மனிதனும் ஜின்னும் ஆற்றலைப் பெற்றுத் தான் வானங்கள் மற்றும் பூமியைக் கடந்து
செல்ல முடியும் என்று 55:33 வசனம் கூறுகின்றது ஆனால் 72:8,9 வசனங்களில் நபிகள்
நாயகத்திற்கு முந்தைய காலத்திலேயே ஜின்கள் பூமியைக் கடந்து சாதாரணமாகச் சென்றதாக
உள்ளதே! விளக்கவும்.
வானம் மற்றும் பூமியைக் கடப்பதற்கு ஆற்றல் தேவை என்று குர்ஆன் கூறுவதை ஒரு
முன்னறிவிப்பு என்ற கோணத்தில் மட்டுமே பார்ப்பதால் இந்தச் சந்தேகம் எழுந்துள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மனிதனுக்கு அத்தகைய
ஆற்றல் இல்லை. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு முன்பே ஜின்
இனத்திற்கு அந்த ஆற்றல் வழங்கப் பட்டிருந்ததாக குர்ஆன் கூறுகிறது. இது எந்த வகையிலும் 55:33 வசனத்திற்கு
முரண்பட்டதல்ல!
இரண்டு பேரை அழைத்து,
உங்களிடம் அதிக பணம் இருந்தால் தான்
நீங்கள் வெளிநாடு செல்ல முடியும் என்று கூறுவதாக வைத்துக் கொள்வோம். இதில் இரண்டு பேரிடமும் பணம் இருக்கின்றதா இல்லையா என்ற
தகவல் இல்லை. இரண்டு பேரில் ஒருவரிடம் பணம் இருக்கலாம். மற்றவரிடம் இல்லாமல் இருக்கலாம். அது இங்கு
குறிப்பிடப்படவில்லை. வெளிநாடு செல்வதற்கு அதிகப் பணம் தேவை என்ற செய்தி மட்டுமே சொல்லப்படுகின்றது.
இது போல் இந்த வசனத்தில், வானம் மற்றும்
பூமியின் விளிம்பைக் கடப்பதற்கு ஓர் ஆற்றல் தேவை என்று தான் கூறப்படுகின்றதே தவிர, இன்னும் யாருக்குமே அந்த ஆற்றல் இல்லை என்று கூறப்
படவில்லை. மனிதனுக்கு தற்காலத்தில் அந்த ஆற்றல் கிடைத்திருப்பது போல் ஜின்களுக்கு
முற்காலத்திலேயே அந்த ஆற்றல் வழங்கப் பட்டிருந்தது என்று தான் இதை விளங்கிக் கொள்ள
வேண்டும். பூமியைக் கடந்து செல்வது பற்றி மனிதன் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத
அந்தக் காலத்தில் இதைப் பற்றி குர்ஆன் கூறுவதால் இதை மனித சமுதாயத்திற்குக்
கூறப்பட்ட முன்னறிவிப்பாக எடுத்துக் கொள்கிறோம். - Raj raj mohamed
No comments:
Post a Comment