Social Icons

Tuesday 16 October 2012

ஸஹீஹ் முஸ்லிம் 2


 ஈமான் பற்றிய நூல் 

ஹதீஸ் எண் : 21

குராசான் நாட்டைச் சேர்ந்தவர்களில் ஒரு மனிதரை நான் கண்டேன். அவர் ஷஅபீயிடம் “அபா அம்ரு அவர்களே! நமக்கு முன் இருந்த குராசான்வாசிகள் “ஒரு மனிதர் தன் அடிமையை உரிமை விட்ட பிறகு அவளைத் திருமணம் செய்துகொண்டால் தனது சவாரிக்குரிய மிருகத்தை புணர்ந்தவனைப் போன்றவனாவான். ” எனக் கூறக்கூடியவர்களாக இருந்தனர் எனக் கூறினார்.

அதைக் கேட்ட ஷஅபீ அவர்கள்,

“நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், மூன்று சாரார்களுக்கு இரு முறை அவர்களது கூலி நல்கப்படும் என்பதாக கூறி

வேதக்காரர்களில் ஒரு மனிதர் தனது நபியையும் விசுவாசங்கொண்டு (இந்த) நபியைப்பெற்றுக்கொண்ட பின்னர் இவர்களையும் விசுவாசங்கொண்டு, இவர்களைப் பின்பற்றி, இவர்களை உண்மைப்படுத்தினால், அந்த மனிதருக்கு இரு கூலி உண்டு என்றும்,

ஓரு அடிமையானவன், கண்ணியமும் மகத்துவமும் பொருந்திய அல்லாஹ் தன் மீது கடமையாக்கியவற்றை நிறைவேற்றி வருவதோடு, தனது எஜமானருக்கு செய்ய வேண்டிய கடமைகளையும், நிறைவேற்றி வந்தால் அவருக்கு இரு கூலி உண்டு என்றும்,

ஓரு மனிதருக்கு ஒரு அடிமைப்பெண் இருந்து. அவளுக்கு உணவளித்து, அவளுக்கு உணவளிப்பதில் நல்ல முறையில் நடந்து, அவளுக்கு நல்ல ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுத்து, பிறகு உரிமையும் விட்டுவிட்டு, அவளை அவர் திருமணம் செய்து கொண்டால் அவருக்கு(ம்) இரு கூலிகள் உண்டு என்றும் கூறியதாக, தனது தந்தை அறிவித்தார், என அபுதர்தா பின் அபீமூஸா அவர்கள் (எனக்கு) அறிவித்தார்கள்.” என (குராசான் நாட்டவரைப் பார்த்து) கூறினார்கள்.

(வந்திருந்த) குராசான் நாட்டைச் சேர்ந்தவரைப் பார்த்து“எந்த பிரதிபலனுமின்றி இந்த ஹதீஸை எடுத்துக்கொள்வீராக! காரணம் (உமக்கு முன் வந்த மற்றொரு) மனிதர் இது (இச் செய்தியு)வுமில்லாமல் மதீனாவுக்கு பயணமாகியுள்ளார் ” என்றனர்.

ஷஅபீ அவர்களைப் பற்றிய இந்த ஹதீஸை
அறிவிப்பவர் : ஸாலிஹ் பின் ஸாலிஹ் அல்ஹதானி ரளியல்லாஹு அன்ஹு

“மூன்று காரியங்கள் யாரிடம் உள்ளதோ அவர் ஈமானின் இன்பத்தைப் பெற்றுவிடுகிறார் ” என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 22

மூன்று காரியங்கள் யாரிடம் இருக்கிறதோ அவர் அவைகளின் மூலமாக ஈமானின் இன்பத்தைப் பெற்றுவிடுகின்றார்.

1. அவ்விருவரல்லாத மற்றனைத்தையும்விட அல்லாஹ்வையும் அவனது தூதரும் அவருக்கு மிகப்பிரியமானவர்களாக இருக்க வேண்டும்.

2. அவர் மனிதரை நேசிப்பார் அந் நேசம் அல்லாஹ்வுக்காக அன்றி (மற்றெவருக்காகவும்) இருக்காது.

3. (குப்ர் எனும்) இறை நிராகரிப்பிலிருந்து அல்லாஹ் அவரைக் காப்பாற்றிக் கரை சேர்த்தபின் நரகத்துக்குள் போடப்படுவதை வெறுப்பதுபோன்று, மீண்டும் குப்ர் (இறை நிராகரிப்பு)க்குள் திரும்பச் செல்வதை அவர் வெறுக்கவேண்டும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹ

ஹதீஸ் எண் : 23

“தன் பிள்ளை(களை)விட, பெற்றோர்களைவிட, மற்றுமுள்ள ஏனைய ஜனங்களைவிடவும் அவருக்கு நான் மிக விருப்பமுள்ளவராக ஆகும்வரை, உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக ஆகமாட்டார் ” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி இருக்கிறார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹ

ஹதீஸ் எண் : 24

“எனது உயிர் எவன் கரத்திலிருக்கிறதோ அவன்மீது சத்தியமாக, ஒரு அடியான் தனக்கு எதையெல்லாம் விரும்புகிறாரோ அதை தனது அண்டை வீட்டாருக்கு ( அல்லது தனது சகோதரருக்கு) எனக் கூறியிருக்கலாம். அவர் விரும்பாதவரை (அவர்) ஈமான் கொண்டவராக ஆகமாட்டார் ” என நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு

ஹதீஸ் எண் : 25

“யார் அல்லாஹ்வை இரட்சகனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மது அவர்களைத் தூதராகவும் பொருந்திக் கொண்டாரோ அவர், ஈமானின் சுவையை சுகித்தவராவார் ” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூற செவியுற்றதாக, அப்பாஸ் பின் அப்துல் முத்தலீப் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

“நான்கு விஷயங்கள் யாரிடம் இருந்ததோ அவர் கலப்படமற்ற நயவஞ்சகராகிவிட்டார் ” என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 26

“நான்கு விஷயங்கள் யாரிடம் இருந்ததோ அவர் கலப்படமற்ற நயவஞ்சகராகிவிட்டார். அவற்றில் ஏதாவது ஒன்று யாரிடம் இருக்கிறதோ, அவர் அதை விட்டு விடும்வரையிலும் நயவஞ்சகத்தில் ஒரு பகுதி அவரிடம் இருக்கும்.

“அவர் பேசினால் பொய்யுரைப்பார். ஒப்பந்தம் செய்தால் மோசடி செய்வார். வாக்கு கொடுத்தால் மாறி விடுவார். தர்க்கம் செய்தால் உண்மையை மறைக்க முற்பட்டுவிடுவார்.” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஆயினும் நிச்சயமாக ஸுப்யானுடைய ஹதீஸில் அவைகளில் ஒரு குணம் அவரி(டத்தி)ல் இருப்பின் நயவஞ்சகத்தின் ஒரு குணமும் அவரிடத்தல் இருக்கும் என வந்துள்ளது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு

ஹதீஸ் எண் : 27

“நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும். அவன் பேசினால் பொய் பேசுவான். அவன் வாக்களித்தால் அதற்கு மாற்றம் செய்வான். அமானிதம் கொடுக்கப்பட்டால் மோசடி செய்துவிடுவான்.” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

அறிவிப்பவர்: அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

“முஃமீனுக்கு உவமை பயிர் போன்றது. முனாஃபிக் மற்றும் காஃபிருக்கு உவமை அர்ஜத்(மரம்) போன்றது.” என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 28

முஃமீனுக்கு உவமை பயிர்களில் தண்டு மெலிந்துள்ள பயிர் போன்றதாகும். அப்பயிரானது உலர்ந்துபோகும்வரை காற்று அதை வலப்பக்கமும் இடப்பக்கமும் ஆடவைத்து (பின்னர்) அதன் சமநிலையில் விட்டுவிடுகிறது.

காஃபிருக்கு உவமை அடித்தளத்தில் தண்டு கடினமானதாக ஸ்திரமானதாக உள்ள அர்ஜத்(மரம்) போன்றதாகும்.ஒரே தடடைவயாக (காற்று) அதைப் பிடுங்கும்வரை அது நிமிர்ந்ததாகவே இருக்கும்.

பிறிதொரு அறிவிப்பில் அதன் காலம் வரும்வரை ஒரே சமமாக இருக்கும் மேலும் நயவஞ்சகனுக்கு உவமை “அடித்தளத்தில் தண்டு கடினமானதாக உறுதியானதாக உள்ள அதை எதுவும் தொடாத அர்ஜத்(மரத்தைப்) போன்றதாகும் ”. என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக கஅபு பின் மாலிக் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

ஹதீஸ் எண் : 29

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்தோம். (அப்போது) முஸ்லீமுக்கு ஒப்பான அல்லது முஸ்லீமான மனிதரைப்போன்றுள்ள ஒரு மரத்தைப் பற்றி எனக்குத் தெரிவியுங்கள் அதன் இலைகள் (கீழே) விழாது எக்காலத்துக்கும் அதன் பலனை கொடுத்துக்கொண்டிருக்கும் எனக் கூறினார்கள்.

“அது நிச்சயமாக ஈச்ச மரம்தான் என என் மனதில்பட்டது. அபூபக்கர் உமர் இருவரும் போசமல் இருந்ததைப் பார்த்து நான் பேசி எதையாவது கூறுவதை வெறுத்தேன். ”

நீர் அதைச் சொல்லியிருந்தால் எனக்கு இன்ன இன்னதையெல்லாம்விட மிக விருப்பமானதாக இருந்திருக்கும் என (எனது தந்தை) உமர் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு

“வெட்கம் ஈமானில் உள்ளதாகும்” என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 30

“ஈமான் எழுபதுக்கும் மேற்பட்ட அல்லது அறுபதுக்கும் மேற்பட்ட கிளை(களை) உடையதாகும். அவற்றில் மிகச்சிறந்தது ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ (எனும் கூற்றாகும்) அதில் மிகக்குறைந்தது, பாதையை விட்டும் இன்னல் தருவதை அகற்றுவதாகும். வெட்கமும் ஈமானின் ஒரு கிளையாகும் ” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹ

ஹதீஸ் எண் : 31

ஒரு கூட்டத்தில் இம்ரான் பின் ஹுஸைனுடன் நாங்கள் இருந்தோம்.எங்களில் புஷைர் இப்னுகஅபு என்பவரும் இருந்தார். “வெட்கம் என்பது முழுக்க முழுக்க நன்மையானது அல்லது வெட்கம் அது முழுவதுமே நன்மையானது என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ” என அன்றைய தினம் இம்ரான் எங்களுக்கு அறிவித்தார்.

அதைக் கேட்ட புஷைர் பின் கஅபு வெட்கத்தில் உயர்வான இறைவனிடத்தில், அமைதியை நல்கக்கூடியவையும் கண்ணியத்தையும் நல்கக்கூடியவையும் உண்டு. அதில் பலவீனத்தைத் தரக்கூடியவையும் உண்டு என சில நூல்களில் அல்லது சில தத்துவங்களில் நிச்சயமாக நாம் காண முடிகிறது” எனக் கூறினார்.

அதைக் கேட்ட இம்ரான் அவர்கள் அவரது இரு கண்களும் சிவக்கின்ற அளவுக்கு கோபமடைந்து விட்டார். “ உனக்கு நான் அல்லாஹ்வின் தூதர் அவர்களின் ஹதீஸை அறிவித்துக் காட்டுகிறேன் என்பதை நீ தெரிந்துகொள். அதை நீ குறுக்கீடு செய்கின்றாய் அல்லவா? ” என்று கூறிவிட்டு மீண்டும் இம்ரான் (அந்த) ஹதீஸை அறிவித்தார்.

புஷைர் (தான்) சொன்னதையே திரும்பக் கூறினார். இம்ரான் கோபமடைந்து விட்டார். “அபா நுஜைதே! அவர் நம்மைச் சேர்ந்தவர்தான் ” எனவும் “ நிச்சயமாக அவரைப்பற்றி பரவாயில்லை (கோபப்படாதிர்கள்) எனவும் நாங்கள் கூறிக் கொன்டிருந்தோம்.

அறிவிப்பவர்: அபுகதாதா ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு: இதே பொருள்பட வார்த்தை முன்னும் பின்னுமாக ஒரு அறிவிப்பில் வந்துள்ளது.

அண்டை விட்டாரோடு அழகாக நடந்துகொள்வதும் விருந்தினரை உபசரிப்பதும் ஈமானில் உள்ளதாகும் என்பத பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 32

“அல்லாஹ்வையும் இறுதி நாளையும் யார் நம்பிக்கைக் கொண்டாரோ அவர் தனது அடுத்த வீட்டுக்காரரிடம் அழகாக நடந்துகொள்ளவும்.

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் யார் நம்பிக்கைக் கொண்டாரோ அவர் தனது விருந்தினரைக் கௌரவிக்கவும்.

“அல்லாஹ்வையும் இறுதி நாளையும் யார் நம்பிக்கைக் கொண்டாரோ அவர், நல்லதைச் சொல்லவும், அல்லது வாய் மூடி மௌனமாக இருக்கவும்.” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபீஷுரைஹ் அல் குஜாஇ ரளியல்லாஹ் அன்ஹ

“எவரது இடையூறுகளிலிருந்து அவரது அடுத்த வீட்டுகாரர் பயமற்று இருக்கவில்லையோ அவர் சுவனம் புக மாட்டார்” என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 33

நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், “எந்த மனிதரின் இடையூறுகளிலிருந்து 1அவரது அடுத்த வீட்டுகாரர் பயமற்று இருக்க வில்லையோ அந்த மனிதர் சுவனம் புகமாட்டார். ” என கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹ

குறிப்பு : 1அடுத்த வீட்டுக்காரருக்கு கஷ்டங்கள் (இடையூறு) கொடுப்பது என்பதற்கு அவனை அழிக்கும் அல்லது அவனது நிம்மதியைக் குலைக்கும் காரியங்களைச் செய்தல் என்பது பொருளாகும்.

“(மார்க்கத்தில்) தடுக்கப்பட்டவைகளை கையால், நாவால், மனதால் மாற்றுவது ஈமானில் உள்ளது” என்பது பற்றிய பாடம

ஹதீஸ் எண் : 34

பெருநாளன்று தொழுகைக்கு முன்பு குத்பா பிரசங்கத்தை ஆரம்பித்தவர் மர்வான் என்பராவார்.

அவரின்பால் ஒரு மனிதர் எழுந்து சென்று ‘குத்பாவுக்கு முன்பு தொழுகை நடத்தப்பட வேண்டும். இங்கே அது விடப்பட்டுவிட்டது.’ எனக் கூறினார்.

அதற்கு அபூஸஈது அவர்கள், “தெரிந்துகொள். எது அவர் மீது கடமையோ அதை (இவர்) கூறி முடித்துவிட்டார். ” என்று கூறி விட்டு,

“உங்களில் யாரேனும் மறுக்கப்பட வேண்டியதை (நடக்கக்) கண்டால் அதை அவரது கையால் மாற்றவும். அதற்கு அவருக்கு சக்தியில்லையென்றால் அவரது நாவால் (அதை மாற்றவும்). அதற்கும் அவருக்கு சக்தியில்லையானால் அவரது மனதால் (அதை வெறுக்கவும்) அது ஈமானில் மிகப்பலவீனமாதாகும். என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் செவியுற்றேன். ” என அபூ ஸஈத் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் கூறுகிறார்.

அறிவிப்பவர் : தாரீக் பின் ஷிஹாப் ரளியல்லாஹு அன்ஹு.

ஹதீஸ் எண் : 35

எனக்கு முன்னுள்ள சமூகத்தில் அல்லாஹ் அனுப்பி வைத்த எந்த நபிக்கும் உதவியாளர்களும் தோழர்களும் இல்லாமல் இருந்ததில்லை. அவர்கள் அந்நபியின் வழிமுறையை எடுத்து நடக்ககூடியவர்களாகவும் அவரது கட்டளையை ஏற்று செயலாற்றக்கூடியவர்களாகவும் இருந்தனர். அவர்களுக்குப்பிறகு அவ்வும்மத்தில் வருபவர்கள் அவர்கள் செய்யாதவற்றை (மற்றவர்களுக்கு) சொல்லக்கூடியவர்களும் (அந் நபியால்)கட்டளையிடப்படாததை செய்யக்கூடியவர்களாகவும் இருப்பர்.

(அச்சமயத்தில்) யார் அவர்களோடு தனது கரத்தால் அறப்போர் செய்தாரோ அவர் விசுவாசங் கொண்டவராவார்.

மேலும் யார் அவர்களோடு தனது நாவினால் அறப்போர் செய்தாரோ அவரும் விசுவாசங் கொண்டவராவார்.

அதற்கும் அப்பால் ஈமானில் கடுகளவுகூட (மீதம்) இல்லை என அல்லாஹ்வின் தூதர் அவர்கள் நிச்சயமாகக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹ

அப்துல்லா பின் உமர் ரளியல்லாஹ் அன்ஹு அவர்களுக்கு இச்செய்தியை நான் (அபூராபிஉ) கூறினேன். அதை அவர்கள் (என் கூற்றை) மறுத்துக் கூறினார்கள். அப்போது இப்னு மஸ்ஊது அவர்கள் மதினாவில் ஒரு பள்ளத்தாக்கில் இறங்கி(த்தங்கி)யிருந்தார்கள்.

அப்துல்லா பின் உமர் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் இப்னு மஸ்உதை நலம் விசாரிக்க என்னையும் தம்மைத் தொடர்ந்து வரச் சென்னார்கள். அப்துல்லா பின் உமர் ரளியல்லாஹ் அன்ஹு அவர்களுக்கு செய்தியை அறிவித்துவிட்டு அவர்களுடன் நானும் நடந்தேன்.

நாங்கள் இருவரும்( இப்னு மஸ்ஊதிடம் சென்று) அமர்ந்தபின் இந்த ஹதீஸைப்பற்றி இப்னு மஸ்ஊதிடம் நான் கேட்டேன் இப்னு உமர் அவர்களுக்கு நான் எவ்வாறு அறிவித்தேனோ அதே போன்று எமக்கு இந்த ஹதீஸை இப்னு மஸ்ஊது அறிவித்தார்கள் என அபுராஃபிஉ ரளியல்லாஹ் அன்ஹு கூறினார்.

“விசுவாசியைத் தவிர மற்றவர் அலி ரளியல்லாஹ் அன்ஹு அவர்களை விரும்ப மாட்டார். நயவஞ்சகனை தவிர மற்றவர் அவரை வெறுக்க மாட்டா” என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 36

வித்தைப் பிளக்கச் செய்தவனும் உயிர் கொடுத்தவனுமாகிய அவன்மீது சத்தியமாக! “விசுவாசியைத் தவிர (மற்றெவரும்) என்னை விரும்பமாட்டார் நயவஞ்சகனைத் தவிர (மற்றெவரும்) என்னை வெறுக்கமாட்டார் ” என்பது நிச்சயமாக உம்மி நபி அவர்கள் என்பால் செய்துகொண்ட உறுதியான ஒப்பந்தமாகும் என அலி பின் அபீதாலிப் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் கூறியதாக ஜர்ரு பின் ஹுபைஷ் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

“அன்ஸார்களை விரும்புவது ஈமானின் அடையாளமாகும். அவர்களை கோபப்படுவது நயவஞ்சகத்தின் அடையாளமாகும் ” என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 37

அன்ஸார்கள் விஷயத்தில் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக பராஉ ரளியல்லாஹ் அன்ஹு அவர்களிடம் நான் செவியுற்றேன்.

விசுவாசங் கொண்டவரைத் தவிர (மற்றவர்கள்) அவ(அன்ஸா)ர்களை விரும்பமாட்டார்கள். முனாஃபிக்குகளைத் தவிர (மற்றவர்கள்) அவ(அன்ஸா)ர்களை கோபப்படமாட்டார்கள். (அதாவது) யார் அவர்(அன்ஸார்)களை விரும்புகிறாரோ அவரை அல்லாஹ் விரும்புகிறான் யார் அவ(அன்ஸா)ர்களை கோபப்படுகிறாரோ அவரின் மீது அல்லாஹ்வும் கோபப்பட்டு விடுகிறான்.

அறிவிப்பவர் : அதிய்யு பின் தாபித் ரளியல்லாஹ் அன்ஹு

“ஈமான் மதினாவின்பால் நிச்சயமாக ஒதுங்கும்” என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 38

“பாம்பு தன் புற்றின்பால் ஒதுங்குவது போன்று. நிச்சயமாக ஈமான் மதினாவின்பால் ஒதுங்கும் ” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அதிய்யு பின் தாபித் ரளியல்லாஹ் அன்ஹு

“ஈமான் யமன் தேசத்தையுடையதாகும் ஹிக்மத்தும் யமன் தேசத்தை உடையதேயாகும் ” என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 39

(இஸ்லாத்தைத் தழுவ) யமன் தேசத்தவர் (அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம்) வந்தனர். அவர்கள் இரக்கம் கொண்ட இதயங்களையும், 1மெல்லிய மனங்களையும் உடையவர்களாவர். “ஈமான் யமனைச் சேர்ந்ததாகும் (யமன் வாசிகள் விரைவாக விசுவாசங் கொண்டனர்) ஹிக்மத்2தும் யமனைச் சேர்ந்ததாகும். அமைதி என்பது ஆட்டுக்கு சொந்தக்காரர்களிடம் (ஏழைகளிடம்) இருக்கிறது. பெருமையும், அகம்பாவமும், சூரிய உதயத்திற்கு முன்பே பெரும் சப்தத்தை எழுப்புவார்களே அத்தகைய ஒட்டகங்களையும் குதிரைகளையும் சொந்தமாகக் கொண்டவர்களிடம் இருக்கிறது.” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூற தான் கேட்டதாக அபூஹுரைரா ரளியல்லாஹ் அன்ஹு அறிவிக்கிறார்கள்.

குறிப்பு:

1. அவர்களின் இதயத்தின் உட்பகுதிகூட, அல்லாஹ்வின் பயத்தைப்பற்றி எடுத்துக்கூறப்படும்போது அதை துரிதமாக ஏற்கக்கூடிய நிலையில் உள்ளது என்பதை தெரிவிக்கவே மெல்லிய மனங்களை உடையவர்கள் என வர்ணிக்கப்பட்டுள்ளது. ஷரஹ் நவவீ. பாகம் 2 பக்கம் 34

2.“ ஹிக்மத் ” என்பதற்கு பல விளக்கங்கள் கூறப்பட்டுள்ளது.

a. மனதை பக்குவப்படுத்தி அம்மனதில் உண்மையை உறுதிப்படுத்தி செயல்படுவதும், மனம்போன போக்கு, உண்மைக்கு மாற்றமானவற்றை கொள்கையாக ஏற்றல் ஆகியவைகளைத் தடுத்துக்கொண்டு, அல்லாஹ்வைப்பற்றி அவன் கூறியவற்றையெல்லாம் மனதில்கொண்டு அவன் கூறிய தெளிவில் அவனைத்தெரிந்துகொள்ளும் வகையைத்தான் “ஹிக்மத் ” எனக் கூறப்பட்டுள்ளது. ஷரஹ் நவவீ. பாகம் 2 பக்கம் 33

b தெளிவான இதயசுத்தியோடு கேட்கப்பட்ட விஷயங்கள் மனதில் பதிந்து செயல்படும்போது மனிதன் தவறிழைப்பது குறைந்துவிடலாம். அந்நிலையிலிருக்கும்போது “ஹிக்மத்” துடையவர் எனக் கூறலாம்.

c மனிதர்களுக்கு மத்தியில் உள்ள முறைப்படி “சாதுர்யம்” என்ற பொருளைக்கூறலாம்.
d நாட்டுபாஷையில் யூனானீவைத்தியம் செய்பவர்களை “ஹக்கீம்” என்கிறார்கள் என்பதும் ஒரு பொருள்.

ஹதீஸ் எண் : 40

“வெறுக்கின்ற தன்மையுள்ள கடினமான இதயங்கள் கொண்டவர்களும், குறைகாணும் குணமுடையவர்களும் கிழக்குப்பகுதியில் உள்ளனர். ஈமான் ஹிஜாஸ்1 நாட்டைச் சேர்ந்தவர்களிடமாகும்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹ் அன்ஹுமா

குறிப்பு: 1 ஹிஜாஸ் என்பது மக்கா, மதீனா, தாயிப் ஆகிய ஊர்களைக் குறிக்கும்.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்