் (எவரையும்) அவனுக்கு இணையாக்க மாட்டோம். அல்லாஹ்வை விட்டுவிட்டு நம்மில் ஒருவர், மற்றவரைக் கடவுள்களாக ஆக்கிக் கொள்ள மாட்டோம் (என்பதே அந்தக் கொள்கை).
அவர்கள் (இந்த அழைப்பைப்) புறக்கணிப்பார்களாயின், ‘நாங்கள் முஸ்லிம்கள் (அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிபவர்கள்) என்பதற்கு நீங்களே சாட்சியாயிருங்கள்” என்று (அவர்களிடம்) கூறிவிடுங்கள்.
சீசர் தன் கூற்றைச் சொல்லிமுடித்தவுடன் அவரைச் சுற்றிலுமிருந்த ரோம நாட்டு(பைஸாந்திய) ஆட்சியாளர்களின் குரல்கள் உயர்ந்து அவர்களின் கூச்சல் அதிகரித்தது. அதனால், அவர்கள் என்ன சொன்னனார்கள் என்று நான் அறிய முடியாமல் போய்விட்டது. எங்களை வெளியே கொண்டு செல்லும்படி உத்தவிடப்பபட்டது. நாங்கள் (சீசரின் அவையிலிருந்து) வெளியேற்றப்பட்டடோம். என் தோழர்களுடன் வெளியே வந்து அவர்களுடன் தனிமையில் (பேசியபடி) இருந்தபோது நான், ‘இப்னு அபீ கப்ஷா (முஹம்மது)வின் விவகாரம் வலிமை பெற்றுவிட்டது. மஞ்சள் நிற இனத்தாரின் மன்னனான இவனே அவருக்கு அஞ்சுகீன்றானே” என்று கூறினேன். (அன்றிலிருந்து) இறைவன் மீதாணையாக! நான் அடங்கிப் போனேன். இவரின் மார்க்கம் விரைவில் வெற்றி பெறும் என்று உறுதியாக எண்ணியவனாகவே இருந்து வந்தேன். அதற்குள், இஸ்லாத்தை நான் வெறுத்த போதிலும் அல்லாஹ் என் உள்ளத்தில் அதைப் புகுத்திவிட்டான்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2942
ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கைபர் போரின்போது, ‘அல்லாஹ் எவருடைய கரத்தில் வெற்றியைத் தரவிருக்கிறானே அத்தகைய ஒரு மனிதரிடம் (நாளைக்கு) நான் (இஸ்லாமியச் சேனையின்) கொடியைத் தருவேன்” என்று கூறக் கேட்டேன். உடனே, நபித்தோழர்கள், அதை யாரிடம் நபி(ஸல்) அவர்கள் கொடுக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்த்து நின்றனர். அவர்களில் ஒவ்வொருவரும் அது தம்மிடமே தரப்பட வேண்டுமென்று விரும்பியவர்களாக மறுநாள் வந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அலீ எங்கே?’ என்று கேட்டார்கள். ‘அவருக்குக் கண்வலி” என்று கூறப்பட்டது. உடனே, நபி(ஸல்) அவர்கள், அலீ(ரலி) அவர்களை அழைத்து வரும்படி கட்டளையிட்டார்கள். அவ்வாறே அவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களின் கண்களில் (தம்) எச்சிலை உமிழ்ந்தார்கள். உடனே அவர்களின் கண், அதற்கு முன்பு வலி எதுவுமே இல்லாதிருந்ததைப் போல் குணமாம்விட்டது. உடனே, அலீ(ரலி), ‘நம்மைப் போல் (முஸ்லிம்களாய்) ஆகும் வரை நாம் அவர்களுடன் போர் புரிவோம்” என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நிதானமாகச் சென்று அவர்களின் களத்தில் இறங்குவீராக! பிறகு, அவர்களை இஸ்லாத்திற்கு அழைத்து (அதை ஏற்கும் பட்சத்தில்) அவர்களின் மீது கடமையாகுபவற்றை அவர்களுக்குத் தெரிவிப்பீராக! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியளிக்கப்படுவது (அரபுகளின் உயரிய செல்வமான) சிகப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்” என்றார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2943
அனஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு சமுதாயத்தார் மீது படையெடுத்துச் சென்றால் காலை நேரம் வரும் வரை தாக்குதல் நடத்த மாட்டார்கள். (அந்த மக்களிடையே தொழுகை அழைப்பான) பாங்கின் ஓசையைக் கேட்டால் தாக்குதல் நடத்த மாட்டார்கள். பாங்கின் ஓசையைக் கேட்காவிட்டால் காலை நேரம் வந்த பின் தாக்குதல் நடத்துவார்கள். கைபரில் நாங்கள் இரவு நேரத்தில் சென்று தங்கினோம்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2944
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் எங்களுடன் புனிதப் போர் புரியச் சென்றால்… (என்று தொடங்கும் ஹதீஸ்86)
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2945
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (போருக்காக) கைபரை நோக்கிப் புறப்பட்டு இரவு நேரத்தில் அங்கு போய்ச் சேர்ந்தார்கள். அவர்கள் ஒரு சமுதாயத்தாரின் மீது இரவு நேரத்தில் படையெடுத்துச் செல்வார்களாயின் காலை நேரம் வரும் வரை அவர்களின் மீது தாக்குதல் நடத்த மாட்டார்கள். .. அவ்வாறே காலையானதும் யூதர்கள் தம் மண்வெட்டிகளையும் (பேரீச்ச ஓலைகளாலான) கூடைகளையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர். நபி(ஸல்) அவர்களை அவர்கள் பார்த்தபோது, ‘முஹம்மதும் (அவரின்) படையும் (வந்துள்ளனர்)” என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் மிகப் பெரியவன். கைபர் பாழாம்விட்டது! நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்குவோமாயின் எச்சரிக்கப்பட்ட(வர்களான அந்தச் சமுதாயத்த)வர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாகும்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2946
‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை” என்று கூறுகிற (நிலை ஏற்படும்) வரை மக்களுடன் போரிடும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். ‘வணக்கத்திற்குரியவன் (இறைவன்) அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை’ என்று கூறுகிறவர் தன் உயிரையும், உடைமையையும் என்னிடமிருந்து காப்பாற்றிக் கொள்வார். நியாயமான காரணம் இருந்தாலே தவிர. அவரிடம் (அவரின் மற்ற செயல்களுக்குக்) கணக்கு வாங்குவது அல்லாஹ்வின் பொறுப்பாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இதே நபிமொழியை உமர்(ரலி) அவர்களும் இப்னு உமர்(ரலி) அவர்களும் நபி(ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2947
கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போருக்கு (தலைமை தாங்கிச்) செல்ல விரும்பினால் வேறெதற்கோ செல்வது போன்று பாசாங்கு செய்து அதை மறைப்பார்கள்.
“தபூக் போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் செல்லாமல், தான் பின்தங்கிவிட்ட கால கட்டத்தைக் குறித்து என் தந்தை கஅப் இப்னு மாலிக்(ரலி) விவரித்தபோது இதை அவர்கள் கூற கேட்டேன்” என்று கஅப்(ரலி) முதிய வயதடைந்து கண்பார்வையிழந்துவிட்டN பாது அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்பவராயிருந்த- அவர்களின் மகன் அப்துல்லாஹ் இப்னு கஅப்(ரஹ்) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2948
கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போருக்கு(த் தலைமையேற்று)ச செல்ல நாடினால் பெரும்பாலும் வேறெதற்கோ செல்வது போன்று பாசாங்கு செய்து அதை மறைப்பார்கள். தபூக் போர் (நேரம்) வந்தபோது அதற்காகக் கடும் வெயிலில் நபி(ஸல்) அவர்கள் படையெடுத்துச் சென்றார்கள். தொலைதூரப் பயணத்தையும் வெற்றியையும் அவர்கள் எதிர்பார்த்தார்கள். அதிக (எண்ணிக்கையிலான) எதிரிகளைச் சந்திப்பதையும் எதிர்பார்த்தார்கள். தம் எதிர்பார்ப்பை முஸ்லிம்களுக்கு வெளிப்படையாக உணர்த்திவிட்டார்கள். முஸ்லிம்கள் தம் பகைவர்களின் நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்காக இப்படிச் செய்தார்கள். தாம் விரும்பியவாறு அவர்களுக்கு (விஷயத்தை) அறிவித்துவிட்டார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2949
அப்துர் ரஹ்மான் இப்னு கஅப்(ரஹ்) அறிவித்தார். என் தந்தை கஅப் இப்னு மாலிக்(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு பயணத்திற்குப் புறப்பட்டால் பெரும்பாலும் வியாழக்கிழமையன்று தான் புறப்படுவார்கள்” என்று கூறி வந்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2950
கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தபூக் போருக்கு வியாழக்கிழமையன்று தான் புறப்பட்டார்கள். வியாழக்கிழமையன்று (பயணம்) புறப்படுவதை அவர்கள் விரும்பி வந்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2951
அனஸ்(ரலி) அறிவித்தார். (தம் ஹஜ்ஜின் போது) நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹர் தொழுகையை நான்கு ரக்அத்களாகவும் அஸர் தொழுகையை துல் ஹுலைஃபா என்னுமிடத்தில் இரண்டு ரக்அத்துகளாகவும் தொழுதார்கள். நபி(ஸல்) அவர்களும் நபித்தோழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து (ஹஜ், உம்ரா) இரண்டிற்கும் (தல்பியாவை) உரக்கக் கூறுவதை செவியுற்றேன்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2952
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் துல்கஅதா மாதத்தில் ஐந்து நாள்கள் எஞ்சியிருந்தபோது (துல்கஅதா பிறை 25ல்) புறப்பட்டோம். அப்போது நாங்கள் ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்ற எண்ணியிருந்தோம். மக்காவை நாங்கள் நெருங்கியபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், குர்பானிப் பிராணியைத் தம்முடன் கொண்டு வராதவர்கள் கஅபாவை வலம்வந்து ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடி முடித்ததும் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விடும்படி உத்தரவிட்டார்கள். பிறகு, நஹ்ருடைய (துல்ஹஜ் 10ம்) நாளில் எங்களிடம் மாட்டிறைச்சி கொண்டு வரப்பட்டது. நான், ‘இது என்ன?’ என்று கேட்டேன். மக்கள், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் மனைவியின் சார்பாக (தியாகப் பிராணியை) அறுத்து பலியிட்டார்கள்” என்று பதிலளித்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2953
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (மக்கா வெற்றியின்போது) ரமளான் மாதத்தில் பயணம் புறப்பட்டார்கள். அப்போது நோன்பு நோற்றிருந்தார்கள். ‘கதீத்’ என்னுமிடம் வந்த பின் நோன்பை விட்டுவிட்டார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2954

அபூ ஹுரைரா(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களை ஒரு படையில் அனுப்பி வைத்தார்கள். அப்போது எங்களிடம், ‘நீங்கள் இன்னாரையும் இன்னாரையும் சந்தித்தால் – என்று குறைஷிகளில் இருவரைப் பெயர் குறிப்பிட்டு அவ்விருவரையும் நெருப்பால் எரித்து விடுங்கள்” என்று கூறினார்கள். பிறகு, நாங்கள் பயணம் புறப்பட முனைந்தபோது நபி(ஸல்) அவர்களிடம் விடைபெறப் போனோம். அப்போது அவர்கள், ‘நான் இன்னாரையும் இன்னாரையும் நெருப்பால் எரித்து விடும்படி உங்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன். ஆனால், நெருப்பால் வேதனை செய்யும் உரிமை அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு என்பதால், நீங்கள் அவ்விருவரையும் கண்டால் (நெருப்பால் எரிக்க வேண்டாம்;) கொன்று விடுங்கள்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2955
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” அல்லாஹ்வுக்கு மாறு செய்யும்படி கட்டளையிடப்படாத வரை, தலைவரின் கட்டளையைச் செவியேற்பதும் அதற்குக் கீழ்ப்படிவதும் கடமையாகும். அல்லாஹ்வுக்கு மாறு செய்யும்படி கட்டளையிடப்பட்டால் அதைச் செவியேற்பதும் அதற்குக் கீழ்ப்படிவதும் கூடாது. என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2956

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(உலகில்) கடைசியானவர்களான நாமே (மறுமையில்) முந்தியவர்கள்” என்று கூற கேட்டேன்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2957
‘எனக்குக் கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவராவார். எனக்கு மாறு செய்கிறவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்தவராவார். தலைவருக்குக் கட்டுப்பட்டவர் எனக்குக் கட்டுப்பட்டவராவார். தலைவருக்கு மாறு செய்கிறவர் எனக்கு மாறு செய்தவராவார். தலைவர் ஒரு கேடயம். அவருக்குக் கீழிருந்து போரிடப்படும்; அவர் மூலம் பாதுகாப்பு பெறப்படும். அவர் (தன் தலைமையின் கீழுள்ள குடிமக்களுக்கு) இறை(யச்ச) உணர்வைக் கைக்கொள்ளும்படி கட்டளையிட்டு நீதியுடன் நடந்தால் அவருக்கு அதன் காரணமாக (பெரும்) நற்பலன் உண்டு. அதுவல்லாத(தீய)வற்றை அவர் கட்டளையிட்டால், அதனால் ஏற்படும் பாவம் அவரின் மீது(ம்) சாரும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2958
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நாங்கள் (ஹுதைபிய்யா உடன்படிக்கை கையொப்பமான ஆண்டிற்கு) அடுத்த ஆண்டு (ஒப்பந்தப்படி உம்ரா செய்யத்) திரும்பி வந்தோம். ‘நாங்கள் (ஹுதைபிய்யா ஆண்டில்) எந்த மரத்திற்குக் கீழே (நபி(ஸல்) அவர்களின் கரத்தில்) உறுதிமொழி எடுத்துக் கொண்டோமோ அந்த மரம் இதுதான்’ என்று எங்களில் எந்த இருவரும் ஒருமித்த கருத்துக் கொள்ளவில்லை. அது அல்லாஹ்விடமிருந்து (அவனுடைய) கருணை பொழிந்த இடமாக இருந்தது.
அறிவிப்பாளர் ஜுவைரிய்யா(ரஹ்) கூறினார்: (இப்னு உமர்(ரலி) அவர்களிடமிருந்து கேட்டு இதை எங்களுக்கு அறிவித்த) நாஃபிஉ(ரஹ்) அவர்களிடம் நாங்கள், ‘எதற்காக நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களிடமிருந்து உறுதிமொழி பெற்றார்கள்? மரணத்தைச் சந்திக்கத் தயாராயிருப்பதற்காகவா?’ என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ‘இல்லை. ஆனால், (நிலைகுலைந்து போகாமல்) பொறுமையாக இருக்கும்படி தான் அவர்களிடமிருந்து நபி(ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கினார்கள்” என்று பதிலளித்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2959
அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். ‘ஹர்ரா’ போரின்போது என்னிடம் ஒருவர் வந்து, ‘அப்துல்லாஹ் இப்னு ஹன்ழலா(ரலி), மக்களிடம் மரணத்தைச் சந்திக்கத் தாயாராயிருக்கும் படி உறுதிமொழி வாங்குகிறார்கள்” என்று கூறினார். அதற்கு நான், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு (ஹுதைபிய்யாவில் அளித்த உறுதிமொழிக்கு)ப் பின்னர் வேறெவரிடமும் இதற்காக நான் உறுதிமொழியளிக்க மாட்டேன்” என்று கூறினேன்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2960
ஸலமா இப்னு அக்வஃ(ரலி) கூறினார். நான் (‘இறைமறுப்பாளர்களுடன் அறப்போர் புரிவேன்; இறைவழியில் துன்பங்களைச் சம்ப்பேன்’ என்று) நபி(ஸல்) அவர்களிடம் ஹுதைபிய்யாவில் உறுதிமொழியளித்தேன்; பிறகு மரத்தின் நிழலில் (சற்று) ஒதுங்கினேன். (நபி(ஸல்) அவர்களைச் சுற்றிலுமிருந்த) மக்கள் (கூட்டம்) சற்று குறைந்தபோது நபி(ஸல்) அவர்கள், ‘அக்வஃ உடைய மகனே! (ஸலமாவே!) நீ உறுதி மொழியளிக்கவில்லையா?’ என்று கேட்டார்கள். ‘நான் ஏற்கனவே உறுதிமொழியளித்து விட்டேன், இறைத்தூதர் அவர்களே!” என்று பதிலளித்தேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘மீண்டும் (அளிப்பீராக!)” என்று கூறினார்கள். எனவே, நான் இரண்டாவது முறையாக உறுதிமொழியளித்தேன்.
அறிவிப்பாளர் யஸீத் இப்னு அபீ உபைத்(ரஹ்) கூறினார். (இதை எனக்கு அறிவித்த ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அவர்களிடம்) நான், ‘அபூ முஸ்லிமே! அன்று (நபித் தோழர்களான) நீங்கள் எந்த விஷயத்திற்காக (நபி(ஸல்) அவர்களிடம்) உறுதிமொழியளித்தீர்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘மரணத்தைச் சந்திக்கத் தயாராயிருப்பதாக நாங்கள் உறுதிமொழியளித்தோம்” என்று பதிலளித்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2961
அனஸ்(ரலி) அறிவித்தார். அகழ்ப் போரின்போது (மதீனா வாசிகளான) அன்சாரிகள், ‘நாங்கள் (எத்தகையவர்கள் எனில்) ‘நாங்கள் உயிராயிருக்கும் வரை (தொடர்ந்து) அறப்போர் புரிந்து கொண்டிருப்போம்’ என்று முஹம்மத்(ஸல்) அவர்களிடம் உறுதி மொழியளித்திருக்கிறோம்” என்று பாடிய வண்ணம் (அகழ்தோண்டிக் கொண்டு) இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! மறுமை வாழ்க்கையைத் தவிர (நிரந்தரமான பெரு) வாழ்க்கை வேறெதுவுமில்லை. எனவே, (அதை மகிழ்ச்சிகரமானதாக ஆக்கிக் கொள்ள உழைக்கிற மதீனாவாசிகளான) அன்சாரிகளையும் (மக்காவாசிகளான) முஹாஜிர்களையும் கண்ணியப்படுத்துவாயாக!” என்று (பாடலிலேயே) பதிலளித்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2962-2963

முஜாஷிஉ(ரலி) அறிவித்தார். நானும் என் சகோதரரும் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம். நான் நபி(ஸல்) அவர்களிடம், ‘ஹிஜ்ரத் செய்ய (மார்க்கத்திற்காகத் தாயகம் துறக்க) எங்களிடம் உறுதிமொழி வாங்குங்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஹிஜ்ரத் (அதற்குரிய வேளையில்) அதற்குரியவர்களுக்கு (கடமையாகி) நடந்து முடிந்துவிட்டது. (இஸ்லாம் மேலோங்கிவிட்டதால் இனி அது தேவையில்லை)” என்று பதிலளித்தார்கள். நான், ‘(இனி) வேறெதற்காகத் தாங்கள் எங்களிடம் உறுதிமொழி வாங்குவீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இஸ்லாத்தைச் செயல்படுவதற்காகவும் (இறைவழியில்) அறப்போரிடுவதற்காகவும் (உறுதிமொழி வாங்குவேன்)” என்று பதிலளித்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2964
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். இன்று என்னிடம் ஒருவர் வநது, ஒரு விஷயத்தைக் குறித்து கேட்டார். அவருக்கு என்ன பதில் கூறுவது என்று எனக்குத் தெரியவில்லை. அவர், ‘ஆயுத பாணியான, செயல் வேகமுள்ள ஒருவர் தம் தலைவர்களுடன் புனிதப் போரில் கலந்து கொள்கிறார். அப்போது தலைவர் அவரால் செய்ய முடியாத சில விஷயங்களைச் செய்யும்படி (வற்புறுத்தி) அவருக்கு உத்தரவிடுகிறார் எனில் அவர் என்ன செய்வது?’ என்று கேட்டார். நான், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு என்ன(பதில்) சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், நாங்கள் (இத்தகைய புனிதப் போர்களில்) நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போதெல்லாம் அவர்கள் ஒரு விஷயத்தை ஒருமுறை தான் உத்தரவிடுவார்கள். நாங்கள் அதைச் செய்து விடுவோம். நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கும் வரை நன்மையில் இருப்பீர்கள். (நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சித் தலைவருக்குக் கீழ்ப்படிவதால் தீங்கேதும் நேராது.) உங்கள் உள்ளத்தில் சந்தேகம் ஏதும் ஏற்பட்டால் (விஷயமறிந்த) யாரிடமாவது கேளுங்கள். அவர், உங்கள் (நெருடலை நீக்கி) சந்தேகத்தை நிவர்த்தி செய்யக்கூடும். (இனிவரும் காலங்களில்) அத்தகைய (தகுதி வாய்ந்த ஒரு)வரை நீங்கள் அடைய முடியாமலும் போகக் கூடும். எவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவரும் இல்லையோ அவன் மீதாணையாக! இந்த உலகத்தில் போனது போக எஞ்சியிருப்பவற்றை, தூய நீர் குடிக்கப்பட்டு கசடுகள் மட்டும் எஞ்சி (தேங்கி நின்று)விட்ட ஒரு குட்டையாகவே கருதுகிறேன்” என்று கூறினேன்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2965
உமர் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்) அவர்களின் அடிமையாகவும் அவர்களின் எழுத்தராகவும் இருந்த சாலிம் அபுள் நள்ர்(ரஹ்) அறிவித்தார்.
உமர் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்) அவர்களுக்கு அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) கடிதம் எழுதினார்கள். அதில் எழுதியிருந்ததை நான் படித்துக் காட்டினேன். (அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எதிரிகளைப் போர்க் களத்தில் சந்தித்த நாள்களில் ஒருமுறை சூரியன் உச்சி சாயும் வரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2966

பிறகு மக்களிடையே எழுந்து நின்று உரை நிகழ்த்தலானார்கள்: மக்களே! (போர்க்களம் சென்று) எதிரிகளைச் சந்திக்க வேண்டுமென்று ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம் (போரைத் தவிர்க்க வாய்ப்பளித்து) அமைதி நிலை தரும்படி கேளுங்கள். (அதையும் மீறி) எதிரிகளை (போர்க்களத்தில்) சந்திக்க நேரிட்டால் நிலைகுலைந்து விடாமல் போரின் துன்பங்களைச் சகித்துக் கொண்டு பொறுமையாயிருங்கள். மேலும், சொர்க்கம் வாட்களின் நிழல்களில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு, ‘இறைவா! வேதத்தை அருள்பவனே! மேகத்தை நகர்த்திச் செல்பவனே! படைகளைத் தோற்கடிப்பவனே! இ(ப்பகை)வர்களைத் தோற்கடித்து இவர்களுக்கெதிராக எங்களுக்கு உதவுவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2967
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் புனிதப் போருக்குச் சென்றேன். நான், களைப்படைந்து நடக்க முடியாமல் போய்க்கொண்டிருந்த நீர் சுமக்கும் ஒட்டகம் ஒன்றின் மீது அமர்ந்து சென்று கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னை (வழியில்) வந்தடைந்தார்கள். அப்போது என்னிடம், ‘உன் ஒட்டகத்திற்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். நான், ‘அது களைப்படைந்துவிட்டது” என்று பதிலளித்தேன். அதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சற்றுப் பின்தங்கி அதை அதட்டி அதற்காக பிரார்த்தித்தார்கள். உடனே அது தனக்கு முன் சென்று கொண்டிருந்த ஒட்டகங்களை முந்திக் கொண்டு செல்லத் தொடங்கியது. நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘உன் ஒட்டகத்தை இப்போது எப்படிக் காண்கிறாய்?’ என்று கேட்டார்கள். நான், ‘நல்ல முறையில் காண்கிறேன். அது தங்களின் பரக்கத்தைப் பெற்றது” என்று சொன்னேன். உடனே அவர்கள், ‘நீ அதை எனக்கு விற்று விடுகிறாயா?’ என்று கேட்டார்கள். நான் (பதில் சொல்ல) வெட்கப்பட்டேன். (ஏனெனில்,) எங்களிடம் அதைத் தவிர நீர் சுமக்கும் ஒட்டகம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆயினும் நான், ‘சரி (விற்று விடுகிறேன்)” என்று பதிலளித்தேன். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியாயின் அதை எனக்கு விற்று விடு” என்று பதிலளித்தேன். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியாயின் அதை எனக்கு விற்று விடு” என்று கூற, நான் அதன் மீது சவாரி செய்து மதீனாவைச் சென்றடைய என்னை அனுமதிக்க வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் அவர்களுக்கு அந்த ஒட்டகத்தை விற்று விட்டேன். நான் அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நான் புது மாப்பிள்ளை” என்று சொல்லி ஊருக்கு விரைவாகச் செல்ல அனுமதி கேட்டேன். அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள். எனவே, நான் மற்ற மக்களை விட முன்னதாகச் சென்று மதீனாவை விட முன்னதாகச் சென்று மதீனாவை அடைந்து விட்டேன். அப்போது என்னை என் தாய்மாமன் (ஜத்து இப்னு கைஸ்) சந்தித்து ஒட்டகத்தைப் பற்றிக் கேட்டார். நான் அதை விற்றுவிட்டதை அவருக்குத் தெரிவித்தேன். அதற்காக அவர் என்னைக் குறை கூறினார். நான் நபி(ஸல்) அவர்களிடம் மதீனாவுக்கு சீக்கிரமாகச் செல்ல அனுமதி கேட்டபோது அவர்கள் என்னிடம், ‘நீ கன்னிப் பெண்ணை மணந்துகொண்டாயா? வாழ்ந்த அனுபவமுள்ள பெண்ணை மணந்து கொண்டாயா?’ என்று கேட்டிருந்தார்கள். அதற்கு நான், ‘வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணைத் தான் மணமுடித்துக் கொண்டேன்” என்று பதில் கூறினேன். அதற்கு அவர்கள், ‘கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? நீ அவளுடனும் அவள் உன்னுடனும் விளையாடலாமே” என்று கூறினார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! எனக்குச் சிறு வயது சகோதரிகள் பலர் இருக்கும் நிலையில் என் தந்தை (உஹுதுப் போரில்) மரணித்துவிட்டார்கள். அல்லது கொல்லப்பட்டுவிட்டார்கள். எனவே, அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கவோ, அவர்களைப் பராமரிக்கவோ இயலாத அவர்களைப் போன்றே (அனுபவமற்ற சிறுவயதுப் பெண்) ஒருத்தியை நான் மணந்து கொள்ள விரும்பவில்லை. எனவே, அவர்களைப் பராமரிப்பதற்காகவும் அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிப்பதற்காகவும் வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணையே மணந்தேன்” என்று பதிலளித்தேன்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்து சேர்ந்தபோது காலையில் ஒட்டகத்துடன் அவர்கள் அவர்களிடம் சென்றேன். எனக்கு அதன் விலையைக் கொடுத்தார்கள். பிறகு அந்த ஒட்டகத்தையும் என்னிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.
“(‘மதீனா வரை சவாரி செய்ய அனுமதிக்க வேண்டும்” என்பது போன்ற) இத்தகைய நிபந்தனையுடன் விற்பது நம்முடைய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது; இதில் தவறேதும் இருப்பதாக நான் கருதவில்லை” என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான அறிஞர் முஃகீரா(ரஹ்) கூறினார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2968
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். (எதிரிகள் படையெடுத்து வருவதாக) மதீனா நகரில் பீதி நிலவியது. உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அபூ தல்ஹா(ரலி) அவர்களின் குதிரை ஒன்றில் ஏறி (விபரமறிந்து வரப்) புறப்பட்டார்கள். அப்போது அவர்கள், ‘(பீதி ஏற்படுத்தும்) எதனையும் நாம் காணவில்லை. தங்கு தடையின்றி வேகமாக ஓடக் கூடியதாகவே நாம் இந்த குதிரையைக் கண்டோம்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2969
அனஸ்(ரலி) அறிவித்தார். (ஒருமுறை, எதிரிகள் படையெடுத்து வருவதாக மதீனா நகர) மக்கள் பீதிக்குள்ளானார்கள். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அபூ தல்ஹா(ரலி) அவர்களுக்குச் சொந்தமான மெதுவாக நடக்கக்கூடிய குதிரை ஒன்றில் ஏறிக் கொண்டு, (அதை) உதைத்துப் பாய்ந்தோடச் செய்தபடி தனியாகப் புறப்பட்டார்கள். அவர்களுக்குப் பின்னால் மக்கள் பாய்ந்து (வாகனங்களில்) ஏறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘பீதியடையாதீர்கள். (பீதியடையும் யாரும் படையெடுத்து வரவில்லை.) இந்தக் குதிரை தங்கு தடையின்றி வேகமாக ஒடக் கூடியதாக உள்ளது” என்று கூறினார்கள். அந்த நாளுக்குப் பிறகு, அந்தக் குதிரையை யாராலும் முந்த முடிந்ததில்லை.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2970
உமர்(ரலி) அறிவித்தார். நான் ஒருவரை இறைவழியில் அறப்போர் புரிய ஒரு குதிரையின் மீதேற்றி அனுப்பி வைத்தேன். (அவர் பயணம் செய்ய ஒரு குதிரையை இலவசமாகத் தந்துதவினேன்.) பிறகு அது (சந்தையில்) விற்கப்படுவதைக் கண்டேன். நபி(ஸல்) அவர்களிடம், ‘நான் அதை வாங்கட்டுமா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘அதை வாங்காதீர்கள். உங்கள் தருமத்தைத் திரும்பப் பெறாதீர்கள்” என்று கூறினார்கள். என அஸ்லம்(ரஹ்) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2971
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். உமர் இப்னு கத்தாப்(ரலி) ஒருவரை இறைவழியில் (போர் புரிய) ஒரு குதிரையின் மீதேற்றி அனுப்பி வைத்தார்கள். பிறகு, அந்தக் குதிரை சந்தையில் விற்கப்படுவதைக் கண்டு அதை வாங்க விரும்பி (அது பற்றி) அல்லாஹ்வின் தூதரிடம் கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அதை வாங்காதீர்கள். உங்கள் தருமத்தைத் திரும்பப் பெறாதீர்கள்” என்று கூறிவிட்டார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2972

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்பட்டு விடும் என்னும் அச்சம் மட்டும் எனக்கில்லாவிட்டால் நான் எந்தச் சிறுபடைக் குழுவிலிருந்தும் (அதில் கலந்து கொள்ளாமல்) பின்தங்கியிருக்க மாட்டேன். ஆயினும், என்னைச் சுமந்து செல்லும் வாகனமும் என்னிடம் இல்லை. என் தோழர்களை ஏற்றிச் செல்ல (போதிய) வாகன வசதியும் என்னிடம் இல்லை. ஆனால், அவர்கள் என்னுடன் (போருக்கு) வர முடியாமல் பின்தங்க வேண்டியிருப்பது எனக்கு மனவேதனையளிக்கிறது. மேலும், நான் இறைவழியில் போரிட்டு அதனால் கொல்லப்பட்டு, மீண்டும் உயிராக்கப்பட்டு மீண்டும் (இறைவழியில் போரிட்டுக்) கொல்லப்பட்டு, மீண்டும் உயிராக்கப்பட (இவ்வாறே மீண்டும் மீண்டும் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்ய) வேண்டும் என்று விரும்புகிறேன்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2973
யஃலா இப்னு உமய்யா(ரலி) அறிவித்தார். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் தபூக் போரில் கலந்து கொண்டேன். நான் இளவயது ஒட்டகம் ஒன்றில் (ஒருவரை அறப்போருக்கு) எற்றி அனுப்பினேன். அதை என் நற்செயல்களிலேயே உறுதியானதாக என் மனத்தில் கருதுகிறேன். அப்போது (அறப்போரில் உதவி புரிய) பணியாள் ஒருவரை அமர்த்தினேன். அந்தப் பணியாள் ஒரு மனிதரோடு போரிட்டார். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரைக் கடித்துவிட்டார். கடிபட்டவர் தன்னுடைய கையை, கடித்தவரின் வாயிலிருந்து உருவினார் அப்போது கடித்தவரின் முன்பல்லை அவர் பிடுங்கப்பட்டவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். (பல்லைப் பிடுங்கியவர் மீது வழக்கு தொடுத்தார்.) அதற்கு நஷ்ட ஈடு தரத் தேவையில்லை என்று நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். அப்போது, ‘நீ ஒட்டகம் மெல்வது போல் மென்று கொண்டிருக்க, அவர் தன் கையை உனக்குக் கொடுத்துக் கொண்டிருப்பாரா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2974
சஅலபா இப்னு அபீ மாலிக் அல்குரழீ(ரஹ்) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கொடியை எடுத்துச் செல்பவராயிருந்த கைஸ் இப்னு ஸஅத் அல் அன்சாரீ(ரலி) ஹஜ் செய்ய விரும்பியபோது தலைவாரினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2975
ஸலமா இப்னு அக்வஃ(ரலி) கூறினார். அலீ(ரலி) கைபர் போரின்போது நபி(ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டிருந்தார்கள். அவர்களுக்குக் கண்வலி ஏற்பட்டிருந்தது. ‘நான் அல்லாஹ்வின் தூதருடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டேனே” என்று (வருத்தத்துடன்) கூறினார்கள். எந்த நாளின் காலை வேளையில் கைபரை நபி(ஸல்) அவர்கள் வெற்றி கொண்டார்களோ அந்த நாளின் மாலை நேரம் வந்தபோது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கிற ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப் போகிறேன்” என்றோ, ‘அத்தகைய ஒருவர் இந்தக் கொடியைப் பிடித்திருப்பார்” என்றோ அல்லது, ‘அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிற ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப் போகிறேன்” என்றோ சொல்லிவிட்டு, ‘அவருக்கு அல்லாஹ் வெற்றியளிப்பான்” என்று கூறினார்கள். நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் அலீ(ரலி) வந்து எங்களுடன் இருக்கக் கண்டோம். உடனே மக்கள், ‘இதோ, அலீ அவர்கள்!” என்று கூறினர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களிடம் கொடியைக் கொடுக்க, அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தான்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2976
நாஃபிஃ இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார். ஸுபைர்(ரலி) அவர்களிடம் அப்பாஸ்(ரலி) (ஹஜூன் என்னுமிடத்தைச் சுட்டிக் காட்டி), ‘நபி(ஸல்) அவர்கள் (மக்கா வெற்றியின் போது) உங்களை இங்கு தான் கொடியை நடச் சொன்னார்கள்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2977
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” நான் ஒருங்கிணைந்த (பொருள்களைத் தரும்) சொற்களுடன் அனுப்பப்பட்டுள்ளேன். (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய மதிப்பு கலந்த) அச்சம் விதைக்கப்பட்டு எனக்கு உதவப்பட்டுள்ளது. (ஒருமுறை) நான் உறங்கிக் கொண்டிருக்கையில் பூமியின் கருவூலங்களுடைய சாவிகள் கொண்டு வரப்பட்டு என் கையில் வைக்கப்பட்டன.
இதை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்துவிட்டு, ‘நபி(ஸல்) அவர்கள் சென்றார்கள். நீங்கள் அந்தக் கருவூலங்களை (தோண்டி) வெளியே எடுத்து (அனுபவித்துக்) கொண்டிருக்கிறீர்கள்” என்றார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2978
அபூ சுஃப்யான்(ரலி) அறிவித்தார். நாங்கள் ஈலியா (ஜெரூசலம்) நகரில் இருந்தபோது ரோம (பைஸாந்தியப்) பேரரசர் ஹெராக்ளியஸ் எங்களைக் கூப்பிட்டனுப்பினார். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கடிதத்தை வரவழைத்தார். கடிதத்தைப் படித்து(க் காட்டி) முடித்தவுடன் அவரிடம் (இருந்த பிரமுகர்களிடையே) கூச்சல் குழப்பம் ஏற்பட்டு அதிகரித்துவிட்டது. குரல்கள் உயர்ந்தன. நாங்கள் (அரசவையிலிருந்து) வெளியேற்றப்பட்டோம். அப்போது நான் என் தோழர்களிடம், ‘அபூ சுப்ஷாவின் மகனுடைய (முஹம்மதுடைய) அந்தஸ்து உயர்ந்து விட்டிருக்கிறது. மஞ்சள் நிறத்தவரின் (ம்ழக்கு ஐரோப்பியர்களின் அதிபர் (கூட) அவருக்கு அஞ்சுகிறார்” என்று கூறினேன்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2979
அஸ்மா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்ய முனைந்தபோது, அவர்களின் பயண உணவை நான் (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) அவர்களின் வீட்டில் தயாரித்தேன். அவர்களின் பயண உணவையும் (தண்ணீருக்கான) தோல் பையையும் (ஒட்டகத்தில் வைத்துக்) கட்டுவதற்குத் தேவையான (சேணக் கச்சு) எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. எனவே, நான் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! என்னுடைய இந்த இடுப்புக் கச்சைத் தவிர இதைக் கட்டுவதற்குத் தேவையான (சேணக் கச்சு) எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை” என்று கூறினேன். அதற்கு அபூ பக்ர்(ரலி), ‘அதை இரண்டாகக் கிழித்து, ஒன்றினால் (தண்ணீருக்கான) தோல்பையையும் மற்றொன்றினால் பயண உணர்வையும் கட்டு” என்று கூறினார்கள். நான் அவ்வாறே செய்தேன். இதனால் தான் எனக்கு ‘இரட்டைக் கச்சுக்காரர்’ என்று பட்டப் பெயர் சூட்டப்பட்டது.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2980
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்தில், நாங்கள் மதீனா நகருக்குச் செல்லும்போது குர்பானி (தியாகப் பிராணியின்) இறைச்சிகளைப் பயண உணவாக எடுத்துச் செல்வோம்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2981
சுவைத் இப்னு நுஃமான்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் கைபர் போர் நடந்த ஆண்டில் (கைபர் போருக்காகப்) புறப்பட்டேன். அவர்கள் ‘ஸஹ்பா’ எனுமிடத்தில் – இதுவும் கைபர் பகுதிக்கு உட்பட்டதே – இருந்தபோது அஸர் தொழுகையைத் தொழுதார்கள். நபி(ஸல்) அவர்கள் உணவுகளைக் கொண்டு வரச் சொல்லி உத்தரவிட்டார்கள். நபி(ஸல்) அவர்களுக்கு மாவு மட்டுமே) கொடுக்கப்பட்டது. அதை நாங்கள் மென்று உண்டோம்; (தண்ணீரும்) அருந்தினோம். பிறகு நபி(ஸல்) அவர்கள் எழுந்து, வாய் கொப்பளித்தார்கள். நாங்களும் வாய் கொப்பளித்தோம். பிறகு (அனைவரும் சேர்ந்து) தொழுதோம்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2982

ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார். மக்களுடைய பயண உணவுகள் தீர்ந்து போய் வறுமை வாய்ப்பட்டார்கள்; எனவே, நபி(ஸல்) அவர்களிடம் தங்கள் ஒட்டகங்களை (உண்பதற்காக) அறுக்க அனுமதி கேட்டு வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு அனுமதி கொடுத்தார்கள். மக்களை (அவர்கள் திரும்பிச் செல்லும்போது வழியில்) உமர்(ரலி) கண்டார்கள். மக்கள் உமர்(ரலி) அவர்களுக்கு விபரத்தைத் தெரிவிக்கவே உமர்(ரலி), ‘உங்கள் ஒட்டகங்கள் (அறுத்து உண்ணப்பட்டுப்) போன பிறகு (நீண்ட தூரம் நடந்தே சென்றால்) நீங்கள் உயிர் பிழைப்பது எப்படி?’ என்று கேட்டார்கள். பிறகு உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் சென்று, ‘இறைத்தூதர் அவர்களே! மக்கள் தங்கள் ஒட்டகங்களை அறுத்து உண்ட பின்பு அவர்கள் (நடந்தே பயணம் சென்றால்) உயிர் பிழைப்பது எப்படி?’ என்று கேட்டார்கள். (இதைக் கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘தங்கள் பயணச் சாதக் கட்டுகளில் எஞ்சியிருப்பவற்றைக் கொண்டு வரும்படி மக்களிடையே கூவி அழையுங்கள்” என்று கூறிவிட்டு (அவையெல்லாம் கொண்டு வரப்பட்டவுடன்) அவற்றில் இறைவனின் பரக்கத் (எனும் அருள்வளத்)திற்காக பிரார்த்தித்தார்கள். பிறகு, மக்களைத் தம் பாத்திரங்களைக் கொண்டு வரும்படி அழைத்தார்கள். மக்கள் தங்கள் (கைகளால்) திருப்தியடையும் வரை அள்ளினார்கள். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் வைத்தவிர வேறெவருமில்லை என்றும் நான் இறைத்தூதர் என்றும் சாட்சி கூறுகிறேன்” என்றார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2983

ஜாபிர்(ரலி) அறிவித்தார். நாங்கள் முந்நூறு பேர் எங்கள் பயண உணவை எங்கள் பிடரியில் சுமந்து கொண்டு (புனிதப் போருக்காகப்) புறப்பட்டோம். எங்கள் பயண உணவு (நாளாக, ஆகக்) குறையலாயிற்று. எந்த அளவிற்கென்றால் நாங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பேரீச்சம் பழம் மட்டுமே உண்ண வேண்டிய நிலைக்கு ஆளாகி விட்டோம்… இதை ஜாபிர்(ரலி) அறிவித்துக் கொண்டிருந்தபோது ஒருவர், ‘அபூ அப்தில்லாஹ்வே! (ஒரு நாள் முழுவதற்கும்) ஒரு பேரீச்சம் பழம் ஒருவருக்கு எப்படிப் போதுமாகும்?’ என்று கேட்டார். நாங்கள் பயண உணவை இழந்தபோது மிகவும் கவலையடைந்தோம். இறுதியில், நாங்கள் கடலை வந்தடைந்தபோது (திமிங்கல வகை) மீன் ஒன்றைக் கண்டோம். கடல் அதை (கரையில்) எறிந்து விட்டிருந்தது. நாங்கள் அதிலிருந்து பதினெட்டு நாள்கள் நாங்கள் விரும்பியவாறு உண்டோம்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2984
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்யச் சென்றபோது நான், ‘இறைத்தூதர் அவர்களே! தங்கள் தோழர்கள் ஹஜ் மற்றும் உம்ராவின் நற்பலனைப் பெற்றுத் திரும்புகிறார்கள். ஆனால், நானோ ஹஜ்ஜை விட அதிகமாக (உம்ரா எதையும்) செய்யவில்லையே!” என்று (ஏக்கத்துடன்) கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘நீ (உம்ரா செய்யப்) போ! என்னிடம், ‘நீ உம்ரா செய்யப்) போ! உன்னை (உன் சகோதரர்) அப்துர் ரஹ்மான் (வாகனத்தில் தனக்குப்) பின்னால் உட்கார வைத்துக் கொள்ளட்டும்” என்று கூறிவிட்டு, அப்துர் ரஹ்மான் அவர்களை ‘தன்யீம்’ என்னுமிடத்திலிருந்து என்னை உம்ராவுக்கு அழைத்துச் செல்லும்படி கட்டளையிட்டார்கள். நான் (உம்ராவை நிறைவேற்றிவிட்டுத் திரும்பி) வரும்வரை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை எதிர்பார்த்து மக்காவின் மேற்பகுதியில் காத்திருந்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2985
அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். ஆயிஷா(ரலி) அவர்களை வாகனத்தில் எனக்குப் பின்னால் உட்கார வைத்துக் கொண்டு, ‘தன்யீம்’ என்னுமிடத்திலிருந்து அவர்களை உம்ரா செய்ய அழைத்துச் செல்லும்படி நபி(ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2986
அனஸ்(ரலி) அறிவித்தார். நான் அபூ தல்ஹா(ரலி) அவர்களின் (வாகனத்தில் அவர்களுக்குப்) பின்னால் அமர்ந்திருந்தேன். அப்போது மக்கள் (நபித் தோழர்கள்) ஹஜ், உம்ரா இரண்டுக்குமே உரக்க ‘தல்பியா’ கூறிக் கொண்டிருந்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2987
உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கழுதையின் மீது அமர்ந்து சவாரி செய்தார்கள். கழுதையின் சேண இருக்கையின் மீதிருந்த பூம்பட்டு விரிப்பொன்றின் மேல் அவர்கள் அமர்ந்திருந்தார்கள். தமக்குப் பின்னே என்னைக் கழுதையின் மீது அமர்த்தினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2988
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, தம் வாகனத்தின் மீது உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களை அமர வைத்துக் கொண்டு மக்காவின் மேற்பகுதியிலிருந்து முன்னேறிச் சென்றார்கள். அப்போது அவர்களுடன் பிலால்(ரலி) அவர்களும் கஅபாவின் காவல் பொறுப்பில் இருந்த உஸ்மான் இப்னு தல்ஹா(ரலி) அவர்களும் இருந்தனர். நபி(ஸல்) அவர்களின் வாகனம் இறுதியில் பள்ளிவாசலில் சென்று மண்டியிட்டு அமர்ந்தது. நபி(ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவின் சாவியைக் கொண்டு வரும்படி உஸ்மான் இப்னு தல்ஹா(ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். (சாவி கொண்டு வரப்பட்டதும்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கஅபாவைத் திறந்து கொண்டு உஸாமா(ரலி), பிலால்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகியோருடன் உள்ளே நுழைந்தார்கள். அங்கே நீண்ட ஒரு பகல் நேரத்திற்குத் தங்கியிருந்தார்கள். பிறகு வெளியே வந்தார்கள். மக்கள் கஅபாவினுள் நுழைய ஒருவரோடொருவர் போட்டியிட்டனர். நானே (அதனுள்) முதலில் நுழைந்தவன். அப்போது பிலால்(ரலி) அவர்களை வாசலின் பின்னே நின்று கொண்டிருக்கக் கண்டேன். உடனே, பிலால்(ரலி) அவர்களிடம், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்கே தொழுதார்கள்?’ என்று கேட்டேன். பிலால்(ரலி), நபி(ஸல்) அவர்கள் தொழுத இடத்தைச் சைகையால் சுட்டிக் காட்டினார்கள். நான் அவர்களிடம், ‘எத்தனை ரக்அத்துகள் நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள்” என்று கேட்க மறந்து விட்டேன்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2989
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” மக்கள் தம் மூட்டுகள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கிற ஒவ்வொரு நாளிலும் தருமம் செய்வது அவர்களின் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தருமமாகும்; அல்லது அவரின் பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தருமமாகும். நல்ல (இனிய) சொல்லும் ஒரு தருமமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தருமமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிந்து அகற்றுவதும் ஒரு தருமமேயாகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2990
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் திருக்குர்ஆனுடன் (திருக்குர்ஆனின் பிரதியுடன்) எதிரியின் நாட்டிற்குப் பயணம் செய்வதைத் தடை செய்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2991
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கைபருக்குக் காலை நேரத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்போது அங்குள்ள மக்கள், தங்கள் கழுத்துகளில் மண்வெட்டிகளை மாட்டிக் கொண்டு (வயல்வெளிகளுக்குப்) புறப்பட்டு விட்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், ‘முஹம்மதும் (அவரின்) ஐந்து வியூகங்கள் கொண்ட படையினரும் வந்துள்ளனர்” என்று கூறினர். உடனே, கோட்டைக்குச் சென்று அடைக்கலம் புகுந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் தம் இரண்டு கைகளையும் உயர்த்தி, ‘அல்லாஹு அக்பர்! கைபர் பாழ்படட்டும்! நாம் ஒரு சமுதாயத்தினரின் (போர்க்) களத்தில் இறங்கி விடடோமென்றால் எச்சரிக்கப்படுகிற அவர்களின் காலை நேரம் மிகக் கெட்டதாம் விடும்” என்று கூறினார்கள். எங்களுக்குக் கழுதைகள் சில கிடைக்கவே அவற்றை நாங்கள் சமைத்தோம். நபி(ஸல்) அவர்களின் அறிவிப்பாளர், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கழுதைகளின் இறைச்சிகளை உண்ணத் தடை விதிக்கிறார்கள்” என்று (உரக்கக்) கூவி அறிவித்தார். உடனே, பாத்திரங்கள் அவற்றிலிருந்த இறைச்சிகளுடனேயே கவிழ்க்கப்பட்டுவிட்டன.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2992
அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார். நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறும்போது, ‘லா இலாஹ இல்லல்லாஹ் – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை” என்றும் ‘அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன்” என்றும் கூறி வந்தோம். (ஒரு கட்டத்தில்) எங்கள் குரல்கள் உயர்ந்துவிட்டன. அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (அவசரப்படாதீர்கள். மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கில்லாதவனையோ அழைக்கவில்லை. அவன் உங்களுடனேயே இருக்கிறான். அவன் செவியேற்பவன்; அருகிலிருப்பவன் (இறைவனான) அவனுடைய திருப்பெயர் நிறைவானது. அவனுடைய மதிப்பு உயர்ந்தது” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2993
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார். நாங்கள் (மேட்டில்) ஏறும்போது ‘அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன்’ என்று தக்பீர் கூறி வந்தோம்; (பள்ளத்தாக்குகளில்) இறங்கும்போது ‘சுப்ஹானல்லாஹ் – அல்லாஹ் குறைகளிலிருந்தும் பலவீனங்களிலிருந்தும் தூய்மையானவன்’ என்று தஸ்பீஹ் செய்து வந்தோம்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2994
ஜாபிர்(ரலி) அறிவித்தார். நாங்கள் (மேட்டில்) ஏறும்போது ‘அல்லாஹு அக்பர்” என்று (தக்பீர்) கூறுவோம். பள்ளத்தில் இறங்கும்போது ‘சுப்ஹானல்லாஹ்” என்று கூறுவோம்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2995
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜிலிருந்தோ உம்ராவிலிருந்தோ அல்லது புனிதப் போரிலிருந்தோ திரும்பும்போது, ஒரு மலைப்பாதையில் அல்லது ஒரு கெட்டியான நிலத்தில் மேடான பகுதியில் ஏறிச் செல்லும் போதெல்லாம் மூன்று முறை, ‘அல்லாஹு அக்பர்” என்று கூறுவார்கள். பிறகு பின்வருமாறு கூறுவார்கள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவர் எவருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் ஆற்றல் பெற்றவன். பாவமன்னிப்புக் கோரியவர்களாகவும், வணக்கம் புரிந்தவர்களாகவும், எங்கள் இறைவனுக்குச் சிரம் பணிந்தவர்களாகவும், நாங்கள் திரும்புகிறோம். அல்லாஹ் தன் வாக்குறுதியை மெய்ப்படுத்திவிட்டான்; தன் அடியாருக்கு உதவினான்; தன்னந்தனியாக நின்று குலங்கள் அனைத்தையும் தோற்கடித்து விட்டான்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2996
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”அடியான் ஆரோக்கியமானவனாய், ஊரிலிருக்கும்போது செய்யும் நற்செயல்களுக்குக் கிடைப்பது போன்ற (அதே) நற்பலன் அவன் நோயுற்று விடும்போது அல்லது பயணத்தில் இருக்கும்போது (அவன் பாவம் எதுவும் செய்யாமலிருக்கும் வரை) அவனுக்கு எழுதப்படும்.
இதை அறிவித்த அபூ புர்தா(ரஹ்), ‘இதைப் பலமுறை (என் தந்தை) அபூ மூஸா அஷ்அரீ(ரலி) சொல்ல நான் செவியுற்றிருக்கிறேன்” என்று தம்முடன் பயணத்தில் நோன்பு நோற்றுக் கொண்டு வந்த யஸீத் இப்னு அபீ கப்ஷா(ரஹ்) அவர்களிடம் கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2997
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் அகழ்ப்போரின்போது (‘இரவில் தனியாகச் சென்று எதிரிகளை வேவு பார்ப்பதற்கு முன்வருவது யார்?’ என்று மக்களை) அழைத்தார்கள். ஸுபைர் இப்னு அவ்வாம்) அவர்கள் முன்வந்தார்கள். மீண்டும் மக்களை அழைத்தார்கள். (மீண்டும்) ஸுபைர் அவர்களே முன்வந்தார்கள். மீண்டும் மக்களை அழைத்தார்கள். (மீண்டும்) ஸுபைர் அவர்களே முன்வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (பிரத்தியேகமான) உதவியாளர் ஒருவர் உண்டு; என்னுடைய (பிரத்தியேக) உதவியாளர் ஸுபைராவார்” என்று கூறினார்கள்.
சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்), ‘மூலத்தில் இடம் பெற்றுள்ள ‘ஹவாரீ’ என்பது உதவி புரிபவரைக் குறிக்கும்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2998
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” தனிமையில் (பயணம் செய்வதில்) உள்ள, நான் அறிந்திருக்கிற சிரமங்களை மக்கள் அறிந்திருந்தால் எந்தப் பணியும் இரவில் தனியாகப் பயணம் செய்ய மாட்டார். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2999
உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார். உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களிடம் ‘ஹஜ்ஜத்துல் வதா’வின்போது (அரஃபாவிலிருந்து திரும்பி வருகையில்) நபி(ஸல்) அவர்களின் பயண வேகம் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘நபி(ஸல்) அவர்கள் சாதாரண வேகத்தில் செல்பவர்களாக இருந்தார்கள். (மக்கள் நெரிசல் இல்லாத) விசாலமான இடைவெளியைக் கண்டால் வேக வேகமாகச் செல்வார்கள்” என்று பதிலளித்து விடடு, ‘வேகமாக” என்பது சாதாரண வேகத்தை விட அதிகமாக உள்ள வேகத்தைக் குறிக்கும்” என்று உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.
அறிவிப்பாளர் யஹ்யா அல் கத்தான்(ரஹ்), ‘எனக்கு இதை அறிவித்த உர்வா(ரஹ்), ‘நான் உஸாமா(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட இந்தக் கேள்வியை நேரடியாகச் செவியுற்றுக் கொண்டிருந்தேன்’ என்று கூறினார்கள்: ஆனால், அதை நான் (ஆரம்பத்தில்) சொல்ல மறந்து விட்டேன்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3000
அஸ்லம்(ரஹ்) அறிவித்தார். நான் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களுடன் மக்கா (செல்லும்) சாலையில் இருந்தேன். அப்போது அவர்களுக்கு (அன்னாரின் துணைவியார்) ஸஃபிய்யா பின்த்து அபீ உபைத்(ரலி) கடுமையான (நோயின்) வேதனையில் இருப்பதாகச் செய்தி எட்டியது. உடனே, அவர்கள் விரைந்து பயணம் செய்யலானார்கள். கீழ் வானில் தெரியும் செம்மை மறைந்துவிட்ட பின் (வாகனத்திலிருந்து) இறங்கி மக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள். மேலும், ‘நபி(ஸல்) அவர்கள் விரைந்து பயணம் செல்ல நேரிடும்போது மக்ரிபைப் பிற்படுத்தி, மக்ரிபையும் இஷாவையும் (இஷா நேரத்தில்) சேர்த்துத் தொழுவதை பார்த்திருக்கிறேன்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3001

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” பயணம் வேதனையின் ஒரு பங்காகும். அது உங்களை உறங்க விடாமலும், உண்ண விடாமலும், பருக விடாமலும் தடுத்து விடும். எனவே, உங்களில் ஒருவர் (ஒரு வேலையாகப் பயணம் புறப்பட்டுச் சென்று) தன் தேவையை முடித்துக் கொண்டால் அவர் தன் வீட்டாரிடம் விரைவாக (திரும்பிச்) சென்று விடட்டும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3002
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். உமர் இப்னு கத்தாப்(ரலி) (ஒருவரை) இறைவழியில் (போரிட) குதிரையொன்றில் ஏற்றி அனுப்பினார்கள். பிறகு, அது (சந்தையில்) விற்கப்படுவதைக் கண்டார்கள். அதை வாங்க விரும்பி, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (‘அதை வாங்கலாமா?’ என்று) கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அதை வாங்காதீர்கள். உங்கள் தருமத்தைத் திரும்பப் பெறாதீர்கள்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3003
உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார். நான் ஒருவரை இறைவழியில் (போரிடுவதற்காக) குதிரையின் மீது ஏற்றி அனுப்பினேன். தன்னிடம் இருந்த அந்த குதிரையை அவர் விற்றார்… அல்லது வீணாக்க இருந்தார். அதை நான் வாங்கிக் கொள்ள விரும்பினேன். அதை அவர் மலிவான ஒரு விலைக்கு விற்று விடுவார் என்று நான் எண்ணினேன். எனவே, நபி(ஸல்) அவர்களிடம் (அதை வாங்கலாமா என்று ஆலோசனை) கேட்டேன். அவர்கள், ‘அதை வாங்காதீர்கள்; அது ஒரு திர்ஹமுக்குக் கிடைப்பதாயிருந்தாலும் சரி! ஏனெனில், தன் அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன், தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கிற நாயைப் போன்றவன்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3005
அபூ பஷீர் அல் அன்சாரி(ரலி) கூறினார். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் பயணம் ஒன்றில் அவர்களுடன் இருந்தேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தூதுவர் ஒருவரை அனுப்பி, ‘எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் (ஒட்டக வாரினால் ஆன, கண் திருஷ்டி கழிவதற்காகக் கட்டப்படுகிற) கயிற்று மாலையோ அல்லது (காற்று, கருப்பு விரட்டுவதற்காகக் கட்டப்படுகிற) வேறெந்த மாலையோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் கட்டாயம் அதைத் துண்டித்து விட வேண்டும்” என்று (பொது மக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு அபீ பக்ர்(ரஹ்), ‘அப்போது மக்கள் தங்கள் உறங்கும் இடத்தில் இருந்தார்கள்’ என்று அபூ பஷீர்(ரலி) கூறினார் என எண்ணுகிறேன்” என்று கூறுகிறார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3006
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். “ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பயணம் செய்ய வேண்டாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்துள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுவிட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)” என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், ‘நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3007

அலீ(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னையும் ஸுபைர் அவர்களையும் மிக்தாத் அவர்களையும் ‘நீங்கள் ‘ரவ்ளத்து காக்’ என்னுமிடம் வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் ஒரு பெண் இருக்கிறாள். அவளிடம் ஒரு கடிதம் இருக்கும். அதை அவளிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறி அனுப்பினார்கள். (அவ்வாறே) நாங்கள் சென்றோம். எங்களைச் சுமந்து கொண்டு எங்கள் குதிரைகள் விரைந்தோடின. இறுதியில், நாங்கள் ‘ரவ்ளா’ எனும் அந்த இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு (சிவிகைப்) பெண்ணைக் கண்டோம். நாங்கள் (அவளிடம்), ‘கடிதத்தை வெளியே எடு” என்று கூறினோம். அவள், ‘என்னிடம் கடிதம் எதுவுமில்லை” என்று கூறினாள். நாங்கள், ‘ஒன்று நீயாகக் கடிதத்தை எடுத்து (கொடுத்து) விடு; இல்லையேல் (உன்) ஆடையை நாங்கள் கழற்றி (சோதனையிட்டு) விடுவோம்” என்று சொன்னோம். உடனே, அவள் (இடுப்பு வரை நீண்டிருந்த) தன்னுடைய சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றோம். அதில், ஹாத்திப் இப்னு அபீ பல்தஆ அவர்கள் மக்காவாசிகளான இணைவைப்போரிடையுள்ள பிரமுகர்கள் சிலருக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (ரகசியத்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருந்ததைக் கண்டோம். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘ஹாத்திபே! என்ன இது?’ என்று கேட்டார்கள். ஹாத்திப்(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! என் விஷயத்தில் அவரசப்பட்டு (நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள். நான் குறைஷிகளில் ஒருவனாக இருக்கவில்லை. அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவனாக இருந்து வந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களின் வீட்டாரையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கிறார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர்கள் (எவரும்) இல்லாததால் மக்காவாசிகளுக்கு உபகாரம் எதையாவது செய்து, அதன் காரணத்தால் அவர்கள் என் உறவினர்களைக் காப்பாற்ற வேண்டுமென்று விரும்பினேன். (அதனால் அவர்கள் கேட்டுக் கொண்ட படி இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் சத்திய மார்க்கத்தை நிராகரித்தோ, (இஸ்லாத்தைத் துறந்து) வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவிய பின் இறைமறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லை” என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘இவர் உங்களிடம் உண்மை பேசினார்” என்று கூறினார்கள். உமர்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டி விட என்னை அனுமதியுங்கள்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும், உமக்கென்ன தெரியும்? ஒருவேளை அல்லாஹ் பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களைப் பார்த்து, ‘நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்து விட்டேன்’ என்று கூறி விட்டிருக்கலாம்” என்றார்கள்.
“என்ன (பலமான) அறிவிப்பாளர் தொடர் இது!” என்று இந்த நபிமொழியின் அறிவிப்பாளர் தொடரைக் கண்டு இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) (வியந்து) கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3008
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். பத்ருப் போரின்போது போர்க் கைதிகள் (கைது செய்யப்பட்டுக்) கொண்டு வரப்பட்டனர். (அப்போது எதிரணியில் இருந்த நபி(ஸல்) அவர்களின் பெரியதந்தை) அப்பாஸ்(ரலி) அவர்களும் (கைதியாகக்) கொண்டு வரப்பட்டார்கள். அவரிடம் அணிவதற்கு ஆடை எதுவும் இல்லாதிருந்தது. நபி(ஸல்) அவர்கள் ஒரு சட்டையைத் தேடினார்கள். (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபையின் சட்டை அவர்களுக்கு அளவில் பொருத்தமாக அமைந்திருப்பதைக் கண்டார்கள். அதையே அப்பாஸ்(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் அணிவித்தார்கள். இதன் காரணத்தால் தான் அப்துல்லாஹ் இப்னு உபை (இறந்த பின்பு அவனு)க்கு நபி(ஸல்) அவர்கள் தங்களின் சட்டையைக் கழற்றி அணிவித்தார்கள்.
“அப்துல்லாஹ் இப்னு உபை, நபி(ஸல்) அவர்களுக்கு இந்த வகையில் ஓர் உபகாரம் செய்திருந்தான். நபி(ஸல்) அவர்கள் அதற்குப் பிரதியுபகாரம் செய்ய விரும்பினார்கள்” என்று அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3009
ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கைபர் போரின்போது, ‘நாளை நான் ஒரு மனிதரிடம் இஸ்லாமியச் சேனையின் கொடியைக் கொடுப்பேன். அல்லாஹ் அவரின் கரங்களில் வெற்றியைக் கொடுப்பான். அவர் (எத்தகையவர் எனில்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார்; அவரை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கிறார்கள்” என்றார்கள். மக்கள், ‘நபி(ஸல்) அவர்கள் யாரிடம் கொடியைக் கொடுப்பார்கள்?’ என்று தமக்குள் (‘இன்னாரிடம் கொடுப்பார்கள்” என்று சிலரைக் குறிப்பிட்டுப்) பேசியபடி தங்கள் இரவைக் கழித்தார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் (இஸ்லாமியச் சேனையின்) கொடி தம் கரத்தில் கொடுக்கப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டபடி காலை நேரத்தை அடைந்தனர். (காலை நேரம் வந்தவுடன்) ‘அலீ எங்கே?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘அலீ அவர்களுக்குக் கண் வலி” என்று சொல்லப்பட்டது. எனவே, (அலீ அவர்களை அழைத்து வரச் செய்து) நபி(ஸல்) அவர்கள், அலீ அவர்களின் இரண்டு கண்களிலும் தம் எச்சிலை உமிழ்ந்து அவர்களுக்காக (வலி நீங்கிட) பிரார்த்தித்தார்கள். உடனே, அலீ அவர்கள் (அதற்கு முன்) தமக்கு வலியே இருந்ததில்லை என்பது போன்று குணமடைந்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் அலீ அவர்களிடம் கொடியைக் கொடுத்தார்கள். ‘அவர்கள் நம்மைப் போன்று (இறைச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்த முஸ்லிம்களாக) ஆகும் வரை நான் அவர்களுடன் போர் புரிவேன்” என்று அலீ அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(அலீயே!) நிதானத்துடன் சென்று அவர்களின் களத்தில் இறங்குங்கள். பிறகு, அவர்களை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்படி அழையுங்கள். (இஸ்லாத்தை ஏற்பதால்) அவர்களின் மீது கடமையாகுபவற்றை அவர்களுக்குத் தெரிவியுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக அல்லாஹ் ஒருவரை நேர்வழியில் செலுத்துவது (அரபுகளின் மிக உயர்ந்த சொத்தான) சிகப்பு ஒட்டகங்களை (தருமம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3010
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்களாக சொர்க்கத்தில் நுழையும் ஒரு கூட்டத்தாரைக் கண்டு அல்லாஹ் வியப்படைவான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3011
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” மூன்று பேருடைய நற்செயலுக்குரிய பிரதிபலன் இரண்டு முறை அவர்களுக்கு வழங்கப்படும். அவர்கள்:
1. ஓர் அடிமைப் பெண்ணைப் பெற்றிருந்து அவளுக்குக் கல்வி கற்றுத் தந்து, அதை அழகுறக் கற்றுத் தந்து, அவளுக்கு ஒழுக்கம் கற்பித்து, அதை அழகுறச் கற்பித்து, அவளை (தானே) மணம் புரிந்தும் கொண்ட மனிதர், இவருக்கு (அதற்காக) இரண்டு நற்பலன்கள் கிடைக்கும்.
2. வேதம் வழங்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு நம்பிக்கையாளர். (முந்தைய இறைத்தூதர் மீதும், முந்தைய வேதத்தின் மீதும்) நம்பிக்கை கொண்டிருந்த அவர், பிறகு நபி(ஸல்) அவர்களின் மீதும் நம்பிக்கை கொண்டாரெனில், இவருக்கும் இரண்டு நற்பலன்கள் கிடைக்கும்.
3. அல்லாஹ்வின் உரிமையையும் நிறைவேற்றி, தன் எஜமானுக்கும் நலம் நாடுகிற அடிமை.
அறிவிப்பாளர் ஸாலிஹ் இப்னு ஹய்(ரஹ்) கூறினார்: (இந்த நபிமொழியை எனக்கு அறிவித்த) ஷஅபீ (ரஹ்), ‘எதையும் பகரமாகப் பெறாமலேயே இதை நான் உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். இதை விட எளிய விஷயங்களை அறிந்து கொள்ள சிலர் மதீனா வரை கூட சென்று கொண்டிருந்தார்கள்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3012
ஸஅப் இப்னு ஜஸ்ஸாமா(ரலி) அறிவித்தார். ‘அப்வா’ என்னுமிடத்தில் அல்லது ‘வத்தான்’ என்னுமிடத்தில் நபி(ஸல்) அவர்கள் என்னுடன் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது, ‘இணைவைப்போரான எதிரி நாட்டினரின் பெண்களும் குழந்தைகளும் (போரில் சிக்கிச்) சேதமடையும் (வாய்ப்பு உண்டு என்னும்) பட்சத்தில் அவர்களின் மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா?’ என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சேர்ந்தவர்களே” என்று பதிலளித்தார்கள். மேலும், நபி(ஸல்) அவர்கள், ‘(பிரத்தியேகமான) மேய்ச்சல் நிலம் (வைத்துக் கொள்ளும் உரிமை) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தவிர வேறெவருக்கும் இல்லை” என்று கூற கேட்டிருக்கிறேன்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3013
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (எதிரிகளுடைய) குழந்தைகள் தொடர்பாக ஸஅப் இப்னு ஜஸ்ஸமா(ரலி), அவர்கள், ‘அக்குழந்தைகளும் எதிரிகளைச் சேர்ந்தவர்கள் தாம்” என்று எமக்கு ஹதீஸ் அறிவித்தார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் இப்னு தீனார்(ரஹ்) ஸுஹ்ரீ(ரஹ்) வாயிலாக, ‘அக்குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களைச் சேர்ந்தவர்களே’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனத் தெரிவித்து வந்தார்கள். ஆனால், ஸுஹ்ரீ(ரஹ்) அவர்களிடம் நேரடியாகக் கேட்டபோது, ‘அந்தக் குழந்தைகளும் அவர்களைச் சேர்ந்தவர்களே” என்றே கூறினார்கள். இதை சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) தெரிவிக்கிறார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3014
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பங்கெடுத்த புனிதப் போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3015
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பங்கெடுத்த புனிதப் போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைத் தடை செய்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3016
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். எங்களை ஒரு குழுவில் நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அப்போது, ‘இன்னாரையும் இன்னாரையும் நீங்கள் கண்டால் அவ்விருவரையும் நெருப்பால் எரித்து விடுங்கள்” என்று உத்தரவிட்டார்கள். பிறகு, நாங்கள் புறப்பட முனைந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இன்னாரையும் இன்னாரையும் எரித்து விடுங்கள்’ என்று நான் உங்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன். ஆனால், அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் நெருப்பினால் (உயிர்களை) வேதனை செய்யக் கூடாது. எனவே, அவ்விருவரையும் நீங்கள் கண்டால் அவர்களைக் கொன்று விடுங்கள்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3017
அலீ(ரலி) ஒரு கூட்டத்தாரை எரித்துவிட்டார்கள். இச்செய்தி இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், ‘நானாக இருந்திருந்தால் அவர்களை எரித்திருக்கமாட்டேன். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அளிக்கிற வேதனையை அளித்து (எவரையும்) தண்டிக்காதீர்கள்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘தன் மார்க்கத்தை மாற்றிக் கொள்கிறவரைக் கொன்று விடுங்கள்’ என்று சொன்னதுபோல் நான் அவர்களைக் கொன்று விட்டிருப்பேன்’ என்றார்கள்” என இக்ரிமா(ரஹ்) கூறினார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3018
அனஸ்(ரலி) அறிவித்தார். ‘உக்ல்’ குலத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் கொண்ட குழு ஒன்று நபி(ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்தது. அவர்களுக்கு மதீனாவின் (தட்ப வெப்பச்) சூழல் (உடல் நலத்திற்கு) உகந்ததாக இல்லை. எனவே, அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! எங்களக்குச் சிறிது (ஒட்டகப்) பால் கொடுத்து உதவுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் ஒட்டக மந்தையை அணுகுவதைத் தவிர வேறு வழியை நான் காணவில்லை” என்று பதிலளித்தார்கள். உடனே, (ஸகாத்தாகப் பெறப்பட்டிருந்த ஓர் ஒட்டக மந்தையை நோக்கி) அவர்கள் சென்றார்கள். அதன் சிறுநீரையும் பாலையும் குடித்தார்கள். (அதனால்) உடல் நலம் பெற்றுப் பருமனாக ஆனார்கள். மேலும், ஒட்டகம் மேய்ப்பவனைக் கொன்றுவிட்டு, ஒட்டகங்களை ஓட்டிச் சென்றார்கள்; இஸ்லாத்தை ஏற்ற பின் நிராகரித்து விட்டார்கள். ஒருவர் இரைந்து சத்தமிட்டபடி நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். நபி(ஸல்) அவர்கள் ‘உக்ல்’ குலத்தாரைத் தேடிப் பிடித்து வர ஒரு குழுவினரை அனுப்பி வைத்தார்கள். பகல், உச்சிக்கு உயர்வதற்குள் அவர்கள் (பிடித்துக்) கொண்டு வரப்பட்டனர். நபி(ஸல்) அவர்கள் அவர்களின் கைகளையும் கால்களையும் துண்டித்தார்கள். பிறகு, ஆணிகளைக் கொண்டு வரச் சொல்லி உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவை (கொண்டு வரப்பட்டு) பழுக்கக் காய்ச்சப்பட்டன. அவற்றால் அவர்களின் கண் இமைகளின் ஓரங்களில் சூடிட்டார்கள். அவர்களை (கருங்கற்கள் நிறைந்த) ‘ஹர்ரா’ எனுமிடத்தில் எறிந்துவிட்டார்கள். அவர்கள் (தாகத்தால்) தண்ணீர் கேட்டும் இறக்கும் வரை அவர்களுக்குத் தண்ணீர் புகட்டப்படவில்லை.
அறிவிப்பாளர் அபூ கிலாபா(ரஹ்) கூறினார்கள்: அவர்கள் (உக்ல் அல்லது உரைனா குலத்தார்) கொலை செய்தார்கள்; திருடினார்கள்; அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துப் போரிட்டார்கள்; பூமியில் குழப்பதை விளைவிக்க முயன்றார்கள். (அதனால்தான், அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் இவ்வளவு கொடிய தண்டனையை அளிக்க நேர்ந்தது.)
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3019
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” இறைத்தூதர்களில் ஒருவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே, அந்த எறும்புப் புற்றையே எரித்து விடும்படி அவர் கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டுவிட்டது. (இதைக் கண்ட) அல்லாஹ், ‘ஓர் எறும்பு உங்களைக் கடித்துவிட்ட காரணத்தால் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்த சமுதாயங்களில் ஒன்றையே நீங்கள் எரித்து விட்டீர்களே” என்று (அவரைக் கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3020
ஜரீர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், ‘(தவ்ஸ் மற்றும் கஸ்அம் குலத்தாரின் தெய்வச் சிலைகள் உள்ள ஆலயமான) துல்கலஸாவின் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா?’ என்று கேட்டார்கள். அது கஸ்அம் குலத்தாரிடையே ‘யமன் நாட்டு கஅபா’ என்றழைக்கப்பட்டு வந்த ஆலயமாக இருந்தது. நான் அஹ்மஸ் குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் புறப்பட்டேன்; அவர்கள் சிறந்த குதிரைப் படையினராக இருந்தனர். நான் குதிரையின் மீது (சரியாக) உட்கார முடியாதவனாயிருந்தேன். எனவே, நபி(ஸல்) அவர்கள் என் நெஞ்சில் அடித்து, ‘இறைவா! இவரை உறுதிப்படுத்து இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்கு” என்று பிரார்த்தனை செய்தார்கள். எனவே, நான் அந்த ஆலயத்தை நோக்கிச் சென்று அதை உடைத்து எரித்து விட்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதருக்கு (காரியம் முடிந்துவிட்டதைத்) தெரிவிப்பதற்காக ஆளனுப்பினேன். நான் அனுப்பிய தூதுவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அந்த ஆலயத்தை மெலிந்து இளைத்துப் போன அல்லது சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்றுவிட்டுவிட்டுத் தான் உங்களிடம் வந்திருக்கிறேன்” என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் அஹ்மஸ் குலத்தாருக்கும் அவர்களின் குதிரைப் படை வீரர்களுக்கும் பரக்கத் (எனும் அருள்வளத்)தை அளிக்கும்படி ஐந்து முறை இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3021
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3022
பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒரு குழுவினரை (யூதர்களின் தலைவனான) அபூ ராஃபிஉவிடம் அவனைக் கொல்வதற்காக அனுப்பினார்கள். அவர்களில் ஒருவர் சென்று அவர்களின் கோட்டைக்குள் நுழைந்தார். அவர் கூறுகிறார்: நான் அவர்களின் வாகனப் பிராணிகளைக் கட்டி வைக்கும் (தொழுவம் போன்ற) இடத்தில் நுழைந்தேன். பிறகு அவர்கள், தங்கள் கழுதையைக் காணாமல் அதைத் தேடிக் கொண்டு புறப்பட்டார்கள். நான் அதைத் தேடுபவனைப் போல் (பாசாங்கு) காட்டிக் கொண்டு புறப்பட்டேன். அவர்கள் கழுதையைக் கண்டுபிடித்துவிட்டார்கள். (பிறகு திரும்பி) கோட்டைக்குள் நுழைந்தார்கள். நானும் நுழைந்தேன். கோட்டைத் கதவை இரவில் மூடிவிட்டார்கள். (அதன்) சாவிகளை (கோட்டைச் சுவரிலிருந்த) ஒரு மாடத்தில் வைத்தார்கள். அவர்கள் தூங்கியவுடன் நான் அந்தச் சாவிகளை எடுத்துக் கோட்டைக் கதவைத் திறந்து விட்டேன். பிறகு அபூ ராஃபிஉவிடம் சென்று, ‘அபூ ராஃபிஉவே!” என்று அழைத்தேன். அவன் எனக்கு பதிலளித்தான். குரல் வந்த திசையை நோக்கிச் சென்று அவனைத் தாக்கினேன். அவன் கூச்சலிட்டான். உடனே, நான் அங்கிருந்து வெளியேறி விட்டேன். பிறகு, (அவனைக்) காப்பாற்ற வந்தவனைப் போல் மீண்டும் அவனிடம் திரும்பிச் சென்று, ‘அபூ ராஃபிஉவே!” என்று என் குரலை மாற்றிக் கொண்டு அவனை அழைத்தேன். அவன், ‘உனக்கென்ன நேர்ந்தது? உன் தாய்க்குக் கேடுண்டாகட்டும்” என்று சொன்னான். நான், ‘உனக்கு என்ன ஆயிற்று?’ என்று கேட்டேன். அவன், ‘என்னிடம் யார் வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. எவனோ என்னைத் தாக்கிவிட்டான்” என்று கூறினான். உடனே, நான் அவனுடைய வயிற்றில் என் வாளை வைத்து அழுத்தினேன். அது (அவனுடைய வயிற்றுக்குள் சென்று) அவனுடைய எலும்பில் இடித்தது. பிறகு, நான் (எப்படி வெளியேறுவது என்ற) திகைப்புடன் வெளியே வந்தேன். அவர்களின் ஏணி ஒன்றின் வழியாக இறங்குவதற்காக வந்தேன். அப்போது கீழே விழுந்து என் கால் சுளுக்கிக் கொண்டது. நான் என் தோழர்களிடம் சென்று, ‘(அவனுடைய மரணத்தையறிந்து அவனுடைய வீட்டார்) ஒப்பாரி வைத்து ஓலமிடும் சத்தத்தைக் கேட்காதவரை நான் இங்கிருந்து போக மாட்டேன்” என்று கூறினேன். ஹிஜாஸ் மாநிலத்தவரின் (பெரும்) வியாபாரியான அபூ ராஃபிஉ (உடைய மரணத்து)க்காக அவனுடைய வீட்டார் எழுப்பிய ஒப்பாரி ஓலங்களைச் கேட்கும் வரை அந்த இடத்தைவிட்டு நான் செல்லவில்லை. பிறகு, நான் என் உள்ளத்தில் உறுத்தும் வேதனை எதுவுமின்றி எழுந்தேன். இறுதியில், நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததை அவர்களுக்குத் தெரிவித்தோம்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3023
பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒரு குழுவினரை அபூ ராஃபிஉ என்பவனிடம் அனுப்பினார்கள். அப்துல்லாஹ் இப்னு அத்தீக்(ரலி) அவனுடைய வீட்டிற்குள் இரவு நேரத்தில் நுழைந்து அவன் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவனைக் கொன்றுவிட்டார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3024
உமர் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்) அவர்களின் அடிமையாயிருந்த சாலிம் அபுந் நள்ர்(ரஹ்) அறிவித்தார். நான் உமர் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்) அவர்களின் எழுத்தராக இருந்தேன். அவர்களுக்கு அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) ஹரூரிய்யாவுக்குப் புறப்பட்டபோது கடிதம் எழுதியிருந்தார்கள். அதை நான் படித்துக் காட்டினேன்.
அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது: இறைத்தூதர்(ஸல்) அவர்கள், எதிரிகளைப் போர்க்களத்தில் சந்தித்த நாள்கள் சிலவற்றில் சூரியன் உச்சி சாயும் வரை போர்க் களத்தில் இறங்காமல் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3025
பிறகு, நபி(ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, ‘எதிரிகளைப் (போர்க்களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம் (போரின் அழிவுகளிலிருந்து) பாதுகாக்கும்படி கேளுங்கள். (வேறு வழியின்றி போர்க்களத்தில்) எதிரிகளைச் சந்திக்க நேரிட்டால் (போரின் துன்பங்களைச் சகித்துப்) பொறுமையாக இருங்கள். மேலும், ‘சொர்க்கம் வாட்களின் நிழல்களுக்குக் கீழே இருக்கிறது’ என்பதை அறிந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். பிறகு, ‘இறைவா! வேதத்தை அருள்பவனே! மேகத்தை நகர்த்திச் செல்பவனே! (குலங்கள் அனைத்தும் சேர்ந்து திரட்டி வந்துள்ள) படைகளைத் தோற்கடிக்க இருப்பவனே! இவர்களைத் தோற்கடித்து இவர்களுக்கெதிராக எங்களுக்கு உதவுவாயாக!” என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.
மூஸா(ரஹ்) கூறினார்: “நான் உமர் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்) அவர்களிடம் எழுத்தராக இருந்தேன். அப்போது அவரிடம் அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்களின் கடிதம் வந்தது. அதில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘எதிரியை (போர்க்களத்தில்) சந்திக்க விரும்பாதீர்கள்’ என்றார்கள் என்றிருந்தது” என சாலிம் அபுந் நள்ர்(ரஹ்) எனக்கு அறிவித்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3026

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” எதிரிகளை (போர்க்களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அவர்களை நீங்கள் (போர்க்களத்தில்) சந்திக்க நேர்ந்தால் (போரின் துன்பங்களைக் கண்டு) நிலைகுலைந்து விடாமல் பொறுமையாக இருங்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3027
(தற்போதைய பாரசீகப் பேரரசன்) குஸ்ரூ அழிந்து விடுவான். அவனுக்குப் பிறகு குஸ்ரூ (வமிச அரசன்) எவனும் இருக்க மாட்டான். (தற்போதைய ரோமப் பேரரசன்) சீசர் நிச்சயம் அழிந்து விடுவான். அவனுக்குப் பிறகு சீசர் (வமிச அரசன்) எவனும் இருக்க மாட்டான். அவ்விருவரின் கருவூலங்களும் இறைவழியில் (போரிடுவோரிடையே பங்கிடப்பட்டு விடும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3028
(தொடர்ந்து அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.) மேலும், நபி(ஸல்) அவர்கள் போரை ‘சூழ்ச்சி’ என்று குறிப்பிட்டார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3029
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் போரை ‘சூழ்ச்சி’ என்று குறிப்பிட்டார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3030
நபி(ஸல்) கூறினார்கள்: போர் என்பது சூழ்ச்சியாகும். என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3031
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வதற்கு (தாயராயிருப்பவர்) யார்? (என்று கேட்டுவிட்டு) ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் துன்பம் கொடுத்துவிட்டான்” என்றார்கள. முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), ‘நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா? இறைத்தூதர் அவர்களே!” என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்” என்று பதிலளித்தார்கள். உடனே, முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) கஅப் இப்னு அஷ்ரஃபிடம் சென்று, ‘இவர் (முஹம்மத்) எங்களுக்குக் கடும் சிரமத்தைத் தந்துவிட்டார். எங்களிடம் (மக்களுக்கு) தருமம் (செய்யும்படி) கேட்டார்” என்று (நபி(ஸல்) அவர்களைக் குறை கூறும் விதத்தில்) பேசினார்கள். கஅப் இப்னு அஷ்ரஃப், ‘அல்லாய்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக அவரிடம் நீங்கள் சலிப்படைவீர்கள்” என்று கூறினான். அதற்கு முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), ‘நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரைப் பின்பற்றி விட்டோம். அவரின் விவகாரம் எதில் முடிகிறது என்று பார்க்காமல் அவரைவிட்டு விட நாங்கள் விரும்பவில்லை. (எனவேதான் அவருடன் இன்னும் இருந்து கொண்டிருக்கிறோம்)” என்று (சலிப்பாகக் கூறுவது போல்) சொன்னார்கள். இவ்வாறு, முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) அவனிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டேயிருந்து அவனைக் கொல்வதற்கு வசதியான தருணம் கிடைத்தவுடன் அவனைக் கொன்றுவிட்டார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3032

ஜாபிர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வது யார்?’ என்று கேட்டார்கள். முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), ‘நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா?’ என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்க, அவர்கள், ‘ஆம்” என்று பதிலளித்தார்கள். உடனே அவர்கள், ‘அப்படியென்றால் தங்களைக் குறைகூற எனக்கு அனுமதியளியுங்கள்” என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள் ‘அனுமதியளித்து விட்டேன்” என்று பதிலளித்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3033
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்முடன் உபை இப்னு கஅப்(ரலி) வந்து கொண்டிருக்க, இப்னு ஸய்யாதை நோக்கி நடந்தார்கள். இப்னு ஸய்யாத் ஒரு பேரீச்சந் தோட்டத்தில் இருப்பதாக நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. உடனே, அவர்கள் பேரீச்சந் தோட்டத்தில் அவனைப் பார்க்க நுழைந்தபோது (தாம் வருவதை அவன் அறியக் கூடாது என்பதற்காக) பேரீச்ச மரங்களின் அடிப்பகுதிகளால் தம்மை மறைத்துக் கொண்டு அவனை நோக்கி நடக்கலானார்கள். இப்னு ஸய்யாத் ஏதோ முணுமுணுத்தவனாக ஒரு பூம்பட்டுப் போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்திருந்தான். இப்னு ஸய்யாதின் தாய் இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பார்த்துவிட்டாள். உடனே, ‘ஸாஃபியே! இதோ முஹம்மத்!” என்று கூற, இப்னு ஸய்யாத் குதித்தெழுந்துவிட்டான். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(நான் வருவதைத் தெரிவிக்காமல்) அவனை அவள் அப்படியே விட்டிருந்தால் அவன் (உண்மையை) வெளிப்படையாகப் பேசியிருப்பான்” என்றார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3034
பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களை அகழ்ப் போரின்போது, (அகழ் வெட்டுவதற்காகத் தோண்டிய) மண்ணை (கொட்டுமிடத்திற்கு) எடுத்துச் செல்பவர்களாகக் கண்டேன். எந்த அளவுக்கென்றால் அந்த மண், அவர்களின் மார்பின் முடியை மறைத்து விட்டிருந்தது… மேலும், நபி(ஸல்) அவர்கள் அதிகமான முடியுடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் (கவிஞரான தம் தோழர்) அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) அவர்களின் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்கள்:
இறைவா! நீ (கொடுத்த நேர்வழி) இல்லையென்றால் நாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம்; தருமமும் செய்திருக்க மாட்டோம்; தொழுதிருக்கவும் மாட்டோம். எனவே, எங்களின் மீது அமைதியை இறக்கியருள். நாங்கள் போர்க்களத்தில் எதிரியைச் சந்திக்கும்போது எங்கள் பாதங்களை உறுதிப்படுத்து. பகைவர்கள் எங்களின் மீது வரம்பு மீறி அநீதியிழைத்துவிட்டார்கள். அவர்கள் எங்களைச் சோதிக்க விரும்பினால் அதற்கு நாங்கள் இடம் தர மாட்டோம். இதை நபி(ஸல்) அவர்கள் உரத்த குரலுடன் பாடிக் கொண்டிருந்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3035
ஜரீர்(ரலி) அறிவித்தார். நான் இஸ்லாத்தைத் தழுவியதிலிருந்து (தம் வீட்டுக்குள் வரக் கூடாதென்று) நபி(ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை; புன்முறுவலுடன் சிரித்தவர்களாகவே தவிர அவர்கள் என் முகத்தைப் பார்த்ததில்லை.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3036
‘என்னால் குதிரையில் சரியாக அமர முடியவில்லை” என்று நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். நபி(ஸல்) அவர்கள் என் நெஞ்சில் தம் கரத்தால் அடித்து, ‘இறைவா! இவரை உறுதிப்படுத்து. இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்ட பெற்றவராகவும் ஆக்கு” என்று பிரார்த்தனை செய்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3037

அபூ ஹாஸிம்(ரலி) அறிவித்தார். “இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காயத்திற்கு எதனால் சிகிச்சையளிக்கப்பட்டது?’ என்று ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அவர்களிடம் மக்கள் கேட்டனர். அதற்கு அவர்கள், ‘அதைப் பற்றி என்னை விட அதிகமாக அறிந்தவர்கள் எவரும் (தற்போது) மக்களில் எஞ்சியிருக்கவில்லை. அலீ(ரலி) தம் கேடயத்தில் தண்ணீரை அள்ளிக் கொண்டு வந்தார்கள். மேலும், ஃபாத்திமா(ரலி), நபி(ஸல்) அவர்களின் முகத்திலிருந்து இரத்தத்தைக் கழுவிவிட்டார்கள். (ஈச்சம்) பாய் ஒன்று எடுத்து வரப்பட்டு, எரிக்கப்பட்டு அதைக் கொண்டு அல்லாஹ்வின் தூதருடைய காயத்திற்கு (மருந்திட்டு)க் கட்டு போடப்பட்டது” என்றார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3038
அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், முஆத் அவர்களையும் என்னையும் யமன் நாட்டிற்கு (ஆட்சி நடத்தவும் பிரசாரம் செய்யவும்) அனுப்பினார்கள். அப்போது (எங்கள்) இருவரிடமும், ‘நீங்கள் இலேசானதையே மக்களுக்கு நற்செய்தி கூறுங்கள்: வெறுப்பூட்டி விடாதீர்கள். ஒருவரோடொருவர் இசைந்து பழம் (அன்பு செலுத்தி)க் கொள்ளுங்கள். ஒருவரோடொருவர் (கருத்து வேறுபட்டு) பிணங்காதீர்கள்” என்று (அறிவுரை) கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3039
பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். உஹுதுப் போரின்போது அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் காலாட்படையினருக்குத் தலைவராக நியமித்தார்கள். அவர்கள் (மொத்தம்) ஐம்பது பேர் இருந்தனர். ‘(நாங்கள் போரில் கொல்லப்பட்டு) எங்க(ள் சடலங்க)ளைப் பறவைகள் கொத்திச் செல்வதை நீங்கள் பார்த்தால் கூட நான் உங்களுக்குச் சொல்லியனுப்பும் வரை உங்களுடைய இடத்தைவிட்டு நகராதீர்கள். நாங்கள் எதிரிகளைத் தோற்கடித்து (போர்க் களத்தில் செத்து வீழ்ந்து கிடக்கும் அவர்களை) மிதித்துச் செல்வதை நீங்கள் பார்த்தாலும் கூட நான் உங்களுக்குச் சொல்லியனுப்பும் வரை உங்களுடைய இடத்தைவிட்டு நகராதீர்கள்” என்று அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம்கள் இணைவைப்பவர்களைத் தோற்கடித்துவிட்டனர். பெண்கள் தங்கள் ஆடையை உயர்த்தியவர்களாக, அவர்களின் கால் தண்டைகளும் கால்களும் வெளியில் தெரிய ஓடிக் கொண்டிருப்பதை பார்த்தேன். அப்போது அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்களின் சகாக்கள், ‘போர்ச் செல்வங்கள்! மக்களே! போர்ச் செல்வங்கள்! உங்கள் தோழர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள். இன்னும் எதைத் தான் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?’ என்று (உரக்கக்) கூறலாயினர். (இதைக் கேட்ட) அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உங்களிடம் என்ன சொன்னார்கள் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் மக்களிடம் சென்று போர்க்களத்திலுள்ள பொருட்களை எடுத்துக் கொள்வோம்” என்று கூறினார்கள். அவர்கள் மக்களிடம் சென்றபோது அவர்களின் முகங்கள் திருப்பப்பட்டு (எங்கிருந்து வந்தார்களோ அந்த இடத்திற்கே திருப்பியனுப்பப்பட்டு) தோற்றுப் போய் சென்றுவிட்டனர். அவர்களுக்குப் பின்னால் இருந்த அணியிலியிருந்து அவர்களைப் போர்க்களத்திற்குத் திரும்பி வரும்படி இறைத்தூதர் அழைத்துக் கொண்டிருந்தபோது இது நடந்தது. அப்போது, நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் பத்ருப் போரின்போது இணைவைப்பவர்களில் (மொத்தம்) நூற்றி நாற்பது பேரை பாதிப்புக்குள்ளாக்கி விட்டிருந்தார்கள். எழுபது பேரைக் கைதிகளாகப் பிடித்திருந்தார்கள்; எழுபது பேரைக் கொன்று விட்டிருந்தார்கள். எனவே, (அப்போது எதிரிகளின் அணியிலிருந்த) அபூ சுஃப்யான் (களத்தில் இறங்கி), ‘(உங்கள்) கூட்டத்தில் முஹம்மது இருக்கிறாரா?’ என்று மூன்று முறை கேட்டார். அவருக்கு பதிலளிக்க வேண்டாமென்று நபி(ஸல்) அவர்கள் மக்களைத் தடுத்துவிட்டார்கள். மீண்டும் ‘(உங்கள்) கூட்டத்தில் அபூ குஹாஃபாவின் மகன் (அபூ பக்ர்) இருக்கிறாரா?’ என்று மூன்று முறை கேட்டார். பிறகு, ‘கூட்டத்தில் கத்தாபின் மகன் (உமர்) இருக்கிறாரா?’ என்று மூன்று முறை கேட்டார். பிறகு தம் தோழர்களின் பக்கம் திரும்பி, ‘இவர்களெல்லாம் கொல்லப்பட்டுவிட்டனர்” என்றார். (இதைக் கேட்டு) உமர்(ரலி), தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், ‘பொய் சொன்னாய், அல்லாஹ்வின் பகைவனே! நீ எண்ணியவர்கள் எல்லாருமே உயிரோடு தான் இருக்கிறார்கள். உனக்கு மனத் துன்பமளிக்கும் ஒரு விஷயம் (மக்கா வெற்றி) தான் இப்போது எஞ்சியுள்ளது?’ என்றார்கள். (உடனே) அபூ சுஃப்யான், ‘இந்நாள், பத்ருப் போர் (நடந்த) நாளுக்குப் பதிலாகும். (நமக்கிடையிலான) போரில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருகிறது. (உங்கள்) கூட்டத்தாரில் நீங்கள் அங்கங்கள் சிதைக்கப்பட்டவர்களைக் காண்பீர்கள். அப்படிச் செய்யும்படி நான் கட்டளையிடவுமில்லை. அது எனக்கு மனத் துன்பத்தையளிக்கவும் செய்யாது” என்று சொல்லிவிட்டு பிறகு, ‘ஹுபலே! உன் கட்சி மேலோங்கிவிட்டது, என்று கவிதை பாடலானார். நபி(ஸல்) அவர்கள் (தோழர்களை நோக்கி), ‘இவருக்கு நீங்கள் பதிலளிக்க மாட்டீர்களா?’ என்று கேட்டார்கள். தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! நாம் என்ன(பதில்) சொல்வது?’ என்று வினவ, நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; மிக மேலானவன்’ என்று சொல்லுங்கள்” என்று கூறினார்கள். அபூ சுஃப்யான், ‘எங்களுக்கு ‘உஸ்ஸா’ (எனும் தெய்வம்) இருக்கிறது; உங்களிடம் உஸ்ஸா இல்லையே” என்று கவிதை பாடினார். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘இவருக்கு நீங்கள் பதிலளிக்க மாட்டீர்களா?’ என்று கேட்டார்கள். தோழர்கள், ‘நாங்கள் என்ன (பதில்) சொல்வது? இறைத்தூதர் அவர்களே!” என்று வினவ, நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வே எங்கள் உதவியாளன்; உங்களுக்கு உதவியாளனே இல்லையே!’ என்று சொல்லுங்கள்” என்று பதிலளித்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3040
அனஸ் (ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களிடையே சிறந்த (நற்) குணமுடையவர்களாகவும் மக்களிலேயே அதிக கொடைக் குணம் உடையவர்களாகவும் மக்களிலேயே அதிக வீரமுடையவர்களாகவும் இருந்தார்கள். (ஒரு முறை) மதீனாவாசிகள் இரவு நேரத்தில் (எதிரிகள் படையெடுத்து வருவதாகக் கேள்விப்பட்டுப்) பீதியடைந்தார்கள். (விஷயம் என்ன என்றறிய வெளியே வந்தார்கள்.) அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாளைத் தொங்கவிட்டவர்களாக, அபூ தல்ஹா(ரலி) அவர்களின் சேணம் பூட்டாத குதிரையின் மீது அமர்ந்த வண்ணம் மக்களை எதிர் கொண்டபோது, ‘பயப்படாதீர்கள். பீதியடையாதீர்கள்” என்று (மக்களைப் பார்த்து) நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். பிறகு, ‘தங்குதடையின்றி வேகமாக ஓடக் கூடியதாக இந்தக் குதிரையை நாம் கண்டோம்” என்றார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3041
ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார். நான் மதீனாவிலிருந்து ஃகாபாவை நோக்கிச் செல்வதற்காகப் புறப்பட்டேன். நான் ஃகாபாவின் மலைப் பகுதியை அடைந்தபோது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களின் அடிமையொருவன் என்னைச் சந்தித்தான். நான், ‘அடப் பாவமே! உனக்கு என்ன ஆயிற்று?’ என்று கேட்டேன். அவன், ‘நபி(ஸல்) அவர்களின் (பால் தரும்) ஒட்டகங்கள் பிடித்துச் செல்லப்பட்டுவிட்டன” என்று கூறினான். நான், ‘அவற்றை யார் எடுத்துச் சென்றது?’ என்று கேட்டேன். அதற்கவன், ‘கத்ஃபான் மற்றும் ஃபஸாரா குலத்தார்” என்று பதில் சொன்னான். உடனே நான் மதீனாவின் இரண்டு மலைகளுக்கிடையேயிருந்த அனைவருக்கும் கேட்கும்படி உரக்க சப்தமிட்டு ‘யா ஸபாஹா! (ஆபத்து!) யா ஸபாஹா! (ஆபத்து!)” என்று மும்முறை கத்தினேன். பிறகு, விரைந்து சென்று அவர்களை அடைந்தேன். அவர்கள் (கொள்ளையடித்துச் சென்ற) ஒட்டகங்களைக் கையில் பிடித்து நின்டிருந்தனர். அவர்களின் மீது அம்பெய்யத் தொடங்கினேன். ‘நான் அக்வஃ உடைய மகன். இன்று பால் அக்வஃ உடைய மகன். இன்று பால் திருடர்கள் (தண்டனை பெறப் போகும்) நாள்” என்று (பாடியபடி) கூறினேன். பிறகு அவர்கள் (தங்கள் கையிலிருந்த தண்ணீரை) அருந்துவதற்கு முன்னால் அவர்களிடமிருந்து அந்த ஒட்டகங்களை விடுவித்து விட்டேன். பிறகு, திரும்பிச் சென்றபோது நபி(ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! அந்தக் குலத்தார் தாகமாக இருந்தார்கள். அவர்கள் தண்ணீர் கூட குடிக்க விடாமல் அவர்களை நான் (அம்பெய்து) அவசரமாக ஓட வைத்து விட்டேன். அவர்களைத் துரத்திச் சென்று பிடித்து வரப்படையனுப்புங்கள்” என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், ‘அக்வஃ உடைய மகனே! நீ அவர்களைத் தோற்கடித்துவிட்டாய். எனவே, போனால் போகட்டும்,விட்டு விடு. அந்தக் குழுவினர் (தம் சகாக்களைச் சென்றடைந்துவிட்டனர்; அங்கு) தம் குலத்தாரிடம் உபசரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3042
அபூ இஸ்ஹாக்(ரஹ்) அறிவித்தார். பராஉ(ரலி) அவர்களிடம் ஒருவர், ‘அபூ உமாராவே! ஹுனைன் போரின்போது நீங்கள் பின்வாங்கிச் சென்றுவிட்டீர்களா?’ என்று கேட்டார். நான் கேட்டுக் கொண்டிருக்க, பராஉ(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களை அடைந்தேன். அவர்கள் (கொள்ளையடித்துச் சென்ற) ஒட்டகங்களைக் கையில் பிடித்து நின்டிருந்தனர். அவர்களின் மீது அம்பெய்யத் தொடங்கினேன். “நான் அக்வஃ உடைய மகன். இன்று பால் திருடர்கள் (தண்டனை பெறப் போகும்) நாள்” என்று (பாடிய படி) கூறினேன். பிறகு அவர்கள் (தங்கள் கையிலிருந்த தண்ணீரை) அருந்துவதற்கு முன்னால் அவர்களிடமிருந்து அந்த ஒட்டகங்களை விடுவித்து விட்டேன். பிறகு திரும்பிச் சென்றபோது நபி(ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! அந்தக் குலத்தார் தாகமாக இருந்தார்கள். அவர்கள் தண்ணீர் குடிக்க விடாமல் அவர்களை நான் (அம்பெய்து) அவசரமாக ஓட வைத்து விட்டேன். அவர்களைத் துரத்திச் சென்று பிடித்து வரப்படையனுப்புங்கள்” என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், ‘அக்வஃ உடைய மகனே! நீ அவர்களைத் தோற்கடித்துவிட்டாய். எனவே, போனால் போகட்டும்,விட்டு விடு. அந்தக் குழுவினர் (தம் சகாக்களைச் சென்றடைந்துவிட்டனர்; அங்கு) தம் குலத்தாரிடம் உபசரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3043
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். (யூதர்களான) பனூ குறைழா குலத்தார் (கோட்டையிலிருந்து இறங்கி வந்து) ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளச் சம்மதித்தபோது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஸஅத்(ரலி) அவர்களை அழைத்து வரும்படி ஆளனுப்பினார்கள். ஸஅத்(ரலி) அப்போது நபி(ஸல்) அவர்கள் ஒரு கழுதையின் மீதமர்ந்து வந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உங்கள் தலைவருக்காக எழுந்து நில்லுங்கள்” என்று (மக்களிடம்) கூறினார்கள். ஸஅத்(ரலி) வந்து அல்லாஹ்வின் தூதருக்கு அருகே அமர்ந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இவர்கள் உங்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளச் சம்மதித்து (இறங்கி) வந்திருக்கிறார்கள்” என்று கூறினார்கள். ஸஅத்(ரலி), ‘அப்படியென்றால் நான் அவர்களிடையேயுள்ள போரிடும் வலிமையுள்ளவர்களைக் கொன்று விட வேண்டுமென்றும் பெண்களையும் குழந்தைகளையும் போர்க் கைதிகளாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்றும் தீர்ப்பளிக்கிறேன்” என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் அரசனின் (அல்லாஹ்வின்) தீர்ப்பையே இவர்களின் விஷயத்தில் அளித்திருக்கிறீர்கள்” என்று
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3044
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மக்கா நகரம்) வெற்றி கொள்ளப்பட்டபோது தலையில் இரும்புத் தொப்பி அணிந்த வண்ணம் மக்கா நகரினுள் நுழைந்தார்கள். அதை அவர்கள் கழற்றியபோது ஒருவர் வந்து, ‘இப்னு கத்தல் என்பவன் (அபயம் தேடியவனாக) கஅபாவின் திரைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறான்” என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘அவனைக் கொல்லுங்கள்” என்று உத்தரவிட்டார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3045
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பத்துப் பேர்கள் கொண்ட ஒரு குழுவினரை உளவுப்படையாக அனுப்பி வைத்தார்கள். உமர் இப்னு கத்தாபுடைய மகன் ஆஸிமின் (தாய்வழிப்) பாட்டனார் ஆஸிம் இப்னு ஸாபித் அல் அன்சாரியை உளவுப் படைக்குத் தலைவராக்கினார்கள். அவர்கள் புறப்பட்டு, உஸ்ஃபானுக்கும் மக்காவுக்கும் இடையிலுள்ள ‘ஹத்ஆ’ எனுமிடத்திற்கு வந்தபோது ‘ஹத்ஆ’ என்னுமிடத்திற்கு வந்தபோது ஹுதைல் குலத்தைச் சேர்ந்த பனூலிஹ்யான் என்றழைக்கப்படும் ஒரு கிளையினருக்கு இந்த உளவுப் படையினர் வரும் விவரம் தெரிவிக்கப்பட்டது. உடனே அக்கிளையினர் (அவர்களைப் பிடிப்பதற்காக) அம்பெய்வதில் தேர்ச்சி பெற்ற கிட்டத் தட்ட இருநூறு வீரர்களை தங்களுக்காகத் திரட்டிக் கொண்டு இந்த உளவுப் படையினரின் சுவடுகளைப் பின்பற்றி (அவர்களைத் தேடியபடி) சென்றனர். (வழியில்) உளவுப்படையினர் மதீனாவிலிருந்து பயண உணவாகக் கொண்டு வந்திருந்த பேரீச்சம் பழங்களைத் தின்று (அவற்றின் கொட்டைகளைப் போட்டு)விட்டுச் சென்ற இடத்தைக் கண்டனர். உடனே, ‘இது யத்ரிபுடைய (மதீனாவுடைய) பேரீச்சம் பழம்” என்று கூறினர். எனவே, அவர்களின் கால் சுவடுகளைப் பின்பற்றிச் சென்றனர். அவர்களை ஆஸிம்(ரலி) அவர்களும் அவர்களின் சகாக்களும் கண்டபோது, உயரமான (குன்று போன்ற) ஓரிடத்தில் (புகலிடம் தேடி) ஒதுங்கி நின்றனர். அவர்களை பனூ லிஹ்யான் குலத்தினர் சூழ்ந்தனர். அவர்கள் அந்த உளவுப் படையினரிடம், ‘நீங்கள் இறங்கி வந்து எங்களிடம் சரணடைந்து விடுங்கள். உங்களுக்கு நாங்கள் உறுதிமொழியும் வாக்கும் அளிக்கிறோம். உங்களில் எவரையும் நாங்கள் கொல்லமாட்டோம்” என்று கூறினார்கள். உளவுப் படையின் தலைவரான ஆஸிம் இப்னு ஸாபித்(ரலி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இன்று நான் ஒரு நிராகரிப்பாளனின் பொறுப்பில் (என்னை ஒப்படைத்தவனாக இந்தக் குன்றிலிருந்து) கீழே இறைவா! எங்கள் நிலை குறித்து உன் தூதருக்குத் தெரிவித்து விடு” என்று பிரார்த்தித்தார்கள். எதிரிகள் அவர்களின் மீது அம்பெய்து ஆஸிம் உட்பட ஏழு பேரைக் கொன்றனர். உளவுப் படையினரில் (எஞ்சியிருந்த) மூன்று பேர் எதிரிகளிடம் உறுதிமொழியும் வாக்கும் பெற்று இறங்கினார்கள். அவர்கள் அன்சாரித் தோழர் குபைப் அவர்களும், இப்னு தசினா அவர்களுக்கு மற்றுமொருவரும் ஆவர். இவர்கள் தங்கள் கையில் கிடைத்தவுடன் நிராகரிப்பாளர்கள் தம் விற்களின் நாண்களை அவிழ்த்து அவர்களைக் கட்டினார்கள். (உளவுப் படையில் எஞ்சிய மூவரில்) மூன்றாவது மனிதர், ‘இது முதலாவது நம்பிக்கை துரோகம் அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களுடன் வர மாட்டேன். (கொல்லப்பட்ட) இவர்கள் எனக்கு ஒரு (நல்ல பாடமாக அமைந்துள்ளனர்” என்று கூறினார். உடனே, அவர்கள் அவரை இழுத்துச் சென்று தம்மோடு வரும்படி நிர்பந்தித்தார்கள். அதற்கு அவர் மறுத்து விடவே அவரைக் கொலை செய்துவிட்டார்கள். பிறகு குபைப் அவர்களையும் இப்னு தசினா அவர்களையும் பிடித்துச் சென்று மக்காவில் விற்றுவிட்டனர். இது பத்ருப் போருக்குப் பிறகு நடந்த சம்பவமாகும். குபைப் அவர்களை பனூ ஹாரிஸ் என்னும் குலத்தார் வாங்கினர். அந்தக் குலத்தின் தலைவர் ஹாரிஸ் இப்னு ஆமிர் என்பவரை குபைப் அவர்கள் பத்ருப் போரில் கொன்று விட்டிருந்தார்கள். எனவே, (அதற்குப் பழிவாங்குவதற்காக குபைப் அவர்களை பனூ ஹாரிஸ் குலத்தார் வாங்கிக் கைது செய்து வைத்திருந்தனர்.) அவர்களிடம் குபைப் அவர்கள் கைதியாக இருந்தார்கள்.
உபைதுல்லாஹ் இப்னு இயாள்(ரஹ்) கூறினார்கள் என அறிவிப்பாளர் ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார். ஹாரிஸின் மகள் என்னிடம் கூறினார்: குபைப் அவர்களைக் கொல்வதற்காக (எங்கள் குடும்பத்தார்) ஒன்று கூடியபோது, குபைப் தேவையற்ற முடிகளைக் களைவதற்காக ஒரு சவரக் கத்தியை என்னிடமிருந்து இரவல் வாங்கினார். அப்போது என்னுடைய குழந்தை ஒருவனை அவர் கையிலிலெடுத்தார். அவன் அவரிடம் சென்றபோது நான் (பார்க்காமல்) கவனக் குறைவாக இருந்து விட்டேன். அவர் கையில் சவரக் கத்தி இருக்க, தம் மடியின் மீது அவனை உட்கார வைத்திருப்பதை கண்டேன். அதைக் கண்டு நான் கடும் பீதியடைந்தேன். என் முகத்தில் தெரிந்த பீதியை குபைப் புரிந்து கொண்டார். உடனே, ‘நான் இவனைக் கொன்று விடுவேன் என்று நீ பயப்படுகிறாயா? நான் அப்படிச் செய்யமாட்டேன்” என்று கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக! குபைப் அவர்களை விடச் சிறந்த ஒரு கைதியை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஒரு நாள் தம் கையிலிருந்த திராட்சைக் குலை ஒன்றிலிருந்து (பழங்களை எடுத்து) உண்டு கொண்டிருக்கக் கண்டேன். அப்போது அவரின் கை இரும்புக் சங்கிலிகளால் கட்டப்பட்டு இருந்தது. மேலும், அப்போது மக்கா நகரில் பழம் (விளையும் பருவம்) எதுவும் இருக்கவில்லை.
மேலும், ஹாரிஸின் மகள், ‘அது அல்லாஹ்விடமிருந்து கிடைத்த இரணமாகும். அல்லாஹ் அதை குபைப் அவர்களுக்கு அளித்திருந்தான்” என்று கூறி வந்தார். (என அறிவிப்பாளர் இடையில் கூறுகிறார்.)
(தொடர்ந்து அறிவிப்பாளர் கூறுகிறார்:)
அவர்கள் குபைப் அவர்களைக் கொல்வதற்காக ஹரம் (எனும் இரத்தம் சிந்துவது அனுமதிக்கப்படாத புனிதப்) பகுதியிலிருந்து ‘ஹில்’ (எனும் புனித எல்லைக்கு வெளியே இருக்கும் பகுதிக்குப் புறப்பட்டுச் சென்றபோது அவர்களிடம் குபைப் அவர்கள், ‘என்னை இரண்டு ரக்அத்துகள் தொழ விடுங்கள்” என்று கூறினார்கள். (தொழுது முடித்து) பிறகு, ‘நான் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறேன் என்று நீங்கள் எண்ணுவீர்கள் என்ற அச்சம் எனக்கில்லாமல் இருந்திருந்தால் நான் நீண்ட நேரம் தொழுதிருப்பேன்” என்று கூறிவிட்டு, ‘இறைவா! இவர்களை எண்ணி வைத்துக் கொண்டு (ஒருவர் விடாமல்) பழி வாங்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். மேலும், ‘நான் முஸ்லிமாகக் கொல்லப்படுவதால் நான் எதைப் பற்றியும் பொருட்படுத்தப் போவதில்லை. எந்த இடத்தில் நான் இறந்தாலும் நான் இறைவனுக்காகவே கொல்லப்படுகிறேன் (என்பதில் எனக்கு மகிழ்ச்சியே). நான் கொலையுறுவது அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகத் தான் எனும்போது, அவன் நாடினால் என்னுடைய துண்டிக்கப்பட்ட உறுப்புகளின் இணைப்புகளின் மீது கூட (தன்) அருள் வளத்தைப் பொழிவான்” என்று கவி பாடினார்கள். பின்னர், குபைப் அவர்களை ஹாரிஸின் மகன் (உக்பா) கொன்றுவிட்டார். அன்றிலிருந்து அடைத்து வைத்து அல்லது கட்டி வைத்துக் கொல்லப்பட்ட ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கொல்லப்படுவதற்கு முன் இரண்டு ரக்அத்துகள் தொழுவதை முன்மாதிரியாக்கியவர் குபைப் அவர்களே என்றாயிற்று. ஆஸிம் இப்னு ஸாபித் அவர்கள் கொல்லப்பட்டபோது, அவர்கள் செய்த பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு (அவர்களின் நிலைகுறித்து தன் தூதருக்குத் தெரிவித்து)விட்டான். நபி(ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களுக்கு உளவுப் படையினரின் செய்தியையும், அவர்களுக்கு குறைஷிக்குல நிராகரிப்பாளர்களில் சிலருக்கு ஆஸிம் அவர்கள் கொல்லப்பட்டது குறித்துத் தெரிவிக்கப்பட்டவுடன் (கொல்லப்பட்டது அவர்தான் என்று) அவரை அடையாளம் தெரிந்து கொள்ள அவரின் அங்கம் எதையாவது தமக்குக் கொடுத்தனுப்பும் படி கேட்டு அவர்கள் ஆளனுப்பினார்கள். ஏனெனில், ஆஸிம் அவர்கள் பத்ருப் போரின்போது குறைஷிகளின் தலைவர்களில் ஒருவரைக் கொன்றிருந்தார்கள். அப்போது ஆஸிம் அவர்களுக்க (அவர்களின் உடலுக்குப் பாதுகாப்பாக) ஆண் தேனீக்களின் கூட்டம் ஒன்று நிழல் தரும் மேகத்தைப் போன்று (அவரைச் சுற்றிலும் அரணாகப் படர்ந்திருக்கும் படி) அனுப்பப்பட்டது. அது அவர்களை குறைஷிகளின் தூதுவரிடமிருந்து காப்பாற்றியது. எனவே, அவர்களின் சதையிலிருந்து அவர்களால் எதையும் துண்டித்து எடுத்துச் செல்ல முடியவில்லை.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3046
அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள்; பசித்தவனுக்கு உணவளியுங்கள்; நோயாளியை நலம் விசாரியுங்கள்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3047
அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார். அலீ(ரலி) அவர்களிடம், ‘உங்களிடம் அல்லாஹ்வின் வேதத்திலிருப்பதைத் தவிர இறையறிவிப்புகளிலிருந்து (வேறு) ஏதும் இருக்கிறதூ?’ என்று கேட்டேன். அவர்கள், ‘இல்லை; விதையைப் பிளப்பவனும், உயிரைப் படைப்பவனுமான அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவ்வாறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை; ஒரு மனிதருக்கு அல்லாஹ் திருக்குர்ஆனில் அளிக்கிற விளக்கத்தையும் தவிர” என்று பதிலளித்தார்கள். நான், ‘இந்தத் தாளில் என்ன இருக்கிறது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘உயிரீட்டுத் தொகை (பற்றிய சட்டம்), போர்க் கைதியை (பணம் கொடுத்தோ, கைதிகள் பரிவர்த்தனை செய்தோ எதிரிகளிடமிருந்து) விடுவிப்பது, மற்றும் எந்த முஸ்லிமையும் நிராகரிப்பாளன் ஒருவனைக் கொன்றதற்காகக் கொல்லக் கூடாது (என்பது)” என்று பதிலளித்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3048
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். அன்சாரிகளில் சிலர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! எங்கள் சகோதரி மகன் அப்பாஸ் அவர்களின் பிணைத் தொகையை (வாங்காமல்)விட்டுக் கொடுத்து (இலவசமாக அவர்களை விடுதலை செய்து) விட அனுமதி கொடுங்கள்” என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், ‘பிணைத் தொகையிலிருந்து ஒரேயொரு திர்ஹத்தைக் கூட (வாங்காமல்)விட்டு விடாதீர்கள்” என்று (தம் தோழர்களிடம்) சொன்னார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3049
அனஸ்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்களிடம் பஹ்ரைனிலிருந்து (அரசு நிதி) கொண்டு வரப்பட்டது. அப்போது அப்பாஸ்(ரலி) வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! எனக்குக் கொடுங்கள். ஏனெனில், நான் (இஸ்லாத்தைத் தழுவும் முன்பு பத்ருப் போரில் கைதியாகப் பிடிபட்டபோது எனக்காகவும் பிணைத் தொகை செலுத்தியிருக்கிறேன்; (என் சகோதரர்) அகீலுக்காகவும் பிணைத் தொகை செலுத்தியிருக்கிறேன்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘எடுத்துக் கொள்வீராக!” என்று கூறி (நிதியை) அவரின் ஆடையில் (கொட்டி) அவருக்குக் கொடுத்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3050
முஹம்மத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார். என் தந்தை ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) பத்ருப் போர்க் கைதிகளின் (பிணைத் தொகை மற்றும் விடுதலை) விஷயமாக நபி(ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் ‘தூர்’ அத்தியாயத்தை ஓதக் கேட்டேன்” என்று (என் தந்தை) கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3051
ஸலமா பன் அக்வஃ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (ஹுனைன் போருக்கான) பயணத்தில் இருந்தபோது அவர்களிடம் இணைவைப்பவர்களிடையேயிருந்து உளவாளி ஒருவன் வந்தான்; நபி(ஸல்) அவர்களின் தோழர்களிடம் பேசியபடி அமர்ந்தான்; பிறகு, திரும்பிச் சென்றுவிட்டான். நபி(ஸல்) அவர்கள் (விஷயம் தெரிந்தவுடன்), ‘அவனைத் தேடிப் பிடித்துக் கொன்று விடுங்கள்” என்று உத்தரவிட்டார்கள். நான் அவனை (தேடிப் பிடித்துக்) கொன்று விட்டேன். அவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட அவனுடைய உடைமைகளை (போர்ச் செல்வத்தில் என் பங்கிற்கு மேல்) உபரியாக நபி(ஸல்) அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3052
உமர்(ரலி) அறிவித்தார். (எனக்குப் பின் வருகிற புதிய) கலீஃபாவுக்கு நான் உபதேசிக்கிறேன். அல்லாஹ்வின் பொறுப்பிலும், அவனுடைய தூதர்(ஸல்) அவர்களின் பொறுப்பிலும் உள்ள (முஸ்லிமல்லாத)வர்களின் ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றிட வேண்டும். (அதன்படி) அவர்களைப் பாதுகாப்பதற்காகப் போரிட வேண்டும்; அவர்களின் சக்திக்கேற்பவே தவிர (ஜிஸ்யா எனும் பாதுகாப்பு வரியின்) பாரத்தை அவர்களின் மீது சுமத்தக் கூடாது.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3053
ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார். (ஒரு முறை) இப்னு அப்பாஸ்(ரலி), ‘(அன்று) வியாழக்கிழமை எந்த வியாழக்கிழமை (தெரியுமா?)” என்று கேட்டுவிட்டு, அவர்களின் கண்ணீர் சரளைக் கல் பூமியை நனைத்து விடும் அளவிற்கு அழுதார்கள். பிறகு கூறினார்கள்.
வியாழக்கிழமையன்று இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (நோயின்) வேதனை கடுமையாயிற்று. அப்போது அவர்கள், ‘ஓர் ஏட்டை என்னிடம் கொண்டு வாருங்கள். உங்களுக்கு ஒரு மடலை நான் எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழி தவற மாட்டீர்கள்” என்று கூறினார்கள். அப்போது மக்கள் (உரத்த குரலில்) சச்சரவிட்டார்கள். ஆனால், ஓர் இறைத் தூதரின் முன்னால் சச்சரவு செய்வது முறையல்ல. மக்கள், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கடுமையாக நோயுற்றுவிட்டார்கள்” என்று கூறினார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள், ‘என்னைவிட்டு விடுங்கள். நீங்கள் எதற்கு என்னை அழைக்கிறீர்களோ அந்த (மரண சாசனம் எழுதும்) பணியை விட நான் இப்போதுள்ள (இறை நினைவில் லயித்திருக்கும் இந்த) நிலையே சிறந்தது?’ என்று சொல்லிவிட்டார்கள். (எதையும் எழுதித் தரவில்லை) மேலும், அவர்கள் தங்களின் மரணத் தருவாயில் மூன்று விஷயங்களைக் கட்டளையிட்டார்கள். அவை: அரபு தீபகற்பத்திலிருந்து இணை வைப்பவர்களை வெளியேற்றுங்கள். (அயல் நாடுகள் மற்றும் குலங்களின்) தூதுக் குழுவினருக்கு நான் கொடுத்து வந்ததைப் போல் நீங்களும் பரிசுப் பொருள்களை வழங்குங்கள். மூன்றாவது கட்டளையை நான் மறந்து விட்டேன்…
யஅகூப் இப்னு முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் முகீரா இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அவர்களிடம் அரபு தீபகற்பம் பற்றிக் கேட்டேன். அவர்கள், ‘மக்காவும், மதீனாவும், யமாமாவும், யமனும் (அரபு தீபகற்பத்தில் அடங்கும்)” என்று பதிலளித்தார்கள்.
மேலும் யஅகூப்(ரஹ்) கூறினார்: (மக்கா – மதீனா இடையே உள்ள) ‘அல்-அர்ஜ்’ என்ற இடம் திஹாமாவின் முதற் கட்டமாகும்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3054
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். உமர்(ரலி) கெட்டியான பட்டு அங்கி ஒன்று சந்தையில் விற்கப்படுவதைக் கண்டார்கள், அதை (வாங்கி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! இந்த அங்கியை வாங்கி, பெருநாளின் போதும் தூதுக் குழுக்கள் வருகை தரும் போதும் இதனால் (உங்களை) அலங்கரித்துக் கொள்ளுங்கள்” என்றார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘இது (மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாதவர்களின் ஆடையாகும்.”.. அல்லது ‘(மறுமையில்) எந்தப் பங்கும் இல்லாதவர்கள் தான் இதை அணிவார்கள்.”. சொன்னார்கள். பிறகு, உமர்(ரலி) அல்லாஹ் நாடிய வரை (சிறிது நேரம்) தங்கியிருந்தார்கள். பின்பு, நபி(ஸல்) அவர்கள் பூவேலைப்பாடு செய்யப்பட்ட பட்டு அங்கி ஒன்றை உமர்(ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். உமர்(ரலி) அதை எடுத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதரிடம் வந்தார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! ‘இது (மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாதவருடைய ஆடையாகும்’ அல்லது… அல்லது.. (மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாதவர் தான் இதை அணிவார்’… கூறினீர்கள். பிறகு, இதையே எனக்கு அனுப்பி வைத்திருக்கிறீர்களே” என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இதை நீங்கள் விற்று விடுவீர்கள்; அல்லது உங்கள் தேவை எதனையாவது இதைக் கொண்டு நிறைவேற்றிக் கொள்வீர்கள் (என்பதற்காக இதை நான் உங்களுக்கு அனுப்பி வைத்தேன்)” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3055
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். உமர்(ரலி) நபித்தோழர்களின் ஒரு குழுவினருடன் நபியவர்களோடு (தான் இறைத்தூதர் என்று வாதாடிய) இப்னு ஸய்யாதை நோக்கிச் சென்றார்கள். பனீ மகாலா குலத்தாரின் மாளிகைகளுக்கருகே சிறுவர்களுடன் (சிறுவனாக) அவன் விளையாடிக் கொண்டிருக்கக் கண்டார்கள். அப்போது இப்னு ஸய்யாத் பருவ வயதை நெருங்கி விட்டிருந்தான். நபி(ஸல்) அவர்கள் தம் கரத்தால் அவனுடைய முதுகில் அடிக்கும் வரையில் அவன் எதையுமே உணரவில்லை. பிறகு, நபி(ஸல்) அவர்கள், ‘நான் இறைத்தூதர்(ஸல்)தான் என்று நீ சாட்சி கூறுகிறாயா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்களை இப்னு ஸய்யாத் (கூர்ந்து) பார்த்து வீட்டு, ‘நீங்கள் (எழுதப் படிக்கத் தெரியாத மக்களான) உம்மீகளின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்” என்று பதிலளித்தான். அப்போது இப்னு ஸய்யாத் நபி(ஸல்) அவர்களிடம், நீங்கள் நான் அல்லாஹ்வின் தூதன் என்று (என்னை ஏற்றுக் கொண்டு) சாட்சி கூறுகிறீர்களா?’ என்று கேட்டான். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இப்னு ஸய்யாதை நோக்கி, ‘அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் நான் நம்பிக்கை கொண்டேன்” என்று கூறினார்கள். (பின்னர்) நபி(ஸல்) அவர்கள், (உன் நிலை பற்றி) நீ என்ன நினைக்கிறாய்?’ என்று கேட்டார்கள். அதற்கு இப்னு ஸய்யாத், ‘என்னிடம் மெய்யான செய்திகளும் பொய்யான செய்திகளும் உதிக்கின்றன” என்றான். நபி(ஸல்) அவர்கள், ‘உனக்கு இப்பிரச்சினையில் (உண்மையும் பொய்யும் கலந்து) குழப்பம் ஏற்பட்டுள்ளது” என்று கூறிவிட்டு, ‘நான் ஒன்றை மனத்தில் உனக்காக (உன்னை சோதிப்பதற்காக) மறைத்து வைத்துள்ளேன். (அது என்ன என்று சொல்)” என்றார்கள். இப்னு ஸய்யாத், ‘அது ‘துக்’ என்று கூறினான். (அதாவது ‘துகான்’ என்பதை ‘துக்’ என அரைகுரையாகச் சொன்னான்.) உடனே நபி(ஸல்) அவர்கள், ‘தூர விலம்ப் போ! நீ உன் எல்லைய தாண்டி விட முடியாது” என்று கூறினார்கள். உமர்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! இவனைக் கொல்ல எனக்கு அனுமதியுங்கள். இவனுடைய கழுத்தை நான் சீவி விடுகிறேன்” என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இவன் அவனாக (தஜ்ஜாலாக) இருந்தால் இவனைக் கொல்லும் பொறுப்பு உங்களுக்குக் கொடுக்கப்படவில்லை; இவன் அவனில்லையென்றால் இவனைக் கொல்வதால் உங்களுக்கு நன்மையேதும் இல்லை” என்றார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3056
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களும் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களும் இப்னு ஸய்யாத் தங்கியிருந்த பேரீச்ச தோட்டத்திற்குச் செல்வதற்காக நடக்கலாயினர். பேரீச்சந் தோட்டத்திற்குள் நுழைந்தவுடன் நபி(ஸல்) அவர்கள், இப்னு ஸய்யாத் தம்மைப் பார்த்து விடும் முன்பே அவனிடமிருந்து அவனுடைய பேச்சு திட்டமிட்டபடி பேரீச்ச மரங்களின் அடிப்பகுதிகளுக்கிடையே தம்மை மறைத்து நடந்தார்கள். அப்போது இப்னு ஸய்யாத் தன்னுடைய படுக்கையில் ஒரு பூம்பட்டுப் போர்வையில் எதையோ முணுமுணுத்தபடி படுத்திருந்தான். இப்னு ஸய்யாதின் தாய் நபி(ஸல்) அவர்கள் பேரீச்ச மரங்களின் தண்டுகளுக்கிடையே தம்மை மறைத்துக் கொண்டு வருவதைக் கண்டு இப்னு ஸய்யாதை, ‘ஸாஃபியே!” இது இப்னு ஸய்யாதின் பெயராகும்… என்றழைத்தாள். உடனே இப்னு ஸய்யாத் குதித்தெழுந்து உட்கார்ந்தான். நபி(ஸல்) அவர்கள், ‘அவள் அவனை அப்படியேவிட்டு விட்டிருந்தால் அவன் (உண்மை நிலையைத்) தெளிவுபடுத்தியிருப்பான்” என்றார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3057
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்பப் புகழ்ந்தார்கள். பிறகு தஜ்ஜாலை நினைவு கூர்ந்து சொன்னார்கள்.
நான் அவனைக் குறித்து உங்களை எச்சரிக்கிறேன். எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தன் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூற் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தினரை அவனைக் குறித்து எச்சரித்தார்கள். ஆயினும், நான் அவனைப் பற்றி வேறெந்த இறைத்தூதரும் தன் சமுதாயத்தாருக்குச் சொல்லாத ஒரு விபரத்தை உங்களுக்குச் சொல்கிறேன். அவன் ஒற்றைக் கண்ணன் என்பதையும் அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3058
உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார். நான் நபி(ஸல்) அவர்களின் ஹஜ்ஜின்போது, ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் நாளை (மக்காவில்) எங்கு தங்குகிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(அபூ தாலிபின் மகன்) அகீல் நமக்கு வீடு எதையேனும்விட்டுச் சென்றுள்ளாரா?’ என்று கேட்டுவிட்டுப் பிறகு, ‘குறைஷிகள் இறைநிராகரிப்பில் நிலைத்திருக்கப் போவதாக சத்தியம் செய்த இடமான ‘முஹஸ்ஸப்’ என்கிற ‘பனூ கினானா’ பள்ளத்தாக்கில் நாளை நாம் தங்கவிருக்கிறோம்” என்று கூறினார்கள். பனூ கினானா குலத்தார் குறைஷிகளிடம் பனூ ஹாஷிம் கிளையாருக்கு எதிராக, ‘அவர்களுடன் கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்ள மாட்டோம்; அவர்களுக்குப் புகலிடம் அளிக்கவும் மாட்டோம்’ என்று ஒப்பந்தம் செய்திருந்தையே நபி(ஸல்) அவர்கள் இப்படிக் குறிப்பிட்டார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3059
உமர்(ரலி) அவர்களின் (முன்னாள்) அடிமை அஸ்லம்(ரஹ்) அறிவித்தார். உமர் இப்னு கத்தாப்(ரலி), (ஸகாத் கால்நடைகளின்) பிரத்தியேக மேய்ச்சல் நிலம் ஒன்றுக்கு ‘ஹுனைன் என்றழைக்கப்படும் தம் அடிமை ஒருவரை (காவலராக) நியமித்தார்கள். அப்போது, ‘ஹுனையே! உன் கையை முஸ்லிம்களுக்கு அநீதியிழைப்பதிலிருந்து காத்துக் கொள். அநீதியிழைக்கப்பட்டவரின் சாபப் பிரார்த்தனைக்கு அஞ்சு. ஏனெனில், அநீதியிழைக்கப்பட்டவரின் பிரார்த்தனை (அல்லாஹ்வினால்) எற்றுக் கொள்ளப்படக் கூடியதாகும். சிறு ஒட்டக மந்தைகளையும் சிறு ஆட்டு மந்தைகளையும் ஓட்டி வருபவர்கள் (மேய்ச்சல் நிலத்திற்குள்) நுழைய அனுமுதியளி. (செல்வந்தர்களான) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் மற்றும் உஸ்மான் இப்னு அஃப்பான் ஆகியோரின் கால்நடைகளைக் குறித்து எச்சரிக்கையாய் இரு. (அவற்றை உள்ளே நுழைய விடாதே) ஏனெனில், அவ்விருவரின் கால்நடைகளும் (தீனி கிடைக்காமல்) அழிந்து போய்விட்டால் அவர்களிருவரும் (தம் பிழைப்பிற்குத் தம்) பேரீச்சந் தோட்டங்களையும் விளைநிலங்களையும் பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால், சிறிய ஒட்டக மந்தைகளையும் சிறிய ஆட்டு மந்தைகளையும் வைத்திருப்பவர்கள் தங்கள் கால்நடைகள் (தீனி கிடைக்காமல்) அழிந்து போய்விட்டால் (கலீஃபாவான) என்னிடம் தம் பிள்ளை குட்டிகளை அழைத்து வந்து, ‘விசுவாசிகளின் தலைவரே! நான் இவர்களை (பட்டினி கிடந்து) சாகவிட்டு விடவா?’ என்ற கேட்பார்கள். எனவே, (முஸ்லிம்களின் பொதுநிதியிலிருந்து) தங்கத்தையும் வெள்ளியையும் (அவர்களுக்குத் தருவதை) விட (அரசின் பிரத்தியேக மேய்ச்சல் நிலங்களிலிருந்து) தண்ணீரையும் புற்பூண்டுகளையும் தருவது எனக்கு இலேசானதாகும் அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவர்களுக்கு அநீதியிழைத்துவிட்டதாக இவர்கள் கருதுகிறார்கள். இது அவர்களின் நாடு. இதற்காக இவர்கள் அறியாமைக் காலத்திலும் போரிட்டிருக்கிறார்கள்; இஸ்லாத்தின் காலத்திலும் இஸ்லாத்தைத் தழுவி இதற்காகப் போரிட்டிருக்கிறார்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! இறைவழியில் (போரிடுவோரை) நான் ஏற்றியனுப்பவேண்டிய (கால்நடைச்) செல்வம் மட்டும் தேவையில்லையென்றால் இவர்களுடைய நாட்டிலிருந்து ஓர் அங்குலத்தைக் கூட (கையகப்படுத்தி) பிரத்தியேக மேய்ச்சல் நிலமாக நான் ஆக்கியிருக்க மாட்டேன்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3060
ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். “மக்களில் இஸ்லாத்தை ஏற்றிருப்பதாகக் கூறுபவர்களின் பெயர்களை எனக்காக எழுதுங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். நாங்கள் அவர்களுக்காக ஆயிரத்து ஐநூறு பெயர்களை எழுதினோம். அப்போது நாங்கள், ‘நாம் ஆயிரத்து ஐநூறு பேர் இருக்க (எதிரிகளுக்கு) நாம் பயப்படுவதா?’ என்று கேட்டோம். (ஆனால், பிற்காலத்தில்) நாங்கள் அச்சப்பட்டு தனியாகத் தொழுமளவிற்கு சோதனைக்குள்ளாக்கப்பட்டிருந்ததை பார்த்திருக்கிறேன்.
அறிவிப்பாளர் அஃமஷ்(ரஹ்) கூறினார்: “(மொத்தம்) ஐநூறு பேர்களை நாங்கள் கண்டோம்” என்று ஹுதைஃபா(ரலி) மற்றோர் அறிவிப்பில் கூறுகிறார்கள்.
“அறுநூறு பேரிலிருந்து எழுநூறு பேர் வரை” என்று ஹுதைஃபா(ரலி) சொன்னதாக அபூ முஆவியா(ரஹ்) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3061
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் இன்ன புனிதப் போரில் கலந்து கொள்வதாக (ராணுவ வீரர்கள் பட்டியலில்) என்னுடைய பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், என் மனைவி ஹஜ் செய்யவிருக்கிறாள்” என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘நீ திரும்பிச் சென்று உன் மனைவியுடன் ஹஜ் செய்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3062
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நாங்கள் (கைபர் போரில்) கலந்து கொண்டோம். தன்னை முஸ்லிம் என்று கூறிக் கொண்டே ஒரு மனிதரைக் குறித்து நபி(ஸல்) அவர்கள், ‘இவர் நரகவாசிகளில் ஒருவர்” என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்தபோது காயம் ஒன்று அவருக்கு ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் எவரைக் குறித்து, ‘இவர் நரகவாசிகளில் ஒருவர்’ என்று குறிப்பிட்டீர்களோ அவர் இன்று கடுமையாகப் போரிட்டு மடிந்துவிட்டார்” என்று கூறப்பட்டது. அப்போதும் நபி(ஸல்) அவர்கள், ‘அவர் நரகத்திற்கே செல்வார்” என்று (மீண்டும்) கூறினார்கள். மக்களில் சிலர் (நபி(ஸல்) அவர்களின் இச்சொல்லை) சந்தேகப்படலாயினர். அவர்கள் இவ்வாறு இருந்து கொண்டிருக்கும்போது, ‘அவர் (போரில் கொல்லப்பட்டு) இறக்கவில்லை. ஆயினும், அவர் கடும் காயத்திற்கு ஆளானார். இரவு வந்தபோது, காயத்தின் வேதனையை அவரால் தாங்க முடியாமல் தற்கொலை செய்தார்” என்று கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்களுக்கு இச்செய்தி தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள், ‘அல்லாஹ் மிகப் பெரியவன். நான் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவேன் என்பதற்கு நானே சாட்சி கூறுகிறேன்” என்று கூறினார்கள். பிறகு, பிலால்(ரலி) அவர்களுக்குக் கட்டளையிட, அவர்கள் மக்களிடையே, ‘முஸ்லிமான ஆன்மா தான் சொர்க்கத்திற்குச் செல்ல முடியும். மேலும், அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் வாயிலாகவும் வலுவூட்டுகிறான்” என்று பொது அறிவித்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3063
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். (மூத்தா போரின்போது போர்கள் நிகழ்ச்சிகளை மதீனாவில் இருந்தபடியே நேர்முக வர்ணணையாக விவரித்து,) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். உரையில், ‘இப்போது (இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஸைத் இப்னு ஹாரிஸா எடுத்தார். அவர் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு, அதை ஜஅஃபர் இப்னு அபீ தாலிப் எடுத்தார். அவரும் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு அப்துல்லாஹ் இப்னு ரவாஹா எடுத்தார். இப்போது அவரும் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு, காலித் இப்னு வலீத் (நம்முடைய) உத்தரவு இன்றியே (கொடியை) எடுத்தார். அல்லாஹ் அவருக்கே வெற்றி வாய்ப்பை அளித்துவிட்டான்” என்று கூறிவிட்டு, ‘(இப்போது) அவர்கள் நம்மிடமிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்காது” என்றோ, ‘(இப்போது) அவர்கள் நம்மிடமிருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்காது” என்றோ சொன்னார்கள். மேலும், இதைச் சொல்லும்போது நபி(ஸல்) அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைப் பொழிந்து கொண்டிருந்தன.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3064
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் ரிஅல், தக்வான், உஸய்யா, பனூ லிஹ்யான் ஆகிய குலத்தார் (சிலர்) வந்து, தாங்கள் இஸ்லாத்தை ஏற்றதாகக் கூறினர். மேலும், தம் சமுதாயத்தினரை நோக்கி ஒரு படையனுப்பு உத்தரவிடும்படியும் நபி(ஸல்) அவர்களிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர். நபி(ஸல்) அவர்கள், அன்சாரிகளிலிருந்து எழுபது பேரை அனுப்பி அவர்களுக்கு உதவினார்கள். அவர்களை நாங்கள் ‘காரீகள்’ (குர்ஆனை மனனம் செய்து முறைப்படி ஓதுவோர்) என்று அழைத்து வந்தோம். அவர்கள் பகல் நேரத்தில் விறகு சேகரிப்பார்கள்; இரவு நேரத்தில் தொழுவார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு அந்தக் குலத்தார் சென்றனர். இறுதியில், ‘பீரு மஊனா’ என்னுமிடத்தை அவர்கள் அடைந்தவுடன் முஸ்லிம்களை ஏமாற்றிக் கொன்றுவிட்டனர். உடனே, நபி(ஸல்) அவர்கள் ஒரு மாதம் (முழுவதும்) ரிஅல், தக்வான், பனூ லிஹ்யான் ஆகிய குலங்களுக்குத் தீங்கு நேரப் பிரார்த்தனை செய்தார்கள். (கொல்லப்பட்ட) அந்த எழுபது பேரைக் குறித்து (அவர்கள் சொல்வதாக அருளப்பட்ட) ஓர் இறைவசனத்தை குர்ஆனில் நாங்கள் ஓதி வந்தோம்.
“நாங்கள் எங்கள் இறைவனைச் சந்திக்கச் சென்று விட்டோம் என்றும், அவன் எங்களைக் குறித்துத் திருப்தியடைந்தான்; நாங்களும் அவனைக் குறித்துத் திருப்தியடைந்தோம் என்றும் எங்கள் சமுதாயத்திற்கு எங்களைப் பற்றித் தெரிவித்து விடுங்கள்” என்பதே அந்த வசனம்.
பின்னர், இந்த வசனத்தை ஓதுவது (இறைவனாலேயே) ரத்து செய்யப்பட்டு விட்டது.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3065
அபூ தல்ஹா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு சமுதாயத்தாரை வென்றால் அவர்களின் திறந்த வெளிப் பகுதியில் மூன்று நாள்கள் தங்குவார்கள்.
இதே போன்று முஆத்(ரஹ்) அவர்களும் அப்துல் அஃலா(ரஹ்) அவர்களும் அறிவித்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3066
அனஸ்(ரலி) அறிவித்தார். ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களைத் தாம் பங்கிட்ட இடமான ஜிஇர்ரானாவிலிருந்து (புறப்பட்டுப் போய்) நபி(ஸல்) அவர்கள் உம்ரா செய்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3067

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். என்னுடைய குதிரை ஒன்று (என்னைக் கீழே வீழ்த்திவிட்டு ஓடிச்) சென்றது. அதை எதிரிகள் பிடித்தனர். பின்னர், முஸ்லிம்கள் எதிரிகளை வென்றபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காலத்தில் அது என்னிடம் திருப்பித் தரப்பட்டுவிட்டது (இவ்வாறே) என்னுடைய அடிமை ஒருவன் தப்பியோடி ரோமர்(பைஸாந்தியர்)களுடன் சேர்ந்து கொண்டான். பைஸாந்தியர்களை முஸ்லிம்கள் வென்றபோது அந்த அடிமையை காலித் இப்னு வலீத்(ரலி) நபி(ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு என்னிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3068
நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களின் அடிமையொருவன் தப்பியோடி பைஸாந்தியர்களுடன் சேர்ந்து கொண்டான். காலித் இப்னு வலீத்(ரலி) பைஸாந்தியர்களை வென்றபோது, அவனை அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். (இவ்வாறே) இப்னு உமர்(ரலி) அவர்களின் குதிரையொன்று விரண்டோடி பைஸாந்தியர்களிடம் சிக்கியது. பைஸாந்திய நாட்டை காலித் இப்னு வலீத்(ரலி) வென்றபோது அதை அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3069
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். முஸ்லிம்கள் பைஸாந்தியர்களைப் போர்க்களத்தில் சந்தித்தபோது நான் ஒரு குதிரையின் மீது (பயணித்தபடி) இருந்தேன்; அப்போது முஸ்லிம்களின் (படைத்) தலைவராக காலித் இப்னு வலீத் அவர்கள் இருந்தார்கள். அவரை அபூ பக்ர்(ரலி) (தளபதியாக) அனுப்பியிருந்தார்கள். 9என்னுடைய) அந்தக் குதிரையை எதிரிகள் எடுத்துக் கொண்டனர். எதிரிகள் தோற்கடிக்கப்பட்டபோது காலித் இப்னு வலீத்(ரலி) என்னுடைய குதிரையைத் திருப்பித் தந்துவிட்டார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3070

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். (அகழ்ப் போரின் போது) நான் நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் எங்கள் ஆட்டுக் குட்டி ஒன்றை அறுத்தோம்; நான் ஒரு ஸாவு வாற்கோதுமையை அரைத்து மாவாக்கியுள்ளேன்; எனவே, தாங்களும் இன்னொருவரும் (சேர்ந்து அதை உண்பதற்கு) வாருங்கள்” என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘அகழ் தோண்டுபவர்களே! ஜாபிர் விருந்துச் சாப்பாடு தயாரித்திருக்கிறார். சீக்கிரம் வாருங்கள்” என்று உரத்த குரலில் அழைத்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3071
உம்மு காலித்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் என் தந்தையுடன் மஞ்சள் நிறச் சட்டை ஒன்றை அணிந்து சென்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(இவள்) நன்றாயிருக்கிறாள். (இவள்) நன்றாயிருக்கிறாள்” என்றார்கள். நான் (நபி(ஸல்) அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையே இருந்த) நபித்துவ முத்திரையுடன் விளையாடத் தொடங்கினேன். உடனே, என் தந்தை என்னை அதட்டினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(குழந்தை தானே!) அவனை (விளையாட விடுவீராக!” என்று கூறினார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (இந்தச் சட்டையை) நீ (பழையதாக்கிக்) கிழித்து நைந்து போகச் செய்து விடு. மீண்டும் அதைக் கிழித்து நைந்து போகச் செய்து விடு” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு முபாரக்(ரஹ்), ‘அந்தச் சட்டை, நிறம் பழுத்துப் போய் மக்களால் பேசப்படும் அளவிற்கு உம்மு காலித்(ரலி) நெடுங்காலம் வாழ்ந்தார்கள்” என்று கூறுகிறார்கள். மேலும், நபி(ஸல்) அவர்கள் கூறிய ‘சனா’ (நன்றாயிருக்கிறாள்) என்னும் சொல் அபிசீனிய மொழிச் சொல்லாகும்” என்றும் கூறுகிறார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3072
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஹஸன் இப்னு அலீ(ரலி) (சிறுவராயிருந்த போது) தருமப் பொருளாக வந்த பேரீச்சம் பழங்களிலிருந்து ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துத் தம் வாயில் வைத்தார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள் பாரசீக மொழியில், ‘கிஹ் கிஹ்’ – சீச்சி!” (என்று சொல்லிவிட்டு) ‘நாம் தருமப் பொருளைச் சாப்பிட மாட்டோம் என்று உனக்குத் தெரியாதா?’ என்று கேட்டார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3073
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் எங்களிடையே எழுந்து நின்று போர்ச் செல்வங்களை மோசடி செய்வது குறித்துக் கூறினார்கள். அது கடுங்குற்றம் என்பதையும் அதன் பாவம் பெரியது என்பதையும் எடுத்துரைத்தார்கள். அப்போது, ‘மறுமை நாளில் தன் கழுத்தில், கத்திக் கொண்டிருக்கும் ஆட்டையும், கனைத்துக் கொண்டிருக்கும் குதிரையையும் சுமந்து வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என்னைக் காப்பாற்றுங்கள்” என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காணவேண்டாம். (ஏனெனில்) அப்போது நான், ‘உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய முடியாது. உனக்கு நான் (இறைச் சட்டத்தை) எடுத்துரைத்து விட்டேன்’ என்று கூறி விடுவேன். இவ்வாறே, (மறுமை நாளில்) தன் கழுத்தில் கத்திக் கொண்டிருக்கும் ஒட்டகத்தைச் சுமந்து வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என்னைக் காப்பாற்றுங்கள்” என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்,) அப்போது நான், ‘என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு (இறைச் சட்டத்தை) நான் எடுத்துரைத்து விட்டேன்’ என்று கூறி விடுவேன். இவ்வாறே (அந்நாளில்) தன் கழுத்தில் வெள்ளியும் தங்கமும் சுமந்து வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்), அப்போது நான், ‘என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு (இறைச் சட்டத்தை) நான் எடுத்துரைத்து விட்டேன்’ என்று கூறி விடுவேன். இவ்வாறே (அந்நாளில்) தன் கழுத்தில் வெள்ளியும் தங்கமும் சுமந்து வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காணவேண்டாம். (ஏனெனில்,) அப்போது நான், ‘என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு (இறைச் சட்டத்தை) நான் எடுத்துரைத்து விட்டேன்’ என்று கூறி விடுவேன். அல்லது அசைகிற எந்தப் பொருளையாவது தன் கழுத்தில் சுமந்து வந்து ‘இறைத்தூதர் அவர்களே! என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று (அபயம் தேடி) அலறிய நிலையில் உங்களில் எவரையும் நான் காணவேண்டாம். (ஏனெனில்,) அப்போது நன், ‘என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. (இறைச் சட்டத்தை) உனக்கு நான் எடுத்துரைத்து விட்டேன்’ என்று கூறி விடுவேன்’ என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3074
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் பயணச் சுமைகளுக்குக் காவலாக ‘ம்ர்ம்ரா’ என்றழைக்கப்பட்ட மனிதர் ஒருவர் இருந்தார். அவர் (ஒரு நாள்) இறந்துவிட்டார். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அவர் நரகத்தில் நுழைவார்” என்று கூறினார்கள். (இதைக் கேட்டு) நபித்தோழர்கள் அவரைப் பார்ப்பதற்காகச் சென்றனர். அங்கு அவர் மோசடி செய்து (திருடி) எடுத்து வைத்திருந்த மேலங்கி ஒன்றைக் கண்டார்கள்.
“(என் ஆசிரியர்) இப்னு சலாம்(ரஹ்) ‘கிர்கிரா’வை ‘கர்கரா’ என்று வாசிக்க வேண்டும் என்று கூறினார்கள்” என அபூ அப்தில்லாஹ் புகாரீயாகிய நான் கூறுகிறேன்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3075

ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் துல் ஹுலைஃபாவில் இருந்தோம். அப்போது மக்களுக்குப் பசி ஏற்பட்டது. எங்களுக்கு ஒட்டகம் ஒன்றும் ஆடு ஒன்றும் கிடைத்தது. அப்போது நபி(ஸல்) அவர்கள் மக்களின் பின்வரிசையில் இருந்தார்கள். எனவே, மக்கள் அவசரப்பட்டுப் பாத்திரங்களை அடுப்புகளில் வைத்து (சமைக்கத் தொடங்கி)விட்டார்கள். (இதையறிந்த) நபி(ஸல்) அவர்கள், ‘பாத்திரங்களைத் தலைகீழாகக் கவிழ்க்கும்படி உத்தரவிட அவ்வாறே அவை கவிழ்க்கப்பட்டன. பிறகு (அவற்றை) நபி(ஸல்) அவர்கள் பங்கிட்டார்கள். அவர்கள் பத்து ஆடுகளை ஓர் ஒட்டகத்திற்குச் சமமாகக் கருதினார்கள். அவற்றில் ஓர் ஒட்டகம் ஒடிவிட்டது மக்களிடம் சில குதிரைகளே இருந்தன. அந்த ஒட்டகத்தை அவர்கள் விரட்டிப் பிடிக்க முயன்றார்கள். அது அவர்களைக் களைப்படையச் செய்துவிட்டது. ஒருவர் அதை நோக்கி ஓர் அம்பை எய்தார். அல்லாஹ் அந்த ஒட்டகத்தை (ஓட முடியாமல்) தடுத்து நிறுத்திவிட்டான். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘காட்டு மிருகங்களில் கட்டுக் கடங்காதவை இருப்பது போல் இந்த விலங்குகளும் கட்டுக்கடங்காதவையாகும். உங்களிடமிருந்து விரண்டோடி விடுபவற்றை இவ்வாறே செய்யுங்கள். (அம்பெய்து தடுத்து நிறுத்துங்கள்)” என்று கூறினார்கள். நான், ‘எங்களிடம் வாட்கள் இல்லாத நிலையில் நாளை (போர்க் களத்தில்) எதிரிகளைச் சந்திக்க நேரிடுமோ என்று நாங்கள் அஞ்சுகிறோம். எனவே, நாங்கள் (அவற்றை வாட்களால் அறுக்காமல்) மூங்கில்களால் அறுக்கலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இரத்தத்தை ஓடச் செய்கிற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தாலும் (பிராணி அறுக்கப்படும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டிருக்கும் பட்சத்தில் அதை நீங்கள் உண்ணலாம்; பல்லையும் நகத்தையும் தவிர! இதைப் பற்றி (இந்த இரண்டினாலும் அறுக்கப்பட்டதை ஏன் உண்ணக் கூடாது என்பதற்கான காரணத்தை) நான் உங்களுக்குச் சொல்கிறேன்; பற்களோ எலும்பாகும். நகங்களோ அபிசீனியர்களின் கத்திகளாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3076

ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், ‘துல் கலஸாவின் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா?’ என்று கேட்டார்கள். அது கஸ்அம் குலத்தாரிடையே ‘யமன் நாட்டு கஅபா’ என்றழைக்கப்படடு வந்த ஆலயமாக இருந்தது. நான் ‘அஹ்மஸ்’ குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது (குதிரை) வீரர்களுடன் புறப்பட்டோம். அவர்கள் சிறந்த குதிரைப் படை வீரர்களாக இருந்தனர். ‘என்னால் குதிரையின் மீது சரியாக அமர முடியவில்லை” என்று நான் நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். எனவே, அவர்கள் என் நெஞ்சில் அடித்தார்கள். எந்த அளவிற்கென்றால் அவர்களின் விரல்கள் பதிந்த அடையாளத்தை என் நெஞ்சில் பார்த்தேன். அப்போது அவர்கள் ‘இறைவா! இவரை உறுதிப்படுத்து இவரை நேர்வழி காட்டுபவராகவும் ஆக்கு” என்று பிரார்த்தித்தார்கள். நான் அதை நோக்கிச் சென்று அதை உடைத்து எரித்து விட்டேன். நபி(ஸல்) அவர்களுக்கு அதை (உடைத்து எரித்துவிட்டது) பற்றிய நற்செய்தி தெரிவிக்கச் சொல்லி ஆளனுப்பினேன். என்னுடைய தூதுவர், ‘இறைத்தூதர் அவர்களே! உங்களைச் சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அந்த ஆலயத்தைச் சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்றுவிட்டுவிட்டுத் தான் உங்களிடம் வந்திருக்கிறேன்” என்று கூறினார். உடனே, நபி(ஸல்) அவர்கள் (இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட) ‘அஹ்மஸ்’ குலத்தாருக்கும் அவர்களின் குதிரைப் படையினருக்கும் பரக்கத் (எனும் அருள் வளத்)தை அளிக்கும்படி பலமுறை அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3077
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். மக்கா வெற்றி கொள்ளப்பட்டபோது நபி(ஸல்) அவர்கள், ‘ஹிஜ்ரத் இனி கிடையாது. ஆயினும், ஜிஹாதும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் (நிய்யத்) கொள்வதும் உண்டு. நீங்கள் அறப்போர் புரியப் புறப்படும் படி அழைக்கப்பட்டால் உடனே புறப்பட்டு விடுங்கள்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3078-3079

முஜாஷிஉ இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நான் என் சகோதரர் முஜாலித் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, ‘இவர் (என் சகோதரர்) முஜாலித்; தங்களிடம் ஹிஜ்ரத் செய்வதாக உறுதிமொழியளிக்(க வந்திருக்)கிறார்” என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘மக்கா வெற்றிக்குப் பிறகு ஹிஜ்ரத் கிடையாது. ஆயினும், நான் இவரிடம் இஸ்லாத்திற்கு விசுவாசமாக இருப்பதாக உறுதிமொழி வாங்குவேன்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3080
அதா இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) அறிவித்தார். நான் உபைத் இப்னு உமைர்(ரஹ்) அவர்களுடன் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் (முஸ்தலிஃபாவில்) ஸபீர் மலையருகே தங்கியிருந்தார்கள். அவர்கள் எங்களிடம், ‘நபி(ஸல்) அவர்களுக்கு அல்லஹ் மக்காவின் வெற்றியை அளித்த பின்னால் (மக்காவிலிருந்து) ஹிஜ்ரத் செய்யும் கடமை நீங்கிவிட்டது” என்றார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3081
ஸஅத் இப்னு உபைதா(ரஹ்) அறிவித்தார். உஸ்மான்(ரலி) அவர்களின் ஆதரவாளர்களில் ஒருவரான அபூ அப்திர் ரஹ்மான்(ரஹ்) அலீ(ரலி) அவர்களின் ஆதரவாளர்களில் ஒருவரான இப்னு அதிய்யா(ரஹ்) அவர்களிடம் இப்படிக் கூறினார்கள்.
உங்கள் தோழர் (அலீ) அவர்களுக்கு ரத்தம் சிந்துவதற்கான துணிவைக் கொடுத்தது எது என்று அறிவேன்.
(ஏனெனில்) அவர் (பின்வருமாறு) சொல்ல கேட்டிருக்கிறேன்: என்னையும் ஸுபைர்(ரலி) அவர்களையும் நபி(ஸல்) அவர்கள் அனுப்பி, ‘நீங்கள் இன்ன ‘ரவ்ளா’ என்னும் இடத்திற்குச் செல்லுங்கள். அங்கு ஒரு பெண்ணை நீங்கள் காண்பீர்கள். அவளிடம் ஹாதிப் ஒரு கடிதத்தைக் கொடுத்திருக்கிறார்” என்று கூறினார்கள். நாங்கள் ரவ்ளாவுக்குச் சென்று, ‘கடிதம் (எங்கே)?’ என்று (அப்பெண்ணிடம்) கேட்டோம். அந்தப் பெண், ‘அவர் என்னிடம் கொடுக்கவில்லை” என்று கூறினாள். நாங்கள், ‘நீயாக அதை வெளியே எடுக்கிறாயா அல்லது நான் உன்னை நிர்வாணப்படுத்தட்டுமா?’ என்று கேட்டோம். உடனே, அவள் தன் நீண்ட கூந்தல் தொட்டுக் கொண்டிருக்கும் இடுப்பிலிருந்து அதை வெளியே எடுத்தாள். மடியிலிருந்து (கடிதம் கிடைத்த) உடனே நபி(ஸல்) அவர்கள், ஹாதிப் அவர்களுக்கு ஆளனுப்பினார்கள். ஹாதிப் அவர்கள் (வந்து), ‘(இறைத்தூதர் அவர்களே!) அவசரப்படாதீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் நிராகரிக்கவுமில்லை; இஸ்லாத்தின் மீது எனக்கு நேசத்தைத் தவிர வேறெதுவும் அதிகரிக்கவுமில்லை. தங்கள் தோழர்கள் அனைவருக்குமே மக்காவில் அவர்களின் மனைவி மக்களையும் அவர்களின் செல்வத்தையும் எவரின் மூலமாக அல்லாஹ் பாதுகாப்பானோ அத்தகையோர் இருக்கின்றனர். ஆனால், எனக்கோ எவருமே இல்லை. எனவே, அவர்களிடம் நான் எனக்கு ஓர் ஆதரவை உருவாக்கிக் கொள்ள விரும்பினேன்” என்று கூறினார்கள். அவர்களின் இந்த வாக்குமூலத்தை நபி(ஸல்) அவர்கள் உண்மையானதென்று ஏற்றார்கள். ஆனால், உமர் அவர்கள், ‘என்னை அவரின் கழுத்கை; கொய்தெறிய அனுமதியுங்கள். ஏனென்றால், அவர் நயவஞ்சகராகி விட்டார்” என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘உங்களுக்கென்ன தெரியும்? அல்லாஹ் பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களின் தூய எண்ணத்தை அறிந்து (அவர்களை நோக்கி), ‘நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள்’ என்று கூறி விட்டிருக்கலாம்” என்றார்கள்.
நபி(ஸல்) அவர்களின் இச்சொல்லைக் கேட்டிருந்தது தான் அலீ(ரலி) அவர்களுக்கு இந்தத் துணிவைத் தந்திருக்கிறது. (இவ்வாறு அபூ அப்திர் ரஹ்மான் கூறினார்.)
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3082
இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி), அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர்(ரலி) அவர்களிடம், ‘நானும் நீங்களும் இப்னுஅப்பாஸ் அவர்களும் நபி(ஸல்) அவர்களை எதிர்கொண்டு வரவேற்கச் சென்றதை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘ஆம், நபி(ஸல்) அவர்கள் எங்களை (என்னையும் இப்னு அப்பாஸ் அவர்களையும் தம்முடன்) வாகனத்தில் ஏற்றினார்கள்; உங்களைவிட்டுவிட்டார்கள்” என்று பதிலளித்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3083
சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார். நாங்கள் (சிறுவர்களாயிருந்தபோது மற்ற) சிறுவர்களுடன் சேர்ந்து (தபூக் போரிலிருந்து திரும்பி வரும்) இறைத்தூதர்(ஸல்) அவர்களை வரவேற்பதற்காக ‘வதா’ மலைக் குன்றை நோக்கிச் சென்றோம்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3084
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (புனிதப் போரிலிருந்து) திரும்பிச் செல்லும்போது மூன்று முறை ‘அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன்’ என்று கூறிவிட்டு, ‘இறைவன் நாடினால் நாங்கள் பாவமன்னிப்புக் கோரியவர்களாகவும் வணக்கம் புரிபவர்களாகவும், (அவனைப்) புகழ்ந்தவர்களாகவும், எங்கள் இறைவனுக்கே (நெற்றியை நிலத்தில் வைத்துச்) சிரம் பணிந்தவர்களாகவும் திரும்பிச் செல்கிறோம். அல்லாஹ் தன் வாக்குறுதியை மெய்யாக்கிக் காட்டிவிட்டான்; தன் அடியாருக்கு உதவி புரிந்துவிட்டான்; தன்னந் தனியாக (அனைத்துக்) குலங்களையும் தோற்கடித்துவிட்டான்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3085
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் உஸ்ஃபானிலிருந்து (போர் முடிந்து) திரும்பியபோது நாங்கள் அவர்களுடன் இருந்தோம். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தின் மீது அமர்ந்திருந்தார்கள். (தம் துணைவியார்) ஸஃபிய்யா பின்த்து ஹுயை(ரலி) அவர்களை (வாகனத்தில்) தமக்குப் பின்னே அமர்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்களின் ஒட்டகம் கால் சறுக்கி விட அவர்களிருவரும் ஒரு சேரக் கீழே விழுந்தார்கள். உடனே, அபூ தல்ஹா(ரலி) (தம் வாகனத்திலிருந்து) கீழே குதித்து, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்குவானாக!” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(முதலில்) அந்தப் பெண்ணை (ஸஃபிய்யாவை) கவனி” என்று கூறினார்கள். உடனே, அபூ தல்ஹா(ரலி) ஒரு துணியைத் தம் முகத்தின் மீது போட்டு மூடிக் கொண்டு ஸஃபிய்யா(ரலி) அவர்களிடம் சென்று அவர்களின் மீது அந்தத் துணியைப் போட்டார்கள். பிறகு இருவருக்கும் அவர்களின் வாகனத்தைச் சரிசெய்து கொடுத்தார்கள். உடனே அவ்விருவரும் (வாகனத்தில்) ஏறினார்கள். நாங்கள் அல்லாஹ்வின் தூதரைச் சுற்றிலும் (வட்டமாக) நின்று அவர்களுக்குப் பாதுகாப்பாகச் சென்றோம். நாங்கள் மதீனாவை நெருங்கியவுடன் நபி(ஸல்) அவர்கள், ‘பாவ மன்னிப்புக் கோரியவர்களாக, எங்கள் இறைவனையே வணங்கியவர்களாக, (அவனைப் போற்றிப் புகழ்ந்தவர்களாக நாங்கள் திரும்பிக் கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்கள். மதீனாவிற்குள் நுழையும் வரை அவர்கள் இப்படியே சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3086
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நானும் அபூ தல்ஹா(ரலி) அவர்களும் நபி(ஸல்) அவர்களுடன் (போரிலிருந்து) மதீனா நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். நபி(ஸல்) அவர்களுடன் ஸஃபிய்யா(ரலி) அவர்களும் இருந்தார்கள். அவர்களை நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சிறிதளவு தூரத்தைக் கடந்து வந்து கொண்டிருந்தபோது வழியில் வாகனம் சறுக்கி விழுந்தது. நபி(ஸல்) அவர்களும் அவர்களின் துணைவியாரும் கீழே விழுந்தார்கள்.
அறிவிப்பாளர் அபூ இஸ்ஹாக்(ரஹ்) கூறினார்: மேலும், அனஸ்(ரலி) இப்படிச் சொன்னார்கள் என்று எண்ணுகிறேன்: அபூ தல்ஹா அவர்கள் தங்களின் ஒட்டகத்திலிருந்து குதித்து இறங்கி அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என்னை அல்லாஹ் தங்களுக்கு அர்ப்பணமாக்குவானாக! தங்களுக்கு காயம் எதுவும் ஏற்பட்டதா?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இல்லை ஆயினும், நீ அந்தப் பெண்ணை கவனி” என்று கூறினார்கள். உடனே, அபூ தல்ஹா அவர்கள் தம் துணியைத் தம் முகத்தின் மீது போட்டு மூடிக் கொண்டு ஸஃபிய்யா(ரலி) இருந்த திசையை நோக்கி நடந்து சென்று அவர்களின் மீது அத்துணியை போட்டார்கள். உடனே, அப்பெண்மணி (ஸஃபிய்யா(ரலி)) எழுந்தார்கள். பிறகு அபூ தல்ஹா அவர்கள், அவர்கள் (நபியவர்கள் மற்றும் அன்னை ஸஃபிய்யா) இருவருக்காகவும் அவர்களின் வாகனத்தைச் சரிசெய்து தந்தவுடன் இருவரும் ஏறினர். பிறகு, அனைவரும் பயணத்தைத் தொடர்ந்தனர். மதீனாவின் அருகே வந்தபோது நபி(ஸல்) அவர்கள், ‘பாவ மன்னிப்புக் கோரியவர்களாக, எங்கள் இறைவனை வணங்கியவர்களாக, (அவனைப் போற்றிப்) புகழ்ந்தவர்களாக நாங்கள் திரும்பிக் கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்குள் நுழையும் வரை இவ்வாறு கூறிக் கொண்டேயிருந்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3087
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். நாங்கள் (பயணம் முடிந்து) மதீனாவிற்குத் திரும்பி வந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘பள்ளிவாசலில் நுழைந்து இரண்டு ரக்அத்துகள் தொழுவீராக!” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3088
கஅப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து ‘ளுஹா’ (முற்பகல்) நேரத்தில் திரும்பி வந்தால் பள்ளிவாசலில் நுழைந்து உட்காருவதற்கு முன்பாக இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3089
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்தபோது ஒட்டகத்தையோ மாட்டையோ அறுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை இரண்டு ஊக்கியாக்களுடன் ஒரு திர்ஹம் அல்லது இரண்டு திர்ஹம்களைக் கொடுத்து என்னிடமிருந்து ஓர் ஒட்டகத்தை வாங்கினார்கள். (மதீனாவிற்கு அரும்லுள்ள) ‘ஸிரார்’ என்னுமிடத்திற்கு அவர்கள் வந்தபோது ஒரு மாட்டை அறுக்கும்படி உத்தரவிட்டார்கள். அதன்படி அறுக்கப்பட்டது. அதை அனைவரும் உண்டார்கள். மதீனாவுக்கு வந்தபோது பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்துகள் தொழும்படி எனக்கு உத்தரவிட்டார்கள். (தொழுது முடித்த) பிறகு, ஒட்டகத்தின் விலையை எனக்கு நிறுத்துத் தந்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3090
ஜாபிர்(ரலி) அறிவித்தார். நான் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தேன். நபி(ஸல்) அவர்கள், ‘இரண்டு ரக்அத்துகள் தொழுவீராக!” என்று (என்னிடம்) கூறினார்கள்.
‘ஸிரார்’ என்பது மதீனாவின் ஓரத்திலுள்ள ஓரிடமாகும்.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்